சனி, 21 ஜூலை, 2012

உலகைப் படம் பிடிக்க உலா வரும் அமி



இயற்கையும், இனிமையும், மலையும் சூழ்ந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மான்டோனாவைச் சேர்ந்த பெண் புகைப்பட நிருபர். புகைப்பட நிருபராக (போட்டோ ஜர்னலிஸ்ட்) வரவேண்டும் என்று விரும்பி, விரும்பியபடியே புகைப்பட நிருபரானவர். நேஷனல் ஜியாகிராபி பதிப்பகத்தில் ஒப்பந்தஅடிப்டையில் புகைப்படம் எடுத்துக்கொடுத்து வருகிறார்.

இதுவரை 80 நாடுகளுக்கு போட்டோ எடுப்பதற்காக பயணம் மேற்கொண்டுள்ளார். ஆரம்பத்தில் அந்தந்த நாட்டின் அழகையும், இனிமையையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், மனித உணர்வுகளையும் படம் எடுக்க துவங்கியவர், பின்னர் சென்ற இடங்களில் தான் கண்ட மக்களின் அறியாமை, அவர்களது வறுமை, அனுபவித்து வரும் கொடுமை இன்னும் இப்படி பல ஜீரணிக்கவே முடியாத பல விஷயங்களை பதிவு செய்து பத்திரிகைகள் மூலம் பிரசுரம் செய்தார், பார்த்தவர்கள் மிரண்டு போனார்கள்.

இதன் காரணமாக வேல்டு பிரஸ் போட்டோ நிறுவனம் வழங்கிய உயர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார், நாடு முழுவதும் கண்காட்சி வைத்துள்ளார், கடந்த வாரம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அப்பாராவ் காலரியிலும் கண்காட்சி நடத்தினார்.

எந்த நாட்டிற்கு போனாலும் அந்நாட்டு உடையணிந்து, அந்த நாட்டு உணவு எடுத்துக் கொண்டு, அந்தநாட்டு மக்களில் ஒருவராக மாறிவிடும் குணம் கொண்டவர் அமி. இதன் காரணமாக தன்னால் அந்த மக்களின் அன்பிற்கு மட்டுமல்ல அவர்களது கலாச்சாரத்திற்கும் நெருக்கமானவளாகிவிடுகிறேன். இதனால் படம் எடுப்பது என்பது ஒரு இசை போல இனிமையாக அமைந்துவிடுகிறது என்று சொல்லும் அமி பல நாடுகளில் சுற்றினாலும் அவரால் மறக்கமுடியாத ஊர் நம்மூரான கோல்கத்தாதான்.

இங்குள்ள கைரிக்ஷா இழுப்பவர்கள் மழையானாலும், வெயிலானாலும் காலில் செருப்பு கூட போடாமல் மக்களை தங்களது கைரிக்ஷாவில் உட்காரவைத்து இழுத்துச் செல்வது, இவரை ரொம்பவே பாதித்துவிட்டது. இந்த மக்கள் இவரை கோல்கத்தாவில் இண்டு, இடுக்கு கூட விடாமல் சுற்றிக் காண்பித்து இருக்கிறார்கள். அவர்களுடன் இருந்த அந்த நாட்கள் மகிழ்ச்சியான நாட்கள் மட்டுமல்ல மனதிற்கு நெகிழ்ச்சியான நாட்களும் கூட என்கிறார்.

- எல்.முருகராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக