செவ்வாய், 31 டிசம்பர், 2013

இயற்கை வேளாண் அறிவியலர் நம்மாழ்வார் மரணம்



இயற்கை வேளாண் அறிவியலர் 
நம்மாழ்வார் மரணம்

பட்டுக்கோட்டை: இயற்கை வேளாண் அறிவியலர் நம்மாழ்வார் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். அவருக்கு  அகவை 75. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு என்ற ஊரில் 1938 ஆம் ஆண்டு பிறந்தவர் நம்மாழ்வார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டப்படிப்பை முடித்த அவர், 1963 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது  வேதியல் உரங்களால் மண்ணிற்கும், பயிர்களுக்கும் ஏற்படும் தீங்குகளை அறிந்த அவர், வேளாண் முறையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என முடிவு செய்து தனது அரசு வேலையை உதறினார். தொடர்ந்து இயற்கை வேளாண் முறைகளைத் தமிழகத்தில் பரப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இதன் விளைவாக இப்போது தமிழகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பெருகியுள்ளது. இதற்கு முதன்மைக் காரணம் நம்மாழ்வார் என்றால் அது மிகையல்ல. இயற்கை வேளாண் விழிப்புணர்வுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள நம்மாழ்வார், தமிழக இயற்கை உழவர் அமைப்பு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கம் ஆகிய இயக்கங்களையும் நடத்தி வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இன்று பட்டுக்கோட்டையை அடுத்த அத்திவெட்டியில் மரணமடைந்தார்.

கரூர் மாவட்டம் வானகத்தில் ஒரு தன்னார்வ மாதிரிப் பண்ணை உருவாக்கி, அதனை மிகச் சிறப்பாக நடத்தி வந்த நம்மாழ்வார், இயற்கை வேளாண் முறைகளின் மூலம் பல்லுயிர் வாழும் கானகமாகவே அந்தப் பண்ணையை மாற்றினார். 

இயற்கை வேளாண்மையையொட்டிய பல்வேறு நூல்களை எழுதிய இவர், தனது முதுமையையும் பொருட்படுத்தாமல் மாநிலத்தின் பல பகுதிகளிலும் கருத்தரங்குகளில் பங்கேற்று, அடுத்தத் தலைமுறைக்கு இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக