செவ்வாய், 6 மார்ச், 2012

governmen t should lift up


அரசு தான்கை தூக்கி விடணும்

 
பளு தூக்கும் வீராங்கனை மாலா: என் அப்பா போலீசில், எஸ்.ஐ., அம்மா இல்லத்தரசி. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, பயிற்சியாளர் வெங்கடேசன், கூடைப் பந்து குழுவில் என்னை சேர்த்துக் கொண்டார். மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு முன்னேறினேன். கோவை நிர்மலா பெண்கள் கல்லூரியில் படிக்கும் போது, பளு தூக்கும் போட்டி அறிமுகமானது. அதில் ஆர்வமாகி சேர்ந்தேன்.ஒவ்வொரு முறை பளு தூக்கும் போதும், ஏதோ பெரிதாக சாதித்ததைப் போன்ற சந்தோஷம் இருக்கும். வீட்டிலும் அவ்வளவு பாராட்டுகள். அந்த உந்துதலில், தொடர்ந்து பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தேன். 2008ம் ஆண்டு, நாகர்கோவிலில் நடந்த மாநில அளவிலான போட்டியில் வெண்கலப் பதக்கம் ஜெயித்த போது, என் மேல் எனக்கே நிறைய நம்பிக்கை ஏற்பட்டது. அடுத்து, தென்னிந்திய, தேசிய அளவிலான போட்டிகள் என்று முன்னேறினேன்.ஆசிய போட்டிகளுக்கான அழைப்பு வந்தது. ஜப்பானில் உள்ள கோபே சிட்டியில், 17 நாடுகள் பங்கேற்ற பளு தூக்கும் போட்டியில், 63 கிலோ எடை ஜூனியர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் ஜெயித்தேன். தங்கத்தை இழந்தாலும் கூட, அதற்கு ஈடான தன்னம்பிக்கை இந்தப் போட்டியில் எனக்குக் கிடைத்தது.என்னைப் போல் நடுத்தர குடும்பங்களில் உள்ள விளையாட்டு நட்சத்திரங்களைக் கண்டறிந்து, அரசு கை தூக்கி விட வேண்டும். தற்போது, என்னைப் போலவே என் தங்கையும், பளு தூக்கும் போட்டியில், பதக்கங்களைக் குவிக்கிறார். விளையாட்டு தவிர, இசையிலும் எங்களுக்கு ஆர்வம் அதிகம். நானும், என் தங்கையும் மெல்லிசை கச்சேரிகளில் பாடும் பாடகிகள். இசையிலும், விளையாட்டிலும், பல சாதனைகள் செய்ய வேண்டும் என்பதே என் ஆசை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக