வியாழன், 10 ஜூன், 2010

விரிவான செய்தி
 
ஜெகத் கஸ்பர் MEGA PROJECT மூலம் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்ட திட்டம் ?

09 June, 2010 by admin

ஜெகத் கஸ்பர் அடிகளாரின் புதிய திட்டம் அம்பலம். கோடிக் கணக்கில் பணத்தைச் சுருட்ட புதிதாக போட்ட திட்டத்தை மன்மோகன் சிங் ஊடாக ராஜபக்ஷவிடம் கையளிக்க கடும் பிரயத்தனம் மேற்கொள்வதாக அறியப்படுகிறது. இது குறித்து தமிழகத்தில் உள்ள முற்போக்கு இடதுசாரி இணையமான "வினவு" இணையத்தளம் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது. ஜெகத் கஸ்பர் ராஜ் என்னும் பாதிரி இந்திய, இலங்கை அரசுகளின் உளவாளியாகப் பயன்பட்டுள்ளார் என்று ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளதாக அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இக் கட்டுரை அமைகிறது.

இறுதிப் போரில் சுமார் 40,000 திற்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்று குவித்த ராஜபக்ஷ அரசுடன், மீள் கட்டுமான புராஜெக்டைப் போட தயாராகியுள்ளார் ஜெகத் கஸ்பர். இவரைப் போன்ற உளவாளிகள் தமது சுயரூபத்தை அவ்வளவு எளிதில் காண்பிக்க மாட்டார்கள். இருப்பினும் மே 18ம் தேதிக்குப் பின்னர் இவர் தனது போக்கை வெகுவாக மாற்றிக்கொண்டவர். தற்போது வெளிப்படையாகவே இலங்கை அரசுடன் இணைந்து வேலைத் திட்டங்களைப் போட ஆரம்பித்திருப்பது, அவர் போட்டிருந்த முகத்திரை தற்போது கிழித்திருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

கடந்த ஆண்டில் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் மற்றும் ஜெகத் கஸ்பரால் தொடங்கப்பட்ட இயக்கமே "நாம்" என்னும் அமைப்பாகும். இது ஒரு இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பு என்றுகூறிக்கொண்டு, அதனை ஒரு தன்னார்வ நிறுவனமாக பதிவும் செய்தார் கஸ்பர். இவர்கள் தற்போது இந்தியா, மற்றும் இலங்கை அரசுகளுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அக் கோரிக்கை என்ன என்று அறியவேண்டுமா?

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து ஓராண்டுக்கும் மேலாவதால், அங்கே தமிழ் மக்களின் புனர்வாழ்வு, அரசியல் தீர்வு, பொருண்மிய மேம்பாடு, மற்றும் நீதியில் அமைந்த இணக்கப்பாடு என்பனவற்றை "நாம்" அமைப்பு வலியுறுத்துகிறது என்பதாகும். அதில் உடனடித் தேவை புனர்வாழ்வு. ஆனால் இந்தியாவில் உள்ளவர்கள் ஈழத் தமிழர்களுக்கு உதவிபுரிய ஒரு கட்டமைப்பு இல்லை. குறிப்பாக தமிழக மக்கள் புனர்வாழ்வு முயற்சிகளில் தங்களை இணைத்துக் கொள்ள கட்டமைப்பு செய்யப்பட்ட நிறுவன ஒழுங்கு இல்லை. எனவே இக்குறையை நிவர்த்தி செய்ய ‘தமிழர் புனர்வாழ்வு மற்றும் பொருண்மிய மேம்பாட்டுக்கான இந்திய-இலங்கை கூட்டமைப்பு என்னும் ஒரு கட்டமைப்பை எழுப்ப பரிந்துரைசெய்கிறோம் என்று குறிப்பிடுகிறது “நாம்” அமைப்பு.

இருநாடுகளின் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள், தமிழக முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்சமயத் தலைவர்கள், போன்ற சமூக அமைப்புகள் மற்றும் தொழில்-வர்த்தக அமைப்புக்களின் பிரதிநிதிகளை கொண்டதாக இந்த அமைப்பு உருவாக்கப்படலாம். மேலும் ராஜபக்ஷ இந்தியா வரும்போது இந்த வேலைத்திட்டத்தை பரிந்துரைசெய்து, அதற்கு செயல்திறனை கொடுக்க கஸ்பர் அடிகளார் பெரிதும் முயன்றுவருகிரார். இந்தக் கட்டமைப்பை (Indo-Lanka joint mechanism for Rehabilitation & Reconstruction) இவ்வாறு அழைக்கின்றனர்.

ஃபாதர் போட்டிருக்கும் இந்த பாரிய வேலைத் திட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமார், ஏசியன் ஸ்கூல் ஆப்ஃ ஜர்னலிசம் சசிகுமார், டெக்கான் குரோனிக்கல் பத்திரிகையின் சென்னைப் பொறுப்பாளர் பகவான் சிங் என்று பெரிய மனிதர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என அறியப்படுகிறது. இவர்கள் யார் இவர்களின் பின்னணி என்ன என்பதை நாம் இனி நோக்குவோம்!

இந்த மெகா புராஜெக்ட் தொடக்க நிகழ்வில், புலிகள் ஆதரவாளர் போல நடித்தவரும், இந்நாள் கருணாநிதி ஆதரவாளரும், பிழைப்புக்காக அரசியல் நடத்தும் சுப வீரபாண்டியன் அவர்கள் பேசும் போது இந்த வேலைத் திட்டம் வெற்றியடையவேண்டும், ஆனால் கருணாநிதியின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்று பேசியுள்ளார்.

யார் இந்த ஜெகத் கஸ்பர் ராஜ்?

தமிழ் நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து வருமானம் ஈட்டும் நோக்கில் பாதிரித் தொழிலுக்கு வந்தவர். இவர் பங்குத் தந்தையாக இருந்த காலத்தில் இந்து கிறிஸ்தவர் கலகம் மூண்டதால், சாந்தோம் கலைத் தொடர்பு நிலையத்தில் சேர்ந்தார். பின்னர் அந்தத் தொடர்புகள் மூலம் பிலிப்பைன்சில் இருக்கிற வெரித்தாஸ் வானொலிக்குச் (சி.ஐ.ஏ(CIA) கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம்) சென்றவர் அந்த தொடர்புகள் மூலம் புலிகள் அமைபிற்குள் தந்திரமாக நுழைந்தார். இறுதி யுத்தத்தின் போது, நடேசன் உள்ளிட்ட போராளிகள் கொல்லப்பட்டதில் தனது பங்கை இவரே உளறி, அதை அம்பலப்படுத்திய போது அருட்தந்தை இருட் தந்தையானார்.

ஆனாலும் விடவில்லை, மாவீரர் தினமான நவம்பர் 27ம் நாள், “நாம்” அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான (ப.சிதம்பரத்தின் மகன்) கார்த்தி சிதம்பரத்தின் மனைவியான ஸ்ரீநிதி சிதம்பரத்தின் பரத நாட்டியத்தை அரங்கேற்றி, மாவீரர் நாளையே அவமதித்தார். பல இடங்களில் அதிர்வு இணையம், மற்றும் வினவு போன்ற முற்போக்கு இணையத்தளங்கள் இவரை கட்டம்போட்டு காட்டியது. இவர் முகத்திரை கிழிந்ததன் பலனாக வெளிநாடுகளில் இருந்து உதவிசெய்த பல தமிழர்கள் இவருக்கு உதவ மறுத்தனர். இதுவரை காலமும் தனது கல்லாப் பெட்டி நிரம்பிவழிந்ததும், தற்போது அது வற்ற ஆரம்பித்ததும், இவர் வேறு பாணியில், நேரடியாகவே ராஜபக்ஷவிடம் புராஜெக்ட் என்று சொல்லி பணம் புரட்ட முயல்கிறார். இது போல இன்னும் அதிர்ச்சித் தகவல்கள் காத்திருக்கின்றது இவரைப்பற்றி.

இவ் அமைப்பில் உள்ள சசிகுமார் என்பவர் யார் ?

தென் இந்தியாவில் சன் டீவி(SUN TV) குழுமத்திற்கு எவ்வளவு சொத்தும் செல்வாக்கும் இருக்கிறதோ அதை ஒத்த, மலையாள சேனலான் ஏஷியா நெட்(ASIA NET) தொலைக்காட்சியை ஆரம்பித்ததில் ஒருவர் இந்த சசிகுமார். தென் இந்தியாவில் பல அரச சார்பற்ற நிறுவனங்களின் நெட்வேர்க்கை இவர் தனது கைகளில் வைத்துள்ளார். இப்போது ஏஷியன் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம் என்கிற ஊடகவியளார்களுக்கான உயர் கல்வி மையத்தின் பொறுப்பாளராக இவர் இருக்கிறார். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ள பெரும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் ஏஷியன் ஸ்கூல் ஆப்ஃ ஜர்னலிசம் நிறுவனம் சசிகுமாருக்குக் சொந்தமானது என்று நீங்கள் நினைத்தால் அங்கே ஏமாந்து போவீர்கள். ஏன் தெரியுமா?

அது இலங்கை அரசின் கொள்கை வகுப்பாளனும் ராஜபக்ஷ கும்பலின் நெருங்கிய சகாவுமான இந்து ராமுக்குச் சொந்தமானது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. சசிகுமார் இந்து ராமின் பங்காளி. இவர்களோடு சேர்ந்துதான் ஜெகத் கஸ்பர் ஈழ மக்களுக்கான புராஜெக்டை போட்டிருக்கிறார்.

யார் இந்த பகவான் சிங்? இவர் ஒரு "தெலுங்கர்"

தமிழகத்தில் புலிகள் ஆதரவாளர் என்று தன்னைக் கூறிக்கொண்டு, புலத்தில் உள்ள மக்களிடம் பணத்தைப் பெற்று ராஜபோக வாழ்க்கை வாழ்பவர். புலத்து மக்களால் பல தடவை அழைக்கப்பட்டு விருந்து வைக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். 2008 ல் தமிழ் ஊடக அமைப்பு ஒன்று பிரிட்டனில் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட பகவான் சிங், ஈழம் உருவாக்கப்பட்டு விட்டது என்ற தொனியில் பேசியதை யாரும் மறந்துவிடவில்லை. பின்னர் 2009ம் ஆண்டு கிளிநொச்சி இலங்கை இராணுவத்தின் கைகளில் வீழ்ந்தபோது சென்னையில் கடமையாற்றிய இலங்கைத் தூதர் அம்சாவுடம் நெருங்கிய உறவுகளை வளர்த்துக்கொண்டு, ஒரு முறை இலங்கையும் சென்றுவந்தார் .

அப்போது கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இவர் சிலகாலம் தங்கியிருந்தது, இலங்கை அரசு இவரை நன்கு கவனித்து அனுப்பியதன் விளைவாக இவர் நடாத்தும், சென்னைப் பதிப்பு டெக்கான் குரோனிக்கலில் இலங்கை அரசை பாராட்டி எழுதினார். புலிகளின் அரசியல் தலைவர் ப.நடேசனின் நேர்காணலை எடுத்த பகவான் சிங் அதனை போடாமல், கருணாவின் பேட்டியை பிரசுரித்தார். அப்போது குமுதம், ஜூனியர் விகடன், தினமலர் இதழ்கள் கூட கருணாவின் பேட்டியை தவிர்க்கமுடியாத காரணத்தால் பிரசுரித்தன. இதன் காரணமாக சில பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். கருணாவின் பேட்டியை எவ்வாறு பிரசுரிக்கலாம் எனப் போராடினர், அப்போது அவர்களை ஒன்று சேர்த்து தானும் நல்ல பிள்ளைபோல நடித்து அம்சாவிடம் கூட்டிச்சென்று, மனு ஒன்றைக் கொடுக்கச் செய்தார் இந்த பகவான் சிங். இப்போது உளவாளி ஜெகத் கஸ்பரோடு சேர்ந்து ராஜபக்ஷவிடமே மனுக் கொடுக்கும் நிலைக்கு வளர்ந்திருக்கிறார்.

யார் இந்த ரவிக்குமார்: இவரும் ஒரு பச்சைத் தமிழன் தான்!

இவர் ஒடுக்கப்பட தலித்தின மக்களின் தத்துவாசிரியன் என்ற ரேஞ்சுக்கு புகழப்பட்டவர். ஆனால் இப்போது ரியல் எஸ்டேட்டில் கொடிகட்டிப் பறக்கிறார் ரவிக்குமார். கும்பகோணத்திற்கு பக்கத்தில் பிரமாண்டமான மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றையும் கட்டிக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ . அத்தோடு இந்தியா வரும் ராஜபக்ஷவிடம் இந்தோ, லங்கா மீள்கட்டுமானக் கூட்டமைப்பை நடைமுறைப்படுத்த பரிந்துரைசெய்ய இவர் இருக்கும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு ராஜபக்ஷ வருகைக்கு எதிராக போர்க்கொடி ஏந்தி நிற்கிறது. எங்கு போய் தலையை முட்டிக்கொள்வது? எம்.எல்.ஏ ரவிக்குமார், ராஜபக்ஷவிடம் பரிந்துரைப்பாராம், ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு அவர் வரவை எதிர்த்து உறுமுமாம்.

யார் இந்த ஏ.எஸ் பன்னீர் செல்வம்?

கருணாநிதியின் விசுவாசி, சமூக நீதி, திராவிட இயக்க பிரியம் எல்லாம் இவருக்கு உண்டு என்றாலும் பார்ப்பனரல்லாத முற்போக்குவாதிகளின் சந்தர்ப்பவாதமே இவரது எழுத்துக்கள். ஈழ விவகாரம் கருணாநிதிக்கு எதிராக திரும்புகிறதே என்று அதிகம் வருத்தபப்ட்டவர்களில் இவரும் ஒருவர். சென்னை பெசண்ட்நகரில் இந்து ராமைப்போல இவரும் பானோஸ் சவுத் ஏசியா என்றொரு ஊடகக் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதுவும் மிகப்பெரிய அளவில் பெலோஷிப் பெறுகிற நிறுவனம்தான். இந்த ஐவர் கூட்டணியோடு காங்கிரஸ், திமுக மத்திய மாநில அமைச்சர்களும், மெகா புராஜெக்டிலும் களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது.

போர்ச் சூழலின் போது வருமானம் ஈட்டும் நல்வாய்ப்பாக அமைந்த இலங்கைத் தூதரகத்தை பலரும் அப்போது பயன்படுத்திக் கொண்டார்கள். சென்னை மயிலை பேராயர் சின்னப்பா என்பவர், “மௌனத்தின் வலி” என்ற நூல் வெளியீட்டுவிழாவில் ராஜபக்ஷவை கண்டபடி திட்டித் தீர்த்தார். இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், இலங்கை தூதரகம் சென்னையில் வெளியிடும் நூலான "நீரிணை" என்னும் இதழில், மயிலை பேராயர் சின்னப்பா இலங்கைத் தூதரை சந்தித்ததாகவும், அவர்கள் சந்திப்பின் விவரணத்தை தொடர்கதையாக எழுதிவருகிறது. மேடையில் ஒரு பேச்சு, மேடையை விட்டு இறங்கியதும் மறுபேச்சு, மயிலை பேராயர் சின்னப்பாவின் சீடன் தான் ஜெகத் கஸ்பர்.

இனக்கொலைக்கு எதிரான இந்தியர்கள் என்ற பெயரில் அமைப்பை வைத்துக் கொண்டு இனக்கொலை செய்த ராஜபக்ஷவிடமே மீள் கட்டமைப்பின் பெயரால் நிதி வாங்கப் போகும் ஜெகத் கும்பலின் நோக்கம் இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா? இது ஒரு புறம் இருக்கட்டும், இந்திய திரைப்பட விழாவுக்கு இலங்கை சென்றுவந்த இந்தி நடிகர்களை தமிழகம் புறக்கணிக்கிறதே, ராஜபக்ஷவுடன் கைகோர்த்து நிற்கும் இவர்களை ஏன் தமிழகம் தண்டிக்க மறுக்கிறது????

ராமை நேர்காணல் கண்ட பாண்டியன் என்பவர் யார்?

இலங்கை சென்று ராமை காடுகளில் தான் சந்தித்து ஒரு நேர்காணலை கண்டதாக சமீபத்தில் ஒருவர் பெயர் அடிபட்டதே, அவர் தான் பாண்டியன். திருப்பூரில் ஒரு பனியன் வியாபாரியாக இருந்தவர், நகைமுகன் என்ற சிவசேனா. தமிழா, தமிழா, என்றொரு இதழை இவர் நடத்தியிருக்கிறார். இவருடன் கூட்டாக தற்போது பாண்டியன், அர்ஜூன் சம்பத், பாலகுரு என சிலர் இணைந்து செயல்படுகின்றனர். இவர்களின் தலைமைக் குருவாக உருவாகி நிற்பவர்தான் ஜெகத் கஸ்பர் ராஜ்.

இவர்கள் அனைவரும் தற்போது கூட்டாகச் சேர்ந்து பணம் புரட்டும் ஒரு சதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மிக விரைவில் இன்னும் பல தகவல்கள் வெளியாகும்.





வாசகர் பின்னூட்டங்கள்

comments by: இளங்கோ சிவராமன்

மொத்தத்தில் தமில்லீலபோரட்டம் இப்போது ஒருசிலரின் காசு சேர்க்கும் ஒரு வலியாகமார்ரிவிட்டது. இதில் வெடிக்கைஎநவெந்ரால் கருனநிதிகுடும்பம் இப்படி ஒரு அமோக வழியிருப்பது தெரியவரும்போது இவர்களை வீழ்த்திவிட்டு தங்கள் எல்லாவற்றையும் அபகரித்துக்கொல்வார்கள். இவர்களுக்கு இது உலக்கும் விடயமாக இருக்கலாம், ஆனால் நாங்கள் இதை ஒழித்துக்கட்டவேண்டும், இல்லாவிட்டால் போராட்டம் திசைமாறி சிதைந்து போய்விடும். முன்னொருகாலத்தில் துரையப்பா எனும் துரோகி தமிலர்போராட்டத்தை தடைக்கல்லாக நின்று தடுத்துக்கொண்டிருந்தப்போது தலைவர் தீர்கதரிசனத்தொடும் துணிவோடும் அதை நீக்கி போராட்டம் புத்துயிருடன் வீருகொண்டோடத்தொடன்கியது. இப்போது கஸ்பர், கருணாநிதி, பகவான் கல் எல்லோரையும் ஓரங்கட்டி தமிலர்போராட்டதை முன்னகர்த்த ஒரு சாமர்த்தியமான வேலைத்திட்டம் உர்வாக்கப்பட வேண்டும். வெறுமனே செய்திகளை மட்டும் வெளியிடாது தகுந்த ஆலோசனைகளையும் பலதரப்புகளிடமிருந்தும் வெளிக்கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.
---------------------------------------------
comments by: Siva

yaaraitaan nanpuvato tamilan nenjam ???? NAMPIYE EMAANTAN TAMILAN PORUPPOM KALAM PATIL SOLLUM!!
---------------------------------------------


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 14676







விளம்பரங்கள்











© 2009 Athirvu. All Rights Reserved. Home | About Us | Contact Us | To Advertise | Privacy Policy | Feedback

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக