கேப்பாபுலவு போராட்டத்தினை

அனைத்துநாட்டிற்கும் கொண்டு செல்லும்

புலம்பெயர் இளையோர், மக்கள்

  முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தங்களின் சொந்த நிலங்களில் நிலை கொண்டிருக்கும் படையினரை  அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் எனக்கோரி கடந்த 20 நாட்களாகத் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். மக்களின் முறைமையான(நியாயமான) கோரிக்கைக்குச் செவி சாய்க்காமல் நல்லாட்சி அரசாங்கம் எனத் தம்மைத்தாமே கூறும் அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது. பல மிரட்டல்களுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் மிக மோசமான நிலையில் இருந்து கொண்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
  கடந்த தை மாதம் 31ஆம்  நாள் தொடக்கம் நடக்கும் இப் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் முகமாகப் புலத்திலும் ஈழத்திலும் பல்வேறு தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. எமது சொந்த மண்ணில் இருந்து  விமானப்படையை வெளியேற்றக்கோரி எம் மக்கள் அவர்களின் பிள்ளைகளுடன் இராணுவ முகாமிற்கு முன்னால் இருந்து நடத்தி வரும் போராட்டத்திற்கு எம்மாலான அனைத்து உதவிகளையும் புலம்பெயர் மக்கள் செய்து வருகின்றனர்.
  கேப்பாபுலவில் உள்ள மாணவர்கள் கடந்த இருபது நாட்களாக வீதி ஓரங்களிலும் வயல்வெளிகளிலும் வாழ்ந்துவருகின்றனர். கடும் பனியிலும் கடுமையான வெயிலிலும் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லமுடியாமல் போராட்டம் நடக்கும் இடத்திலேயே தமது படிப்பினை தொடர்கின்றார்கள்.
  மைத்திரி, இரணில் அரசாங்கமானது  அனைத்துநாடுகளிலிருந்தும் வரும் எதிர்ப்புகளை எதிர்கொள்ளமுடியாமல் அவர்களுக்குப் போலி வாக்குறுதிகளை அள்ளி வழங்கியபடி ஈழ மண்ணில் மீண்டும் முள்ளிவாய்க்கால் போல் மறைமுகப் போரை எம் மக்கள் மீது திணித்து வருகின்றது. தாயகத்தில் அனைத்து இடங்களிலும் பாடசாலை மாணவர்கள் தொடக்கம்  எளிய மக்கள் வரை இப் போராட்டத்திற்கு குரல்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
  இந்த நேரத்தில் அவர்களின் இப் போராட்டத்தினை  அனைத்துநாடுகளுக்கும் கொண்டுசெல்லவேண்டியது எமது கடமையாகும். அதன் ஒரு பகுதியாகக் குமுக(சமூக)வலைத் தளங்களிலான போராட்டம் ஒன்றை நாம் முன்னெடுக்கவுள்ளோம். இக் குமுக(சமூக)வலைப் போராட்டத்தில்  கலந்துகொள்ளுமாறு தங்களையும் அன்புடன் வேண்டி நிற்க்கின்றோம்.

காலம் :மாசி 11, 2048 இ 23.02.2017

நேரம் : 18.00 மணி (பிரித்தானிய நேரம்)

எங்கள் குமுகு வலைவழிப் பரப்புரைகளில் இணையுங்கள்!
எங்கள் நிலத்தை விடுவியுங்கள்!
# இனப்படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுங்கள்!
#எங்கள் குருதி! எங்கள் நிலம்!
# எங்கள் நிலத்தை விடுவியுங்கள்!
# கேப்பாப்புலவு
# தமிழீழ விடுதலை!