(காண்க-சிறந்த நூல் பரிசு விதிகளில் மாற்றம் தேவை-இலக்குவனார்திருவள்ளுவன்)

சிறந்த நூல் பரிசு விதிகளில் மாற்றம் தேவை”  என ‘அகரமுதல’ இதழின் 26.06.2024 ஆம் நாளிட்டஇதழுரையில் வேண்டுகோள் விடுத்திருந்தோம். மகிழ்ச்சியான செய்தி. குறுகிய காலத்தில் முதல்வர் வேண்டுகோளில் பரிசு தொடர்பான வேண்டுகோளை ஒரு பகுதி  ஏற்றுள்ளார்.

கடந்த 26.06.2024 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்ட மன்றக் கூட்டத் தொடரில் தமிழ் வளர்ச்சி – செய்தித் துறை நல்கைக் கோரிக்கை விடையுரையில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

சிறந்த நூல்களுக்கான பரிசுத் திட்டம் வாயிலாக, 33 வகைப்பாடுகளில் சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர்கள் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 2011 ஆம் ஆண்டு பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞரின் அடியொற்றி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி, நூலாசிரியருக்கு உரூபாய் 30 ஆயிரத்திலிருந்து உரூபாய் 50 ஆயிரமாகவும், பதிப்பகத்தாருக்கு உரூபாய் 10 ஆயிரத்திலிருந்து உரூபாய் 25 ஆயிரமாகவும் பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்படும்.”

“2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்கள் பரிசளிப்பு விழாவில் அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி இத்தொகையை நூலாசிரியர்களுக்கு உரூ.30,000/- என்றும், பதிப்பகத்தினருக்கு உரூ.10, 000/- என்றும் உயர்த்தி அறிவித்தார்.கடந்த 15 ஆண்டுகளாக இதில் மாற்றமில்லை.” என்று குறிப்பிட்டோம்.

“சிறந்த நூலுக்கு முதல் பரிசாக உரூ.நூறாயிரமும், இரண்டாம் பரிசாக உரூ.60,000 உம், மூன்றாம் பரிசாக உரூ.40,000 உம் வழங்கப் பெற வேண்டும். பதிப்பகத்தாரால்தான் சிறப்பான நூல்கள் வெளிவந்து தமிழுக்கு வளம் சேர்க்கின்றன. எனவே, பதிப்பகத்தார் பரிசுத் தொகையை முறையே உரூ30,000/, உரூ.20,000/, உரூ.10,000/ என வழங்க வேண்டும்.” என வேண்டியிருந்தோம். நூலாசிரியர் பரிசையும் பதிப்பகத்தார் பரிசையும் முறையே உரூ.50,000/-, உரூ.25,000/- என உயர்த்தி அறிவித்துள்ளார். இவ்வறிவிப்பிற்குக் காரணமான முதல்வர், தமிழ்வளர்ச்சி யமைச்சர், நிதியமைச்சர், தமிழ்வளர்ச்சிச் செயலர், பிற அதிகாரிகளுக்கும் நாம் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றோம்.

உயரிய  இலக்கியங்களுக்குப் பரிசளிக்கும் பொழுது சிறந்த நூல் என்றுதான் அறிவிக்கிறார்களே தவிர, 1,2,3 என வரிசைப்படுத்தி அறிவிப்பதில்லை. அதைப் பின்பற்றித் தமிழுக்கும் அறிவித்திருக்கலாம்.  ஆனால், உயரிய விருது என்பது பாராட்டும் வகையிலான பரிசுத் தொகையை உடையது. ஆனால், அவற்றோடு ஒப்பிடும் பொழுது தமிழ்நாடு அரசு தரும் பரிசு அற்பத்தொகை போன்றது.  எனவே, கலைஞர் மு. கருணாநிதி அறிவித்த மூன்று பரிசுகளை அடுத்து வந்த ஆட்சி அகற்றியதை இன்றைய ஆட்சியும் பின்பற்ற வேண்டா. அல்லது மூன்றாகத் தரப்படுத்த விரும்பவில்லை என்றால் மூன்று நூலுக்குச் சிறந்த நூலுக்கான பரிசுகளை வழங்கலாம்.

இவ்வாறு கூறுவதற்கு மற்றோர் காரணமும் உள்ளது.

மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் என்பன ஒரு பிரிவு, அகராதி, கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித்தமிழ் என ஒரு பிரிவு, இசை, ஓவியம், நடனம், சிற்பம் ஒரு பிரிவு, மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல் என ஒரு பிரிவு, நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக அகழாய்வுகளும் என ஒரு பிரிவு, கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல் என ஒரு பிரிவு, பொறியியல், தொழில்நுட்பவியல் என ஒரு பிரிவு என்பனவும் இவை போன்றும் வெவ்வேறு துறை நூல்களை  ஒரு பிரிவிற்குள் அடக்கியுள்ளனர். ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரே ஒரு பரிசுதான் என்றால் அப்பிரிவிலுள்ள பிற துறை நூல்கள் புறக்கணிக்கப்பட்டதாகத்தானே பொருள். எனவே, கலைஞரால் தரப்பட்ட மூன்று பரிசுப் பிரிவுகளை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

நூல்களுக்கான பரிசினை உயர்த்தியதுபோல், பிற வேண்டுகோள்களை நிறைவேற்றும் வகையில் தமிழ் வளர்ச்சிச் செயலர் தலைமையில் ஒரு குழுவை அமர்த்தி ஆய்ந்து உரிய முடிவுகளைத் தெரிவிக்க வேண்டுகிறோம்.

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்

வேண்டிய எல்லாந் தரும்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௫௰௧ – 651)

பாராட்டுடனும் மீள் வேண்டுகையுடனும்

 இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரைஅகரமுதல