கல்விக் கொள்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்விக் கொள்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 அக்டோபர், 2022

தமிழ் நாட்டு அரசின் கல்விக் கொள்கை- தாய்த்தமிழ்க் கல்விப் பணியின் பரிந்துரைகள்

 அகரமுதல




தமிழ் நாட்டு அரசின் கல்விக் கொள்கை

தாய்த்தமிழ்க் கல்விப் பணியின் பரிந்துரைகள்.

அறிவுடையார் எல்லாம் உடையார்” என்பது ஐயன் திருவள்ளுவரின் கூற்று. ஒரு சமூகத்தின் அறிவுசார் வளர்ச்சியே அச்சமூகத்தின் வளமையின் அளவீடு.

அறிவு பெறும் வாயில் கல்வி. “கல்வி சிறந்த தமிழ் நாடு” எனும் சிறப்புக்குரிய தமிழ் நாட்டுக்கென, தமிழ் நாட்டரசு, தனித்த ஒரு கல்விக் கொள்கையை. உருவாக்கி வெளியிடுவது சிறப்புக்கு உரியது மட்டுமல்ல, தேவையுமாகும்.

தமிழ் நாட்டின் கல்விக் கொள்கைக்கென, தாய்த்தமிழ், தமிழ்வழிப் பள்ளிகளின் அமைப்பான, தாய்த்தமிழ்க் கல்விப் பணியின் சார்பில் பின்வரும் தெரிவுகளைப் பரிந்துரைக்கின்றோம்.

  1. பள்ளிக் கல்வி

ஒரே வகையான கல்விமுறை

ஒரு சமூகத்தின் நீடித்த, நிலையான வளர்ச்சி என்பது, ஒருங்கிணைந்த, அனைவரையும் உள்ளடக்கிய ஒன்றாக இருக்க வேண்டும். சமூக வளர்ச்சியில் அனைவரின் பங்கேற்பு என்பது அனைவருக்குமான சம கல்வி வாய்ப்பின் வழியாகவே அமையும். வாய்ப்பற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், அனைவரையும் உள்ளடக்கிய ஒன்றாகக் கல்வி முறை இருத்தல் தேவை.

எனவே, சீரான, சிறப்பான, வட்டார வாழ்வியலுக்கும் இயைந்து அமையும் ஒரே கல்வித்திட்டம் தமிழ் நாட்டுக்கு உருவாக்க வேண்டும். ஒரேவகை பள்ளி, ஒருங்கமைந்த கலைத்திட்டம், பாடத்திட்டம் என ஒரே வகையான கல்விமுறை தேவை.

பயிற்றுமொழி

தாய்மொழிவழிக் கல்வியே உலகம் ஏற்றுக்கொண்ட ஒன்று. தமிழ் நாட்டைவிடப் பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் சிறிய நாடுகளும் தங்கள் மக்களுக்குத் தங்கள் தாய்மொழியில் கல்வியைத் தருகின்றன; அதனால் உயர்ந்து வருகின்றன. உயர்தனிச் செம்மொழியான தமிழ் மொழிக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய பல மொழிகள் இன்று பயிற்று மொழியாகச் சிறந்து விளங்குகின்றன.

  1. சப்பான், சீனா, கொரியா, செருமனி, பிரான்சு, என அறிவியல் துறையில் வளர்ந்த நாடுகளில் எல்லாம் தாய்மொழியே பயிற்சி மொழியாக உள்ளது. தமிழ் நாட்டின் எழுச்சிமிகு வளர்ச்சி என்பதும் தமிழ்மொழியின் வழியாகவேதமிழ்வழிக் கல்வியின் வழியாகவே அமையும்.
  2. அயல் மொழியின் வழியில் கற்பது குழந்தைகளுக்கு இரட்டைச் சுமை; மொழியைக் கற்பது, பிறகு கருத்தை உள்வாங்கிக்கொள்வது என அமையும். அதனுடன் தாய்மொழிவழிக் கல்வியே சிந்தனையைத் தூண்டக்கூடியது. படைப்பாக்கத்திறனை வளர்க்கக்கூடியது.
  3. அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி முறையை நாம் முன்னெடுக்கின்றோம். வாய்ப்பற்றவர்கள் விடுபடாமல், அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை வலியுறுத்துகிறோம். மக்கள் அனைவரும் கல்வி பெற, மக்கள் மொழியில் கல்வி வேண்டும். ‘மக்களுக்கான கல்வி மக்கள் மொழியில் என்ற அடிப்படையில் தமிழ் நாட்டின் கல்விமொழி, கற்றலுக்கான பயிற்றுமொழி எல்லா நிலைகளிலும் தமிழே இருத்தல் வேண்டும்.
  4. இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 5 ஆம் நிலைவரை, தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்துகிறது. தமிழ் நாட்டு அரசின் கல்விக் கொள்கை, பள்ளிக் கல்வியில் எல்லா நிலைகளிலும், மழலையர் கல்வி, தொடக்கக் கல்வி, உயர்நிலை, மேல்நிலை என முழுமையும் தமிழே என உறுதியாக வரையறை செய்ய வேண்டும். தொடர்ந்து கல்லூரிக் கல்விஆராய்ச்சிக் கல்வி என அனைத்திலும் தமிழை முன்நிறுத்த வேண்டும்.
  5. தமிழ்வழிக் கல்வி எனும் கொள்கையை நடைமுறைப்படுத்த காலவரையறை தேவை. 5 ஆம் நிலைவரையான தொடக்க வகுப்புகளில் உடனடியாகவும் பள்ளிக் கல்வியில் முழுமையாக சில ஆண்டுகளிலும் தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப் படுத்த வகை செய்ய வேண்டும்.

 இரண்டாம் மொழி

தமிழ் நாட்டு அரசு, வெளித் தொடர்புகளுக்காக இருமொழிக் கொள்கையைக் கடைபிடிக்கின்றது.

  1. தொடர் கற்றலுக்கும் வெளித் தொடர்புகளுக்கும் இன்றைய நிலையில் ஆங்கிலத்தைக் கற்றல் தேவைப்படுகிறது. அந்த அடிப்படையில் தமிழ் நாட்டின் இரண்டாவது மொழி ஆங்கிலம்.
  2. இரண்டாவது மொழி எந்தச் சூழலிலும் முதல் மொழி அன்று. அது பயிற்று மொழியாக இருக்க வேண்டியதில்லை. இருத்தல் முறையில்லை.
  3. ஆங்கிலத்தை மொழியாகக் கையாளும் திறன்பெற ஏற்ற கல்வித் திட்டம் தேவை.
  4. முதல்மொழியான தமிழில் பெறும் மொழித் திறன்கள் அத்தனையும் இரண்டாம் மொழியான ஆங்கிலத்தில் பெற வேண்டிய தேவை இல்லை. தொடர் கற்றலுக்கும் தொடர்புக்குமே ஆங்கிலத்தை முன்னிறுத்தி, அதற்கேற்ப அடிப்படைத் திறன்களைப் பெற வகை செய்ய வேண்டும்.
  5. முதல் மொழியைக் கற்றறிந்த பின்னே இரண்டாம் மொழியைக் கற்றல் என்பது கற்றலின் அடிப்படை. இந்த அடிப்படையில் தாய்மொழித் தமிழில் அடிப்படைத் திறன்களைப் பெற்ற பிறகு ஆங்கிலத்தைப் படிப்படியாய்க் கற்பிக்க வேண்டும்.
  6. மொழியியல் அடிப்படையில் இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தைக் கற்றுத்தரும் கலைத்திட்டம் வேண்டும். தாய்மொழித் தமிழைப்போல் ஆங்கிலத்தில் புலமைபெறல் தேவையில்லை.
  7. மூன்றாம் மொழி பள்ளி நிலையில் தேவையில்லை

.அருகமைப் பள்ளிமுறை.

ஒரே வகை கல்விமுறை நடைமுறை படுத்தப்படுத்துவது கல்வியில் சமநிலைக்கான முதற்படி. அருகமைப் பள்ளி முறை சமத்துவத்துக்கான அடுத்த படியாகும்.

  1. இது குழந்தைகளின் கற்றல் சூழலை எளிமையாக்கும்.
  2. புதிய நம்பிக்கையை உருவாக்கும்.

தேர்வுகளும் மதிப்பீடுகளும்

தேர்வுகள் கற்பவரின் திறன் நிலை ஆய்ந்தறிந்து, குறை களைந்து, தொடர் கற்றலுக்கு உதவுவதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும், அதன் ஒவ்வொரு பருவத்திலும் அவர்கள் அடைய வேண்டிய திறன்களை அடைந்துள்ளனரா என்று ஆய்ந்தறிவதாக  இருக்க வேண்டும்.

அது அச்சுறுத்துவதாகவோ, வடிகட்டுவதாகவோ, தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதாகவோ, ஒப்பிட்டு உயர்வு தாழ்வு கற்பிப்பதாகவோ அமையக் கூடாது.

திறன் நிலை ஆய்வும் தொடர் மதிப்பிடல், வளர்நிலை ஆய்வு என்று இருக்கலாம்.

தமிழ் மொழிக் கல்வியின் சிறப்பை உணர்ந்தும் வகையில் உயர்கல்விக்கான மதிப்பீடுகளில் தமிழ்ப் பாடத்தில் பெறும் மதிப்பெண்ணைக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

ஊ. தகைசால் பள்ளிகள்

பள்ளிக் கல்வியில் புதிய முயற்சிகளை முன்னெடுக்க தகைசால் பள்ளிகள் தேவை. தகைசால் பள்ளிகளை மாவட்டந்தோறும் அமைக்க வேண்டும்.

  1. தகைசால் பள்ளிகள் வெறும் கட்டமைப்பால் அமைந்தவை அல்ல. கல்வி முறையால் அமைவன.
  2. பள்ளிக் கல்வியில் புதிய ஆய்வுகளை மேற்கொள்ளும் இடமாக இந்தத் தகைசால் பள்ளிகள் இருக்க வேண்டும். அவை வெறுமனே எடுத்துக் காட்டாகச் சொல்வதற்கானவை அல்ல.
  3. தகைசால் பள்ளியின் பயிற்றுமொழி எந்தச் சூழலிலும் தாய் மொழியாகதமிழ் மொழியாக மட்டுமே இருக்க முடியும். இங்கே பயிற்று மொழியாகத் தாய்மொழி அல்லாத ஆங்கிலமாகவோ வேறு எந்த மொழியாகவோ இருத்தல் கல்வியியலின் எல்லா நிலைகளிலும் பிழையானதே.
  4. இப்பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் அடிப்படையில் புதிய, நல்ல முயற்சிகளைத் தமிழ் நாடெங்கும் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தொடரும் கல்வியாண்டில் எடுத்துச் சென்று, தேவைக்கேற்ப நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • மழலையர் கல்வி

குழந்தைகள் தாங்கள் வாழும் சூழலோடு இணைந்து வாழ்கிறார்கள், வளர்கிறார்கள், கற்றறிகிறார்கள். மிகப் பல சூழல்களில் அவர்கள் மற்றவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறார்கள். பழைய கூட்டுக் குடும்ப அமைப்பு, பெரிய குடும்பங்கள், சமூகமாக இணைந்து வாழ்ந்த ஊர்ச் சூழல் இப்போது மாறிவிட்டது. குழந்தைகளின் வாழ்வியலைத் தொலைக்காட்சி போன்றவை வழி நடத்துகின்றன. இந்தச் சூழலில்  பள்ளி செல்லும் பருவத்திற்குமுன் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைக் குழந்தைகளின் முன்பருவக் கல்வியே நிறைவு செய்கிறது. எனவே முறை படுத்தப்பட்ட, நெகிழ்வான, முன்பருவக் கல்வி குழந்தைகளுக்குக் கட்டாயம் தேவைப்படுகிறது.

.  அரசின் மழலையர் பள்ளிகள்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 5 அகவை முதல் குழந்தைகளின் கல்விக்கு உறுதி தருகின்றன. காலச்சூழலில் அனைத்துக் குழந்தைகளுக்கும் மழலையர் கல்வியை / முன்பருவக் கல்வியை உறுதி செய்ய வேண்டியுள்ளது. தமிழ் நாடு அரசு, தேவையான நிலையில் உள்ள அனைத்து மழலையரும் கல்வி பெறுவதைத் தனது கொள்கையாக்க வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டும்.

 புலன்சார் கற்றல்

குழந்தைகளின் அடிப்படை அறியும் வாய்ப்பும் புலன்சார் கற்றலும் அவர்களின் 7 அகவைக்குள் மிகப் பெரும்பகுதி நிறைவடைகிறது. போலச் செய்து கற்று மகிழ்வோர் குழந்தைகள். எனவே அவர்களின் புலன்சார் கற்றலை முதன்மை படுத்திய கல்வித் திட்டமும் கலைத்திட்டமும் மழலையர் கல்வியில் அடிப்படை.  புலனறி திறனும், புலன்வழிக் கற்றலும் நிகழ ஏற்ற வகையில் மாண்டிசோரி கல்விமுறை, செயல்வழிக் கற்றல், உடலியக்கச் செயல்பாடுகள் இணைந்த கற்றல் போன்ற பலவகைக் கற்றல் முறைகளின் ஏற்ற கூறுகளை இணைத்த தனித்த கல்விமுறை பின்பற்றப்பட வேண்டும்.

மழலையர் கல்வித்திட்டம்

மழலையர், முறைப்படுத்தப்பட்ட கல்வி முறைக்குள் நுழையும் இடமே மழலையர் பள்ளிகள். அவர்கள் அடிப்படைத் திறன்கள் பெறும் வாய்ப்பை இந்த மழலையர் பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும். தனியர்களான குழந்தைகள் குடும்ப உறுப்பினர்களாக இருந்து சமூகத்தின் உறுப்பினர்களாக வளர்ந்து, இணைந்து வாழ்கின்றனர்.. அப்படிச் சமூகத்துடன் இணைந்து வாழக் கற்பதும் எதிர்ப்படும் முரண்களை எதிர்கொள்ளப் பயில்வதும் அடிப்படை. இதற்குத் தேவையான வாழ்க்கைக் கல்வியும் அதைப் பெறுவதற்கான சூழலியல் கல்வியும் அதற்கு அடித்தளமான மொழிக்கல்வியும் (தாய்மொழிக்கல்வியும்) காரண அறிவு பெற உதவக்கூடிய கணக்கும் அவர்கள் கற்றறிய வேண்டியன.

  1. . மொழி என்பது மழலையர் நிலையில் தாய்மொழி அல்லது வாழும் சூழலில் வழங்கும் மொழியையே குறிக்கும். அவர்கள் தாய்மொழியை மட்டும் கற்றலே முறை. அந்தத் தாய்மொழியில் அடிப்படைத் திறன்களைப் படிநிலையாகக் கற்க வகைசெய்ய வேண்டும்.
  2. கணக்கு என்பது வெறும் எண்கள் எனத் தொடங்காமல், அடிப்படை கணக்கியல் தன்மையான ஒப்பிட அறியும் திறன், தொகுத்தறி திறன், பிரித்தறி திறன், என்பதில் தொடங்கித் தொடர வேண்டும்.
  3. சூழலியல் என்பது தன்னை அறிதலில் தொடங்கி, வாழ்வியலையும் வாழும் சூழலைக் கற்றறிவதாகவும், சூழலை எதிர்கொண்டு வாழ அறிதல், உடலியக்கச் செயல்பாடுகளை இணைத்ததாகவும் அமைய வேண்டும்
  4. இவற்றின் அடிப்படையில் அமைந்த கல்வித்திட்டத்தையும் கலைத்திட்டத்தையும் மழலையருக்கான நமது கல்விக் கொள்கையாக நாம் வகுக்க வேண்டும்.
  • உயர்கல்வி

உயர்கல்வி என்பது ஆய்வுகளை மேற்கொள்ளவும் புதிய படைப்புகளையும் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தும் தளமாகவும் இருக்க வேண்டும்.

அ. இன்றைய வளரும் உலகின் தேவைக்கும் ஓட்டத்திற்கும் இயைய ஒத்தமைவதாகவும் பயன் தருவதாகவும் இருக்க வேண்டும்.

ஆ. நமது மரபின் செழுமையையும் பண்பாட்டு விழுமியங்களையும் இணைத்து ஆய்வதற்கான வாய்ப்புகள் வேண்டும்.

இ. ஆய்வும் கண்டுபிடிப்புமே நோக்கம் என்பதால் உயர்கல்வியைத் தாய் மொழியில், தமிழ் மொழியில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். தாய்மொழியே கண்டுபிடிப்பின் அடித்தளம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்

ஈ. உயர்கல்வியைத் தமிழ் வழியில் தருவதேதொடக்கக் கல்வியான பள்ளிக் கல்வியைத் தமிழ் வழியில் பெறுவதற்கான நம்பிக்கையைத் தரும்

  • தமிழ் நாட்டின் கல்வி மொழி

கல்வி, சமூகத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் ஆற்றல். அதில் தெளிவான தொலை நோக்கான பார்வை வேண்டும்.

அ. தமிழ் நாட்டின் எல்லா நிலைகளிலும் பயிற்று மொழியாகத் தமிழே இருக்க வேண்டும்.

ஆ. உடனடியான பயன், மக்களின் விருப்பம், கல்வி சந்தைப் பொருளாகிவிட்டது, உலகம் தழுவிய பயன், என்றெல்லாம் மயங்காமல், தமிழ் வழியில் கல்வி என்பதை உறுதி செய்ய வேண்டும்

இ. படைப்பாக்க அறிஞர்களாக நம்மவர்கள் உருப்பெறவும் எதிர்காலத்தில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும் வேலை தேடுவதற்கானதாக இல்லாமல், மாற்றம் நிகழ்த்துவதற்கான கருவியாகக் கல்வி அமையவும்  தமிழ் நாட்டின் எல்லா நிலைகளிலும் தமிழே பயிற்று மொழி என உறுதி செய்ய வேண்டும்.

.  தமிழ் மொழியும் ஆங்கில மாயையும்

தமிழ்மொழியின் தேவையை மக்களிடம் எடுத்துச் செல்வதும் மக்களிடம் எழுந்துள்ள ஆங்கில் மாயையை அகற்றுவதும் அரசின் பொறுப்பே.

  1. உரிய அறிஞர்களைக் கொண்டு, மக்களிடம் உள்ள ஆங்கில மாயையை மாற்றி மொழி பற்றிய தெளிவை, தாய்மொழிவழிக் கல்வியின் இன்றியமையாத தேவையை எடுத்துச் செல்ல வேண்டும்.
  2. தமிழ் மொழியின் பெருமிதத்தை உணர்த்தும் வகையில் கல்வித்திட்டத்தை அமைக்க வேண்டும். உலகில் நிகழும் அனைத்து அறிவியல் ஆய்வுகளையும் உடனடியாகத் தமிழில் பெயர்த்து வழங்கும் திட்டம் தேவை.
  3. தமிழ் மொழிக் கல்வியின் சிறப்பை உணர்ந்து, உயர்கல்விக்கான மதிப்பீடுகளில் தமிழ்ப் பாடத்தில் பெறும் மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

தமிழ் நாட்டரசின் போற்றுதலுக்குரிய வரலாற்று முயற்சியான, தமிழ் நாட்டின் கல்விக் கொள்கையில், எங்களின் இந்த ஆய்ந்தறிந்த முன்மொழிவுகளை ஏற்று,  இணைத்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்

இவண்,

14.10.2022                                             தாய்த்தமிழ்க் கல்விப்பணிக்காக,       

         சிவ.காளிதாசன்                                        வெற்றிச்செழியன்

           (தலைவர்)                                              (செயலாளர்)

சனி, 10 ஆகஸ்ட், 2019

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்: தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019: – கருத்தரங்கம்

27, 2050 / 12.8.2019 திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை
இடம்: பட்டம்மாள் நடேச(முதலியா)ர் திருமண மண்டபம். பாலாண்டீசுவரர் கோயில் தெரு, மாங்காடு

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்: தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019 – கருத்தரங்கம்

தலைமை: இரா.தீனதயாள் (மாநிலத் தலைவர்) 
வரவேற்புரை: டி.ஆர்.சான்வெசுலி(பொதுச் செயலாளர்) 
முன்னிலை:
சு.உசாராணி (மாநில மகளிர் அணிச் செயலாளர்).
க.செயராமன் (தலைமை நிலையச் செயலாளர்) 
கருத்துரை வழங்குவோர்:
பு.பா.பிரின்சு கசேந்திரபாபு (பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை), 
கோ.கருணாநிதி (பொதுச் செயலாளர், அகில இந்தியப் பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் சங்கம்),
தே.தயாளன் (செயல் தலைவர், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்)
நன்றியுரை: ப.(உ)ருக்குமாங்கதன் (மாநிலப் பொருளாளர்)

வியாழன், 6 ஜூன், 2019

புதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும் – முனைவர் மறைமலை இலக்குவனார்

அகரமுதல


புதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும்

இந்திய விண்வெளியியல் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கத்தூரிரங்கன் தலைமையிலான குழு ‘புதிய கல்விக்கொள்கை 2019’ என்னும் தலைப்பிலான கல்விக் கொள்கை வரைவு ஒன்றினை அண்மையில் பொறுப்பேற்றுள்ள மனிதவள மேம்பாட்டு மந்திரி இரமேசு பொக்ரியாவிடம் வழங்கியுள்ளது.
 ‘வரைவு’ என்றால் நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரை என்று பொருள்.
 இந்தக்குழு இதற்கு முந்தைய அமைச்சர் சவடேகரால் 24-6-2017-இல் அமைக்கப்பட்டு 15-12-2018-இல் தனது அறிக்கையை நிறைவு செய்தது. மொத்தம் 484 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை மாறி வரும் உலகச் சூழலுக்கு ஏற்ப இந்தியாவின் கல்விக்கொள்கையில் ஏற்படுத்தவேண்டிய மாற்றங்களைக் கண்டறிந்து ஒரு புதிய கல்விக்கொள்கையை வகுத்து முன்மொழிந்துள்ளது.
 இந்தப் புதிய கல்விக்கொள்கையில் பள்ளி மாணவர்களுக்கு மும்மொழித் திட்டம் கட்டாயமாக்கப் பட்டதும், இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு இந்தி கட்டாயமாக்கப்பட்டதும் உணர்வுக் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாகப் பன்முகப்பாங்கான இந்திய நாட்டின் மொழி, பண்பாட்டு வேறுபாடுகளை மனதில் கொள்ளாது ஒரே மாதிரியான கல்வித் திட்டத்தை வலிந்து திணிக்கும் முயற்சி மாநிலங்களுக்கு உள்ள உரிமையில் வரம்பு மீறித் தலையிடுவதாக உள்ளது.
 கல்வி, மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் பொதுவான ஒருங்கிணைந்த பட்டியலில் விளங்கி வருவதனை மெல்ல மெல்ல நீக்கிவிடும் முயற்சியில் மோடி அரசு செய்துவருகிறது என்னும் வருத்தம் மூத்த கல்வியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் ‘நீட்’ நுழைவுத் தேர்வுமுறை கட்டாயமாக்கப்பட்ட போதே கல்வி, மாநிலங்களின் பட்டியலில்இருந்து அறிவிப்புச் செய்யாமல் அகற்றப்பட்டுவிட்டதே என்னும் கொந்தளிப்பும், மாநில உரிமைகள் பறிபோகின்றனவே என்னும் ஏமாற்றமும் ஏற்பட்டன அல்லவா?
 இந்தப் புதிய கல்விக்கொள்கை, இந்தியைக் கட்டாயமாக்குவதுடன், மாநில உரிமைகளிலும் தலையிடுவதாக உள்ளது. விரிவான அறிக்கையைப் படித்துப் பார்க்கும்போது இந்தியாவின் கூட்டாட்சி முறைக்குக் குழிபறிப்பதாக இந்தக் கொள்கை திட்டமிடப்பட்டுள்ளது தெளிவாகிறது.
 கல்வியில் தாய்மொழியின் முதன்மையையும், தேவையையும் சில பகுதிகளில் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ஆங்கில அறிவு அறிவியல் வளர்ச்சிக்குத் தேவை எனவும் இந்த அறிக்கையிலே வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழைக் குறிப்பிடும்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, பாலி, பெருசியன் என்னும் பட்டியலை விரிக்கும் இந்த அறிக்கையாளர்கள் சமசுகிருதத்தைக் குறிப்பிடும் போதெல்லாம் விரிவாக அதன் பெருமைகளை விளக்கிச் செல்கிறார்கள். காளிதாசன், பாசன் என்றெல்லாம் சமசுகிருதப் புலவர்களின் பெயர் சொல்லிப் பாராட்டும் அறிக்கையாளர்களுக்கு ஓரிடத்திலாவது தொல்காப்பியர், திருவள்ளுவர் என்று கூற வேண்டுமெனத் தோன்றவில்லையே? இடமில்லையா? மனமில்லையா?
விண்வெளியியல் ஆய்வாளரைக் கொண்டு கல்வித்திட்டம் வகுப்பதே பொருத்தமானதாகத் தெரியவில்லையே? இவ்வளவு பெரிய நாட்டில் கல்வியாளர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா? அறிக்கை உருவாக்கியவர்கள் பட்டியலைக் கவனித்தால் ஒருவர் கூடத் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெறவில்லை என்னும் குறை உறுத்துகிறதே? கல்வியின் தாயகம் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் ஒருவரையாவது குழுவில் இணைத்திருக்கலாமே?
கல்வித்துறையில் 217 பேரைச் சீர்சால் பெருந்தகைகள் என்று பட்டியலிட்டுள்ளார்கள். இப்பட்டியலிலும் இரண்டே பேர் தான் தமிழ்நாடு.
மொத்தத்தில் பாரபட்சம் மிக்க இந்தக் கல்வி கொள்கைத் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும். அந்தந்த மாநிலங்களுக்குரிய கல்விக் கொள்கையை அந்தந்த மாநிலச் சூழல்களுக்கேற்ப அந்தந்த மாநில அரசுகள் வகுக்க வேண்டும். எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் கடமையுணர்வு மிக்க கல்வியாளர்களை ஒருங்கிணைத்துக் கல்விக் கொள்கை வகுத்துக் கொள்ளவேண்டும். மத்திய அரசு மாநிலங்களின் சார்பாளர்கள் கொண்ட குழுவை அமைத்துப் பொதுவான சில திட்டங்களை உருவாக்கி மாநில அரசுகளின் இசைவோடு அந்தந்த மாநிலக் கல்வித் திட்டங்களில் இணைத்துக் கொள்ளவேண்டும். அணுவளவும் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது.
தாய் மொழியின் முதன்மையுணர்ந்து தாய்மொழி வழிக் கொள்கை உருவாக்கினால் நாடு முன்னேறும். காந்தி, தாகூர் போன்ற சான்றோர்கள் கண்ட கனவாகிய ‘தாய்மொழிவழிக் கொள்கை’ நடைமுறைப்படுத்தப்பட்டால் புதிய சிந்தனையும், புதிய கண்டுபிடிப்புகளும் பெருகும். இந்தியா வல்லரசாக உலகில் உயர்ந்தோங்கும்.
முனைவர் மறைமலை இலக்குவனார்
(சிறப்புவருகைப் பேராசிரியர்கலிபோர்னியா பல்கலைக்கழகம்அமெரிக்கா)
– தினத்தந்தி 05.06.2019