புதன், 2 ஏப்ரல், 2025

இலக்குவனார் திருவள்ளுவனுக்குப் படைப்பாற்றல் அரசு விருது

 




விருது வழங்கிப் பாராட்டியது.







புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கத்தின் நிறுவனர்,தலைவர், செயலர், பொருளர், பிற பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தியிருந்தனர்.

யானையியல் – இலக்குவனார் திருவள்ளுவன், புதிய அறிவியல்




(யானை) இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்னும் பழமொழி யானையின் மதிப்பை வெளிப்படுத்தும். யானைக்கு வேழம், களிறு(ஆண் யானை), பிடி(பெண் யானை), எறும்பி, கடிறு, கடவை, முதலான பல பெயர்கள் உள்ளன.

தும்பி, கரிணி, தோல், கண் டாலி,
கும்பி, கறையடி, குஞ்சரம், பகடு,
களிறு, பூட்கை, கரி,மா தங்கம்,
வழுவை, வேழம், வாரணம், மொய்யே,
உம்பல், எறும்பி, உவாவே,பொங்கடி,
தந்தி, அத்தி, கடிவை, கயமே,
நாகம், சிந்துரம், தூங்கல், நிருமதம்,
புழைக்கை, வல்விலங்கு, நால்வாய், புகர்முகம்
மதாவளம், தந்தா வளம்,மருண் மாவே,
கைம்மா(ப்), பெருமா, மதமா, வயமா,
மத்த மா,வே மதகயம், ஆம்பல்,
இபம்(ஏ), போதகம், களபம்,யா னைப் பெயர்
(பிங்கல நிகண்டு பா. 2412)

என யானைக்குரிய 45 பெயர்களைப் பிங்கல நிகண்டு கூறுகின்றது. (இவ்வாறு 170 பெயர்கள் உள்ளன என விக்சனரி கூறுகிறது. தமிழில் இருந்து பிற மொழிக்கு மாறி மீண்டும் தமிழில் பழக்கத்திற்கு வந்துள்ள சில சொற்களும் இவற்றில் அடங்கும்.) யானையின் தன்மைகளை உணர்ந்து இப் பெயர்கள் பழக்கத்திற்கு வந்துள்ளன எனில் யானையைப் பற்றிய விரிவான அறிவு அனைவருக்கும் இருந்திருக்கின்றது என்றுதானே பொருள்.

யானைக்கான எலிபண்ட் (Elephant) என்னும் சொல்லிற்கு இலத்தீன் மொழியில் பெரு வளைவு என்று பொருள். பெரிய விலங்காகவும் வளைந்த தோற்றத்துடனும் காணப்படுவதால் இப் பெயரை வழங்கி உள்ளனர்.

பொதுவாக யானையின் தோல், செவி, முதலான சில வெளி உறுப்புகள் அல்லது பகுதிகள் குறித்து மட்டுமே அயல்நாட்டு அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், யானைச் செவி -கன்னம், தாலம்; யானை நடுச்செவி – வட்டம்; யானைச் செவி அடி – சூளிகை; யானைவாய்-தளவு; யானை உமிழ்நீர்-விலாழி; யானைவால் – தாலவட்டம்; யானைவால் நுனி – வேசகம்; யானைவால் கீழிடம் – வெருகம்; யானை முன்கால் – காத்திரம்; யானைப் பின்கால் –அபரம்; யானை முகம் – மதகம், மத்தகம், கும்பம் என்பன போன்று ஒவ்வோர் உறுப்பின் பகுதியைப் பற்றிய விலங்கியலிறிவும் நம் தமிழ் முன்னோர் பெற்றிருந்தனர் (பிங்கல நிகண்டு).

உயரமாக இருத்தலால் உம்பல் என்றும் 60 ஆண்டிற்கு மேற்பட்ட யானையை உருவம் திரண்டு இருத்தலால் உவா என்றும் அழைத்தனர்.

கறை எனில் உரல் என்னும் பொருளுமுண்டு. உரலடி போல் – கறையடி போல் – பாதம் உடைய விலங்கு என்பதால் யானை, கறையடி எனப்பட்டது.

கரு நிறம் என்பதால் கரி எனப்பட்டது.

கையுடைய – துதிக்கையுடைய – விலங்கு (மா) என்பதால் கைம்மா எனவும் அழைக்கப்பட்டது.

பிற விலங்குகளில் இருந்து கையுடன் தனித்துக் காணப்பட்டமையால் தனி என்னும் பொருள் கொண்ட ஒரு என்பதன் அடிப்படையில் ஒருத்தல் என்றும் யானைக்குப்பெயர்.

துளையுடைய கை என்பதால் தும்பி என்றும் யானையைக் குறிப்பிட்டனர்.

நால் என்பது தொங்குதலைக் குறிக்கும்; தொங்குகின்ற வாய் உள்ளமையால் யானையை நால்வாய் என்றனர்.

முகத்தில் புள்ளி உள்ளமையால் யானையைப் புகர்முகம் என்றும் அழைத்தனர்.

கையையுடைய மலை போன்ற தோற்றம் கொண்டதால் கைம்மலை என யானையைக் குறிப்பிட்டு வியந்தனர்.

புழை என்றால் துளை எனப் பொருள். துளையையுடைய – புழையையுடைய – கை கொண்டுள்ள விலங்கு என்பதால் புழைகை என்றும் பூட்கை என்றும் யானையைக் குறிப்பிட்டனர்.

பெரிய விலங்கு என்பதால் பெருமா எனவும் பெரிய பாதத்தை உடையமையால் பொங்கடி எனவும் அழைத்தனர்.

கருமையான விலங்கு என்பதால் ஏனை என்று சொல்லி அது யானை ஆயிற்று.

உருண்டு திரண்டது என்னும் பொருளில் வழுவை என்றும் சங்கு போன்ற தலை உடையதாலும் புல்லைவாரிப் போடுவதாலும் வாரணம் என்றும் யானையைக் குறிப்பிட்டனர்.

நீர்ப் பறவைகளின் விரல்கள் இடையே உள்ள சவ்வுத் தோலின் பெயர் துதி. யானைத் தும்பிக்கையின் நுனியில் தோலுடன் ஒரு விரல் போன்ற உறுப்பு உள்ளமையால் அது துதிக்கை எனப்பட்டது.

கம்பத்தில் கட்டப்படுவதால் கம்பமா என்பது போன்று, எறும்பி, கடிறு, கடவை, கரபம், வயமா என்பனவும் யானையின் வேறு பெயர்களாக அமைந்துள்ளன.

கயம் என்றால் மென்மை என்றும் பொருள். யானையின் தலை மிகப் பெரியது; ஆனால், உள்ளே கடற்பஞ்சு போன்ற எலும்புகளும் ஒன்றுமில்லா அறைப்பகுதிகளும் உள்ளன. நெற்றி எலும்பு, மண்டைப் பக்க எலும்புகள், முன் மேல் தாடை எலும்புகள், மேல்தாடைஎலும்பு, மூக்கெலும்பு, அண்ணவெலும்புகள் ஆகியவற்றிலும் பிற எலும்புகளிலும் பெரிய காற்றறைகள் இருக்கின்றன. இவ்வமைப்பினால் பெரியதலை எலும்புகள் மிகுதியான கனமில்லாமல் அமைந்திருக்கின்றன. எனவே மென்மையானது. ஆதலின் மென்மையான தலை என்னும் பொருளில் கயந்தலை என்றனர். எனவே கயந்தலை என்பது அத் தலையையுடைய யானையையும் குறிப்பதாயிற்று. யானைக் கன்று கயந்தலை எனவும் கயமுனி எனவும் குறிக்கப் பெறும்.

கயம் என்னும் சொல்லே சமசுகிருதத்தில் கசமாக மாறி கசமுகன் என்று குறிக்கப்பெறலாயிற்று. கசமுகன் என்று சொல்லும் பொழுது இனிமையாக இல்லை என்பதுடன் அயற் சொல் என விலக்க வேண்டிய உள்ளது. அதனையே கயமுகன் என்னும் பொழுது அதன் அறிவியல் உண்மையைப் புரிந்து பெருமை கொள்ள முடிகின்றது. இவ்வாறு யானைக்குத் தமிழில் உள்ள பெயர்களே வெவ்வேறு வடிவங்களில் இந்தியத் துணைக்கண்டத்து மொழிகளில் வழங்குகின்றன.

பிறப்பிட அடிப்படையில் மலையானை, வன யானை, ஆற்று யானை என யானை வகைப்படுத்தப் பெறும்.

பனைத்திரள் அன்ன பருஏர்எறுழ்த் தடக்கை
கொலைச்சினம் தவிரா மதனுடை முன்பின்
வண்டுபடு கடாஅத்து, உயர்மருப்பு,யானை
 (அக நானூறு: 148)

யானை பனைமரத்தைப் போன்று பருத்த கையை உடையது; கொல்லும் சினம் நீங்காத செருக்குப் பொருந்திய வலிமை கொண்டது; வண்டுகள் மொய்க்கும் மதம் உடையது; உயர்ந்த கொம்பையுடையது. இவ்வாறு மேற்குறிப்பிட்ட சங்கப்பாடல் யானையை விளக்குகிறது.

…………. கறைஅடிக்
குன்று உறழ் யானை (பெரும்பாணாற்றுப்படை: 351-352)
நெடுங்கை யானை (பெரும்பாணாற்றுப்படை:394)
பெருங்கையானை (பெரும்பாணாற்றுப்படை: 436)
பெருநல் யானை (பட்டினப்பாலை:251,மதுரைக் காஞ்சி:235)
கடுங்கண் வேழத்துக் கோடு (குறுந்தொகை:100:4)


இலக்கியப்பாடல்களில் இத்தகைய குறிப்புகள் உள்ளமையால் யானை பற்றிய அறிவியல் நூலில் சிறப்பான செய்திகள் இருந்திருக்க வேண்டும்.


யானைக்கண் சிறியதாக இருப்பதைப்போன்று இலைகளில் அல்லது காய்களில் சிறிதாகப் புள்ளி விழும் ஒரு வகைப் பயிர் நோய் யானைக்கண்நோய் எனப் பெறும். யானையின் காலைப்போல் பருத்துத் தோற்றமளித்துக் கால் வீங்கி இருக்கும் ஒருவகை நோயை யானைக்கால் நோய் என அழைத்தனர். ஆனால், யானை நோய் என்பது யானைக்கு வரும் பாகலம் என்னும் காய்ச்சலைக் குறிக்கும். அடங்காத அளவு ஏற்படும் பேரளவுப் பசி, யானைத்தீ எனப் பெறும். மணிமேகலைக் காப்பியத்தை அறிந்தவர்களுக்குக் காயசண்டிகைக்கு ஏற்பட்ட யானைப்பசிநோய் பற்றித் தெரியும்.

யானைத தீ நோய் அகவயிற்று அடக்கிய காயசண்டிகை :

என மணிமேகலை (உலக அறவி புக்க காதை, 17 : 7-8) கூறுகிறது. இவ்வகைப் பெயர்களும் யானை பற்றிய அறிவியல் தன்மைகளைப் பொதுமக்களும் நன்கு அறிந்திருந்தனர் என்பதை உணர்த்துகிறது.

பிங்கல நிகண்டு, பெருங்குருகு என்னும் பறவையை யானை உண் குருகு என்கிறது. யானை பயிருண்ணி; ஊனுண்ணி அல்ல. எனவே, யானை உண்ணும் குருகு – யானையால் உண்ணப்படும் குருகு – எனப் பொருள் வராது. பெருங்குருகு என்னும் பறவைதான் யானையை உண்ணும்பறவையாக மிகுந்த வல்லமையுடன் இருந்திருத்தல் வேண்டும்.

மேலும், யானைச் செவி -கன்னம், தாலம் யானை நடுச்செவி – வட்டம் ,யானைச் செவி அடி – சூளிகை ,யானைவாய்-தளவு ,யானை உமிழ்நீர் விலாழி- யானைவால் – தாலவட்டம், யானைவால் நுனி – வேசகம், யானைவால் கீழிடம் – வெருகம் ,யானை முன்கால் – காத்திரம், யானைப்பின்கால் -அபரம் , யானை முகம் – மதகம்,மத்தகம், கும்பம் என்பன போன்று ஒவ்வோர் உறுப்பின் பகுதியைப் பற்றிய விலங்கியலிறிவும் நம்தமிழ் முன்னோர் பெற்றிருந்தனர் (பிங்கல நிகண்டு).

யானைபற்றிய பொதுவான குறிப்புகள் வருமாறு: –

யானைகள் ஏறத்தாழ 8 அடி முதல் 10 அடிவரை உயரம் உடையன ஏறத்தாழ 5,400 அயிரைக்கா(கிலோ) எடை உடையன. 22 திங்கள் பேறுகாலத்திற்குப்பின் யானைக்கன்றுகள் பிறக்கின்றன. இவை ஏறத்தாழ 90 அயிரைக்கா(கிலோ) எடை இருக்கும்.

யானையின் மூக்குத் துளைகள் நீளமாகவும் வளைந்து கொடுக்கக்கூடியனவாகவும் உள்ள தசைப்பிணைப்புகளால் இணைந்த அமைப்பே தும்பிக்கை எனப்பெறுகிறது.

ஆசிய யானைக்கு முன்கால்களில் 5 நகங்களும் பின்கால்களில் 4 நகங்களும் உள்ளன. ஆப்பிரிக்க யானைக்கு முன்கால்களில் 4 அல்லது 5 நகங்களும் பின்கால்களில் 3 நகங்களும் உள்ளன.

யானைகளின் இயல்பான வேகம் மணிக்கு 6 அயிரைக்கோல்(கி.மீ.) எனினும் தேவைக்கேற்ப 40 அயிரைக்கோல்(கி.மீ.) வரை விரைந்து செல்லும் இயல்பின.

யானை பெருத்த பருத்த உருவமாக இருப்பினும் நடக்கும் பொழுது ஒலி எழுப்பாமல் மென்மையாக நடக்கும். அதன் கால்களின் அடிப்புறத்தில் உள்ள மென்மையான சதைப்பகுதியே நடப்பதால் ஏற்படும் அதிர்ச்சியைக்குறைத்து உடலைப் பாதுகாப்பதுடன் ஒலி ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றது.

யானையின் மருப்புகள் ஆண்டிற்கு ஏறத்தாழ 17 சிறுகோல்(செ.மீ.) வளரும் இயல்புடையன. இத்தகைய வளர்ச்சி அதன் இறுதிக்காலம் வரை தொடர்ந்தாலும் பொதுவாக இரண்டரை கோல்(மீட்டர்) நீளம் உடையன. எடை 45 அயிரைக்கா(கிலோ) வரை இருக்கும்.

உண்பதற்கான கிழங்கு வகைகளுக்காகப் பூமியைத் தோண்டவும் தண்ணீரைப்பெற்றுக் கொள்ளவும் பிற விலங்குகளில் இருந்து தங்களைப்பாதுகாக்கும்ஆயுதமாகவும் இவை பயன்படுகின்றன. ஆனால், மக்கள் இவற்றைச் சிற்பம் செதுக்கவும் வேறு பயன்பொருள்கள் செய்யவும் பயன்படுத்துகின்றனர்.

யானைப்போரைத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் உவமையாகக் கூறுவதால் சங்கக்காலத்தில் யானை ச்சண்டை என்பது பரவலாக நடைபெற்றிருக்க வேண்டும்(திருக்குறள் 758).

குழுக்களாக இணைந்து வாழும் யானைகளைப் போன்று நாமும் ஒற்றுமையாக இணைந்து வலிமையுடன் வாழ்ந்தால் இனப்படு கொலை நடந்திருக்காது அல்லவா?

புதிய அறிவியல் – சனிக்கிழமை, ஆவணி 30, 2043 08:55 இதிநே
Saturday, September 15, 2012 08:55 IST

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

தமிழ் முத்துக்கள் விருது வழங்கு விழா, இளவேனில் விழா-தமிழர் தன்னுரிமைக் கட்சி





திங்கள், 31 மார்ச், 2025

நோன்பு என்பது கட்டடமா? படமா? கண்காட்சியா? திறப்பு விழாவிற்குரிய வேறு எதுவுமா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 




தலைப்பைப் பார்த்ததும் இசுலாமியருக்கு எதிராக அலலது நோன்பைப் பழிக்கும் வகையில் சொல்வதாகக் கருதக் கூடாது. தூய நோன்பு குறித்த சொல்லாட்சி தவறு என்பதைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

முதலில் இரமலான் நோன்பு குறித்துத் தெரிந்து கொள்வோம்.

(அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை என்னும்) உறுதி யேற்பு(கலிமா), தொழுகை, நோன்பு, தானம், மெக்கா நகரில் உள்ள கஅபாவிற்குப்) புனிதப் பயணம்(Hajj) ஆகியன இசுலாத்தின் ஐந்து தூண்களாகும். கஅபா(Ka aba) என்றால் அரபி மொழியில் கனச்சதுரம் எனப் பொருள். கனச்சதுர வடிவிலான கோயில் அவவாறே அழைக்கப் படுகின்றது. ஐந்து தூண்களுள் ஒன்றாகிய நோன்பை மேற்கொள்வது இசுலாமிர்யகளின் கடமையாகிறது. இதனைக் குழுவாகவும் கூட்டமாகவும கொண்டாடும் குமுகச் செயல் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.

 இசுலாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூரும் வகையில் நோன்பை மேற்கொள்கிறார்கள்.

உலகெங்கும் இரலான் நோன்பும் நோன்புத் துறப்பு நிகழ்வும் நடக்கத்தான் செய்கின்றன. நோன்புத் துறப்பு உண்கை என்பது அவரவர் குடும்பத்தில் பெரும்பாலும் நிகழும். எனினும் இல்லாதவர்களுக்கு உதவும் வகையில் பள்ளி வாசல்களில்  இந்நோன்புத் துறப்பு பொதுவாக நிகழ்த்தப்படுகின்றது. தனிப்பட்ட செல்வர்களும் பெரும் நிறுவனங்களும் பொது நோன்புத் துறப்பை நடத்தி அனைவரையும் பங்கேற்கச் செய்கின்றனர். நோன்புத் துறப்பு விருந்தில் நோன்பு மேற்கொள்ளாதவர்களும் பிற சமயத்தவர்களும் பங்கேற்கின்றனர்.

நம் நாட்டிலும் நோன்புத் துறப்புப் பொது விருந்தில்  பிற சமயத்தவரும் கலந்து கொள்கின்றனர். ஆனால், நோன்பு மேற்கொள்ளாதவர்கள் இவ்விருந்தில் கலந்து கொள்ள வேண்டிய தேவை என்ன? இதனைச் சமய நல்லிணக்கம் என்கின்றனர். இசுலாமியர் அழைப்பை ஏற்றுப் பிற சமயத்தவர், குறிப்பாக இந்துக்கள் பங்கேற்பது சமய நல்லிணக்கமா? இந்துக்கள் தரும் ஆடிக் கூழையும் இசுலாமியர்கள் ஏற்பது சமய நல்லிணக்கமா? ஒவ்வோர் ஆடி ஞாயிறன்றும் அம்மனுக்குக் கூழ் படைத்து மக்கள் அனைவருக்கும் வழங்குகின்றனர். இப்பொழு தெல்லாம் வணிக நோக்கில் ஆவணி முதல் ஞாயிறன்றும்  ஆடி 5ஆவது ஞாயிறு என்று கூழ் ஊற்றுவது வழக்கமாகி விட்டது. மதுரை முதலான சில நகரங்களில் பங்குனித் திங்களில் கூழ் ஊற்றுகின்றனர். இக்கூழை இந்துக்கள் விரும்பி வாங்கிச் சுவைக்கின்றனர். ஆனால் இசுலாமியர்களும் கிறித்துவர்களும் தீண்டத் தகாததாக ஒதுக்கி விடுகின்றனர். இந்துக்கள் இசுலாமியர்களின் நோன்புக் கஞ்சியை வாங்கி உண்பதுபோல் இசுலாமியர்களும் ஆடிக் கூழை வாங்கி உண்பதுதான் உண்மையான நல்லிணக்கமாகும். இனிமேல், இரமலான் நோன்புத் துறப்புப் பொது விருந்து நடத்தும் கட்சியினர் ஆடிக்கூழ் வழங்கும் நிகழ்வினை நடத்தி இசுலாமியர்களையும் பிற சமயத்தவரையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் உண்மையான சமய நல்லிணக்கம் பரவும்.

அவ்வாறில்லாமல் வாக்கு அரசியலைக் கருத்தில் கொண்டு நோன்பு மேற்கொள்ளாமல் நோன்புத் துறப்பு விருந்தில் பங்கேற்பதும் நோன்புத் துறப்பு விருந்தை வழங்குவதும் முற்றிலும் தவறாகும். மக்களை ஏமாற்றும் இச்செயலில் ஈடுபட வேண்டா என அனைத்துக் கட்சியினரையும் வேண்டுகிறோம்.

இனி நாம் நோன்புத் துறப்பு விருந்து குறித்துப் பார்ப்போம்.

இசுலாமியர்கள் ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை தொழுகை புரிவர். அவை, சூரிய உதயத்திற்கு முந்தைய வைகறை நேரம்(பசர்/Fajr), சூரியன் உச்சியில் இருக்கும் உச்சி வேளை எனப்படும் நண்பகல் நேரம்(ழுகர்/zuhr), பிற்பகல் நேரம்(அசர்/asr), சூரியன் மறையும் படுஞாயிறு நேரம். அஃதாவது அந்தி நேரம்(மகுரிபு/maghrib). இரவு தொடங்கும் நேரம்(இசா/isha) ஆகிய வேளைகளில் தொழுகை புரிவர்.

இசுலாமியர்களின் கடமையான ஐவேளை தொழுகையை சலா(Salah) அல்லது நமாசு(namaz) என்று குறிப்பிடுவர். இதில் சலா என்பது தொழுகையைக் குறிப்பிடும் அரபுச் சொல். நமாசு என்பது தொழுகையைக் குறிக்கும் பெருசியன் சொல்.

இசுலாமியர் பின்பற்றும் நாட்காட்டியில் ஆண்டின் ஒன்பதாவது மாதம் இரமலான். இத்திங்கள் முழுமையும் பகல் நேரத்தில் உண்ணாநோன்பு இருப்பர். அஃதாவது, இரமலான் மாதத்தில் அதிகாலை முதல் அந்திமாலை வரை உணவு, தண்ணீர், சாறுகள் முதலிய நீருணவு, உடலுறவு ஆகியவற்றைத் தவிர்க்கின்றனர். நோயாளிகள், வெளியூர்ப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு நோன்பை விடுவதற்கு அனுமதியுண்டு. ஆயினும், இவ்வாறு விடப்பட்ட நோன்புகளைப் பின்னர் நோற்றுக் கொள்ள கட்டளையிடடப்பட்டுள்ளனர். இரமலான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் பகல் நேர நோன்பே இரமலான் நோன்பு எனப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் கதிரவன் மறைவிற்குப் பின் – நீண்ட நேரப் பகல் உண்ணா நோன்பிற்குப் பிறகு  – அந்தி (மகுரிபு)த் தொழுகை முடித்து உட்கொள்ளும் உணவே இஃப்தார்(Iftar) என்று அழைக்கப்படுகிறது. இது சூரிய மறைவிற்குகுப் பிறகு உண்ணா நோன்பை முடிக்க உண்ணும் உணவாகும். நோன்பு முடிப்பதற்கு உட்கொள்ளும் உணவை நோன்பு திறப்பு என்று சொல்லலாமா? இஃது என்ன கட்டடமா? படமா? கண்காட்சியா? திறப்பு விழாவிற்குரிய வேறு எதுவுமா?

நோன்பு வேளையைத் துறந்து உண்ணும் வேளையைத் தொடங்கும் இதனை நோன்புத் துறப்பு என்று சொல்ல வேண்டும். நோன்பைத் துறப்பது நோன்புத் துறப்பு ஆகுமேயன்றி நோன்புத் திறப்பாக எப்படி ஆகும்? யாரோ தொடக்கத்தில் தவறுதலாக நோன்புத் திறப்பு என்று சொல்லிவிட அல்லது தவறாக எழுதி அதையே பரப்பி விட எங்கும் நோன்புத் திறப்பு என்றே சொல்லப்படுகிறது.

இது குறித்துப் பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதியது தினமணியில் அன்புள்ள ஆசிரியர் பகுதியில் பெட்டிச்செய்தியாக வந்திருந்தது– இதன் பின்னர் இதனைப் படித்தவர்களுள் சிலர் நோன்புத் துறப்பு என்பதைப் பின்பற்றி வருகின்றனர். எனினும் பெரும்பான்மையர் நோன்புத் திறப்பு என்றே சொல்லி வருகின்றனர்.

இனியேனும் நோன்புத் திறப்பு என்பதற்கு முடிவுகட்டுவோம்.நோன்புத் துறப்பு என அழகு தமிழில் சொல்வோம்.

நாளும் நோன்பை நோற்று நோன்புத் துறப்பு மேற்கொள்ளும் இசுலமியர்களுக்கு வாழ்த்துகள்.

பங்குனி 17, 2056 / 31.03.2025

வெள்ளி, 21 மார்ச், 2025

ஆளுமையர் உரை 124 & 125; என்நூலரங்கம்-கருவிகள் 1600

 

ஆளுமையர் உரை 124 & 125; என்நூலரங்கம்-கருவிகள் 1600





ஆய்வர்  : தமிழார்வலர் செல்வி கி.வித்தியா, புது தில்லி

நிறைவுரைஞர் : பொதுமை அறிஞர் தோழர் தியாகு

நன்றி:  செல்வி  தில்லி மு.நிசா

திங்கள், 17 மார்ச், 2025

இலக்குவனார் திருவள்ளுவன் முதலானவர்க்கு நூற்பரிசு வழங்கு விழா, புதுச்சேரி

 

இலக்குவனார் திருவள்ளுவன் முதலானவர்க்கு நூற்பரிசு வழங்கு விழா







செவ்வாய், 11 மார்ச், 2025

ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் புகழ் வணக்க நாள்

 

ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் புகழ் வணக்க நாள்



“தமிழினத்தின் தேசிய அடையாளத்தை நிலை நிறுத்தி முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரையும் உறுதி குலையாது, படைநடத்தி, தான் வரித்துக் கொண்ட உயரிய லட்சியத்தையும் தனது வழிநடத்தலையும் உளமார ஏற்று உயிர்களை விதையாக்கிய மாவீரர்களின் தியாகங்களையும் இலட்சியக் கனவுகளையும் நெஞ்சிருத்தி, எதிரிப்படையோ இறுதிக் கணம் வரை துணிவோடு களமாடி பிரபாகரன், 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ஆம் நாள், வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை தமிழீழ மாவீரர் பணிமனை அறியத் தருகிறது. பிரபாகரன், வீரச்சாவினை உறுதிப்படுத்தி நெஞ்சைப் பிளக்கும் இப்பெரும் துயரமிகு அறிவிப்பை, அவரது வழிநடத்தலை உளமார ஏற்றுப் போராடிய போராளிகளுக்கும் ஒப்பற்ற தேசியத் தலைமையாக தமது நெஞ்சங்களில் சுமந்திருக்கும் எம்முயிரினும் மேலான தமிழ் மக்களுக்கும் பெருந்துயரத்தோடு வெளிப்படுத்திக் கொள்ளும் அதேவேளை எமது வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.”

என ‘விடுதலைப் புலிகள் மாவீரர் பணிமனை என்ற பெயரில் அறிக்கை ஒன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

“வரலாற்றில் எமக்குக் கிடைத்த அரும் பொருட் குவையான, பிரபாகரனுக்கு அவரது வழியில் களமாடிய போராளிகள், சமூகக் கட்டமைப்பினர், புலம் பெயர் தாயக-தமிழக உறவுகள் என அனைவரும் ஒன்றிணைந்து அவரது வீரவணக்க நிகழ்வை தாயகம், தமிழகம் உட்பட தமிழ் மக்கள் பரந்துவாழும் உலகப்பரப்பு எங்கும், நடத்துகிற அதேவேளையில் அனைவரும் ஒன்றிணையக் கூடிய ஐரோப்பிய நாடு ஒன்றில் 2025-ம் ஆண்டு நடுப்பகுதியில், உலகம் போற்றும் பேரெழுச்சியாக முன்னெடுக்க இருக்கிறோம்.

என்றும் இப்பணிமனை அறிவித்திருக்கிறது.

இவ்வறிக்கையின் பொய்மை மெய்மை குறித்து ஆராயாமல் மேதகு பிரபாகரன் புகழ் போற்ற வேண்டியது நம் கடமை என்பதை உணர வேண்டும். அவர் மறைவில் இருந்தாலும் புகழ் போற்றவேண்டும்! மறைந்திருந்தாலும் புகழ் போற்ற வேண்டும்!  எனவே, வரும் வைகாசி 05 / மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள் கொண்டாடுவதுடன் நாம்

மேதகு பிரபாகரன் புகழ் வணக்க நாளையும் உலகெங்கும் கொண்டாட வேண்டும்

எனத் தமிழ்க்காப்புக் கழகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றோம்.