திங்கள், 2 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 228 : மணிப்பூர்க் கோப்புகள் – 2

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 227 : மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) – தொடர்ச்சி)

மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)

இனிய அன்பர்களே!

காதை (2)

நான் அங்குலால்முவன் வைப்பே, சூரசந்துபூர் கல்லூரியில் புவியியல் பட்டப் படிப்பு மாணவன். அகவை 21. சமூக ஊடகங்களில் ஆர்வம் உள்ளவன். முகநூலில் இடுகை இடுவேன். பிடித்தமான பிறர் இடுகைகைகளைப் பகிர்வேன்.

ஏப்பிரல் 27க்குப் பின் சூரசந்த்பூர் மாவட்டமே பதறியது. குக்கி-சோ குழுக்கள் முதலமைச்சர் பிரேன் சிங்கை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்தன. அவர் தொடங்கி வைப்பதாக இருந்த உடற்பயிற்சிக் கூடம் தீவைத்து எரிக்கப்பட்டது.

குமுக ஊடகங்களில் விரைந்து பரவிக் கொண்டிருந்த “பான் லீ” என்பவரின் முகநூல் இடுகை என் கருத்தைக் கவர்ந்தது. குக்கி-சோ மக்கள் அடைந்து வரும் இன்னலுக்கு முதலமைச்சர் பிரேன் சிங்கும் மெய்த்தி அரசியல் தலைவர்களுமே காரணம் என்று அந்த இடுகை குற்றஞ்சாற்றியிருந்தது. நான் இந்த இடுகையை என் முகநூல் பக்கத்தில் மீள்பதிவு செய்தேன். ஆனால் 24 மணி நேரத்தில் அதனை நீக்கி விட்டேன். ஆனால் அதற்குள்ளேயே காவல்துறை அதனைக் கவனித்து விட்டது. ஏப்பிரல் 30 என் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. “பான் லீ” மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது என்றாலும் என்னைக் கைது செய்தனர்.

“முதலமைச்சரின் ஆதரவுடன் மெய்த்தி சமுதாய அரசியல் தலைவர்கள் மலைப்பகுதிகளில் கசகசா பயிரிடத் தூண்டுகின்றனர், பழங்குடி மக்கள் மீது பழி போட்டு அவர்களிடமிருந்து நிலத்தைப் பறிப்பதற்காகவே இப்படிச் செய்கின்றனர்” என்பது அந்த முகநூல் இடுகையில் காணப்பெற்ற செய்தி. மெய்த்தி சமுதாயத்தை இனவாதிகள், “இந்தியாவுக்கு எதிரானவர்கள்”, மணிப்பூரின் துயரங்களுக்கு எல்லாம் காரணமானவர்கள் என்றெல்லாம் அதில் எழுதப்பட்டிருந்தது.

மே 3ஆம் நாள் இந்த வழக்கில் எனக்குப் பிணை விடுதலை கிடைத்தவுடனே, இம்பால் காவல் நிலையத்தில் இதே குமுக ஊடகப் பதிவுக்காக மீண்டும் ஒரு முதல் தகவல் அறிக்கை அளித்து என்னை முறைப்படித் தளைப்படுத்தினர். ஒரே முகநூல் இடுகைக்காக 24 மணி நேரத்தில் இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டன.

ஏப்பிரல் 30 காலை 10 மணிக்குப் பதிவு செய்த முதலாவது முதல் தகவல் அறிக்கை காலை 9.50க்கு பான் லீ முகநூலில் இடுகையிட்டதாகக் கூறியது, இந்த இரண்டாவது முதல் தகவல் அறிக்கையும் காலை 9.30க்கு முகநூல் இடுகை செய்யப்பட்டதாகக் கூறியது. என்மீதான வழக்கில் புலனாய்வு அதிகாரியான இம்பால் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சஞ்சீவ சிங்கு அளித்த முறைப்பாட்டின் பேரில்தான் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருந்தது.

மே 4ஆம் நாள் காவல் உதவி ஆய்வாளர் சஞ்சீவ சிங்கு என்னை நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அவர் தன் சொந்த ஊர்தியில் வந்து கொண்டிருந்தார். காவல் ஊர்தியில் என்னோடு வழிக்காவலாகக் காவல்துறையினர் வந்து கொண்டிருந்தனர்.

போறோம்பட்டு நடுவில் உள்ள பாப்புலர் உயர்நிலைப் பள்ளியை அடைந்து விட்டோம். ஆண்களும் பெண்களுமான சற்றொப்ப 800 பேர் கொண்ட கும்பல் சிறை செல்லும் சாலையில் வந்த ஊர்திகளை எல்லாம் மறித்து சோதனை செய்து கொண்டிருந்தது. காவலர்கள் உதவி கேட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்தனர். திரும்பிச் செல்லவும் வழியில்லை. பின்புறம் இன்னொரு கும்பல் வழிமறித்து நின்றது. வேறு வழியின்றி முன்சென்றனர். வன்முறைக் கும்பல் வண்டியை மறித்து துவக்குகளையும் தோட்டாக்களையும் பறித்துக் கொண்டது.

அவர்கள் சஞ்சீவசிங்கையும் காவலர்களையும் கைதி வைப்பேயையும் வண்டியிலிருந்து வெளியே இழுத்துப் போட்டு அடிக்கலாயினர். அவர்கள் கையில் இரும்புத் தடிகளும் குச்சிகளும் உரிமம் பெற்ற துவக்குகளும் இருந்தன.

என்னைக் காப்பற்ற முயன்ற காவலர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டன. வண்டிகளுக்கும் சேதம் ஏற்பட்டது. அவர்கள் சேதமுற்ற ஊர்திகளில் ஏறி வெவ்வேறு திசையில் தப்பிச் சென்றனர். என்னை அந்த வெறிக்கும்பல் அடித்துக் கொல்லப் போகிறது.


+=+


பின் காதை (1):

நான் உதவிக் காவல் ஆய்வாளர் சஞ்சய் சிங்கு. மணிப்பூர் முதலமைச்சருக்கும் மெய்த்தி சமுதாய அரசியல் தலைவர்களுக்கும் எதிரான ஒரு முகநூல் இடுகையை மீள்பதிவு செய்த குற்றத்துக்காகத் தளைப்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர் வைப்பே என் தலைமையிலான காவல்படையின் காவலில் இருந்து வெறிக் கும்பலால் பறித்துச் செல்லப்பட்டு, அடித்துக் கொலை செய்யபப்பட்டார். இந்நிகழ்வு நடந்து ஏழு மணிநேரம் கழித்து இரவு 10.30 மணியளவில் காவல்நிலையத்தில் என் முறைப்பாட்டைப் பதிவு செய்தேன். குற்றஞ்சாட்டப்பெற்ற வைப்பேயை எங்களால் வன்முறைக் கும்பலிடமிருந்து காக்கவும் முடியவில்லை, அவரது உடலைக்கூட மீட்கவும் முடியவில்லை.

பின்காதை (2):

நான் வைப்பேயின் தந்தை. நானும் குடும்பத்தினரும் சூரசந்த்பூர் திங்கன்பாய் சோமி பெத்தலில் இருக்கிறோம். என் மகன் வைப்பேயின் உடல் எங்கே என்று தெரியவில்லை. இம்பாலில் சவகர்லால் நேரு மருத்துவ அறிவியல் கழகத்தில் அவன் உடல் இருப்பதாக காவல்துறை சொல்கிறது. ஆனால் இம்பால் செல்வது பற்றி எங்களால் எண்ணிப் பார்க்கவும் முடியாது.

காவல் உதவி ஆய்வாளர் சொல்வதை முழு உண்மை என்று எங்களால் ஏற்க முடியவில்லை. அவர் கடமை தவறியுள்ளார், அல்லது சதி செய்துள்ளார். மே 18ஆம் நாள் நான் இது குறித்து சூரசந்த்பூர் காவல்துறைக்கு முறைப்பாடு அனுப்பியுள்ளேன். வைப்பேயின் தாய் தந்தையாகிய நாங்களும் அவனுடைய தம்பி தங்கையும் காவல் துறை அவனைப் பிடித்துச் சென்ற நாளுக்குப் பின் அவனைப் பார்க்கவே இல்லை.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 259

ஞாயிறு, 1 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 227 : மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 226 : அன்று ஈழத்தில், இன்று மணிப்பூரில் இனவழிப்பு-தொடர்ச்சி)

மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)

இனிய அன்பர்களே!

காதை (1)

எனக்கு வயது 18, மணிப்பூரில் குக்கி இனத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண். கிழக்கு இம்பாலில் இது நடந்தது: ஆயுதமேந்திய மெய்த்திப் பெண்கள் குழு ஒன்று, அதன் பெயர் மீரா பைபிசு, பெண் சுடரேந்திகள் என்று பொருள். மற்றொரு பெயர் “மணிப்பூர் அன்னையர்” என்பதாகும். இந்தக் குழுவினர் என்னைப் பிடித்து கறுப்பு உடையணிந்த நான்கு இளைஞர்கள் கொண்ட ஒரு மெய்த்திக் குழுவிடம் ஒப்படைத்தனர்.

மே 15 மாலை 5 மணி இருக்கும். அந்த நான்கு இளைஞர்களும் நீலநிற மகிழுந்தில் என்னை வாங்கி அயங்பாலி என்ற இடத்துக்குக் கடத்திச் சென்றார்கள். என்னை மாறி மாறிக் குத்தவும் அடிக்கவும் செய்தார்கள். மீரா பைபிசு அமைப்பைச் சேர்ந்த பெண்களையும் உள்ளூர் ஆண்களையும் அழைத்தார்கள். அவர்களும் மாறி மாறி எங்களை அறைந்தார்கள், முகத்தில் குத்தினார்கள், கடுமையாக அடித்தார்கள். அந்தப் பெண்களில் ஒருத்தி ‘அரம்பை தெங்கோல்’-ஐ அழைக்க வேண்டும் என்று சொல்லக் கேட்டேன்.

கருஞ்சட்டை அணிந்த நால்வர் வந்து சேர்ந்தனர் சட்டையில் ஏதோ இலச்சினை பதித்திருந்தார்கள். துப்பாக்கி வைத்திருந்தார்கள். நால்வரில் இருவருக்கு 35 வயது இருக்கலாம், இருவர் 50க்கு மேல். கூட்டத்திலிருந்து பெண் ஒருத்தி என்னைக் கொன்று விடும் படி அவர்களுக்குக் கட்டளையிட்டாள். அந்த நால்வரும் என்னை வேறொரு மகிழுந்தில் தூக்கிப் போட்டுக் கொண்டு கிளம்பினார்கள்.

அவர்கள் என்னிடம் ஏதோதோ கேட்டுக் கொண்டே வந்தனர். நான் விடை சொன்னாலும், மௌனமாகவே இருந்தாலும், அறைவார்கள். ஓரிரு முறை துப்பாக்கிக் கட்டையால் மொத்தவும் செய்தார்கள். ஒரு மலையுச்சி போல் இருந்த இடத்தை அடைந்தோம். அங்குதான் என்னைக் கொலை செய்யத் தீர்மானித்தார்கள்.

அவர்கள் என்னை எப்படிக் கொலை செய்யலாம் என்று பேசிக் கொண்டிருந்ததை நானே கேட்டேன். அவர்களுள் மூத்தவரின் காலில் விழுந்து உயிர்ப்பிச்சை கேட்டு மன்றாடினேன். என்னை விட்டு விடுங்கள், ஓடிப்போகிறேன், இம்பாலுக்குத் திரும்பி வரவே மாட்டேன், என் தாய் தந்தையைப் பார்க்க வேண்டும்” என்று கதறினேன்.

மீண்டும் என்னை மகிழுந்தில் ஏற்றிக்கொண்டு, கொலை செய்யப் பொருத்தமான இடம் தேடினார்கள். சிறிது நேரம் சுற்றி விட்டு ஒரு மலை உச்சிப் பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். என்னை மகிழுந்திலிருந்து இழுத்துப் போட்டு, உதைத்தும் குத்தியும் அறைந்தும் என்னைக் கடுமையாகத் தாக்கினார்கள். ஒரு முறை துப்பாக்கிக் கட்டையால் ஓங்கிக் குத்திய போது கொஞ்ச நேரம் எனக்கு எல்லாமே இருண்டு போயிற்று. கண்கள் திறந்த போது முகத்தில் தூறல் விழுவதை உணர்ந்தேன்.

எனக்கு உணர்வு வந்தவுடன் அவர்கள் மீண்டும் என்னை அறைந்து படுக்க வைத்து நால்வரில் மூவர் ஒருவர் பின் ஒருவராக என்னிடம் வல்லுறவு கொண்டார்கள். என் செவிகளிலும் முகத்திலும் தலையிலும் குருதி வடிந்து ஆடைகளையும் முகத்தையும் நனைத்து விட்டது. அந்த மூவருக்கும் எஞ்சிய ஒருவருக்கும் இடையே என்னைக் கொன்று விடுவது பற்றி வாக்குவாதம் நடந்தது.

நாங்கள் உன்னைப் போக விட்டால் காவல்துறையிடம் சென்று முறைப்பாடு செய்து விடுவாய், ஆனால் நீ அப்படிச் செய்தால் உன்னைத் தேடிப் பிடித்துக் கொன்று விடுவோம் என்று மிரட்டினர். என்னை விட்டு விடுவதா? கொன்று விடுவதா? என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒருவன் மகிழுந்தைத் திருப்ப முயன்று விபத்தாக என் மீது மோதி நான் ஓடையில் விழுந்து மலை உச்சியிலிருந்து உருண்டு விட்டேன்.

உருண்டு உருண்டு ஒரு சாலையில் வந்து விழுந்தேன். அவ்வழியாகச் சென்ற ஒரு மிதியுந்தை( ‘ஆட்டோ ரிக்சுசா’வை) உதவிக்கு அழைத்தேன். அந்த ஓட்டுநர் என்னைக் காய்கறிக் குவியலுக்குள் மறைத்து பிட்ணுபூர் காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்றார். என்னை வீட்டிலே கொண்டுபோய் விட வேண்டிய அந்தக் காவல் துறையினர் மெய்த்தி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தவுடன் “என்னை இந்தக் காவல் நிலையத்தில் விட வேண்டா, என்னைப் புது இலாம்புலேன் பகுதியில் எங்கள் வீட்டில் விட்டு விடுங்கள், நான் காவல்துறையை நம்பவில்லை” என்று மான்றாடினேன்.

மே 16ஆம் நாள் விடிகாலை 4.30 அளவில் இம்பாலை விட்டு வெளியேறி சபோர்மீனாவுக்கு வந்து சேர்ந்தேன். பிறகு காங்குபோக்குபி மாவட்ட மருத்துவமனைக்குச் சென்று உடல்நிலை மோசமானதால் நாகாலாந்திலுள்ள கோகிமா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டேன். ஓரளவுக்குத் தேறி விட்டாலும் இவ்வளவு காலமும் காவல் துறையில் முறைப்பாடு செய்ய அஞ்சிக் கொண்டிருந்தேன்.

மே 4ஆம் நாள் தௌபாலில் மூன்று பெண்களை அம்மணமாக்கி வலம்விட்டு, அவர்களில் ஒருத்தியைப் பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்ச்சியின் காணொளி அண்மையில் வெளிவந்த பிறகுதான் துணிச்சல் பெற்றுக் காவல்துறையில் முறைப்பாடு செய்ய முன்வந்தேன்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 258

சனி, 30 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 226 : அன்று ஈழத்தில், இன்று மணிப்பூரில் இனவழிப்பு

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 225 : வழக்கறிஞர் மகாதேவன் உரை-தொடர்ச்சி)

அன்று ஈழத்தில், இன்று மணிப்பூரில் இனவழிப்பு

2008-09 காலத்தில் ஈழம் தந்த கவலையும் அதிர்ச்சியும் போல் இன்றைய மணிப்பூர் செய்திகள் அதிர்ச்சியும் கவலையும் அளிக்கின்றன.

இலங்கையில் நடந்தது தமிழினவழிப்பு என்றால் மணிப்பூரில் நடப்பது குக்கி இனவழிப்பு. தமிழினவழிப்புக்கு சிங்களப் பேரினவாத மனநிலை துணை நின்றது போல், குக்கி இனவழிப்புக்கு மெய்த்தி பேரினவாத மனநிலை துணை நிற்கிறது.

தமிழினவழிப்பை நிகழ்த்திய முதல் குற்றவாளி சிங்கள அரசே! குக்கி இனவழிப்பை நிகழ்த்தி வரும் முதல் குற்றவாளி இந்திய அரசே!

மணிப்பூர் செய்திகள் பாசக ஊதுகுழல்களால் மறைக்கவும் திரிக்கவும் படுகின்றன. இந்த மறைப்பையும் திரிப்பையும் மீறி, மணிப்பூர் பற்றி உலக அளவிலும், இந்தியத் துணைக்கண்ட அளவிலும், தமிழ்த் தேச அளவிலும் மக்களிடையே பரவியுள்ள நியாயமான கவலையும் அக்கறையும் மணிப்பூருக்கு அமைதியும் நீதியுமான வாழ்வு மீள்வதற்குத் துணை செய்ய வேண்டும் என்பது மட்டுமல்ல, நீதிக்காகவும் விடுமைக்காகவும் போராடிக் கொண்டிருக்கும் நம்மைப் போன்ற அனைவருக்கும் உரிய படிப்பினைகள் கற்றுக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும்.

போரில் முதற்பலியாவது உண்மையே என்பர். உண்மையின் உயிரை மீட்டெடுக்க வல்ல தரவுகளை முதலில் தெரிந்து கொள்வோம். காசுமீர்க் கோப்புகள் (KASHMIR FILES) என்று பொய்த் தோரணம் கட்டிய அக்கினிகோத்திரிகள் மணிப்பூர்க் கோப்புகள் என்று படம் எடுப்பார்களா? எடுத்தால் அது மோதியின் ஆசிபெற்ற மணிப்பூர்ப் பொய்களாகத்தான் இருக்கும்.

நாம் இப்போதே மெய்யான மணிப்பூர்க் கோப்புகளை எழுத்தில் தொகுப்போம். இயன்ற வரை மெய்க் கதைகள் துயருற்ற மாந்தரின் வாய்மொழியாகவே வெளிப்படச் செய்வோம்.

நாளை முதல் மணிப்பூர்க் கோப்புகள்

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 257

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 225 : வழக்கறிஞர் மகாதேவன் உரை

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 224 : வல்லியத்தின் பாலியல் வன்கொடுமை அரசியல் – தொடர்ச்சி)

வழக்கறிஞர் மகாதேவன் உரை

இனிய அன்பர்களே!

“வல்லிய(பாசிச)ச் சட்டங்கள் – த.எ.த. (ஊபா), என்ஐஏ” என்ற தலைப்பில் 2023 சூலை 6ஆம் நாள் வல்லிய(பாசிச) எதிர்ப்பு மக்கள் முன்னணி நடத்திய கருத்தரங்கத்தில் தோழர் சேல் முருகன் தலைமையில், தோழர் அரி பரந்தாமன், ப.பா. மோகன், நெல்லை முபாரக்கு ஆகியோருடன் நானும் பேசினேன். நேரில் வர முடியாத நிலையில் ஐதராபாத்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மகாதேவன் அனுப்பி வைத்த ஆங்கில உரையைத் தோழர் செந்தில் தமிழில் வாசித்தார். அந்த உரையின் தமிழாக்கம் இதோ –

வழக்கறிஞர் மகாதேவன் உரை:

த.எ.த. (ஊபா), என்ஐஏ சட்டங்களைத் திரும்பப் பெறக் கோருவோம்!

என்னுடைய வழக்கறிஞர் தொழிலின் நெருக்கடி காரணமாக இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாததற்கு, முதலில் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சூன் 19 முதல் தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் தில்குசு நகர் இரட்டைக் குண்டுவெடிப்பு வழக்கின் இறுதி விசாரணை நடந்துவருவதால், நான் அன்றாடம் பிற்பகல் 2:30 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் முன்னிற்க வேண்டியுள்ளது. அதுபோல இன்றும்கூட 2.30 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது.

காங்கிரசு ஆட்சியின் கீழ் 1995ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ப.சீ.த. (‘தடா’) சட்டமும் 2005இல் கொண்டுவரப்பட்ட ப.த.(பொடா) சட்டமும், பெரும்பாலும் வரைமுறையற்ற வகையில் தவறாகப் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக எழுந்த பெரிய அளவிலான விமரிசனங்கள் மற்றும் போராட்டத்தின் விளைவாக அதிக நாட்கள் நீடிக்கப்படாமல் காலாவதி ஆகி விட்டன.

அஃதாவது இந்தச் சட்டங்கள் காலாவதியாகும் காலத்திற்குப் பிறகு நீட்டிக்கப்படவில்லை. 2005இல் 1967ஆம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) திருத்தப்பட்டுக் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் ப.சீ.த. (‘தடா’) மற்றும் ப.த.(பொடா)வின் கொடூரமான சட்டப் பிரிவுகளை (காவல்துறைக் கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ள அதிகாரியிடம் தரப்படும் வாக்குமூலம் செல்லும் என்ற ப.சீ.த. (‘தடா’) சட்டத்தின் கொடூரமான ஒரு சட்டப்பிரிவைத் தவிர இதர அனைத்து சட்டப் பிரிவுகளையும்) எடுத்துக் கொண்டு (பயங்கரவாதச் சட்டம் என்பதன் விளக்கம் உட்பட), 2008ஆம் ஆண்டு கூடுதல் திருத்தம் செய்யப்பட்டு முழு வடிவம் தரப்பட்டது.

இந்தச் சட்டம் மாபெரும் காங்கிரசு அரசின் மகத்தான அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தால் கொண்டுவரப்பட்டது. இன்றைய ஒன்றிய ஆளும் கட்சியாலும் மாநில அரசுகளாலும் இப்போதும் தொடரப்படுகிறது. நமது சமூகத்தின் சிறுபான்மை இசுலாமியர்கள், தணிந்த(தலித்து) மக்கள், பழங்குடிகள் மற்றும் விளிம்புநிலைப் பிரிவினர்கள் மீது வேண்டுமென்றே சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஏவப்படுவதைத் தேர்தலில் பங்குபெறும் தேசிய மற்றும் மாநில கட்சிகள் வெளிப்படையாக எப்போதும் எதிர்ப்பது இல்லை என்பது கெடுவாய்ப்பானது.

எதிர்க்கட்சியாக உள்ள போது, தேர்தல் சமயத்தில் தன்னை மதச்சார்பற்ற கட்சியாகவும், அதேபோல தமது வாழ்வுரிமைக்காகப் போராடும் இசுலாமிய சிறுபான்மையினர், தணிந்த(தலித்து) மக்கள், பழங்குடியினர் மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலைப் பிரிவினர் மீது நடத்தப்படும் கொடுமைகளை எதிர்க்கும் கட்சியாகவும் காட்டிக் கொள்ளும் காங்கிரசு, இதே விசயத்திற்காக பல்வேறு மேடைகளில் கொடுமையான த.எ.த. (ஊபா) (UAPA) சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைக்காகப் போராடுவது இல்லை. மையத்திலும் மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள பாசக அரசானது, 1967இன் சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தை பொறுத்த வரை, காங்கிரசுக் கட்சியின் அதே பிரிவுகளைத்தான் தாங்களும் நடைமுறைப்படுத்துவதாகக் கூறுவதன் மூலம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. இதன் மூலம் ஆட்சிக்கு வருவதற்கான வாக்கைக் கவர பொதுமக்களை ஏமாற்றுகின்றது.

மையத்திலும் மாநிலத்திலும் உள்ள அனைத்துக் கட்சிகளும் மக்களிடையே நிலவும் வட்டார, அரசியல், இன, சாதிய, மதம் சார்ந்த மற்றும் மதவாதப் பண்பாட்டின் தேவைகளுக்கு ஏற்ப, பல்வேறு மத வேடத்தைப் பூண்டு, பொய் வாக்குறுதிகளைத் தருவதன் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதிலேயே ஆர்வம் கொண்டுள்ளனர்.

இவை தங்களது அரசியல் மேலாண்மையைத் தக்க வைத்துக் கொள்ளவும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவும் இதைச் செய்கின்றன. அதேசமயம் நாட்டில் 70% உள்ள சிறுபான்மையினர், தணிந்த(தலித்து) மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஒடுக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. வல்லியம்(பாசிசம்) நிலவிக் கொண்டிருக்கும் இந்தப் பின்னணியில் இருந்து மாற்று அரசியல் கருத்துகளைக் கொண்டவர்களையும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களையும் தணிந்த(தலித்து) மக்களையும் பழங்குடிகளையும், அத்தோடுகூட ஆளும் வகுப்பு மற்றும் பல்வேறு மத மற்றும் அரசியல் அமைப்புகளின் அரசியல் எதிரிகளையும் (இவர்கள் ஆளும் கட்சியின் ஒடுக்குமுறை அரசாட்சியை எதிர்க்கின்றனர்) ஒடுக்குவதற்காகத் தவறாகப் பயன்படுத்தப்படும் த.எ.த. (ஊபா)வின் கொடூரச் சட்ட விதிகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகளை நாம் முன்வைக்கிறோம்.

அண்மைக் காலமாக ஆளும் கட்சிகள் அரசியல் எதிர்ப்பாளர்களையும், மைய – மாநில ஆளும் கட்சியின் அரசியல் கொள்கைகளையும் எதிர்க்கக் கூடிய அனைத்து ஆட்கள் அல்லது அமைப்புகளையும் நசுக்கவும், உடைத்து எறியவும் நிறைவேற்று(அமலாக்க)த்துறை மற்றும் தேசியப் புலனாய்வு அமைப்பு போன்றவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். உண்மையில் மையத்தில் உள்ள ஆளும் கட்சி, மாநிலத்தில் உள்ள ஆளும் கட்சியின் மீது பொய்யான சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மற்றும் த.எ.த. (ஊபா) (UAPA) குற்றச்சாட்டின் கீழ்ப் பொய் வழக்குகளைப் போட்டு ஒடுக்க முயற்சிக்கும் அளவிற்குத் தற்போதைய நிலைமை மோசமாக உள்ளது. மனநிறைவின்மை அடைந்துள்ள கூட்டணிக் கட்சிகளைத் தமது கருத்தியல் மற்றும் அரசியலுக்கு அடிபணியச் செய்வதற்காகத் , தமது குதிரை பேரத்தில் பணத்தையும் அதிகாரத்தையும் பதவிகளையும் முடிந்த அளவுக்குப் பயன்படுத்துகிறது. பின்னர் மாநிலத்தில் உள்ள ஆளும் கட்சிகளை உடைப்பதற்கான கருவிகளாக இவர்களைப் பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் மைய ஆளுங்கட்சி அரசியல் இலாபம் பெறுகிறது. இத்தகைய அழுத்தங்களுக்குப் பணியாதவர்கள் மீது சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மற்றும் த.எ.த. (ஊபா)UAPA வழக்குகள் பொய்யாகப் போடப்படுகின்றன. இதன் மூலம் அரசியல் எதிரிகளும் அரசியல் எதிர்ப்பாளர்களும் கடும் விரக்திக்குள் தள்ளப்படுகின்றனர்.

இல்லையெனில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தும் நோக்கத்தில், வன்முறையில் இறங்கிச் சட்டம் ஒழுங்குச் சிக்கலை உருவாக்குகின்றனர். இச்சூழ்நிலைகளைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் பெறுவதற்காகப், புதிய தேர்தல்களைத் திணிக்கவும், அரசியல்வாதிகளின் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் மனநிறைவற்றவர்களைக் குதிரை பேரம் மூலம் வென்றெடுக்கவும் முயல்கின்றனர். இறுதியாக உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட இந்த நாட்டில், அரசாங்கத்தின் கருவூலத்திற்குத் தேவையற்ற செலவுகளை ஏற்படுத்தும் வகையில், புதிய தேர்தல்களை நடத்துவதன் மூலம் பணவீக்கத்தையும் வறுமையையும் அதிகரிக்கின்றனர்.

தேசியப் புலனாய்வு முகமையின் துவக்கம் கூட காங்கிரசு ஆட்சியில்தான் நடந்தது. தேசியப் புலனாய்வு முகமை, 2008இல் முக்கியமாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1967 மற்றும் 1908ஆம் ஆண்டின் வெடிகுண்டுப் பொருட்கள் சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 121 முதல் 130 வரையிலான தேசத் துரோகச் சட்டங்கள் மற்றும் ஆயுதச் சட்டத்தின் பிரிவு 25 (1AA)ஆகியவற்றைக் கையாள்வதற்காக முதலில் கொண்டுவரப்பட்டது. ஆனால் அண்மைக் காலமாக இந்துத்துவக் கருத்தியலுக்கு எதிராகவுள்ள அரசியல் இயக்கங்கள் மற்றும் மத இயக்கங்கள் போன்றவற்றை ஒடுக்குவதற்காக, முக்கியமாக இசுலாமியச் சிறுபான்மையினருக்கு எதிராகத் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.

பல்வேறு அரசியல் இயக்கங்களின் நடவடிக்கைகளுக்காக நீதிமன்றங்களில் வாதாடக் கூடிய வழக்கறிஞர்களும் கூட, அவர்களின் மதம், சாதி, கோட்பாட்டு நம்பிக்கைகள் அல்லது பகுதிகளையும் தாண்டி த.எ.த. (ஊபா) சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். இச்சட்டத்தின் மிகக் கடுமையான சட்டப் பிரிவுகளின் காரணமாக, அவர்கள் பல ஆண்டுகளாகப் பிணையின்றிச் சிறையில் வைக்கப்படுகின்றனர். இது சனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.

இந்த நிலைமை தொடருமானால் அது முழுக்க குழப்பமான நிலைமைகளுக்கும், ஓர் அனாட்சிய (அராசக) அரசுக்குமே இட்டுச் செல்லும். இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு மும்பை தே.பு.மு.(என்.ஐ.ஏ.) சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ள பீமா கோரேகான் வழக்கு ஆகும். இந்த வழக்கில் முக்கிய தணிந்த(தலித்து) வழக்கறிஞரான சுரேந்திர கட்லிங்கு, வழக்கறிஞர் சுதா பாரத்துவாசு, செயற் பாட்டாளர்களான அருண் பெரேரா, வெர்னான் கன்சல்வேசு மற்றும் கபீர் கலா மன்ச்சு என்ற கலை பண்பாட்டு இயக்கத்தைச் சார்ந்த இதர செயல்வீரர்கள் (கபீர் கலா மஞ்ச்சு எந்தச் சட்டத்தின் கீழும் தடை செய்யப்படவில்லை.), நாக்குபூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சோமா சென் போன்றோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரபலமான புரட்சிகர எழுத்தாளரான 85 அகவை வரவர ராவு (இவர் நான்காண்டுகளுக்குப் பிறகு பிணை பெற்றுள்ளார். மூன்று முறை மகுடையால்(கொரோனாவால்) பாதிக்கப்பட்டுள்ளார்.) மேலும் சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினருக்கும் சார்கண்டின் பழங்குடியினருக்கும் எப்போதும் பணிசெய்து வந்த, 85 அகவை இயேசு சபை அருட்தந்தை இசுடேன் சாமி (இவர் நீதிமன்றக் காவலில் மரணம் அடைந்தார். அதுவும் மகுடையால்(கொரோனாவால்) பாதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது) போன்றோரும் இவ்வழக்கில் சிறையிலடைக்கப்பட்டனர்.

மிகவும் கெடுவாய்ப்பான விசயம் என்னவென்றால் சமூகத்தில் முக்கியமாணவரும், மாபெரும் சட்ட மேதை பாபாசாகிப்பு அம்பேத்துகரின் உறவினருமான, ஆனந்த டெல்டும்டே கூட விட்டு வைக்கப்படவில்லை என்பதுதான். அண்மையில் ஓராண்டுக்கு முன் மோதலில் கொல்லப்பட்ட இ.பொ.க.(சிபிஐ) மாவோயினரால் ஒரு தலைமறைவு தலைவராக அவரது சகோதரர் இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக ஆனந் டெல்டும்டே மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் இன்றுவரை குற்றப் பத்திரிகை உருவாக்கப்படவில்லை.

ஆந்திரப் பிரதேசத்திலும் தெலங்கானாவிலும் வல்லிய(பாசிச) ஆளும் ஆட்சியின் அடக்குமுறை தற்போது உச்சகட்டத்தில் உள்ளது. ஆந்திரப் பிரதேச குடிமை(சிவில்) உரிமை மையம், தெலங்கானா குடிமை(சிவில்) உரிமை மையம், மனித உரிமைகள் மேடை, புரட்சிகர எழுத்தாளர் சங்கம், மகிளா சேட்டினா சங்கம் போன்ற அமைப்புகளின் செயற்பாட்டளர்களுக்கு எதிராக 11 வழக்குகள் போடப்பட்டன. நக்குசலைட்டு குழுக்கள் மற்றும் இசுலாமியச் சிறுபான்மையினருக்காக வாதாடும் பல வழக்கறிஞர்கள் மீது த.எ.த. (ஊபா)வின் கீழ் வழக்குப் போடப்பட்டுள்ளது.

அரசின் செயல்பாட்டு முறை மிக எளிமையானது. தன்னிடம் கம்பிக் கட்டுகளை, மாவோயிச அல்லது போராட்டர்(சிகாதி) இலக்கியங்களை வைத்திருக்கும் போது கைது செய்யப்பட்டதாக ஒருவர் காட்டப்படுகிறார். அந்த முதல் தகவல் அறிக்கையிலேயே பல்வேறு வழக்குரைஞர்களினதும் இந்த அமைப்புகளின் செயல்வீரர்களதும் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. த.எ.த. (ஊபா)வின் கீழ்க் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தால் வழக்கு தே.பு.மு.(என்.ஐ.ஏ.) சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யப்பட்டுப், பிணையின்றி நீண்ட காலம் சிறையில் வைக்கப்படுகின்றனர். விசாகப்பட்டினத்தில் பெட்டப்பாயிலா காவல் நிலையத்தின் ஒரு வழக்கின் முதல் தகவல் அறிக்கையில்,212 பேர் அரசுக்கு எதிராகப் போர் புரிந்ததாகக் குற்றம் சாட்டுகிறது. இந்த வழக்கில் அனைத்து வழக்குரைஞர்களும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் பொய்யாகச் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். அண்மையில் கடந்த 19.08.2022 அன்று தெலங்கானா மாநிலம் வரங்கல் மாவட்டம் தட்டுவாய் காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கில், இதே போல 152 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்தப் பொய் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மிகப் பிரபலமான சிலரும் அடங்கியுள்ளனர். அவர்களில் 2020இலேயே மகுடையில்(கொரோனாவில்) இறந்து போன முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் எச். சுரேசும் ஒருவர் ஆவார். இவர் இந்திய மக்கள் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக இருந்தவர். அதேபோல மனித உரிமை அறிவாளியான பேராசிரியர் அர கோபால், உசுமானியா பல்கலைக்கழகப் பேராசிரியரான பத்மசா சா, கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் வழக்கறிஞர் சுரேந்திர கட்லிங்கு, அருண் பெரேரா ஆகியோரும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், வழக்குரைஞர் ஆர் மகாதேவன் (உரையாளர்), வி. இரகுநாத்து, சுரேசுகுமார் மற்றும் மனித உரிமை மற்றும் பெண்கள் குழுக்களை சார்ந்த செயல்பாட்டு வீரர்கள் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 257

வியாழன், 28 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 224 : வல்லியத்தின் பாலியல் வன்கொடுமை அரசியல்



(தோழர் தியாகு எழுதுகிறார் 223 : கல்வியுரிமை மாநாட்டுத் தீர்மானங்கள் – தொடர்ச்சி)

வல்லியத்தின்(பாசிசத்தின்) பாலியல் வன்கொடுமை அரசியல்

இனிய அன்பர்களே!

மணிப்பூர் மாநிலத்தில் சென்ற மே 4ஆம் நாள் நடந்த கொடுமை இந்திய நாடு முழுவதையும், எல்லைகளுக்கு அப்பாலும் கூட, அதிர்ச்சி கொள்ள வைத்துள்ளது. குக்கி இனப் பெண்கள் இருவரை மைதேயி சமூக ஆண்கள் குழு ஒன்று அம்மணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்ச்சியின் காணொளி இப்போதுதான் குமுக ஊடகங்கள் வழியாக வெளிவந்துள்ளது.
அந்தக் காட்சியைக் காட்ட வேண்டா என்று இந்திய அரசு கேட்டுக்கொண்ட பின் ஊடகங்களில் மறைப்புச் செய்து காட்டப்படுகிறது. இருப்பினும் அயல்நாட்டுக் காட்சி ஊடகங்கள் சிலவற்றில் அது தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

மே 3ஆம் நாள் மைதேயி இனத்துக்கும் குக்கி இனத்துக்குமான மோதலாகத் தொடங்கிய வன்முறை, உள்நாட்டுப் போர் என்னுமளவுக்கு முற்றி, இன்று வரை தொடர்கிறது. இரட்டை இழு பொறி (எஞ்சின்) அரசுகள் என்று பாசக பெருமைப்பட்டுக்கொள்ளும் இந்திய நடுவணரசும் மணிப்பூர் மாநில அரசும் சேர்ந்து இந்த இன மோதலை குக்கிகளுக்கு எதிரான இனவழிப்புப் போராகவே மாற்றி விட்டன. குக்கிகளில் பெரும்பாலார் கிறித்துவ சமயம் சார்ந்தவர்கள் என்பதால் நூற்றுக்கு மேற்பட்ட தேவாலயங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன, அல்லது இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

காணொளியாக வெளிவந்துள்ள பாலியல் வன்கொடுமை மே 4ஆம் நாள் காவல்துறையினர் முன்னிலையிலேயே நடந்துள்ளது. கொடுமைக்கு ஆளான ஒரு பெண் மே 18ஆம் நாள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ஆனால் இத்துணைக் காலமும் இது குறித்துக் காவல்துறையும் மாநில அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மட்டுமல்ல. இந்த நிகழ்ச்ச்சியை மூடி மறைத்தே வந்துள்ளன.

எதிர்க் கட்சிகள் வன்மையான கண்டனங்கள் தெரிவித்த பின், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அணியமாய் இருப்பதாக அறிவித்த பாசக அரசு உருப்படியான விவாதம் நடந்து தலைமையமைச்சர் மோதி விளக்கமளிக்க வேண்டிய நிலைமையைத் தவிர்க்கவே எல்லாத் தந்திரங்களும் செய்து வருகிறது.

முதலில் குற்றவாளி ஒருவரைத் தளைப்படுத்தியிருப்பதாக அறிவித்த மாநில அரசு இப்போது நால்வரைத் தளைப்படுத்தியிருப்பதாக அறிவித்துள்ளது. இத்துணைக் காலம் இவர்களை ஏன் கைது செய்ய வில்லை? என்ற கேள்விக்கு மாநில அரசு தரும் விடை: இரண்டு திங்களாகக் கிடைக்காத ஆதாரம் இப்போதுதான் கிடைத்ததாம். எது? இந்தக் காணொளிதான் அந்த ஆதாரமா?

இது போன்ற இன்னும் பல காணொளிகள் இருப்பதாக மாநில முதல்வர் பிரேன் சிங்கே சொல்கிறார். அப்படியானால் இன்னும் பல வன்கொடுமைகள் நடந்துள்ளன என்று பொருள். தேசிய மகளிர் ஆணையமும் தங்களுக்குப் பல முறைப்பாடுகள் வந்திருப்பதாகச் சொல்கிறது. இந்த வன்கொடுமைக் குற்றங்களைத் தண்டிக்கவும் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் மாநில அரசு தானாக எதுவும் செய்யாது, காணொளிகள் வெளிவரும் வரை அது கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும், பிறகு ஒரு சிலரைக் கைது செய்து கணக்குக் காட்டும் என்பதுதான் இதன் பொருள்.

வன்கொடுமையால் பாதிப்புற்ற பெண்களில் ஒருவர் காவல்துறைதான் தங்களை வெறிக் கும்பலிடம் விட்டுப்போனது என்று குற்றஞ்சாட்டுகிறார். வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கணவர் – நடந்ததை நேரில் பார்த்தவர் – இந்தியப் படையில் இருந்தவராம்! கார்கில் போரில் பங்கேற்றவராம்! இலங்கையிலும் இந்தியப் படையில் இருந்தவராம்!
இந்த முன்னாள் இந்தியப் படையாள் இப்போது தொலைக் காட்சிக்கு அளித்துள்ள செவ்வியில், என்ன நடந்தது என்பதைச் சொல்கிறார்:

“அந்த இரண்டு மூன்று பெண்களில் என் மனைவியும் ஒருத்தி. அந்தக் கும்பலில் இருந்தவர்கள் இந்தப் பெண்களை ஆடை களையும் படிக் கட்டாயப்படுத்தினார்கள். எங்கள் ஊர்க்காரர்கள் சிலர் அந்தப் பெண்களைக் காப்பாற்ற முயன்ற போது, ஒரு பெண்ணின் தந்தையை அவர்கள் கடுமையாகத் தாக்கிக் கொலை செய்தார்கள். காவல்துறையினர் மைதேயி கும்பலுக்குத் துணை நின்றனர். அவர்கள் இந்தக் கொடுமைகளைத் தடுக்க எதுவும் செய்யவில்லை.”

இப்படிப்பட்ட நிலைமையில் குக்கிகளால் மைதேயிகளுடன் சேர்ந்து வாழ முடியுமா? “நாங்கள் தனித் தனியாகத்தான் வாழ முடியும், அதுதான் சரி” என்று குக்கிகள் சொல்கிறார்கள்.

தாழி (228) மடலில் “மோதி வாயில் கொழுக்கட்டை?” என்ற தலைப்பில் எழுதியிருந்தேன்:
“நடுவணரசிலும் பாசக, மணிப்பூர் மாநில அரசிலும் பாசக! இதற்குப் பெயர் ‘இரட்டை இழு பொறி (எஞ்சின்) சருக்கார்’! வலுமிக்க ஆட்சியாம்! பாசக ஆட்சியில் வகுப்புவெறி வன்முறைக்கு இடமிருக்காது என்ற பீற்றல் மணிப்பூரில் பிய்ந்து தொங்குகிறது. இது பற்றிய கவலை பிரேன் சிங்குக்கும் இல்லை! அமித்சாவுக்கும் இல்லை! அகன்ற மார்போடு அகிலம் சுற்றும் அசகாய சூரர் நரேந்திர மோதிக்கு இருக்க வேண்டாவா? எவன் செத்தால் எனக்கென்ன? என்று வெள்ளை மாளிகையில் விருந்துண்டு, பிதேன் இணையருக்கு வைரம் பரிசளித்து, கொசுறாக ஆய்தக் கொள்முதல் ஒப்பந்தம் செய்து கொண்டு தேச நலன் காத்து நெஞ்சு நிமிர்த்திக் கொண்டிருக்கிறார். மற்றதெல்லாம் இருக்கட்டும், குசராத்து – 2002, மணிப்பூர் – 2023 இரண்டையுமே மறந்தும் மறைத்தும் இந்தியாவில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இல்லையோ என்ற சிறு ஐயத்தையே எள்ளி நகையாடுகின்றார்.”

மே 4 வன்கொடுமைக் காணொளி வந்தது, உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது, மோதி வாயிலிருந்த கொழுக்கட்டையும் விழுந்து விட்டது. மணிப்பூர் பற்றி மோதி திருவாய் மலர்ந்தருளியுள்ளார்: “மணிப்பூர் சம்பவத்துக்கு மன்னிப்பே கிடையாது” என்று கூறியிருக்கிறார் அப்படியென்றால், அங்கு குற்றம் இழைத்தவர்கள் மீது இரண்டு மாதங்களாக நடவடிக்கை எடுக்காத மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கு மீது மோதி நடவடிக்கை எடுப்பாரா?!

“மணிப்பூர் மகள்களுக்கு நடந்த கொடுமைகளை ஒருபோதும் மன்னிக்க முடியாது. எந்தக் குற்றவாளியும் தப்ப முடியாது என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார் மோதி. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குகிற நாளில் இந்தக் கருத்தை அவர் நாடாளுமன்றத்தில் பேசினாரா, இல்லையே?

காசுமீரில் அசீபா பானுவுக்கும், குசராத்தில் பில்கிசு பானுவுக்கும், உ.பி. அத்துராசில் அந்தத் தணிந்த (தலித்து) பெண்ணுக்கும், இப்படி எத்தனை எத்தனையோ பெண்களுக்கும் நிகழ்ந்த வன்கொடுமைகளில் பாசக உறுதியாகக் குற்றவாளிகளின் பக்கம் நின்றதைக் கண்ட யாரும் “மணிப்பூர் மகள்கள்” என்று மோதி பேசுவதில் மயங்க மாட்டார்கள். மணிப்பூர் குற்றவாளிகளை மன்னிக்கவே முடியாது என்கிறார் மோதி. அப்படியானால் மோதி, அமித்துசா, பிரேன் சிங்கு ஆகிய முதல் மூன்று குற்றவாளிகளையும் மன்னிப்பதற்கில்லை.

“உண்மையிலேயே மணிப்பூர் நிலை குறித்துத் தலைமையமைச்சர் மோடிக்குக் கோபம் இருந்தால், முதல்வர் என். பிரேன் சிங்கை முதலில் பதவி நீக்கம் செய்யட்டும் பார்க்கலாம்!” – என்கிறார் காங்கிரசு தலைவர் மல்லிகார்சுன கார்கே.

“மணிப்பூர் தொடர்பில் மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும, தவறினால், உச்ச நீதிமன்றம் தலையிடும்” என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட்டு கூறியுள்ளார். அரசமைப்புச் சட்டப்படியான குடியாட்சியத்தில் எப்படி இப்படி நிகழ முடியும்? என்று அதிர்ச்சி தெரிவிக்கிறார். இவ்வாறான கொடுமைகள் திரும்பத் திரும்ப நிகழுமானால், இது அரசமைப்புச் சட்டப்படியான குடியாட்சியம்தானா? அல்லது இந்த அரசமைப்பே குடியாட்சிய அரசமைப்புதானா? என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் மணிப்பூர் தொடர்பாக இந்திய அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதும் பேசுபொருளாயிற்று.
இந்தப் பின்னணியில்தான் நரேந்திர மோதி “மணிப்பூர் மகள்கள்” பற்றிப் பேசுகிறார். இந்த நாடகத்தில் நாட்டு மக்கள் மயங்க மாட்டார்கள். வல்லிய(பாசிச) வெறியர்களுக்குப் படுகொலையும் பாலியல் வன்மொடுமையும் அரசியல் கருவிகள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்களின் வல்லிய(பாசிச)அரசியலை முறியடிக்காமல் பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியாது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 256

இரா.சண்முகநாதன் நூற்றாண்டு விழா, சென்னை

      28 September 2023      அகரமுதல


சிவகங்கை வழக்குரைஞர் மானமிகு

இரா.சண்முகநாதன் நூற்றாண்டு விழா

புரட்டாசி 12, 2054 — 29.09.2023

வெள்ளி மாலை 6.00

இடம் : நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை 600 007

தலைமை : ஆசிரியர் கி.வீரமணி

சிறப்புரை: தோழர் இரா.நல்லக்கண்ணு

பிறர் : அழைப்பிதழ் காண்க.

இவண்:

பெரியார் தன்மதிப்புப் பரப்புரை (சுயமரியாதைப் பிரச்சார) மையம்





புதன், 27 செப்டம்பர், 2023

தமிழ்க்கூடல், உலத்தமிழ்ச்சங்கம்

 


புரட்டாசி 10, 2054 புதன் 27.09.2023

முற்பகல் 10.00 மணி

தமிழ்க்கூடல்

நூல் அரங்கேற்றம்




தோழர் தியாகு எழுதுகிறார் 223 : கல்வியுரிமை மாநாட்டுத் தீர்மானங்கள்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 222 : காமராசர் பிறந்த நாள்-தொடர்ச்சி)

கல்வியுரிமை மாநாட்டுத் தீர்மானங்கள்

இனிய அன்பர்களே!

இளைஞர் அரண் கல்வியுரிமைப் பேரணி – மாநாடு, குடந்தை – 2023
2023 சூலை 16
மாநாட்டுத் தீர்மானங்கள் (வரைவு)


1) 2004 சூலை 16ஆம் நாள் குடந்தை நகரில் கிருட்டிணா பள்ளியில் பற்றிய கொடுந்தீயில் 94 குழந்தைகள் உயிரோடும் கல்விக் கனவுகளோடும் மாண்டு போன கொடுமைக்கு முழுமையாக நீதி வழங்க வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது. ஒவ்வோராண்டும் சூலை 16ஆம் நாளைத் தமிழக அளவில் பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கும் படித் தமிழக மக்களையும் தமிழக அரசையும் இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

2) இந்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2020 என்பது குடிமக்களின் கல்வியுரிமைக்குப் புறம்பானதாகவும், வணிக மயத்துக்கும் இந்து மயம் இந்திய நடுவணாதிக்க மயத்துக்கும் வழிவகுப்பதாகவும் இருப்பதால் அக்கொள்கையைத் தமிழக மக்கள் அடியோடு மறுதலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டுக்குத் தனித்தன்மை வாய்ந்த கல்விக் கொள்கை வகுக்கும் தமிழக அரசின் முடிவை இம்மாநாடு வரவேற்கிறது.

3) அதே நேரத்தில் தமிழக அரசு அமைத்த குழு செயல்படாமல் முடங்கியிருப்பது குறித்தும், இதற்கிடையில் இந்திய அரசின் பிற்போக்கான கல்விக் கொள்கையின் சில கூறுகள் தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல செயலாக்கப்பட்டு வருவது குறித்தும் இம்மாநாடு கவலை தெரிவித்துக் கொள்கிறது. இந்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை அடியோடு மறுதலித்து அதனை எவ்வகையிலும் செயல்படுத்த மறுக்கும்படித் தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

4) தமிழ்நாட்டுப் பலகலைக்கழகங்களின் தன்னாட்சியைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் அனைத்துக் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் பொதுப் பாடத்திட்டம் என்று தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் அறிவித்து இருப்பதைத் திரும்பப் பெறும்படி இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5) இந்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்தும், தமிழ்நாட்டுக்குத் தனித்தன்மை வாய்ந்த கல்விக் கொள்கை வேண்டும் என்பதற்காகவும் மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், கல்விச் செயற்பாட்டளர்கள், மக்கள் கல்வி இயக்கங்கள் நடத்தி வரும் போராட்டங்களோடு இளைஞர் அரண் தோழமை கொள்கிறது. .

6) பொதுநுழைவு(நீட்), பொ.ப.நு.தே.(cuet), தே.த.தே.( NExT) முதலான அனைத்திந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வுகளைக் கைவிடும் படி இந்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. தமிழகச் சட்டப் பேரவை இயற்றிய நீட் விலக்குச் சட்டத்துக்கு இந்திய அரசு உடனே ஒப்புதல் அளிக்குமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது. இவ்வகையில் தமிழக மக்களைத் திரட்டி இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வரும் படி தமிழக அரசையும் அரசியல் கட்சிகளையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

7) தமிழ்நாட்டுக்குத் தனித்தன்மை வாய்ந்த கல்விக் கொள்கையை வகுக்கும் முயற்சியில் தன்னளிப்புடன் உழைத்து வரும் கல்வியாளர் பேராசிரியர் சவகர் நேசன் அவர்களின் சலியா முயற்சிகளை இம்மாநாடு பாராட்டுகிறது. கல்விக் கொள்கையின் பரிமாணங்கள் என்ற அவரது ஆய்வறிக்கையைத் தமிழ்ச்சமூகம் ஆழ்ந்த கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கருதி, அவர்தம் முயற்சிகளில் அறிவார்ந்தும் உணர்வார்ந்தும் துணைநிற்க இளைஞர் அரண் உறுதி கொள்கிறது.

8) மாணவர்கள் மீதான ஒடுக்கு முறைகளும், ஆசிரியர்கள் மீதான சுரண்டல்களும், அடக்குமுறைகளும், தனியார் கல்வி நிறுவனங்களின் விதிமீறல்களும், பகற் கொள்ளைகளும், கல்வி வளாகங்களில் சாதிய ஒடுக்கு முறைகளும் இன்றைய சூழலில் மேலோங்கி வருவதாக இம்மாநாடு அஞ்சுகிறது. இந்த நிலையைச் சரிசெய்யத் தமிழக மக்களும் தமிழக அரசும் உடனே உரியவாறு செயல்பட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது,

9) தமிழகத்தின் கல்விச் சூழல் கெட்டுக் கிடப்பதில் தமிழக அரசின் ஆசிரியர் அமர்த்தக் கொள்கைக்கு ஒரு பங்கிருப்பதாக இம்மாநாடு நம்புகிறது. ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடாமை, ஊதிய ஏற்றத்தாழ்வு, ஒப்பந்த ஆசிரியர் முறை, கௌரவ விரிவுரையாளர்களை முறைப்படுத்தாமல் நிரந்தரமாகவே தற்காலிக ஆசிரியர்களாக வைத்துக் கொள்வது, ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பின்மை, ஆசிரியர்களை அமர்த்துவதில் இலஞ்ச ஊழல் ஆகிய இவை அனைத்தும் கல்விச் சூழலைச் சீரழித்திருப்பதாக இம்மாநாடு நம்புகிறது. இந்நிலைமைகளை உடனே சீர் செய்யத்தவறினால் தமிழ் நாட்டில் கல்வி செத்துப்போகும் ஆபத்து இருப்பதாக இம்மாநாடு எச்சரிக்க விரும்புகிறது.

10) மாணவர்களை வதைத்து பெற்றோரைச் சுரண்டி அறமும் அறிவும் சார்ந்த கல்வியை நாசமாக்கும் தன்நிதிக் கல்லூரிகள் உள்ளிட்ட தனியார் கல்விக் கூடங்களை அரசுடைமையக்க வேண்டும்; இதற்கிடையில் அவற்றின் மீது அரசு தீவிரமான கட்டுப்பாடுகள் செலுத்த வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

11) தமிழ்நாட்டில் ஒரு மாற்றுக் கல்வி இயக்கமாக உருப்பெற்றுள்ள தாய்த்தமிழ் பள்ளிகளை அரசு-உதவி பெறும் பள்ளிகளாக மாற்றி அவற்றைப் பாதுகாத்து வளர்த்தெடுக்கும் படி இம்மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல்
 252