புதன், 14 ஆகஸ்ட், 2019

நவீனத் தமிழ் விமரிசன இயக்கங்களும் கருத்தியல் போக்குகளும் (1950-2000)

அகரமுதல


ஆடி 32, 2050 சனி 17.08.2019 மாலை 6.00

சிரீராம்குழுமஅலுவலகம் மூகாம்பிகைவளாகம்

 ஆறாவது தளம், மயிலாப்பூர்,சென்னை 600 004
(சிபி.இராமசாமிதெருவில் உள்ள பாலம் கீழே)

சிறப்புரை : பிரவீண் பஃறுளி

உதவிப் பேராசிரியர், குருநானக்கு கல்லூரி

புதிய தமிழ்த்திறனாய்வு இயக்கங்களும் கருத்தியல் போக்குகளும்(1950-2000)

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

ஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

ஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்


ஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை!

ஒப்பிலக்கியம் அல்லது ஒப்பியல் இலக்கியம் என்பது இலக்கிய ஆராய்ச்சிகளில் இடம் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
அமெரிக்க இந்தியானா பல்கலைக்கழகப் பேராசிரியர் எச்.எச்.இரீமாக்கு ((H.H.Remack), “ஒப்பிலக்கியம் என்பது ஒரு நாட்டின் இலக்கியத்தை இன்னொரு     நாட்டு இலக்கியத்தோடு     ஒப்பிடுவது; இலக்கியங்களுக் கிடையேயான உறவுகளை ஒரு பக்கமும், குமுகாயவியல் தத்துவம் போன்ற துறைகளை இன்னொரு பக்கமுமாக ஒப்பிட்டுக் கூறுவது ;  இலக்கியத்திற்கும், இசை, ஓவியம், கூத்து போன்ற கலை வடிவங்களுக்குமிடையேயான உறவுகளைக் கூறுவது”  என்கிறார்.
 பொதுவாக ஒரு நாட்டு அல்லது ஒரு மொழி இலக்கியத்துடன் அடுத்த நாட்டு அல்லது அடுத்த மொழி இலக்கியத்தை ஒப்பிடுவதைத்தான் ஒப்பிலக்கியம் வலியுறுத்துகிறது. ஆனால், பின்னர் ஒரே மொழியில உள்ள இலக்கியங்களை அதே மொழியிலுள்ள இலக்கியங்களுடன் ஒப்பிடுவதும் ஒப்பிலக்கியத்திற்குள் அடங்கலாயிற்று. ஒப்பீடு இரண்டுக்கு மேற்பட்ட இலக்கியங்களுடனும் அமையலாம்.
 தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் பக்கம் எண் 142-இல் மொழிகளின் தொன்மை வரலாற்றைக் குறித்து விளக்கப்படம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சமசுகிருதம் கி.மு.2000 ஆண்டுகள் பழமையானது என்றும் தமிழ் கி.மு.300 ஆண்டுகள்தான் பழமையானது என்றும் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல உலக மொழிகள் அனைத்திலும்தொன்மையானது சமசுகிருதம் என்று வேண்டுமென்றே தவறாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதனை அறிந்ததும் கல்வியாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் நடுநிலையாளர்களும் கொதித்து எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். உடன் பள்ளிக்கல்வி யமைச்சர் செங்கோட்டையன் தமிழ்மொழியின் தோற்றம் குறித்த தவறான பாடப்பகுதி நீக்கப்படும் என்றும் தவறான தகவலைச் சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். உடன் நடவடிக்கையும் எடுத்து வருகிறார்.
 ஆனால் மதிப்பிற்குரிய மற்றோர் அமைச்சர் “பா...வின் தாள் பணிதலேமுதன்மைதமிழைத் தாழ்த்தினால் நமக்கென்ன” என்று கருதுகிறாரோ என மக்கள் எண்ணும் வகையில் கருத்துகள் தெரிவித்துள்ளார்.  “தமிழ், சமற்கிருதம் இவற்றில் எது மூத்தது எது சிறந்தது என்ற  அருததமற்ற ஆய்வை விட்டுவிடுங்கள்” என அவர் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறார்.  எல்லாக் கட்சிகளிலும் ஆதரவாளர்கள் உள்ளவர் என்றும் வினைத்திறம் மிக்கவர் என்றும் கருதப்படும் அவர், தெரிவித்த கருத்துகள் ஒப்பிலக்கியத்திற்கு முரணானவை.
 இலக்கியமோ மொழியோ எதுவாயினும் கால முதன்மை குறித்த ஆராய்ச்சி அவற்றை முழுமையாக ஆராய்வதற்கு அடிப்படையாக அமைகிறது. காலஆராய்ச்சியைத் தவிர்க்கும் மொழி ஆராய்ச்சி முழுமை யற்ற்தாக மட்டுமல்லதவறானதாகவும் இருக்கும். சான்றுக்கு நாம் இராமாயணத்தை எடுத்துக் கொள்வோம்.
 இராமாயணக் காலம் கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கும் – கிபி 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டது என்பதே சரியான முடிவாகும். புத்தர், புத்த சமயத்தவர், புத்த பீடங்கள் முதலானவை பற்றிய குறிப்புகளின் அடிப்டையில் வரலாற்று நோக்கில் எடுக்கப்பட்ட முடிவாகும் இது.
 ஆனால், இராமாயணம் திரேதாயுகத்தில் நடந்ததாக ஆரியப்புனை கதை கூறுகிறது. இக்கற்பனையின்படி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன. கால ஆராய்ச்சியின் மூலம்தான் இது தவறு என்று மெய்ப்பிக்கப்படுகிறது.
‘இராமாயணம் ஓர் ஆய்வு’  நூலாசிரியர் கே. முத்தையா குறிப்பிடுவதுபோல் ஆராய்ச்சியாளர்கள் பலர், இராமாயணம் குறிப்பிடும் இலங்கா என்பது இலங்கை அல்ல என்றும் இராமன் முதலான எவரும் விந்திய மலைக்குத் தெற்கே வரவில்லை என்றும் கூறுகின்றனர்.
 கி.பி.1010-1050 ஆண்டுகளில்  உருவான சம்பூர்ண இராமாயணம் வரையிலும் இன்றைய இலங்கை பற்றிய எக்குறிப்பும் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 
 அதுபோல் திரேதாயுகததின் கடைசி ஆண்டில் பிறந்திருந்தாலும் இராமன் 8,69,110 ஆண்டுகளுக்கு முன்னர்ப் பிறந்தவன் ஆகிறான். ஆனால் அவன் பிறந்ததாகக் கூறப்படும் அயோத்தி கி.மு.700இல்தான் உருவானது. இதனை மத்திய அரசின் தொல்பொருள் துறை 1976-77 இல் ஆய்வு செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இக்குறிப்பை அம்சத்து வலைப்பூவில் (amjat.blogspot.com)காணலாம். தவறான இராமாயணக் கால அடிப்படையில் தமிழ் இலக்கியங்களின் காலங்களைத் தவறாக மதிப்பிடும் போக்கு வந்ததல்லவா? ஆகச் சரியான ஆய்விற்குச் சரியான கால ஆய்வும் தேவை அல்லவா?
பரிதிமாற்கலைஞர் வி.கோ.சூரியநாராயண(சாத்திரியா)ர்  ஆரியர் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் புகும் முன்னரே மேலை நாட்டு ஆரியர்களுடன் தமிழர் கடல்வழி வாணிகம் மேற்கொண்டு இருந்தனர் என்கிறார். இந்த முடிவிற்கு அவர் கால ஆராய்ச்சியையே அடிப்படையாகக் கொண்டார்.
இத்தகைய கருத்துகளைத் திருப்பூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பாசக தகவல் தொழில்நுட்பம்-சமூகஊடகப்பிரிவும் முகநூலில் குறிப்பிட்டுள்ளது(08.06.2018). எனவே, பா...என்பதால் வரலாற்றுத் திரிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றல்ல. நடுநிலையாகவும் செயல்படலாம் என்பதற்கு இது சான்றகும்.
பரிதிமாற் கலைஞர் ஆரியர்கள் தமிழ் இலக்கியங்களைச் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்து அவ்வோலைகளைப் பழமையானவைபோல் காட்டி அவ்றறிலிருந்து தமிழில் இலக்கியங்கள் எழுதப்பட்டன என்று தவறாக நிறுவுவதை மெய்ப்பித்துள்ளார். வேண்டுமென்றே தமிழ் இலக்கியக்காலங்களைப்பின்னுக்குத் தள்ளுவதையே ஆரியர்கள் கடமையாகக் கொண்டுள்ளதால்தமிழ்சமற்கிருத ஒப்பாய்வில் கால ஒப்பீடு இன்றியமையாதுவேண்டப்படுகிறது.
 இப்பொழுது கூறுங்கள். தமிழின் காலத்தை வேண்டுமன்றே ஒரு மொழியினர் பின்னுக்குத் தள்ளுவதையே வாணாள் கடமையாகக் கொண்டு வாழும் பொழுது மொழிகளின் காலங்களைச் சரியாகக் குறிப்பிட்டுத்தானே ஆக வேண்டும்! இலக்கியக் கருத்துகள் சொல்லப்பட்ட காலங்கள் அடிப்படையில் பெருமைஉறுகின்றன என்னும் பொழுது கால ஆராய்ச்சியும் கால ஒப்பீடும்தேவைதானே! இலக்கிய ஆராய்ச்சியின் முழுமைக்குக் காலஆராய்ச்சி தேவை என்பது மறுக்க முடியாத உண்மைதானே!
ஒரு மொழி எழுத்திலக்கியம் பெற்றிருக்க வில்லை என்றால் முழுமையடைந்த மொழியாகாது. சமற்கிருத மொழியினர் இன்றைய இந்தியா என்று சொல்லப்படும் தமிழ்நிலத்திற்கு வந்த பின்னர்தான் தமிழ் எழுத்து வரிவடிவத்தைப் பார்த்துத் தங்கள் நெடுங்கணக்கு – எழுத்து – வடிவங்களை அமைத்துக் கொண்டனர். அவ்வாறு தமிழுக்குப் பிற்தைய சமற்கிருத மொழியைத் தமிழுக்குமுந்தையதாகத் தவறான காலக்குறிப்பை அளித்தால் அது தமிழுக்குச்செய்யும் கொடுமை அல்லவா?
எனவே இதுபோன்ற தவறுகளைத் தவறல்ல என்று சொல்லி ஊக்கப்படுத்தாமல் பள்ளிக் கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுப்பதுபோல் எடுத்துக் குறைகளைக் களைய வேண்டும். மொழிகளின் உண்மையான காலத்தையும் தமிழின் தொன்மையையும் குறிப்பிடும் பாடங்கள் எல்லா  மொழிப் பாடங்களிலும் இடம் பெற வேண்டும்.
மொழியின் சிறப்புக்கும் சிறுமைக்கும் அவ்வம்மொழிகளின் இலக்கியப்படைப்புகளே உரைகல்லாக அமையும்.
 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.(திருவள்ளுவர், திருக்குறள் 505)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல





திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 19 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்

19

காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்
(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்இறைமாட்சி, குறள் எண்: 386)
அணுகுவதற்கு எளியவனாகவும் கடுஞ்சொல்லற்றவனாகவும் உள்ளவனை உலகம் உயர்த்திப் போற்றும் என்கிறார் திருவள்ளுவர்.
மீக்கூறுதல் என்பதற்குப் பரிமேலழகர், “ ‘இவன் காக்கின்ற நாடு பசி, பிணி, பகை முதலிய இன்றி யாவர்க்கும் பேரின்பம் தருதலின் தேவருலகினும் நன்று’ என்றல்” என விளக்குகிறார்.
மன்னனின் நிலத்தைப் பாராட்டும் உலகு என்பது நேரிடையாகச் சொல்லப்படவில்லை. பொருள் அடிப்படையில் உணர முடிகிறது.
காட்சிக்கு எளியன் என்றால் எளிய தோற்றம் என்று பொருளல்ல. எனினும் அதுவும் தேவைதான். ஆடம்பரமாகவும் பகட்டாகவும் உடுத்தித் தோற்றமளிப்பது மக்களிடம் இருந்து விலக்கி வைக்கும். எளிய தோற்றம் நம்மில் ஒருவர் என்ற நம்பிக்கையைத் தோற்றுவிக்கும். குறைகளைத் தெரிவிக்கவும் முறையிடவும் மக்கள் வரும்பொழுது  தட்டிக்கழிக்காமலும் காலங்கடத்தாமலும் எளிதில் அவர்கள் அணுகும் நிலையில் இருத்தல் வேண்டும். இதுவே அவர்களின் பாதி குறையைத் தீர்த்ததுபோன்ற மனநிறைவைத் தரும்.
மக்கள் குறைகளைத் தெரிவிக்கிறார்கள் என்றால் அது செவிகளுக்கு இனிமை பயக்கும் பாராட்டுரையாக இருக்காது. ஆட்சி மீதான குறையாகக்கூட இருக்கும். எனவே, கடுகடுத்த முகத்துடன் இருந்து வேண்டா வெறுப்பாகக் கேட்டுக் கடுமையாக மறுமொழி அளிக்கக் கூடாது. இன்சொல் தேவை. அவ்வாறு இனியதாகக் கூறாவிட்டாலும் கடுஞ்சொல்லின்றி இருத்தலே மக்கள் மனங்களில் மன நிறைவை உண்டாக்கும்.
அதிகாரிகளுக்கும் இது பொருந்தும். பல அதிகாரிகள் வாரத்தில் 1 மணி நேரம் மட்டும் மக்களைச் சந்திக்க நேரம் ஒதுக்குகின்றனர். அந்தப் பொழுதிலும் அலுவலக ஊழியர்களுடன் கோப்புகள் குறித்து உரையாடுகின்றனர். உடனடியாகக் குறைகளைத் தீர்க்க முடியாவிட்டாலும்  அதற்கான நடவடிக்கையை உடனடியாகத் தொடங்குவது அவர்கள் மீதான நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தும்.
 ஆலைகள், நிறுவனங்கள், அமைப்புகள் என எல்லா இடங்களிலும் பொறுப்பாளர்கள் காணுதற்கு எளிதாகவும் கடுஞ்சொல்லற்றும்  பொறுப்புடன் நடந்து கொண்டால் மக்களால் போற்றப்படுவர்.
பெற்றோர்-பிள்ளைகள், ஆசிரியர்-மாணாக்கர், வீட்டுத்தலைவி – பணியாள் என எல்லா நேர்வுகளிலும் பின்பற்ற வேண்டிய குறள் இது.
ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவரும் யாரோ ஒருவரின் குறையைப் போக்கும் இடத்தில் இருப்பதால்,  பிறர்  உடனடியாகக் குறைகளை வெளிப்படுத்த வாய்ப்பு நல்கிக் கடுமையான சொற்களைத் தவிர்த்து உலகம் புகழ நாம் வாழ்வோம்!

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 13.08.2019

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 18 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

18

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு
(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்இறைமாட்சி, குறள் எண்: 385)
செல்வம் திரட்டுதவற்கான வழிவகைகளை உருவாக்கியும் தொகுத்தும் காத்தும் பகுத்து வழங்கலும் வல்லது அரசு என்கிறார் திருவள்ளுவர்.
இன்றைய நிதியியல் கூறும் கருத்தினை அன்றே திருவள்ளுவர் சொல்லி உள்ளார்.
இயற்றலும் ஈட்டலும் என்பதற்குப் பேரா.சி.இலக்குவனார், “ஒரு நாடு எல்லாவற்றிலும் தன்னிறைவு உடையதாக இருக்க முடியாது.ஆதலின் என்னென்ன நம் நாட்டில் இல்லை? உண்டுபண்ண முடியாது என்பதை நன்கு ஆராய்ந்து அறிந்து, இல்லாதவற்றை எந்தெந்த நாடுகளிலிருந்து கொண்டுவரலாமோ அங்கிருந்து கொண்டுவரக்கூடிய ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும். பிறர் கவரவும் தாமே கெடவும் விட்டுவிடுதல் கூடாது”  என விளக்குகிறார்.
நாட்டின் வரவு செலவு திட்டத்தை – நிதி நிலை அறிக்கையை – உருவாக்கும் அரசுகள், நாட்டுப்பொருள் வளத்தைப் பெருக்குவதற்குரிய வழிவகைகளை ஆராய்ந்து ஈடுபட வேண்டும். மக்களைத் துன்புறுத்தாமல் நேர்மையான முறையில் நிதி ஆதாரத்தைப் பெருக்க வேண்டும். ஈட்டப்படும் பொருள் வீணாகாதவாறு திட்டமிட்டு அனைவருக்கும் எப்பொழுதும் பயன்படும் வகையில் காத்தல் வேண்டும். அப்பொருளின் பயன் அனைவருக்கும் உரிய காலத்தில் உரிய நன் முறையில் சென்று பயன் அளிக்கப் பகுத்துத் தர வேண்டும்.
இன்றைய நிதி ஆதாரத்தில் கடன் மூலம் பொருள் திரட்டலும் அடங்கியுள்ளது. அரசின் நிதிநிலையறிக்கையில் ஆண்டுதோறும் கடன்தொகை கூடிக்கொண்டே போகிறது. இன்றியமையாத் தேவைக்குக் கடன் தேவைப்பட்டாலும் விரைவில் அதனைத் தீர்க்கவும் வருவாய் வரும் வழிகள் குறித்துத் திட்டமிட்டுப் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அரசிற்குச் சொல்லும் அறிவுரை மக்களுக்கும் பொருந்தும்.
குடும்பத்தலைவனும் தலைவியும், இவைபோல் திட்டமிட்டு வருவாய் திரட்டி நல்வழியிலான சேமிப்பு, முதலீடு போன்றவற்றின் மூலம் பாதுகாத்துக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பயனுறும் வகையில் உணவுச் செலவு, இருப்பிடச் செலவு, கல்விச் செலவு, மருத்துவச் செலவு போன்ற வழிகளில் தேவைக்கேற்ப செலவழிக்க வேண்டும். செலவில் சமன்மை இல்லாமல் கூடுதலும் குறைவுமாகச் செலவழிப்பது இன்றியமையாத் தேவைக்குப் பணமின்றி இடர்ப்படவே வைக்கும்.  எனவே, நாட்டைப்போல் வீட்டிலும் திட்டமிடல் தேவை.
திருவள்ளுவர் அரசை முதன்மைப்படுத்திக் கூறியிருந்தாலும் தனி மனிதரும் பின்பற்ற வேண்டிய பொருள் நெறி இது. திட்டமிடுவோம்! பயனுறுவோம்!

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 12.08.2019

முத்து நெடுமாறன் உரை: தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும், சென்னை

அகரமுதல


ஆடி 29, 2050 புதன்  14.08.2019

மாலை 5.30

(உ)ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

சொற்பொழிவாளர் :

முத்து நெடுமாறன், கணிணியியலர்

தேநீர் மாலை 5.00
மூன்றாவது குறுக்குச்சாலை
மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம்
ரமணி, சென்னை 600 113

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

தானமும் தவமும் தமிழே! -இலக்குவனா் திருவள்ளுவன், மின்னம்பலம்

அகரமுதல


தானமும் தவமும் தமிழே!

சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா என்பது பற்றி பார்த்தோம். அதேபோல் இந்த வாரம் தானம், தவம் என்ற சொற்களின் முகவரியைத் தேடும் ஆய்வில் மூழ்குவோம்.
தானம், தவம் ஆகிய சொற்களை அயற்சொற்கள் என மயங்கி நாம் தவிர்க்கிறோம். இவை நல்ல தமிழ்ச்சொற்களே!
அயற்சொல் அகராதி (ப.253) தானம் என்பது ஃச்தான(sthaana) என்னும் சமசுக்கிருதச் சொல்லில் இருந்து வந்ததாகத் தவறாகக் கூறுகிறது. இதற்குப் பொருள் இடம், உறைவிடம், பதவி, கோயில், துறக்கம், இருக்கை, எழுத்துப் பிறப்பிடம், எண்ணின் இடம், ஆற்றல் சமநிலை, ஆற்றல் என விளக்கியுள்ளது. இவை தமிழ்ச் சொல்லான தானத்தின் பொருள்களாகும்.
தமிழ்ச்சொற்களுடன் முன்னெழுத்தாக ‘ஃஸ்’ சேர்த்து சமஸ்கிருதச் சொற்கள் உருவாகியுள்ளன. இதனை மறுதலையாக அஃதாவது சமசுக்கிருதத்தில் இருந்து தமிழ் வந்ததாக எண்ணுவது தவறு. சான்றுக்குச் சில பார்ப்போம்.
தனம் > ஸ்தனம்
தாணுநாதன் > ஸ்தாணுநாதன்
தானம் > ஸ்தானம்
தூலம் > ஸ்தூலம்
படிகம் > ஸ்படிகம்
எனவே, தமிழ்ச்சொல் தானத்திலிருந்துதான் ஸ்தான என்னும் சமசுகிருதச்சொல் உருவானது எனலாம்.
“நோற்றிட்டு, உடனாக ஐம்பொறியும் வென்றார்க்கு உவந்தீதல் தானமாகும்” என்று சீவக சிந்தாமணியார் (1546) கூறுவது போல், ” நோற்பார்க்கு மட்டுமே ஈதல் தானம் என்பது சமணர் கொள்கை. தவம் : தன் உடல் நலனுக்கும், மகிழ்விற்கும் அறிவுக் கூர்மைக்கும் செய்யப்பெறும் நோன்மை முயற்சி. நோன்மை நோற்றல் கடைப்பிடி, அஃது இருக்கை, மனவொருமை, மெய்யறிமுனைவு முதலிய விரிவு நிலைகள் கொண்டது.” என்று பெருஞ்சித்திரனார் விளக்குகிறார்.
தானம், தருமம், கொடை, ஈகை எனப் பழந்தமிழ் மக்கள் கொடுப்பதையும் வகைப்படுத்தி உள்ளனர். பொதுநோக்கம், கோவில்பணி முதலான நற்செயல்களுக்காகத் தானாக மகிழ்ந்து தருவதைத் தானம் என்றும் கேட்போருக்குக் கொடுப்பதைத் தருமம் என்றும் கல்வி, கலைகளில் சிறந்தவர்களுக்குக் கொடுப்பதைக் கொடை என்றும் எளியோர்க்கும் இரந்தோர்க்கும் அளிப்பதை ஈகை என்றும் சொல்வதே தமிழர் வழக்கு. இவ்வகைப்பாட்டின் மூலமும் தானம் தமிழ் எனப் புரிந்து கொள்ளலாம்.
“தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே”(தொல்காப்பியம், சொல்லதிகாரம், எச்சவியல் 50.1)
என்னும் தொல்காப்பியரின் வரையறையின் அடிப்படையில் ‘தா’ என்னும் வேரிலிருந்து உருவான ‘தானம்’ தமிழ்ச்சொல்லே என அறிஞர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
தமிழ், திராவிட மொழிகள் என அழைக்கப்பெறும் தமிழ்க்குடும்ப மொழிகளுக்குத் தாய், ஆரியத்திற்கு மூலம் என்றும் காட்டுவது ‘தா’ என்னும் வேர் மூலம் என்கிறார் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர். தமிழ் வேர் மூலமான ‘தா’ என்பதில் இருந்து பிறந்த ‘தானம்’ என்னும் சொல்லும் தமிழாகத்தானே இருக்கும்.
“தா என்னும் சொல் தமிழுக்கே யுரியதென்பது வெள்ளிடைமலை.” என அவரே திருக்குறள் தமிழ் மரபுரை முன்னுரையில் கூறுகிறார்.
மனுநீதி, “பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததனாலும் இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான்” எனத் தானம் வாங்குவதற்குரிய முதல் தகுதி பிராமணனுக்கே உள்ளதாகக் கூறுகிறது. இதற்குக் காரணமாக அது கூறுவது, உலகில் உள்ள நிலம், சொத்து, உடைமை, உடை ஆகிய யாவும் பிராமணனுக்குரியனவே. எனவே, பிராமணன் தானம் வாங்கினாலும், அது அவனது பொருளே, அவனது உடையே, அவனது சொத்தே, அவன் தயவினால்தான் மற்றவர்கள் அவற்றைத் துய்க்கிறார்கள் என்கிறது. ஆனால் தமிழர்களோ தம் எலும்பும் பிறர்க்கே என்னும் அன்பு நெறியில் வாழ்ந்து, பாகுபாடின்றி யாவருக்கும் தானம் வழங்குகிறார்கள்.
ஆதலின் தானம் தமிழே என்பதில் ஐயமில்லை.
இனித் ‘தவம்’ குறித்துப் பார்ப்போம்.
தவம், காடு என்னும் பொருளுடைய தவ(dava) என்னும் சொல்லில் இருந்து வந்ததாக அயற்சொல் அகராதி (பக்.236) கூறுகிறது. அஃதாவது காட்டில் மேற்கொள்வதால் அச்சொல்லில் இருந்து தவம் என்னும் சொல் வந்ததாம். தவம் என்னும் தமிழ்ச்சொல்லிற்கே காடு என்னும் பொருள் இருக்கும் பொழுது ஆரியத்தை நோக்கி ஓடுவானேன்?
தவசியர் (1), தவத்தின் (1), தவத்துக்கு (1), தவத்தோற்கே (1). தவம் (10), தவமும் (1) எனத் தவம் பற்றிய சொற்கள், சங்க இலக்கியங்களில் இடம் பெறுகின்றன.
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின். (திருக்குறள் 19)
எனத் திருவள்ளுவர் தானம், தவம் ஆகிய இரு தமிழ்ச்சொற்களையும் ஒரே குறளிலேயே பயன்படுத்தி உள்ளார்.
தவம் என்னும் சொல், வழிபாடு, இல்லறம், கற்பு, வாழ்த்துப்பா (தோத்திரம்), தவத்தைப் பற்றிக் கூறும் கலம்பக உறுப்பு, வெப்பம், காட்டுத் தீ, நோன்பு, நல் வினை, நற் செயல், நற்பயன் (புண்ணியம்) முதலிய பொருள்கள் உடைய தமிழ்ச்சொல்.
தவ வாழ்வு வாழ்பவர்களைத் தவத்தர் என்பதும், தவப்பெண்டிரைத் தவத்தி, தவப்பெண், தவமுதல்வி, தவமுதுமகள், என்றெல்லாம் அழைப்பதும் தவமுதுமகன், தவவீரர் எனத் தவவாழ்வு வாழும் ஆடவரை அழைப்பதும், தவ வாழ்க்கை வாழ்பவர்களைத் தவத்திரு எனக் குறிப்பிட்டு அழைப்பதும் தவப்பள்ளி, தவச்சாலை முதலான குடில்களும் தவவேடம், தவவேள்வி முதலாகிய சொற்களும் ‘தவம் செய்து பெற்ற பிள்ளை’ என்னும் உலகவழக்கும் தவம் என்னும் தமிழ்சொல் மக்கள் வாழ்வில் வேரூன்றி இருப்பதை உணர்த்துகின்றன.
”தானமும் தவமும் தான்செயல் அரிது” என்கிறார் ஒளவையார்.
தவம் என்றால் பற்றை நீக்கி உடலை வருத்திக் கொண்டு இறைவனை வழிபடுதல். அஃதாவது தவம் என்றால் தன்னை வருத்தி நோன்பு இருத்தல் எனப் பொருள்.
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு (திருக்குறள் 261)
எனத் தனக்கு வரும் துன்பத்தைப் பொறுத்தலும் பிறர்க்குத் துன்பம் செய்யாமையுமே தவம் எனத் திருவள்ளுவர் தவத்திற்கு இலக்கணம் கூறுகிறார். தவம் எனத் தனிஅதிகாரமே அமைத்துள்ளார். சிலர் திருக்குறளில் சமசுகிருதச் சொற் கலப்பு இருப்பதாகக் கூறினாலும் பேரா.சி.இலக்குவனார் முதலான அறிஞர்கள் திருக்குறள்முழுமையும் தனித்தமிழ்ச் சொற்களே உள்ளதாக நிறுவியுள்ளார். பாவேந்தர் பாரதிதாசன் பிறர் சமசுகிருதச்சொற்கள் எனக் கூறிய பாக்கியம் முதலான சொற்கள் யாவும் தமிழே என உணர்த்தியுள்ளனர்.
அறிஞர்களின் கருத்துகள், உலக வழக்கு, இலக்கிய வழக்கு ஆகியவற்றின் அடிப்படையில் தவம் தமிழ்ச்சொல்லே என உறுதிபடக் கூறலாம்.
ஆகவே, தானமும் தவமும் தமிழே எனத் தெளிவோம்! தமிழ் வளரத் தானம் புரிவோம்! தமிழ் பரவத் தவப்பணி மேற்கொள்வோம்!

இலக்குவனா் திருவள்ளுவன்

மின்னம்பலம், 11.08.2019