தினமணி -நெய்வேலி புத்தகக் கண்காட்சி:

கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்:

படைப்புகளை அனுப்ப

ஆனி 02 / சூன் 16 கடைசி நாள்

தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகளுக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
தேபக (என்எல்சி) இந்தியா நிறுவனத்தின் ஆதரவுடன் 21-ஆவது ஆண்டு நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஆனி 15- ஆனி 24 / சூன் 29 முதல் சூலை 8 வரை கடலூர் மாவட்டம், நெய்வேலி வட்டம் 11-இல் உள்ள பழுப்புக்கரி (லிக்னைட்டு) அரங்கில் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் கண்காட்சியையொட்டி மாணவ, மாணவிகளின் எழுத்தார்வத்தைத் தூண்டும் வகையில் கட்டுரை, சிறுகதைப் போட்டிகள், இளம் திரைப்படக் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் குறும்படப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
இந்தப் போட்டிகளில் தமிழகம் முழுவதும் இருந்தும் திரளானோர் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். 21-ஆவது நெய்வேலி புத்தகக் கண்காட்சியையொட்டி கட்டுரை, சிறுகதை, குறும்படப் போட்டிகளுக்கு சில நிபந்தனைகளுக்குள்பட்டு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
கட்டுரைப் போட்டி
பள்ளி மாணவர்களுக்கான தலைப்புகள்:
 விழுவதெல்லாம் எழுவதற்கே, அகத் தூய்மையே பெருந்தூய்மை, நல் உரைகளே நல்ல உரைகல்.
கல்லூரி மாணவர்களுக்கான தலைப்புகள்:
வேதனை சாதனை ஆவதே போதனை, வாழ்க்கைத் தளத்தில் வலைதளங்கள், தேசம் என் சுவாசம்.
மேற்கண்ட தலைப்புகளில் கீழ்க்காணும் விதிகளுக்குட்பட்ட கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
கட்டுரைகள் 1,500 சொற்களுக்கு மிகாமல், தமிழில் தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டிருத்தல் வேண்டும். மின் அச்சு அல்லது தட்டச்சு செய்தும் அனுப்பலாம். ஒருவரே மூன்று தலைப்புகளிலும் கட்டுரைகளை அனுப்பலாம். கட்டுரை சொந்த முயற்சியில் எழுதப்பட்டதற்கான உறுதிமொழி, பள்ளி, கல்லூரி மாணவர் என்பதற்கான சான்றும் இணைக்கப்பட வேண்டும்.
பரிசுகள் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வழங்கப்படும்.
தகவல் தெரிவிக்க வசதியாக மாணவர்கள் தங்களது கட்டுரை முகப்பில் பள்ளி, கல்லூரி முகவரியுடன், வீட்டு முகவரி, தொடர்பு எண்ணையும் குறிப்பிட வேண்டும். பரிசு பெறும் கட்டுரைகள் நெய்வேலி புத்தகக் கண்காட்சி மலரில் வெளியாகும். போட்டி முடிவுகள் சூன் மாதம் கடைசி வாரத்தில் தினமணி நாளிதழில் வெளியிடப்படும். முதல் பரிசு உரூ.2 ஆயிரம், 2-ஆம் பரிசு உரூ.1,500, 3-ஆம் பரிசு உரூ.1,000 மற்றும் 5 ஆறுதல் பரிசுகள் தலா உரூ.500 வழங்கப்படும். நெய்வேலி மாணவர்களுக்கான 6 ஆறுதல் பரிசுகள் தலா உரூ.500 வழங்கப்படும்.
குறும்படப் போட்டி: தமிழர்களின் பண்பாட்டு மேன்மை, சமுதாயச் சிக்கல்கள், சமூக உணர்வுகள் போன்றவற்றை எதிரொலிப்பவையாகவும், 30 நிமிடங்களுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.  எண்ம வட்டு அல்லது காணொளி வட்டில் (டி.வி.டி. அல்லது வி.சி.டி.யில்) பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். குறும்படத்தின் கதைச் சுருக்கம், முதன்மைக் காட்சிகளின் ஒளிப்படங்கள், இயக்குநரின் ஒளிப்படம் ஆகியவை வரவேற்கப்படுகின்றன. படத்தின் உரிமையாளரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இயக்குநரின் பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும். குறும்படங்கள் 1-1-2018-க்கு பிறகு எடுக்கப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் புத்தகக் கண்காட்சியில் திரையிடப்படும். ஆவணப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தேர்வு செய்யப்படாத குறும்படங்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டாது.
பரிசுகள் நெய்வேலி புத்தகக் கண்காட்சியின்போது வழங்கப்படும். போட்டி முடிவுகள் சூன் 3-ஆவது வாரம் வெளியிடப்படும்.
இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். முதல் பரிசு உரூ.15 ஆயிரம், 2-ஆம் பரிசு உரூ.10 ஆயிரம், 3-ஆம் பரிசு உரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இதுதவிர சிறப்புப் பரிசுகள் (நடிப்பு, கதைக்கரு, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு மற்றும் இயக்கம்) தலா உரூ.2,000, நடுவர் குழுவின் பரிசுகள்( 5 குறும்படங்கள் மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரம்) தலா உரூ.1,000 வழங்கப்படும்.
சிறுகதைப் போட்டி: தமிழர்களின் பண்பாட்டு மேன்மை, சமுதாயச் சிக்கல்கள், சமூக உணர்வுகள் போன்றவற்றை எதிரொலிக்கக் கூடியவையாகச் சிறுகதைகள் இருத்தல் வேண்டும். இவை தினமணி கதிரில் வெளியிடப்படும் நிலையில், 3 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். சிறுகதைகள் ஏற்கெனவே வெளிவராதவையாகவும், சொந்தக் கற்பனையில் உருவானவையாகவும், அதற்கான உறுதிமொழி இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
கதைகள் வெள்ளைத் தாளில் தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். மின் அச்சு அல்லது தட்டச்சு செய்தும் அனுப்பலாம். ஒருவர்ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகளையும் எழுதலாம். போட்டி முடிவுகள் சூலை முதல்வார தினமணி கதிரில் வெளியாகும். தேர்வு செய்யப்படும் சிறுகதைகளுக்கான முதல் பரிசு உரூ.10 ஆயிரம், 2-ஆம் பரிசு உரூ. 5 ஆயிரம், 3-ஆம் பரிசு உரூ.2,500 மற்றும் 5 ஆறுதல் பரிசுகள் தலா உரூ.1,250 வழங்கப்படும்.
கட்டுரைகள்குறும்படங்கள்சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
செயலர், நெய்வேலி புத்தகக் கண்காட்சி,
செயல் இயக்குநர்/மனிதவளம், மக்கள் தொடர்புத் துறை அலுவலகம்,
தேபக (என்எல்சி) இந்தியா நிறுவனம்(என்எல்சி இந்தியா லிமிடெடு),
வட்டம்-2, நெய்வேலி-607 801, கடலூர் மாவட்டம்.
படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: ஆனி 02, 2049 /  16.6.2018.