1. குண்டு வெடித்த பிறகு தணு நடந்து போனார்!

 ‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் நளினி முருகன் தனது எண்ணங்களை நூலாக ஆக்கி உள்ளார். இதழாளர் பா.ஏகலைவன் இந்த நூலைத் தொகுத்து எழுதியுள்ளார். நவம்பர் 24-ஆம் நாள் சென்னையில் இந்த நூல் வெளியிடப்பட்டது.
  மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் எண்ணங்களை இந்த நூலில் நளினி சொல்லி இருக்கிறார். திகைப்பூட்டும் தகவல்கள் பல முதன்முறையாக வெளிவந்துள்ளன. அவற்றில் சில பகுதிகள் மட்டும் இங்கே!
இருட்டறையில் இருந்து!
 இது, கால் நூற்றாண்டைத் தாண்டி இருட்டறைக்கு உள்ளாக ஒலித்துக் கொண்டிருக்கும் என் மனச்சான்றின் குரல். இப்போது, சிறைக் கொட்டடியைத் தாண்டி உங்களின் நெஞ்சைத் தட்டப் போகிறது.
  எனக்கான கனவுகளோடு அந்த தென்றற்கால நடைபாதையில் எல்லாரையும் போல நானும் இளமையைச் சுமந்து கொண்டு காத்திருந்தேன். திடீரென ஒரு வெடிகுண்டு ஓசை என் கனவுகளையெல்லாம் சிதைத்துவிட்டுப் போகும் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.
  இப்போது 26 ஆண்டுக் காலம், நீண்ட நெடிய சிறைவாழ்வைத் துய்த்தபடி(அனுபவித்தபடி) நிற்கிறேன். இதில் பாதிக் காலம், ‘நாளை என் உடல் தூக்கில் தொங்குமோ’ என்ற மிரட்சியில் கழிந்தது. எப்போது விடுதலை கிடைக்கும் என்ற ஏக்கத்தில், என் கணவரையும் குழந்தையையும் பிரிந்த துயரில், கண்ணீரில், கவலையில் என் மீதி வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது.
தாசு தங்குவதற்கு ஓர் இடம்!
 ஈழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டின் பல ஊர்களில் தங்கியிருந்தார்கள். அப்படிப் போராளிகளுக்குத் துணையாக நின்ற இளைஞர் பட்டாளத்தில் என் தம்பி பாக்கியநாதனும் ஒருவன். சென்னையில், பெயர் பெற்ற சுபா சுந்தரம் ஒளிப்பட நிலையத்துக்கு பாக்கியநாதன் போய் வருவான். அங்குதான் பேரறிவாளன், அரிபாபு, முத்துராசு முதலான பலரும் ஒளிப்படக்கலைப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார்கள். அப்படியான நண்பர்கள் பட்டியலில் புதிதாக வந்து சேர்ந்தவர்தான் தாசு என்ற முருகன்.
  தாசு தங்குவதற்கு ஓர் இடம் வேண்டும் என்று தம்பி பாக்கியாவிடம் பேசியிருக்கிறார்கள். “வேறு வாடகை வீடு பார்த்துக் கொள்ளும் வரை என் வீட்டில் இருந்து கொள்” என்று தாசை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறான் தம்பி. தை 26, 2012 /  1991 பிப்பிரவரி எட்டாம் நாள் முருகனை முதன்முதலாகச் சந்தித்தேன். இராயப்பேட்டையில் சபரி கல்லூரி, தியாகராய நகரில் விவேகானந்தா கல்லூரி என இரண்டு பயிற்சிக் கல்லூரிகளில்(tutorial colleges) சேர்ந்து ஆங்கில வகுப்புக்கு நாள்தோளும் காலையிலும் மாலையிலும் தவறாமல் போய்விடுவார்.
  வெளிநாடு சென்று வேலை பார்ப்பதற்காக அவரை அவர் அப்பா, ஒரு முகமையைப் (agency) பிடித்துப் படகு மூலம் தமிழ்நாட்டின் வேதாரண்யத்துக்கு அனுப்பி வைத்து விட்டார். அப்படி வேதாரண்யம் வந்த இடத்தில்தான் ‘ஒற்றைக் கண்’ சிவராசன் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் முகவராக அறிமுகமாகியிருக்கிறார்.
  நாங்கள் இருவரும் தொடர்பில்லாமல் நிறையப் பேசிக் கொண்டோம். எங்கள் மனத்தைப் புறக்கணித்து விட்டு நெஞ்சங்கள் இரண்டும் தமக்குள்ளே பேசிக் கொள்ளத் தொடங்கி விட்டன. சித்திரை 08, 2012 / 1991 ஏப்பிரல் 21-ஆம் நாள் திருப்பதி கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றோம். என் கழுத்தில் முருகன் தாலி கட்டினார். அவர் விருப்பப்படி என் காலில் மெட்டியைப் போட்டு விட்டார். தாலியையும், மெட்டியையும் என் வழக்கில் ஏன் மறைத்தார்கள், எங்கள் உறவையும் ஏன் கொச்சைப்படுத்தினார்கள் என்பதுதான் எங்கள் காதலுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய வலியாகும்.
தணுவைச் சந்தித்தேன்!
  திருமணத்துக்குப் பிறகு, அவரது வெளிநாட்டுப் பயணத்தில் நான் கூடுதல் அக்கறை செலுத்தத் தொடங்கினேன். பயண முகவர் என்ற அளவில் முதன் முதலில் சிவராசன் என்பவரைப் பற்றிச் சொன்னார்.
“ஈழ விடுதலைக்கு இந்தியத் தலைவர்களின் ஆதரவைச் சிவராசன் திரட்டி வருபவர். ஒவ்வொருவராகச் சந்தித்து நட்பு ஏற்படுத்தி வருபவர்” என்று என் கணவர் சொன்னார். சித்திரை 20, 2012 /  1991 மே மாதம் மூன்றாம் நாள் அன்றுதான் சிவராசன் எனக்கு முதன்முதலாக அறிமுகமானார். சுபா, தணு ஆகிய இருவரையும் அழைத்து வந்து அறிமுகம் செய்தார் சிவராசன். வில்லிவாக்கத்தில் உள்ள எனது வீட்டில் தங்கி இருந்தார்கள்.
  சித்திரை 24, 2012 / 7.5.1991 அன்று நந்தனத்தில் நடந்த, வி.பி.சிங்கு கலந்து கொண்ட கூட்டத்துக்கு என்னை அழைத்தார்கள்; சென்றேன். கூட்டத்தில் அரிபாபு, பேரறிவாளன் ஆகிய இருவரையும் பார்த்தேன். வி.பி.சிங்குக்கு மாலை அணிவிக்க தணு முயற்சி செய்தார்; முடியவில்லை. மேடையில் இருந்து இறங்கிப் போகும்போது மாலையைக் கையில் வாங்கிக் கொண்டார் வி.பி.சிங்கு. ஏறத்தாழ ஏழு மணி நேரம் அங்கு இருந்தோம். பிறகு நடந்த உசாவலில் (விசாரணையில்) அந்தக் கூட்டத்தில் எங்களைப் பார்த்ததாக ஒருவர் கூடச் சான்று அளிக்கவில்லை.
 சித்திரை 29, 2012 / 12.5.1991 அன்று சுபாவும், தணுவும் என் வீட்டுக்கு வந்தார்கள். அன்று எனக்கு விடுமுறை நாள் என்பதால் அவர்களை மீண்டும் திரைப்படத்துக்கும் கோயிலுக்கும் கடைக்குமாக அழைத்துப் போய் வந்தேன். மே 18-ஆம் நாளும் வந்தார்கள். அன்று முழுவதும் மாமல்லபுரம் சென்று வந்தோம். 19-ஆம் நாளும் வெளியில் சுற்றினோம். விடிந்ததும் அவர்கள் கிளம்பினார்கள். நான் வேலைக்குச் சென்று விட்டேன்.
அந்த நாளும் வந்தது!
  21-ஆம் நாள் சுபா, தணுவுடன் பாரிமுனைப் பேருந்து நிலையம் போய் இறங்கினோம். அங்கு சிவராசனும் அரிபாபும் காத்திருந்தார்கள். ஏறக்குறைய ஏழு மணி அளவில் திருப்பெரும்புதூரில் இறங்கினோம். சாப்பிட்டோம். கூட்டமே இல்லை. காவலர்கள்தாம் நிறைய இருந்தார்கள். சிவராசனும், தணுவும் ஏதோ சீற்றமாகப் பேசிக் கொண்டார்கள். அங்கிருந்த தலைமையான ஆட்களைச் சிவராசனுக்குத் தெரிந்திருந்தது. அவர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார் சிவராசன். முதன்மை விருந்தினர்கள்(வி.ஐ.பி-கள்) உட்காரும் இடத்துக்குள் தணுவை மட்டும் அழைத்துக் கொண்டு போனார். பெண்கள் பகுதியில் நாங்கள் உட்கார்ந்து கொண்டோம். சிறிது நேரத்தில் முதன்மை விருந்தினர்கள் வரிசையில் தணுவை முதலாவதாகக் கொண்டு போய் நிறுத்திவிட்டு, வேறு ஒரு பகுதியில் தொலைவாகப் போய் நின்று கொண்டு, அங்கிருந்த தலைவர்களிடமும் பேசிக் கொண்டிருந்தார் சிவராசன்.
 ஏறத்தாழ 10.15 இருக்கும், இராசீவு காந்தி வந்து விட்டார். அவரை அருகில் சென்று பார்க்க எனக்கு ஆர்வமாக இருந்தது. சுபாவை அழைத்தேன். வேண்டா என்று என் கையைப் பிடித்து இழுத்த சுபா, வெளியே இழுத்துச் சென்றார். கூட்டத்தை விட்டு வெளியே நகர்ந்து சற்றுத் தள்ளித் தொலைவாகப் போய் நின்று கொண்டார். “என்னாயிற்று சுபா? ஏன்?” என்று கேட்டேன். “ஒன்றுமில்லை. பேசாமல் இருங்கள்” என்றாள். என்னையும் வெளியே இழுத்துச் சென்றாள்.
  சாலையை நோக்கி நடந்திருப்போம். இது வரையிலும் நான் கேட்டிராத பெரிய வெடி ஓசை! திரும்பிப் பார்த்தேன். ஒரே புகை மண்டலம்! கூட்டத்துக்குள் இருந்து சிவராசன் எங்களை நோக்கி வந்தார். மிதியூர்தியில்(ஆட்டோவில்) ஏறினோம். “நிறையக் குழப்படிகள்” என்று சொல்லிக் கொண்டார். புதிதாக ஒரு வீட்டுக்கு எங்களை அழைத்துச் சென்றார் சிவராசன்.
கண் முன்னால் நடந்து போனார் தணு!
  நாங்கள் மூன்று பேரும் மிதியூர்தியில் இருந்து இறங்கி வீட்டை நோக்கி நடக்கிறோம். பட்டென்று எங்கள் முன்பாகக் கண்ணெதிரே தணு நடந்து போய்க் கொண்டிருந்தார். இது கற்பனை இல்லை. நாங்கள் எல்லாருமே அந்தக் காட்சியைக் கண்கூடாகப் பார்த்து நிற்கிறோம். எங்களுக்கு முன் தணு அங்கு எப்படி வந்தாள் என நான் திகைத்தேன். எப்படி எனச் சுபாவைச் செய்கையில் கேட்டேன். அவளுக்கும் திகைப்பு. தணுவை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, வாயில் விரல் வைத்து ‘ஓசை செய்யாதீர்கள்’ என்றாள். வீட்டில் இருந்து கிளம்பியபோது எந்த உடையில் கிளம்பினாளோ அதே உடையில், கையில் சந்தன மாலையோடு அப்படியே நடந்து சென்றபடி இருந்தாள் தணு.
 பிறகு, எங்கள் எல்லாரையும் மத்திய குற்றப் புலனாய்வினர் (சி.பி.ஐ) பிடித்து உசாவியபோது நாங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே ‘தணுவின் ஆவி’ காட்சியைப் பதிவு செய்திருந்தோம் என்பதைப் பின் நாட்களில் தெரிந்து கொண்டோம். அது மயக்கத் தோற்றமா(பிரமையா) அல்லது உண்மையா என இன்று வரை என்னால் கணிக்க முடியவில்லை. ஆனால், ஒரே நேரத்தில் பலர் பார்த்தோம் என்பதை மத்திய குற்றப் புலனாய்வினரும் உறுதிப்படுத்தியிருந்தனர். கால் நூற்றாண்டு கடந்து விட்டது. இப்போது நினைத்தாலும் எனக்கு அந்தக் காட்சி உதறலாகத்தான் இருக்கிறது. அதை நினைத்துப் பல இரவுகள் நான் பயந்து நடுங்கியிருக்கிறேன்.
எங்களுக்குத் தெரியாது!
அப்போது நான் சூல் (கருப்பம்) கொண்டிருந்தேன். என் கணவரை எப்படியாவது வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பிவிட நினைத்தேன். அதனால்தான் சிவராசன் சினம் அடையாதவாறு நடந்தேன். என் கணவர் நன்மைக்காகச் சுபா, தணு இருவரையும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். நிகழ்ச்சி நடந்த இரண்டு நாட்கள் கழித்துத்தான் மனதில் ஒரு நெருடல் ஏற்பட்டது. ஏதோ சிக்கலில் எங்களை அறியாமல் சிக்கி விட்டோமோ என்று நினைத்தேன்.
  கணவரை அழைத்துக் கொண்டு திருப்பதி செல்லத் திட்டமிட்டேன். மே 10-ஆம் நாள் அவரைப் பார்த்தது. (பிறகு) மே 25-ஆம் நாள்தான் பார்த்தேன். வில்லிவாக்கம் வீட்டில் இருந்தபோது சிவராசன் வந்து விட்டார். எங்களோடு அவரும் திருப்பதி வருவதாகச் சொல்லி விட்டார். “உன் அம்மாவையும் கூப்பிடு” என்றார் சிவராசன். தம்பியைத் தொலைபேசியில் அழைத்துச் சொன்னேன். கொலைத் திட்டம்பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரிந்திருந்தால் யாராவது சொந்தப் பெயரில் மகிழுந்து(கார்) பதிவு செய்து சிவராசன், சுபா உடன் திருப்பதி போயிருப்பார்களா?
  சிவராசனும், என் கணவரும் ஒரே அறையிலும் நான், சுபா, என் அம்மா மூவரும் ஓர் அறையிலும் இருந்தோம். “தணு எங்கே?” என்று என் கணவர் கேட்க, சிவராசன் மழுப்பி இருக்கிறார். 26-ஆம் நாள் காலையில் தணுவின் ஒளிப்படம் வெளியாகி விட்டது. அதன் பிறகுதான் என் கணவருக்கே தெரியும். என்னிடம் இது பற்றிப் பேசினார். பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டோம் என்பதை அவரும் உணர்ந்தார். தன்னால், தனக்கு உதவி செய்த குடும்பத்துக்குச் சிக்கல் வந்ததாக என் கணவர் நினைத்தார். என்னை விட என் கணவரின் உயிரும் பாதுகாப்பும் எனக்கு முதன்மையாகப் பட்டது.
  நாங்கள் காதலித்தது சிவராசனுக்குத் தெரியும். ஆனால், கமுக்கமாகத் திருமணம் செய்து கொண்டோம் என்பது தெரியாது. ‘உங்கள் காதல் எனக்குத் தெரியும். நீ சரியாக ஒத்துழைக்கவில்லையானால் உங்களுக்குள் சிக்கல் ஏற்படுத்துவேன்’ என்பது மாதிரி அவர் அணுகுமுறை இருந்ததால், சிவராசன் தொடர்பானவற்றில் தள்ளியே இருப்போம் என்ற முடிவில் இருந்தேன்.
வேலையை விட்டேன்!
  திருப்பதியில் இருந்து திருத்தணி வந்து முருகனை வேண்டிக் கொண்டு சென்னை வந்தோம். மாலை நாளிதழ்களில் மனித வெடிகுண்டு என்று தணு படம் வந்திருந்தது. எனக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு விட்டன. கத்திக் கதறினேன். சுற்றி இருந்த எல்லோருமே அழுதார்கள். காவல்துறையினர் வந்து கேட்டால் உண்மையைச் சொல்லப் போகிறோம். எப்படியும் என் மீது தவறு ஏதும் இல்லை எனக் கண்டிப்பாகப் புரிந்து கொண்டு விடுவார்கள் என்று நினைத்தேன்.
அதன் பிறகுதான், எங்களுக்குள் திருமணம் நடந்து விட்டதை அம்மாவிடம் சொன்னேன். தலையிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அம்மா அழுதார். என் கணவரைச் சபித்தார். “நடந்த தவற்றில் அவருக்கு ஒரு பங்கும் இல்லையம்மா” என்று நான் சொன்னேன்.
  என்னுடைய அலுவலகத்துக்கு மத்திய குற்றப் புலனாய்வுத்துறையினர் வரத் தொடங்கினர். சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர் வைத்திருந்த தாளில் என் அலுவலகத் தொலைபேசி எண் இருந்ததாகவும் சொன்னார்கள். சூன் 10-ஆம் நாள் நான் எனது வேலையை விட்டேன். அலுவலகம் சென்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, அலுவலக ஊழியர் சுசயா வீடு சென்று அலுவலகத் திறவுகோலை ஒப்படைத்து விட்டுத் திரும்பினேன்.
  இராசீவு காந்தி கொலையில் தொடர்பிருந்தால் இப்படியா நடந்து கொண்டிருப்பேன்? தப்பிவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் ஒருவர் இப்படிச் செய்வாரா? மனத்தளவில் நான் குற்றவாளி இல்லை என்பதால் என்னையும் அறியாமல் அப்படி நடந்து கொண்டிருக்கிறேன்.
அலையாய் அலைந்தோம்!
  நானும் என் கணவரும் சாந்தி (சூன் 11) திரையரங்கம் அருகே சந்தித்தோம். திருப்பதி போனோம். அதற்குள் என் குடும்பத்தினர் அனைவரும் மத்திய குற்றப் புலனாய்வுத்துறையால் வளைக்கப்பட்டார்கள். “என் கணவரையும் (வயிற்றிலிருந்த) குழந்தையையும் காப்பாற்றப்பா” என்று கடவுளிடம் நான் வேண்டினேன். கணவரை முடிக் காணிக்கை செய்ய வைத்தேன். “இராசீவு கொலையை வெற்றிகரமாக முடித்து விட்டதற்கு நேர்த்திக்கடன் செய்தோம்” என்று (இதை) குற்றப் புலனாய்வுத்துறை தனது வழக்கில் புனைந்தது. மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்குமா பெருமாள் அருள் கொடுத்துக் கொண்டிருப்பார்? ஏழுமலையானுக்கு இவையெல்லாமும் ஒரு வேலைதான் என்று புலனாய்வுத்துறையினர் எப்படித் தெரிந்து கொண்டார்கள்? மதுரை, பெங்களூரு, விழுப்புரம் என்று அலைந்தோம். விழுப்புரத்தில் இருந்து சென்னை வந்தோம். சைதாப்பேட்டையில் இறங்கியபோது காவல்துறை கைது செய்தது.
சித்திரவதைகள்!
  அடி, சித்திரவதை, பாலியல் கிண்டல்கள், அம்மணப்படுத்துதல் என்று ‘மல்லிகை’ உசாவலில் அனைத்தையும் கொடுத்தார்கள். முதன்மை அலுவலரான இரகோத்தமன், என் தாலியைப் பிடித்து இழுத்து, “இது எதுக்கடி?” என்று அறுத்தெடுத்தார். வளையல்களை உடைத்து நொறுக்கினார். காலில் அணிந்திருந்த மெட்டி, கொலுசு ஆகியவற்றையெல்லாம் வலுக்கட்டாயமாகப் பிடுங்கினார். என்னை அலங்கோலப்படுத்தி நிறுத்தி வைத்திருந்தார். தூங்க விடவில்லை. அடி வயிற்றுக்குக் கீழே எத்தினார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சித்திரவதை!
  சுபா, தணு ஆகியோருடன் நான் பழகி இருக்கிறேன். என் கணவர், சிவராசனுடன் பழகி இருக்கிறார். இதனால் அனைத்து நடவடிக்கைகளையும் எங்கள் மேல் திணித்து எங்களை முதன்மைக் குற்றவாளியாக்க நினைத்தார்கள். புலனாய்வுத்துறை சொன்ன எல்லாவற்றையும் என்னை ஒப்புக்கொள்ளச் சொன்னார்கள். என்னை ஒப்புக் கொண்ட குற்றவாளியாக்கி (Approver), என் கணவரை நானே காட்டிக் கொடுக்கச் செய்ய வேண்டும் என்று கார்த்திகேயன் நினைத்தார். எங்களுக்குள் திருமணமே நடக்கவில்லை என்று போலி ஆவணத்தை உருவாக்கினார்கள். எங்கள் காதலையும், கற்பையும் கொச்சைப்படுத்தினார்கள். எங்கள் இருவரையும் பிரிக்க நினைத்தார்கள். நாங்கள் உறுதியாக இருந்தோம்.
 புலனாய்வுத்துறை சொல்வதைப்போலப் பொய் வாக்குமூலம் கொடுத்தால் என் கணவருக்குத் தூக்குத் தண்டனை உறுதியாகும். முடியாது என்றால் இங்கேயே அவரை அடித்துக் கொன்று போடுவார்கள். இரண்டுமே எனக்கு எதிரானதுதான். எதைச் செய்வது? எதை விடுவது?
ஒப்புக் கொண்ட குற்றவாளியாகி நானே அவருக்குத் தூக்குக் கயிற்றை எடுத்துக் கொடுப்பதை விடக் கடைசி வரை நான் அவருக்கு உண்மையாகவே நின்று போலியான மோதல் கொலை (fake encounter) மூலமான சாவைத் தருவது எவ்வளவோ மேல்!
(நளினியின் கருவைக் கலைக்கச் சொன்ன காவல் அலுவலர், பிரியங்கா கேட்ட கேள்விகள் போன்ற திடுக்கிடும் தகவல்கள் அடுத்த இதழில்…)

நன்றி: இளைய விகடன் : 27.11.2016
கருத்தாளர்: நளினி முருகன்
தொகுப்பாளர் : பா.ஏகலைவன்
தரவு : இ.பு.ஞானப்பிரகாசன்