வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

பார்வையற்றோருக்கு "ஒளிரும் மடக்கு க் குச்சி'

பார்வையற்றோருக்கு "ஒளிரும் மடக்கு க் குச்சி': செ., உத்தரவு


சென்னை: மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, "ஒளிரும் மடக்கு குச்சி'யும் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும், அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, ஊக்கத்தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஊக்கத்தொகை: இதன்படி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியருக்கு தலா, 1,500 ரூபாயும்; பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு தலா, 2,000 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த தொகையை, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடு செய்யும் வகையில், 22 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இதன்மூலம், 1,359 மாணவ, மாணவியர் பயன்பெறுவர். தற்போது, 32 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப பயிற்சி மையங்கள் மற்றும் முன்பருவ பள்ளிகளுக்கு செல்லும், 2,390 மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு, அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய அளிக்கப்பட்டு வரும் சலுகையை, அவர்களுடன் செல்லும் துணையாளர் ஒருவருக்கும் விரிவுபடுத்த, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஒளிரும் மடக்கு குச்சி: பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு, நடப்பதற்கு உதவியாக வழங்கப்பட்டு வரும், மேல் பகுதியில் வெள்ளை, கீழ் பகுதியில் சிவப்பு வண்ணங்களுடன் கூடிய மடக்கு குச்சிகளுக்கு பதிலாக, ஒளிரும் மடக்கு குச்சிகள் வழங்கவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது. மொத்தம், 5,000 பேருக்கு, 10 லட்சம் ரூபாய் செலவில் இவை வழங்கப்படும். தங்களை, தாங்களே பராமரித்துக் கொள்ள இயலாத, 60 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட மன வளர்ச்சி குன்றிய, 77,112 நபர்களுக்கு, பராமரிப்பு தொகையாக, மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. பராமரிப்புத் தொகை பெறுவதற்கான குறைபாடு சதவீதம், தற்போது, 60லிருந்து, 45ஆக குறைக்கப் படுகிறது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக