கருத்துக் கதிர்கள் 21 & 22

[21. வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட சண்முகம்!  22. ‘துா’, ‘நுா’ எனத் தட்டச்சிட வேண்டா!]

21 வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட சண்முகம்!
வேலூர் தேர்தல் முடிவு, வேலூர் தொகுதியில் தோற்கப்போவது யார்?(03 ஆகத்து 2019) என முன்னர்த் தெரிவித்தவாறுதான் அமைந்துள்ளது.  “சண்முகத்தின் தனிப்பட்ட செல்வாக்கும் அ.தி.மு.க.வின் செல்வாக்கும் இவரை வெற்றியின் பக்கம் தள்ளும். ஆனால், பா.ச.க. வின் செயல்பாடுகள் இவரைப் பிடித்துப் பின்னுக்கு இழுக்கும்” எனக் குறிப்பிட்டு இருந்தோம். “பா.ச.க.வை விட்டு விலகி நின்றால் வெற்றி வாய்ப்பு உள்ள சண்முகம், வெற்றிக்கனியைக் கதிர் ஆனந்திடம் பறிகொடுக்கவே வாய்ப்பு உள்ளது.” என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
 அதுபோல் சண்முகம் வெற்றிக் கனியைச் சுவைக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். தி.மு.க.வின் கதிர் ஆனந்து குறைந்த வேறுபாட்டில் வெற்றி பெற்றிருந்தாலும் வெற்றி வெற்றிதான். இடைத்தேர்தல் போன்ற தனித் தேர்தலில் அமைச்சரவையே தேர்தலில் பம்பரமாகச் செயல்பட்டாலும் பொதுவான இடைத்தேர்தலில் வெற்றி காணும் ஆளுங்கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது.
 ஆளுங்கட்சி மக்களிடம் செல்வாக்கு மிகுதியாக,  மக்கள் எதிர்க்கும் திட்டங்களை விலக்கிக் கொள்ள வேண்டும். இரு மொழிக்கொள்கையில் உறுதியாக இருப்பதாகக் கூறுவதால் பா.ச.க.வின் இந்தித் திணிப்பையும் சமசுகிருதத் திணிப்பையும் கடுமையாக எதிர்த்து நிறுத்த வேண்டும். நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் 3 இல் மிகுதியாக வாக்குகள் வாங்கிவிட்டோம் என்று போலி மயக்கத்தில் இருக்கக் கூடாது.
தி.மு.க.வும் அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும்பொழுது சரிவு ஏற்பட்டுள்ளதை உணர வேண்டும். மக்கள் நலத்திட்டங்களிலும் தமிழ்க்காப்புத் திட்டங்களிலும் முனைப்பு காட்ட வேண்டும்.
“பா.ச.க. ஒதுங்கினால் வெற்றி பெறுவோம் என்று அதிமுக சொன்னது; நாங்கள் ஒதுங்கியதால் அது தோற்று விட்டது” எனத் தமிழிசை கூறுகிறார். அவர் மனத்திற்குத் தெரியும் உண்மை. முற்பகலில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு பிற்பகலில் சுறுசுறுப்பு அடைந்ததற்குக் காரணம் பா.ச.க.வின் சம்மு காசுமீர் உறிமைகள் பறிப்பு ஆணை வெளிவந்ததே.
குறுக்கு வழியில் ஆட்சிக்கட்டிலில் ஏறும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களுக்கு எதிரான திட்டங்களைக் கைவிட வேண்டும். மக்கள் உள்ளத்தில் அமர்ந்தால்தான் ஆட்சியில் அமர முடியும் என்பதை உணர வேண்டும்.
நாம் தமிழர் கட்சி முன்னேற்றத்திற்கான முத்திரையைப் பதிக்கும்  எனக் குறிப்பிட்டவாறு முத்திரையைப் பதித்துள்ளது. வாக்குகளை விலைக்கு வாங்காமல் பெற்ற வாக்குகள் என்ற அளவில் இதுவே வெற்றிக்கு ஒப்பானதுஎனலாம்.
வேலூர் வாக்காளர்கள் முதன்மைக் கட்சிகளுக்கு நம்பிக்கையையும் எச்சரிக்கையையும் ஒரு சேர வழங்கும் வகையில் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
இதனைப்புரிந்து கொண்டு அனைத்துக் கட்சியினரும் மக்கள் நலனில் மட்டும் கருத்து செலுத்தி. வாக்குகளை விலைபேசும் மனப்போக்கிலிருந்து விலக வேண்டும்.
மக்களுக்கு வெற்றி கிடைக்கும் வகையில் தேர்தல்கள் அமையும் காலம் வரட்டும்!
இலக்குவனார் திருவள்ளுவன்

 22 ‘துா’, ‘நுா’ எனத் தட்டச்சிட வேண்டா!

இப்பொழுது கணிணியில் தட்டச்சிடும் வழி தெரியாமல் புது வகை எழுத்துச் சிதைவு பரவி வருகிறது. ‘தூ’, ‘நூ’ என்பனவற்றை ஒவ்வொரு எழுத்துருவில் ஒவ்வோர் விசையைப் பயன்படுததித் தட்டச்சிடுமாறு வைத்துள்ளார்கள். எழுத்துரு வடிவம் வெவ்வேறாக இருந்தாலும் விசைகள் குறிக்கும் எழுத்துருக்களில் மாற்றம் இருக்கக் கூடாது. இதற்கு அரசு தக்க வழிகாட்ட வேண்டும்.
தகர, நகரங்களில் ஊகாரங்கள் அச்சிடுவதற்குச் சில எழுத்துரு அமைப்பில் தகர, நகரங்களை மாற்று விசையில் தட்டச்சிட்டால் வரும். சிலவற்றில்  தகர, நகரங்களைத் தட்டச்சிட்ட பின் ஊகாரக் குறியீட்டை – மேல்வரிசையில் ஆங்கில விசைப்பலகையில் பகர அடைப்புக்குறியை-த் தட்டச்சிட்டால் வரும். 
 இதுபோல் கணியச்சிடுவோர் தங்கள் விசைப்பலகையில் தாங்கள் பயன்படுத்தும் எழுத்துருவிற்கான விசைப்பலகை எழுத்தமைப்பை அறிந்து கொண்டு அதற்கேற்பப் பயன்படுத்த வேண்டும்.  ஆனால், எவ்வாறு ‘தூ’, ‘நூ’ முதலியவற்றைத் தட்டச்சிட வேண்டும் எனத் தெரியாமல் முதலில் குறிப்பிட்டவாறு துாரம், துாறல், நுால், நுாறு, என்பனபோல் ‘துா’, ‘நுா’  எனத்  தவறாகவே தட்டச்சிடுகின்றனர்.வேண்டுமென்று இந்தத் தவற்றைச் செய்ய வில்லை. எனினும் சரி செய்வதற்கான போதிய முயற்சியை மேற்கொள்ள வில்லை.
இந்த எழுத்துச்சிதைவு போக்கிற்கு முற்றுப்புள்ளி இடுமாறு இதழ்க்குழுவினரையும் தட்டச்சிடுவோரையும் அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்