paththaayam-vaigaianeesu02
  தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு நீர் வளமும் நிலவளமும் மிகுந்த பகுதி.
  அண்டை மாநிலமான கேராளவில் மழை பொழிந்து இருப்பதால் எப்பொழுதும் சாரல் மழை பொழிந்து கொண்டே இருக்கும். இதன் அண்மையில் வருடம் முழுவதும் மழை பொழிவதால் வருசநாடு என்ற பெயரும் உண்டு. இவை தவிர முல்லைப்பெரியாறு அணை, மஞ்சளாறு – வைகை அணை பாய்கின்ற பகுதியாகும். இதனால் இப்பகுதியில் கடந்த காலங்களில் மும்மாரி மழை பொழிந்தும் ஆற்றுப்பாசனங்களில் நெல் விளைச்சல் எப்போதும் இருக்கும். எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என்று நெல் வயல் காணப்பெறும்.
 கதிர்அடிக்கும் களங்களில் பெண்களும் ஆண்களும் வேலை பார்த்து வந்தனர். கதிரடிக்கும் களத்திற்கு போட்டி போட்டு இடங்களைப்பிடிப்பார்கள். அதன் பின்னர் நெல்களைத் தண்ணீரில் ஊறவைத்து அரிசி ஆலைகளில் அரைத்து வைத்துக்கொள்வார்கள்.
   பெரும் நிலக்கிழார்கள் தங்கள் வீட்டில் பத்தாயம், கூன், குதிர், மண்தாழிகளில் நெல்களைச் சேமித்து வைப்பார்கள். அதில் ஒன்று தான் பத்தாயம். ஒன்று அல்லது ஒன்றரை அடி அகலமும் நான்கு அல்லது ஐந்து அடி நீளமுமுள்ள பலகைகளைச் சதுரமாகவோ செவ்வகமாகவோ பெட்டி போல் இணைத்து அதில் 1. 2 என எண் எழுதி இருப்பார்கள். அதில் உயரமாகக் கொள்கலன்களைச் செய்து வைப்பார்கள். தங்களிடம் உள்ள நெல்களை மூட்டைகளாக அடுக்கி இருபது முதல் ஐம்பது மூட்டை வரை அடுக்கி வைத்து இருப்பார்கள். அதில் நெல்களை பூச்சிகள் தாக்காவண்ணமும் எலித் தொல்லைகளில் இருந்தும் பாதுகாத்து வைப்பார்கள்.
அவ்வாறு பயன்படுத்தப்பட்ட பத்தாயங்கள் இப்பொழுது தேவையின்றி அடுப்பு எரிப்பதற்குப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்னும் சில வீடுகளில் பரம்பரையைப் பாதுகாக்கும் வகையில் பத்தாயத்தை நினைவுடன் பாதுகாத்து வருகிறார்கள்.
-வைகை அனிசு