வியாழன், 13 டிசம்பர், 2012

34 பேருக்கு மறுவாழ்வு அளித்த 21 அகவை இளைஞன்

34 பேருக்கு மறுவாழ்வு அளித்த 21 அகவை  இளைஞன்

First Published : 12 December 2012 04:03 PM IST
தங்களது 21 வயது மகனின் மரணத்தை இறுதியாக எண்ணாமல், அவனது மரணத்தால் 34 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முன்வந்ததன் மூலம் முன்னுதாரணமாக திகழ்கிறது ஒரு குடும்பம்.
புது தில்லியைச் சேர்ந்த ஜூனேஜாவின் மகன் அன்மோல். 21 வயதான அன்மோல் கல்லூரி ஒன்றில் பிசிஏ படித்து வந்தான். கடந்த சனிக்கிழமை இரவு சாலை விபத்து ஒன்றில் சிக்கிய அன்மோலின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவனுக்கு மூளைச் சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதனால் உடைந்து விட்ட ஜூனேஜா தம்பதிகள், உடனடியாக எடுத்த முடிவுதான் பலரது வாழ்க்கையில் விளக்கேற்றி உள்ளது. ஆம், தங்களது மகனின் உடலில் உள்ள எத்தனை உறுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ, அத்தனையையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினர்.
புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அன்மோலின் கல்லீரல், இதய வால்வுகள், கணையம், சிறுநீரகங்கள் என பல்வேறு உடல் உறுப்புகள் சுமார் 34 பேருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தப்பட்டது. இதன் மூலம் 21 வயது இளைஞன் 34 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளான்.
இந்தியாவில், உடலின் அதிகபட்ச உறுப்புகளை எடுத்துக் கொள்ள அனுமதி அளித்த முதல் பெற்றோரே அன்மோலின் பெற்றோர்தான். எத்தனையோ மூளைச் சாவடைந்தவர்களின் குடும்பத்தினரை அணுகி, உடல் உறுப்பு தானம் குறித்து பேசினாலும், அவர்கள் மத இறுதிச் சடங்குகளைக் காரணம் காட்டி உறுப்பு தானத்துக்கு முன் வரமாட்டார்கள். ஆனால், இங்கு பெற்றோரே தானாக முன்வந்து தானம் அளித்துள்ளனர். இவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள் என்று புலங்காகிதம் அடைந்துள்ளனர் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள்.
தங்கள் மகனின் மரணத்தின் மூலம் அவனது வாழ்க்கை முடிந்துவிடாமல், பலரது உருவில் அவன் வாழ வகை செய்துள்ளனர் என்று கூறுகிறார்கள் உடல் உறுப்பு தானம் பெற்றவர்கள் சிலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக