திருக்குறள் மாநாட்டுக்குத் தமிழக அரசு உதவியா?- தமிழறிஞர்கள் ஓசனை!
தில்லியில் கடந்த 23,24 ஆம் நாள்களில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய, தமிழ் ஆட்சி மொழி பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராசன் நிறைவு விழாவிலும் தன்னார்வத்துடன் பங்கேற்றார்.
அப்போது அவர் “பிரான்சில் 06., 07.08.2020 இல் நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டிற்கு அரசு நிதி யுதவி செய்யும். இந்த மாநாடு முடிந்து விட்டாலும் சிறிய அளவு உதவியேனும் செய்வோம். அமெரிக்காவில் நடைபெற்ற உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு உதவியது போல் பிரான்சு மாநாட்டிற்கும் உதவுவோம்” என்றார். அனைவரும் மகிழ்ந்து வரவேற்றனர்.
இதுகுறித்து திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழறிஞர்கள் சிலரிடம் பேசியபோது,
“நிகழ்ச்சி நிரலில் பெயர் இல்லாத பொழுதும் நிறைவு விழாவிற்கு வந்தது, அமைச்சரின் ஈடுபாட்டைக் காட்டுகிறது. அவர் பேச்சிலே ஆர்வம் தொனித்தது, உண்மையாக உதவ எண்ணுகிறார் என்பதைக் காட்டுகிறது. காலையில் மாநாட்டுக்கு வந்து யுனெசுகோ இயக்குநரைச் சந்தித்துக் கீழடி குறித்துப் பேசியதுடன் திருக்குறள் நூலை உலகப் பொதுநூலாக அறிவிக்க வேண்டியது குறித்தும் பேசியுள்ளார். மீண்டும் மாலையிலும் வந்துள்ளார். ஆகவே, திருக்குறள் மாநாட்டில் ஆர்வம் காட்டுகிறார் என்பது தெளிவாகிறது. அமைச்சர் நிதியுதவி குறித்து முன்னதாகவே அறிவித்தது மகிழ்ச்சியான செய்திதான்.
ஆனால் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு (ஃபெட்னா) உதவியது போல் உதவுவோம் என்றதும் மகிழ்ச்சி பறந்தோடி விட்டது. அந்த மாநாட்டில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செல்லத்தானே அரசு உதவியது. அவர்களும் கருத்தரங்கம் முடிந்த பின் சென்று சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிட்டனர். அதைப் போல் அல்லாமல் திருக்குறள் நாட்டுக்கும், ஆக்கபூர்வமான தமிழர்களுக்கும், தமிழுக்கும் பயன்படுவது போன்ற உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும்” என்கிறார்கள்.
மின்னம்பலம் 29.09.2019