seithi_karumbu_vaigaianees
தேனிப் பகுதியில் நீரின்றி கருகிய கரும்புகளால்  உழவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தேவதானப்பட்டி பகுதி அருகே உள்ள  ஊர், தே.வாடிப்பட்டி. இப்பகுதியில் நெல்,  கரும்பு  ஆகிய பயிரிடல் முதன்மை உழவாக நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில் மஞ்சள் ஆறு நீரை நம்பி  உழவுத்தொழில்  நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில் உள்ள கிணறுகள், கண்மாய்கள், குளங்கள் அனைத்தும் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. மேலும் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து விட்டது.
இந்நிலையில் இப்பகுதியில் உள்ள  உழவர்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி இப்பகுதியில் உள்ள  பயிர்த்தொழிலைக் காப்பாற்றி வந்தனர். இப்பொழுது தண்ணீர் விலையும் அதிகமாக உள்ளது.
ஆதலால்  உழவர்கள் தங்கள்  வேளாண்மையைக் கைவிட்டனர்.
தேவதானப்பட்டி பகுதியில் வறட்சியால் வறண்ட தென்னை, வாழை கரும்பு  முதலான பயிர்களுக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.
 எனவே மாவட்ட நிருவாகம் கரும்பு  வேளாண்மையையும் கணக்கில எடுத்து வறட்சித்துயரீட்டுத்தொகையை உடனே வழங்கும்படி இப்பகுதி வேளாண்பெருமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- வைகை அனீசு