ஞாயிறு, 2 டிசம்பர், 2012

மூன்று வேளையும் வயிறார ச் சாப்பிட்டு நிறைய நாளாயிற்று'



மூன்று வேளையும் வயிறார ச் சாப்பிட்டு  நிறைய நாளாயிற்று'

உடம்பில் தெம்பு இருக்கும் வரைக்கும் உழைத்து விட்டு, இறுதி காலத்தில் பிள்ளைகளை நம்பி இருக்கும், பல பெற்றோருக்கு, காப்பகங்களே உறைவிடமாகின்றன. காலத்தின் வேகத்திற்கும், நவீனத்தின் சாயலுக்கும் பழகி விட்ட நமக்கு, கலாசார மாற்றங்கள் மட்டும் பரிசாக கிடைக்கவில்லை, மாறாக, கலாசார சீரழிவுகளும் பெரும் சுமையாக கிடைத்துள்ளன.அந்த தாக்கத்தில் உருவானவை தான் காப்பகங்கள். பெரம்பூர், மாநகராட்சி நகர்ப்புற பெற்றோருக்கான காப்பகத்தில் வசித்து வரும் சாந்தி, 68, என்பவரோடு உரையாடியதில் இருந்து...

எவ்வளவு நாளா இந்த காப்பகத்தில் இருக்கீங்க?
மூணு வருஷமாச்சு. நானும், என் கணவரும் சேர்ந்தே தங்கியுள்ளோம். ஐந்து மகன்கள் இருந்தும் ஆதரவு இல்லாததால், காப்பகத்துக்கு வந்து விட்டோம். கடைசி காலத்தில், நான் ஒரு பையன் வீட்டில், கணவர் ஒரு பையன் வீட்டில் என்று, பராமரிப்பு என்ற பெயரில், வேலையாட்களாக பணிபுரிந்தோம். மாதத்திற்கு ஒருமுறை தான், சேர்ந்து பார்க்க முடியும். அவரை விட்டு தனியாக இருக்க முடியல. வீட்டு வேலை செய்ய அவருக்கு தெரியாது. நான் வீட்டை துடைக்கலாம். அவரால் முடியுமா? அதனால் தான் வந்து விட்டோம்.

மகன்கள் என்ன வேலை செய்றாங்க?
எல்லாரும் நல்ல வேலையில தான் இருக்காங்க. சொந்த வீடு, கார் என, எல்லாம் இருக்கு. ஐந்து பேரின் திருமணத்திற்கு பின், சொத்தை பிரித்து கொடுத்தோம்.எல்லாம் பிள்ளைகளுக்கு தானே என, கபடமில்லாமல் கழுத்தில் போட்டிருந்தது முதல், கணக்கு வைத்து பிரித்து கொடுத்தேன். இன்று, காப்பகத்தில் கிடக்கிறோம்.

பேர குழந்தைகளை பார்த்து எவ்வளவு நாளாச்சு?
எனக்கு, மூன்று பேரன், ஐந்து பேத்திகள். என் பேர குழந்தைகளுக்கு தாத்தா என்றால், ரொம்ப பிடிக்கும். அவர் நிறைய கதை சொல்வார். நான் தான் சாப்பாடு ஊட்டுவேன்.எந்த குழந்தையை பார்த்தாலும், பேர குழந்தைகளின் நினைப்பு தான் வரும். நான் அவருகிட்ட சொல்றதில்ல. காலம் கடந்து போயிடுச்சு. இனி, யார் மீதும் குற்றம் சுமத்த விருப்பம் இல்ல.என் பிள்ளைகளும் பேர குழந்தைகளும் நல்லா இருக்கணும். அதை தான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்.

காப்பகங்கள் அதிகரிக்க காரணம் என்னன்னு நினைக்கிறீங்க?
அந்த காலத்துல, என் மாமியார், 75 வயசுல தான் இறந்தாங்க. அவங்க இருந்த வரைக்கும், வீட்டு பொறுப்பை எடுத்து செய்றது, பண விவகாரம் எல்லாம் அவங்க தான்.அப்போ, மூத்தவங்கள மதிச்சோம். இப்போ வயசாயிட்டா, பெத்தவங்க கூட பாரமாகிடுறாங்க. நாளைக்கு அவங்களுக்கும் வயசாகிடும்கிறது தெரியல.எங்கள மாதிரி, பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டவர்கள் இருக்கற வரைக்கும், காப்பகங்கள் இருக்கணும். இல்லாட்டி, பிளாட்பாரம் தான் வீடாகிடும்.

உங்கள் எதிர்பார்ப்பு?
வயிறு நிறைய மூணு வேளையும் சாப்பிட்டே, ரொம்ப நாளாகிடுச்சி. வயிறும் பசிக்கல. பசி அதிகமாயிட்டா, கதவுக்கு பக்கத்துல வந்து நின்னு, தெருவுல போற வர்ற குழந்தைகளை பாத்துக்கிட்டே இருப்பேன்.பேர குழந்தைகளை பார்க்கணும்னு ஆசையா இருக்கு. அவங்களோட, ஒரு நாள் முழுவதும் இருந்தா, அந்த நாளை நினைத்து... (அழுகிறார்)அப்போது, அவரது கணவர் வந்து, "புலம்பாதம்மா' என சொல்லி, அழைத்து சென்றார். அவரிடம் பேசிவிட்டு நகர்ந்த போது, மனம் கனத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக