சனி, 18 ஆகஸ்ட், 2012

எப்படி மறப்போம்


உங்களை நாங்கள் எப்படி மறப்போம்....


அச்சமது துச்சமெனத் துணிந்து, துப்பாக்கிக் குண்டுகளுக்கு துவளாமல் முன்நின்று, அயலவர் படைகளை அறவழிப் போராட்டத்தால் வென்று போர்க் களத்தில் குருதி சிந்தி நின்ற போதும், விடுதலையே மூச்சாக, விடுதலையே பேச்சாகக் கொண்டு உழைத்த ஈகியே!...

நாள்தோறும் உங்கள் உடல்கள் வேதனையில் துடித்தாலும், அசைக்க முடியாத உங்கள் உள்ளத்து உறுதியுடன், அயலவர் படைகளைக் கலங்கடித்தவர்தாமே நீங்கள்! உங்களைப் போன்றவர்களின் ஒப்பற்ற உயிர் ஈகத்தால் (தியாகத்தால்), உயிரினும் மேலாய் நீங்கள் கருதிய உங்கள் விடுதலைத் தாகத்தால் பெறப்பட்டதே இந்த விடுதலை!
நீங்கள் பட்ட துயரங்களை, வேதனைகளை எப்படி மறப்போம்! வாழ்நாளெல்லாம் நெருப்பிலே நின்றவர்கள் நீங்கள். இன்றைய மகிழ்ச்சியை எங்களுக்கு வழங்க, நேற்றைக்கு வலியையும், வருத்தத்தையும் சுமந்தவர்தாமே நீங்கள்!

இந்த மக்களுக்காக, இந்திய மண்ணிற்காக வாழ்வைக் காணிக்கையாக்கிய உங்களை எப்படி மறப்போம்!... என்று உணர்ச்சிகரமான உரை படிக்கப்பட்ட மதுரை செளராட்டிர இருபாலர் பள்ளியின் சிறு கூடத்தில் மலர்களால் அணி செய்யப்பட்டிருந்த ஈகி(தியாகி)களின் படங்களில் ஒன்றில் இடம் பெற்றிருந்தார் ஐஎன்.ஏ வீரர் ஈகி வைத்தியலிங்கம்.

கடந்த 10-8-1997ஆம் ஆண்டு, மதுரையில் தினமலர் சார்பில் இந்திய விடுதலைப் பொன் விழா நடத்தப்பட்டபோது, இந்தப் புனிதமான விழாவின் நாயகராக யாரைப் போற்றுவது என்றவுடனேயே அனைவராலும் குறிப்பிடப்பட்ட பெயருக்கு சொந்தக்காரர்தான் ஈகி வைத்தியலிங்கம். கணுக்கால் வரை தூக்கிக் கட்டிய கதர் வேட்டி, கைகளை மூடும் நீண்ட கதர்ச் சிப்பா, கதரின் வெண்மைக்கு நிகரான பெரிய மீசை, உடலில் தளராத வீரம், கண்களில் தலைவர் நேதாசி கற்றுக் கொடுத்த தீரம், சொற்களில் நேர்மை. இவற்றுடன் எனக்கு அறிமுகமான வைத்தியலிங்கம் ஐயா, தினமலர் விழாவிற்கு நேதாசியின் படை வீரனைப் போலச் சீருடையில் வந்திருந்தார். விழாவிற்கு வந்தவர்கள் விழிகளை வியப்பால் உயர்த்தினார்.

அதற்குப் பிறகு அவரோடு பல சந்திப்புகள். ஒவ்வொரு சந்திப்பின்போதும் நேதாசி பற்றிய நூல்களைக் கொடுப்பார். நெகிழ்ச்சியோடு தனது பர்மா, இரங்கூன், பகாங்கு போன்ற இடங்களில் போரிட்ட போர்க்கள நிகழ்ச்சிகளை நினைவு கூர்வார். இந்தத் தலைமுறைக்கு விடுதலைத் தாகம் குறைந்துவிடாது பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பார். ஒரு கட்டத்தில் கூடத் தனது சிக்கல்களையோ தனது குடும்பத்துச் சிக்கல்களையோ பற்றிப் பேசியவர் இல்லை.

மதுரை முனிச்சாலையில் உள்ள அவரது அறையில் எங்கு பார்த்தாலும் நேதாசியின் புகழ்பாடும் நூல்களே நிறைந்து இருக்கும். வந்தவர்களிடம் வஞ்சனையில்லாமல் அந்த நூல்களை வாரியும் கொடுப்பார்.

இப்படி, மதுரை முனிச்சாலைச் சிங்கமாக, ஈகிகளில் ஈடு இணையற்ற தங்கமாக இருந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன் இறந்து போனார். இவரது இறப்பு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் இவரது வரலாறு சாதாரணமானதில்லை என்பதை உணர்ந்த தேசிய வலிமை செய்கிந்த்து சுவாமிநாதன் கடந்த விடுதலைத் திருநாளன்று இவர் படத்தைத் திறந்து வைத்து, இவரது வீர வரலாற்றை நினைவு கூரும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்திருந்தார். அதற்கேற்பப் பாவலர்.சுரா எழுதியிருந்த, ஈகி வைத்தியலிங்கம் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளும் அவரது புகழை அனைவரும் அறிய உதவின. பேசிய பலரும் ஈகி வைத்தியலிங்கம் ஐயா அவர்களை, மதுரை உள்ள அளவு, உள்ளத்தில் நினைவுகள் உள்ள அளவு மறக்கமாட்டோம் என்று கண்கலங்கக் குறிப்பிட்டனர்.

அனைத்தையும் படமாக இருந்தபடிப் பார்த்துக் கொண்டிருந்தார் ஈகி வைத்தியலிங்கம்.
- எல்.முருகராசு, தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக