Kaa.Po.Rathinam01
தொல்காப்பியத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லாயிரம் தமிழ் நூல்கள் இருந்தன
                தொல்காப்பியத்துள்,
                ”என்மனார் புலவர்””
                ”என மொழிப, உணர்ந்திசி னோரே””
                ”பாடலுட் பயின்றவை நாடுங் காலை””
                ”சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே””
                ” மொழிப, புலன்நன் குணர்ந்த புலமையோரே “”
                ”நல்லிசைப் புலவர் , , , , வல்லிதிற் கூறி வகுத்துரை த்தனரே “”
                ”நேரிதி னணர்ந்தோர் நெறிப்படுத் தினரே “”
                ”நூனவில் புலவர் நுவன்றறைந் தனரே “”
என்றிவ்வாறு காணப்படுகின்ற சொற்றொடர்கள், தொல்காப்பியர் காலத்தில் பல தமிழ் நூல்கள் பெருவழக்கிலிருந்தன என்பதைப் புலப்படுத்துகின்றன, தொல்காப்பியம் இயற்றப்படு முன் அந் நூல்கள் எவ்வளவு ஆண்டுகளாக விளங்கிவந்தன என்பதற்கு விடை காண முடியாதிருக்கிறது, தொல்காப்பியத்துக்குப் பின்னெழுந்த பல இலக்கண நூல்களுள் ஒன்றாகிய நன்னூலுக்கும் தொல்காப்பியத்திற்கு மிடையிலேயே ஆயிரத்திற்கு மேற்பட்ட வருடங்கள் கழிந்தனவெனில் தொல்காப்பியத்திற்கும் அதற்கு முன்னிருந்த இலக்கண நூல்களுக்குமிடையில் எவ்வளவாயிர வருடங்கள் கழிந்திருக்கும்? தொல்காப்பிய இலக்கணம் தோன்றிய காலத்திருந்த பல நூல்கள்கூட நமக்குக் கிடைக்கவில்லை, தொல்காப்பியம் கூறும் சில இலக்கணங்களுக்குரிய இலக்கியங்கள மறைந்து விட்டன.
                ”தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து
     அதர்ப்பட யாத்தலோடு அனைமர பினவே””
எனுமித் தொல்காப்பியச் சூத்திரத்தில் வழிநூல்கள் செய்யும் முறை நான்காக வகுக்கப் பட்டிருக்கிறது. தொகுத்தும், விரித்தும், தொகுத்து விரித்தும், மொழி பெயர்த்தும் செய்யப்பட்ட நூல்கள் தொல்காப்பியர் காலத்திலிருந்தன. இந் நூல்களைப் பற்றி நாம் நன்கு அறிந்து கொள்ள முடியாதிருக்கிறது.
அறிஞர் கா.பொ.இரத்தினம் அகநானூற்றுச் சொற்பொழிவுகள் : பக். 43:44