ஏழு கன்னியர் கல்வெட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏழு கன்னியர் கல்வெட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 அக்டோபர், 2010

ஏழு கன்னியர் சிற்பத்தின் கல்லில் 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு எழுத்துகள்

விழுப்புரம், அக். 25: விழுப்புரம் திரு.வி.க. வீதி அய்யனார் கோயிலில் இருந்த ஏழு கன்னியர் சிற்பத்தின் கீழ்ப் பகுதியில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டு எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டது.  ÷திரு.வி.க. வீதியில் உள்ள பாண்டி அழகர் அய்யனார் கோயிலில் திருப்பணி நடந்து வருகிறது.  ÷இங்குள்ள மிகவும் பழமை வாய்ந்த ஏழுகன்னியர்களின் புடைப்புச் சிற்பத்தில் கல்லெழுத்து வாசகங்கள் இருப்பதை விழுப்புரம் கல்வெட்டு ஆராய்சியாளர்கள் சி.வீரராகவன், மங்கையர்க்கரசி ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.  ÷எழுத்தாளர் கோ. செங்குட்டுவன் அளித்த தகவலின் பேரில், கோயில் பரம்பரை அறங்காவலர் ஏ.சி. குமார் முன்னிலையில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  ÷இது குறித்து கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறியிருப்பது: தமிழகத்தில் பெண் தெய்வ வழிபாட்டில் ஏழு கன்னியர்கள் வழிபாடு என்பது கி.பி. 8-ம் நூற்றாண்டு முதல் சிறந்தோங்கி வந்துள்ளது.  ÷சிவாலயங்களில் தென்திசை திருச்சுற்று மேடையில் அறுபத்து மூவர் சிற்பங்கள் அமைந்த பகுதியிலேயே கன்னியர்களான மகேஸ்வரி, பிரம்மி, இந்திராணி, வைஷ்ணவி, கெüமாரி, வராகி, சாமுண்டேஸ்வரி ஆகியோர் இடம் பெற்றிருப்பர்.  ÷இவர்களுடன் முழுமுதற் கடவுளான கணபதியாரும், வீரபத்திரர் யோகப்பட்டம் அணி செய்ய யோகாசனத்தில் அமர்ந்த நிலையில் அமைத்திருப்பர்.  ÷பாண்டி அழகர் அய்யனார் திருக்கோயிலில் ஒரே பலகைக்கல்லில் செதுக்கப்பட்ட கன்னியர்கள் சுகாசனத்தில் அமர்ந்துள்ளனர். வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்து, இவர்கள் அருள்பாலிக்கின்றனர்.  ÷வலக்கரங்களில் தாமரை மொட்டுகளை ஏந்தியுள்ளனர். இடக்கரங்கள் அவரவர் தொடைகளில் தாங்கியுள்ளனர். இவர்களது தலைகளில் உள்ள கொண்டைகள் இடப்பக்கம் முடியப்பட்டுள்ளன.  ÷அழகே உருவான இந்த ஏழு கன்னியர்களின் புடைப்பு சிற்பத் தொகுதியில் கணபதியாரோ, வீரபத்திரரோ இடம்பெறவில்லை.  ÷சிற்பத்தின் கீழ்ப்பக்கம், அடிப்பக்கம், வலப்பக்கங்களில் ஏழு வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.  ÷மங்கலச் சொல்லான ஸ்வஸ்திஸ்ரீ என்ற சொல்லோ, மன்னர்களின் பெயரோ, அவர்களின் மெய்கீர்த்தியோ அல்லது ஆட்சியாண்டோ இதில் இல்லை.  ÷அன்றாடம், கணபதியார் வழிபாடு நடத்துவதற்கும், ரிஷபம் அமைக்கவும், அமுதுபடி செய்யவும், திருவிழா நடத்துவதற்கும், சந்தி மற்றும் அணையா நந்தா விளக்கெரிக்கவும், தனித்தனியே பொற்காசுகள் வழங்கப்பட்டதையும் கல்லெழுத்து வாசங்கள் கூறுகின்றன.  ÷எழுத்தமைதியைக் கொண்டு இதன் காலம் கி.பி. 16, 17-ம் நூற்றாண்டு எனலாம். தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரத்தில் கல்லெழுத்து வாசங்களுடன் கூடிய ஏழு கன்னியர்களின் சிற்பத் தொகுதி இதுவரைக் கண்டறியப்படவில்லை. இப்படி கண்டறியப்பட்டது இதுவே முதல்முறை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.