வியாழன், 13 டிசம்பர், 2012

தன்னம்பிக்கையே முதன்மை : முதல்வர் சொன்ன குட்டிக்கதை

தன்னம்பிக்கையே முதன்மை : முதல்வர் சொன்ன குட்டிக்கதை









சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, வாழ்கையில் முன்னேற தன்னம்பிக்கையே முக்கியம் என்பதை உணர்த்த குட்டிக் கதை ஒன்றை கூறினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரித் திடலில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை மற்றும் மாணவ மாணவியர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரையில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு, இந்த ஒன்றரை ஆண்டுகளில் 26,220 ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆசிரியர் நியமனத்துக்கான தகுதித் தேர்வு இரண்டு முறை நடத்தப்பட்டு, தகுதியின் அடிப்படையில் நீங்கள் எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். நியமன ஆணைகளை பெற உள்ள  உங்கள் எல்லோருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியர் பணி என்பது அறப் பணி. ஆசிரியர் பணி என்பது தன்னலமற்ற சேவைப் பணி. ஆசிரியர் பணியை விடச் சீரிய பணி ஏதுமில்லை.
ஏழை மனிதர் ஒருவர் தெரு வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார்.  தெருவில் ஒரு பழங்கால நாணயம் கிடந்தது.  அதை எடுத்துப் பார்த்தார்.  அந்த நாணயத்தில் துளை இருந்தது. துளையிட்ட நாணயம் கிடைத்தால் அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. எனவே, சந்தோஷமாக அதை எடுத்து தன்னுடைய சட்டைப் பையிலே பத்திரமாக வைத்துக் கொண்டார்.  வீட்டிற்கு சென்ற பின் அதனை ஒரு பாலிதின் கவரில் போட்டு, அதை ஒரு துணி கவரில் சீல் வைத்து பத்திரப்படுத்திக் கொண்டார். தனக்கு வந்த அதிர்ஷ்டத்தை தன் மனைவியிடமும் தெரிவித்தார். அதை எப்போதும் தனது சட்டைப் பையில் வைத்துக் கொண்டு அதை தொட்டு பார்த்துக் கொள்வார்.  ஆனால் அதனை வெளியில் எடுக்க மாட்டார்.
அந்த நாணயம் தனக்கு வாழ்வில் உயர்வைத் தரும் என்று நம்பி, தனது முழுத் திறனையும் பயன்படுத்தி உழைக்க ஆரம்பித்தார். பின்னர் வியாபாரம் செய்ய ஆரம்பித்து அதிலும் வெற்றி பெற்றார்.  அதன் பின்னர் பல வியாபார முயற்சிகளில் ஈடுபட்டு அனைத்திலும் வெற்றி பெற்றார். பணம், பதவி, புகழ் எல்லாம் அவரை வந்து சேர்ந்தது. அவரை எல்லோரும் பாராட்ட ஆரம்பித்தார்கள்.  அவர் எதைத் தொட்டாலும் வெற்றி என்ற நிலைமை. எல்லாம் அந்த துளையிட்ட காசோட மகிமை என்று நினைத்தார் அந்த மனிதர்.
இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன.ஒரு நாள் அந்த நாணயத்தை கண்ணாலே பார்க்க வேண்டும் என்ற ஆசை அந்த மனிதருக்கு வந்தது.  அப்போது தன் மனைவியைக் கூப்பிட்டு, “ரொம்ப நாளைக்குப் பிறகு என்னுடைய அதிர்ஷ்ட நாணயத்தை இன்றைக்கு வெளியே எடுத்துப் பார்க்கப் போகிறேன்” என்று கூறினார் அந்த மனிதர்.
உடனே மனைவி, “இப்ப அதைப் பார்க்க வேண்டாமே” என்று மெதுவாக கூறினார்.
“இல்லை, இல்லை! பார்த்தே தீர வேண்டும்!” என்று சொல்லி சட்டைப் பையில் கையை விட்டு கவரை திறந்து, நாணயத்தை வெளியே எடுத்தார் அந்த மனிதர். அவருக்கு ஒரே ஆச்சரியம். அந்த நாணயத்தில் துளையே இல்லை.  அப்படியே குழம்பிப் போய் நின்றார்.
அப்பொழுது அவரது மனைவி, “உங்க சட்டை பையில் காசு இருப்பது நினைவில்லாமல் நான் தான் ஒரு நாள் உங்க சட்டை தூசியாக இருக்கு என்று ஜன்னலுக்கு வெளியே உதறினேன்.  அது தெருவில் விழுந்துவிட்டது.  எவ்வளவோ தேடிப் பார்த்தேன்.  கிடைக்கவில்லை.  அது இல்லை என்பது உங்களுக்கு தெரிந்தால் வருத்தப்படுவீர்கள் என்பதற்காக வேறு ஒரு நாணயத்தை அதே போன்று கவரில் போட்டு சட்டைப் பையில் போட்டு வைத்தேன்” என்று கூறினாள்.
“இது எப்ப நடந்தது?” என்று கேட்டார் அந்த மனிதர்.
“உங்களுக்கு காசு கிடைத்த மறு நாளே இது நடந்தது” என்றாள் மனைவி.
இதைக் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.
அந்த மனிதருக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை.  அவருடைய தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சி. வாழ்க்கையிலே முன்னேற நினைக்கிறவர்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். இந்தத் தன்னம்பிக்கையை மாணவ மாணவியருக்கு இளம் பருவத்திலேயே ஏற்படுத்தினால் அவர்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை.
ஆசிரியர்களாகிய நீங்களும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு,  மாணவ-மாணவியரிடையே படிக்கும் ஆர்வத்தை ஊக்குவித்தால், அவர்களது ஆற்றல் நிச்சயம் வெளிப்படும். ஓவ்வொருவருக்கும் ஒரு ஆற்றல் இருக்கிறது. அந்த ஆற்றலை வெளிக் கொணர வேண்டிய கடமை ஆசிரியர்களாகிய உங்களுக்கு இருக்கிறது.
ஓர் ஆசிரியர் பாடத்தை கற்பிக்கும் விதம் மாணவ-மாணவியரை ஈர்க்கும் வகையில், அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் செய்முறை விளக்கத்துடன் கூடியதாக அமைய வேண்டும்.
“ஒரு பொருளின் வெப்பம் இழக்கும் வீதமானது, அப்பொருளின் வெப்ப நிலைக்கும், சுற்றுப்புறத்தின் வெப்ப நிலைக்கும் உள்ள வேறுபாட்டின் நேர்விகிதத்தில் இருக்கும்” என்பது நியூட்டனின் வெப்ப விதி.  இதை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், நடைமுறை உதாரணத்துடன் ஓர் ஆசிரியர் எடுத்துரைத்தார். அதை நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இரு நண்பர்கள் ஓர் அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பால், காபி டிக்காஷன், சர்க்கரை ஆகியவற்றை தனித்தனியாக கொண்டு வந்து வைத்தார் பணியாளர்.  பால் கொதிநிலை சூட்டிலும், டிக்காஷன் அந்த அறையின் வெப்ப நிலையிலும் இருந்தது. அந்த சமயத்தில், அந்த நண்பர்களில் ஒருவருக்கு அவரது அலுவலக உயரதிகாரி கைபேசியில் தொடர்பு கொண்டு சில விவரங்களைக் கேட்டார். அந்த விவரங்களை தன்னிடம் உள்ள மடிக்கணினி மூலம் தேடி அந்த உயர் அதிகாரிக்கு உடனடியாக அனுப்ப வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக காபியை அருந்துவதில் தாமதம் ஏற்படும் சூழ்நிலை உருவானது.  இந்தச் சூழ்நிலையில், பாலுடன் டிகாஷனை கலந்து வைத்தால் காபி சூடாக இருக்குமா? அல்லது காபியையும், டிகாஷனையும் தனித்தனியே குடுவையில் வைத்திருந்தால் சூடாக இருக்குமா? என்ற கேள்வியை மாணவர்களிடம் ஆசிரியர் கேட்டார்.  இதற்கு இரண்டு விதமான பதில்களும் மாணவர்களிடம் இருந்து வந்தன. ஆனால், காரணத்தை அவர்களால் விளக்க இயலவில்லை.
இதன் பின்னர், பால் அறையின் வெப்பநிலையை விட அதிக சூடாகவும், டிக்காஷன் அறையின் வெப்ப நிலையிலும் இருப்பதால், காபி சூடாக இருக்க வேண்டுமென்றால் பாலையும் டிக்காஷனையும் கலந்து காபியாக வைப்பது தான் சிறந்தது என்று ஆசிரியர் எடுத்துக் கூறி, நியூட்டனின் வெப்ப விதியை விளக்கினார். இவ்வாறு அன்றாட நிகழ்வுகளின் படி பாடத்தை விளக்கும் போது அது மாணாக்கரின் மனதில் எளிதில் பதிந்து விடும் என்பதோடு, வாழ்நாள் முழுமைக்கும் பயன் உள்ளதாகவும் அமைந்து விடும்.
ஆசிரியர், மாணவர், பெற்றோர் என்பது ஒரு முக்கோண வடிவம். இதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் ஆசிரியர்கள் தான். அதே சமயத்தில் பெற்றோர்களும் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி விட்டதாலேயே தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. பெற்றோர்கள் பிள்ளைகளை உயர்த்த உறுதுணையாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் இந்தப் படிப்பு தான் படிக்க வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆர்வமாக படிக்க விரும்பும் படிப்பில் அடைகிற வெற்றியை ஆர்வமில்லாத படிப்பில் அடைய முடியாது.
பல்லாண்டுகளுக்கு முன்பு சாமிநாதன் என்கிற சிறுவன் மேல்படிப்பு படிப்பது  குறித்து அவன் வீட்டில் ஒரு விவாதம் நடைபெற்றது. அந்தக் குடும்பத்து பெரியவர் அந்தச் சிறுவனைப் பார்த்து, “ஒன்று சமஸ்கிருதம் படி அல்லது ஆங்கிலம் படி. ஆங்கிலம் படித்தால் இந்த உலகத்தில் ஆனந்தமாக வாழலாம்.  சமஸ்கிருதம் படித்தால் மேல் லோகத்திலே ஆனந்தமாக இருக்கலாம். நீ என்ன படிக்கப் போகிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு அந்தச் சிறுவன், “நான் தமிழ் படிக்கப் போகிறேன்” என்று கூறினான்.
சிறுவனின் பதிலைக் கேட்டதும் கோபப்பட்டார் அந்தப் பெரியவர்.
“ஆங்கிலம் படித்தால் இங்கு நன்றாக இருக்கலாம்.  சமஸ்கிருதம் படித்தால் அங்கு நன்றாக இருக்கலாம்.  தமிழ் படித்தால் இரண்டு இடத்திலும் நன்றாக இருக்கலாம்” என்று தெளிவாக மீண்டும் எடுத்துரைத்தான் அந்தச் சிறுவன். அந்தச் சிறுவன் வேறு யாருமில்லை.  அவர் தான் தமிழ்த் தாத்தா என்று நம்மால் அன்போடு அழைக்கப்படும் உ.வே. சாமிநாத அய்யர். பழந்தமிழ் இலக்கியங்களை நமக்கு அளித்தவர்.  அவர் தமிழ் படித்ததால் தான் இன்று தமிழே நன்றாக இருக்கிறது.
படிக்கும் ஆர்வத்தை பிள்ளைகளிடையே ஏற்படுத்தும் அதே சமயத்தில், அவர்களின் விருப்பத்திற்கேற்ற பாடத்தை படிக்க அனுமதித்தால் அனைத்து மாணவ – மாணவியருக்கும் வெற்றி உறுதி என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசின் நலத் திட்ட உதவிகளை பெறும் மாணவ-மாணவியர், மற்றும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியப் பெருமக்கள் தங்கள் வாழ்வில் அனைத்து வளங்களையும், நலன்களையும் பெற்று இன்புற வாழ வேண்டும் என்றும் வாழ்த்தி, ஏழ்மையும், கல்வியறிவின்மையும் தமிழ்நாட்டை விட்டு முற்றிலும் அகலும் வகையில் முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக