செவ்வாய், 8 நவம்பர், 2011

மீனவர் மீது தாக்குதல்: இலங்கையுடன் கடுமையாகப் பேசுங்கள்:முதல்வர் செ.

 
 

சென்னை: ""தமிழக மீனவர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி, மீன் பிடிக்க விடாமல் செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இலங்கை அரசுடன் பிரதமர் கடுமையாகப் பேச வேண்டும்'' என, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம்:பாக் ஜலசந்தி பகுதியில், தங்கள் பாரம்பரிய மீன்பிடித் தொழிலை, தமிழக மீனவர்கள் மேற்கொள்ளும்போது, இலங்கை கடற்படையினர் மற்றும் கூலிப்படையினர், தினமும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதால், மீனவர்களின் பாதுகாப்பு குறித்த மிகுந்த கவலையுடன், இக்கடிதத்தை எழுதுகிறேன்.இந்த அரசு பொறுப்பேற்றது முதல், தமிழக மீனவர்கள் மீது, இலங்கை அதிகாரிகள் தாக்குதல் நடத்துவது, சித்ரவதை செய்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது பற்றி, ஏற்கனவே தங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தேன்.சென்னை வந்த, இந்திய வெளியுறவுத் துறை செயலர் ரஞ்சன் மத்தாயிடமும், நேரடியாக இதுபற்றி விளக்கியிருந்தேன். நியூயார்க்கில், இலங்கை அதிபரை தாங்கள் சந்தித்தபோது, இவ்விஷயம் பற்றி கவலை தெரிவித்ததாகவும், இதுபோன்ற சம்பவங்கள் பற்றி தீவிரமாக விசாரிப்பதாக, இலங்கை அரசு உறுதியளித்ததாகவும், எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள்.

ஆனால், தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் இதுபோன்ற கவலைகள் அனைத்தும், இலங்கை அரசைப் பொறுத்தவரை, செவிடன் காதில் ஊதியது போல, எவ்விதப் பலனும் அளிக்கவில்லை. கடந்த மே மாதத்தில் இருந்து, இதுவரை, 22 தாக்குதல் சம்பவங்கள், தமிழக மீனவர்கள் மீது நடந்துள்ளன.இதில், கடந்த மாதம் 10ம் தேதி, தங்களுக்கு நான் கடிதம் எழுதிய பின், ஆறு பெரிய தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.தமிழக மீனவர்கள், பாக் ஜலசந்தி பகுதியில், மீன்பிடித் தொழிலில் ஈடுபட விடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக, அவர்களை அச்சமூட்டும் திட்டத்துடன், இலங்கை கடற்படையினரும், கூலிப்படையினரும் திட்டமிட்டு, ஒரே மாதிரியான தாக்குதலை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

கடும் நடவடிக்கை தேவை: மத்திய அரசிடம் தொடர்ந்து முறையிட்டும், வெளியுறவு ரீதியான முயற்சிகளை மேற்கொண்டும், இதுபோன்ற தாக்குதல்கள் தொடருவதால், தமிழகம் முழுவதும், மீனவ சமுதாயத்தினரிடம், மிகுந்த கவலையும், அசாதாரண சூழ்நிலையும் நிலவி வருகிறது.எனவே, இலங்கை அரசுக்கு எதிராக, கடுமையான நிலையை பிரதமர் எடுக்க வேண்டும். மீனவர்கள் மீது, இதுபோன்ற தாக்குதல் தொடரக்கூடாது என, கடுமையான வார்த்தைகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம், தங்களது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்.இப்பிரச்னையை, தமிழகப் பிரச்னையாக ஒதுக்கிவிடாமல், தேசிய பிரச்னையாகக் கருத வேண்டுமென, ஏற்கனவே நான் குறிப்பிட்டுள்ளதை, மீண்டும் வலியுறுத்துகிறேன்.இவ்வாறு, ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக