செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

தலையங்கம்:சட்டம் யார் கையில்...?



தனிப்பட்ட சிலர் சட்டம்-ஒழுங்கை கையில் எடுத்துக்கொள்வது என்றால் அதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும்.​ ஒன்று,​​ செயலிழந்துவிட்ட ஆட்சியாளர்களால் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் கருதுவது;​ அல்லது ஆட்சியாளர்களின் மறைமுக அனுமதி அவர்களுக்கு இருப்பது.​ ​ காரணம் எதுவாக இருந்தாலும் அதன் விளைவு சமுதாயத்துக்கு நன்மை பயப்பதாக இருக்காது.மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவமே கருத்து உரிமைதான்.​ நடிகர் அஜீத் குமார் சில உண்மைகளைப் பகிரங்கமாகக் கூறியதன் விளைவு,​​ மிகப்பெரிய சர்ச்சை கிளம்பியிருப்பதுடன்,​​ அவருக்கு எதிராக அச்சுறுத்தல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.அஜீத்தின் வீடு தாக்கப்பட்டபோது ஏற்படாத சலசலப்பும் பரபரப்பும் திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கத்தின் கார் நொறுக்கப்பட்டவுடன் ஏற்பட்டிருப்பதுடன்,​​ ​ ஜாதிமுலாம் பூசி பிரச்னையை ஊதிப் பெரிதாக்க நடைபெறும் முயற்சிகளும் விசித்திரமாக இருக்கின்றன.​ நடிகர் அஜீத்துக்குப் போட்டியாக உள்ள ஏதாவது ஒரு கதாநாயகனின் ரசிகர்களேகூட பிரச்னையை வேண்டுமென்றே பெரிதாக்க இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு பழியை அஜீத்தின் ரசிகர்கள் மீது சுமத்தியிருந்தாலும்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.​ ​பிரச்னையில் அஜீத் மிரட்டப்பட்டாரா என்பதுபோய் யார் யாரைத் தாக்கினார்கள் என்று திசைமாறி இருக்கிறது.​ குற்றச்சாட்டை நேரிடுவதற்குப் பதிலாக,​​ தவறு நடந்திருந்தால் மன்னிப்புக் கேட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குப் பதிலாக ஸ்டண்ட் மாஸ்டர்கள் களத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கும் விபரீதத்தை அரசு மேலும் வேடிக்கை பார்க்கிறதே,​​ அதுதான் ஏன் என்று புரியவில்லை.​ ​காவிரிப் பிரச்னை,​​ இலங்கைப் பிரச்னை போன்றவைகளுக்கான போராட்டங்களானாலும் சரி,​​ முதல்வராக இருப்பவர்களுக்கு நடத்தப்படும் பாராட்டு விழாக்களானாலும் சரி,​​ நடிக நடிகையர் கலந்து கொள்ள வேண்டும் என்பதில் திரைப்படத் தொழிலாளர் சங்க கூட்டமைப்பும் விநியோகஸ்தர்கள் சங்கமும் முனைப்புக் காட்டுகிறார்களே ஏன்?​ நடிக நடிகையர் இல்லாமலேயே பாராட்டு விழா நடத்துவதுதானே.​ அப்படி நடத்தப்படும் கூட்டங்களுக்கு மக்களின் வரவேற்பு இருக்காது என்று இவர்களுக்குத் தெரியாதா என்ன?திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டங்களில் கலந்துகொள்வதிலிருந்து கட்சியின் மூத்த உறுப்பினர்களாக இருந்த முன்னணி திரையுலகக் கலைஞர்களான எம்.ஜி.​ ராமச்சந்திரன்,​​ கே.ஆர்.​ ராமசாமி மற்றும் எஸ்.எஸ்.​ ராஜேந்திரன் உள்ளிட்டவர்களுக்கு அறிஞர் அண்ணா விதிவிலக்கே அளித்திருந்தார்.​ பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து எடுக்கப்படும் திரைப்படங்கள் இந்த நடிகர்களின் அரசியல் ஈடுபாட்டால் நஷ்டப்படக் கூடாது என்கிற அக்கறை அறிஞர் அண்ணாவுக்கு இருந்தது.​ அதுமட்டுமல்ல,​​ நடிகர்களின் கவர்ச்சி இல்லாமலேயே மக்கள் மத்தியில் நியாயமான போராட்டங்கள் வரவேற்பு ​ ​ பெறும் என்கிற நம்பிக்கையும் அவரிடம் இருந்தது.​ மிரட்டல்,​​ அஜீத்தின் குமுறல்,​​ ரஜினியின் கரகோஷம்,​​ வீடு மற்றும் கார் மீதான தாக்குதல் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு இந்தப் பிரச்னைக்கான களம் எது என்று பார்த்தால் ​ அது அடிக்கடி நடத்தப்படும் முதல்வருக்கான பாராட்டு விழாக்கள்தான் என்பதை ​ வருத்தத்துடன் குறிப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.​ பாராட்டு விழாக்களை வயிற்றெரிச்சலால் எதிர்க்கிறார்கள்,​​ விமர்சிக்கிறார்கள் என்று முதல்வர் வேதனைப்படுவது அதைவிட வேடிக்கையாக இருக்கிறது.ஆழிசூழ் உலகத்தில் இந்த வயதில் இந்த மனிதரைவிட உழைப்பவர் யார் என்பதை அந்த ஆதவனால் மட்டும்தான் உணர்ந்துரைக்க முடியும் என்னும் அளவுக்கு,​​ சின்னச்சின்ன விஷயங்கள்கூட அவரது பார்வையிலிருந்து தப்ப முடியாது என்கிற அளவுக்கு முதல்வரின் ஆற்றல் அளப்பரியது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.​ அப்படிப்பட்ட ஒரு தலைவர் இதுபோன்ற விழாக்களில் தனக்கு முகஸ்துதி ​ பாராட்டு மழை பொழிவதை ஏன்,​​ எதற்காக அனுமதிக்கிறார் என்பதுதான் புதிராக இருக்கிறது.பாராட்டு விழா நடத்துவோரில் எத்தனை பேர் கடந்தஆட்சியில் கைது ​ செய்யப்பட்டபோது அவருடன் இருந்தார்கள் என்பதை ஏன் முதல்வர் யோசிக்க மறுக்கிறார்?​ இப்போது பாராட்டு விழா நடத்துபவர்களில் பலர் அப்போது ​ மரியாதைநிமித்தம்கூட அவரைச் சந்திக்கத் தயங்கியவர்கள்தானே?​ இன்று கலையுலகப் பிதாமகர் என்று அவரை வர்ணிப்பவர்களில் பலர் அன்று அவரைக் கலையுலகக் கடைமகனாகக் கருதி ஒதுக்கியதை அவர் ஏன் மறந்துவிடுகிறார்?பாராட்டுகளுக்கு மயங்குபவர் முதல்வர் என்று சிலர் கருதுவதால்,​​ அவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.​ இதை முதல்வர் புரிந்துகொண்டு,​​ தான் கலையுலகின் முதல்வரல்ல,​​ தமிழகத்தின் முதல்வர் என்கிற கடமையுணர்வுடன் சட்டம் ஒழுங்கை மீறிச் செயல்படுபவர்களை கட்டம் கட்டி அடக்காவிட்டால்,​​ ஆட்சியையும் அதிகாரத்தையும் மக்கள் சட்டை செய்யாமல் ஒதுக்கிவிடும் நிலை ஏற்பட்டுவிடும்.விமர்சனங்களை வரவேற்கும் மனப்பக்குவமும்,​​ வாதத்தை வாதத்தால் எதிர்கொள்ளும் விவாதக் கலாசாரமும் வளர வேண்டுமே தவிர மிரட்டலும் உருட்டலும் வளர்வதும்,வளர்வதைச்​ சகிப்​ப​தும் நல்லாட்சியின் இலக்கணங்கள் அல்லவே!
கருத்துக்கள்

வி.சி.குகநாதன் தெரிவித்து உள்ளதுபோல் கட்சிப் போராட்டங்களில் பங்கேற்காத கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பதுபோல் திரைப்பட அமைப்புகள் நடவடிக்கை எடுப்பதை யாரும் குறை சொல்ல முடியாது. அதே நேரம் இது குறித்த கருத்தைத் தெரிவிக்க அசீத்திற்கு உரிமை உண்டு. ஆனால் அவர் இக் கருத்தை அந்த அமைப்பிடம்தான் தெரிவித்து இருக்க வேண்டும். மேலும் அவர் பேச்சைப் படித்தவர்களுக்கு அவர் தமிழ் நலன் சார்நத போராட்டங்களில் பங்கேற்பது குறித்துத்தான் தெரிவித்தார் என எண்ணிக் கொண்டிருக்க, முதல்வருக்கான பாராட்டு விழாக்களில் பங்கேற்கத்தான் கட்டாயப்படுத்தியுள்ளார்கள் எனத் தெரிய வருகிறது. அப்படியானால் அவரிடமே அந்தக் கோரிக்கையை வைப்பாரா? கலவரத்தை எதிர்நோக்கி அவரது இல்லம் சென்று அவரைச் சந்திததிருப்பாரா? பாராட்டு விழா தொடர்பான தினமணியின் கருத்து முற்றிலும் சரி யென்றாலும் அதனை இதில் இணைத்திருக்கக் கூடாது. என்றாலும் தினமணி ஆசிரியர் செம்மாழி மாநாட்டு அமைப்பில் சேர்க்கப்பட்டிருப்பினும் நடுநிலையுடன்தான் குரல் கொடு்பபோம் எனத் தலையங்க உரை எழுதியவருக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/23/2010 4:03:00 AM

Mr. Gannesh… the society will be fine when everyone do their own job perfectly. Sameway the government needs to be… which never happen in tamilnadu. Did any thing change in the society because of any actor?

By Rajan
2/23/2010 3:59:00 AM

Once again DINAMANI proved "Nimirndha nadai Ner konda paarvai"..Thank you sir

By vijay..
2/23/2010 3:26:00 AM

Once again DINAMANI proved "Nimirndha nadai Ner konda paarvai"..Thank you sir

By vijay..
2/23/2010 3:26:00 AM

Mr. Ganessin... What is the potential benefit of you for this society?

By nanban
2/23/2010 3:22:00 AM

நான் ஒரு அஜித் ரசிகன். ஆனால் அவர் பேச்சை ஏற்க முடியாது. ஒரு மனிதன் சமுதாயத்தில் எப்படி வாழக்கூடாது என்பதற்கு அஜித் ஒரு உதாரணம். அஜித் போன்ற சுயநலவாதிகளை புறம் தள்ள வேண்டும். அஜித் அவர்களே பொதுவான பிரச்சனைக்கு எல்லா மனிதர்களும் போராட வேண்டும். எவன் எப்படி போனால் எனக்கென்ன என்று எல்லோரும் வாழ்ந்து இருந்தால் நம் நாடு சுதந்திரம் அடைந்திருக்காது. கட்டாயத்திற்காக பொது நிகழ்சிகளில் பங்கேற்காமல் உரிமையுடன் பங்கேற்று போராடுங்கள். அஜித்தின் பேச்சு காந்தி, காமராஜ் மற்றும் எண்ணற்ற தலைவர்களின் வழியை கேலி பொருள் ஆக்கிவிட்டது. இன்றைய நிலைமையில் இவரை போன்ற சமூக அக்கறை இல்லாத மனிதர்கள் இன்றைக்கு மிகுந்து விட்டதை இந்த நிகழ்ச்சி காட்டுகிறது.

By Ganessin
2/23/2010 2:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக