ஞாயிறு, 15 மே, 2011

பதவியேற்பு விழாவுக்கு அழைத்தால் பங்கேற்பது குறித்து முடிவு: விசயகாந்த்

அழைத்தால் என்ற ஐயப்பாடு ஏன் வருகின்றது. முதல் கோணல் முற்றும் கோணல் என்றாகிவிடக்கூடாது.  அதேபோல் தி.மு.க. ஆட்சியை ஒட்டு மொத்தமாகக் குறை கூறாமலும் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தாங்களே   ' உத்தம புத்திரர்கள்  'என்று எண்ணாமலும் கடந்த ஆட்சியின்  நிறைகளை உணர்ந்து பெருக்கிக் கொள்ளவும் குறைகளை அறிந்து வராமல் தடுத்துக் கொள்ளவும் வேண்டும். தமிழ் நாட்டில் தலைமையிடம் பெறவும் உலகத்தமிழர்கள் சிக்கல் எதுவுமின்றி உரிமையுடன்வாழவும் பாடுபட வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

பதவியேற்பு விழாவுக்கு அழைத்தால்
பங்கேற்பது குறித்து முடிவு: விஜயகாந்த்

First Published : 15 May 2011 03:26:09 AM IST


சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசுகிறார் விஜயகாந்த்.
சென்னை, மே 14: புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கு அழைத்தால், பங்கேற்பது குறித்து முடிவு செய்வேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.  தேமுதிக எம்.எல்.ஏ.-க்களின் கூட்டம் சென்னையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னர் அவர் அளித்த பேட்டி:  சட்டப் பேரவைத் தேர்தலில் ஜாதிக் கட்சிக்கும் பண பலத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் பணத்தைப் பார்த்து மாறவில்லை என்பதற்கு நல்ல உதாரணம் தான் தேமுதிக-வின் வெற்றி. எனவே, மக்களின் குறைகளைப் போக்கவும், ஊழலை ஒழிக்கவும், கல்வி, சாலை வசதி, வேலைவாய்ப்புகளை மேம்படுத்தவும் சட்டப் பேரவையில் தேமுதிக குரல் கொடுக்கும். பதவி ஏற்கப்போகும் தேமுதிக எம்.எல்.ஏ.-க்கள் இதை நன்கு உணர்ந்து பணியாற்றி, முன்மாதிரி சட்டப் பேரவை உறுப்பினர் என்ற பெயரை எடுக்க வேண்டும் என்றார்.  திமுக தோல்விக்கு காரணம்? கருணாநிதி ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் தனித்துப் போட்டியிடாமல், கூட்டணியின் கீழ் தேர்தலை சந்தித்தோம். இதற்காக எப்படிப்பட்ட தியாகத்தையும் நான் சந்திப்பேன். திமுகவின் படுதோல்விக்கு அவர்களேதான் காரணம்.  அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்திப்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஆனால், தேர்தலுக்குப் பின் அவர் முதலில், அவருடைய கட்சியினருடன் ஆலோசனை நடத்த வேண்டும். அதன் பிறகுதான் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியும். அதே நேரம் அவரைச் சந்திக்கிறோம் என்றால், மக்களுக்கான திட்டங்களுடன் வெளிவரவேண்டும்.  பத்திரிகைகளும், ஊடகங்களும்தான் என்னை எதிர்க்கட்சித் தலைவர் என்று கூறுகின்றன. அதை நானும் நம்பிக்கொண்டு இருக்கிறேன். ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பதவி ஏற்கும் விழாவுக்கு, அவர்கள் எங்களை அழைக்கிறார்களா என்று முதலில் பார்க்க வேண்டும். அதன் பிறகுதான் அந்த விழாவுக்கு செல்வதா என்பது குறித்து முடிவு செய்ய முடியும் என்றார் விஜயகாந்த். வாழ்க வசை பாடல்கள்தேர்தல் பிரசாரத்தின் போது தனக்கு எதிராக பேச்சுகள் குறித்து பேசுகையில் "வாழ்க வசை பாடல்கள்' என்று கூறினார் விஜயகாந்த்.சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது நடிகர் வடிவேலு கடுமையாகத் தாக்கிப் பேசியது  குறித்த, பத்திரிகையாளர்களின் கேள்விக்கு விஜயகாந்த் அளித்த பதில்:எதிர்க்கட்சினர் எங்களைப் பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டதுதான் எங்களுக்கு எழுச்சியைக் கொடுத்துள்ளது. எனவே, சட்டப்பேரவையில் அண்ணா சொன்னதுபோல், "வாழ்க வசை பாடல்கள்' என்று விஜயகாந்த் கூறினார்.முன்னதாக தேர்தல் பிரசாரத்தின் போது விஜயகாந்த், தனது கட்சி வேட்பாளரையே அடித்தார் என்று தொடர்ந்து செய்தி வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக