புதன், 23 செப்டம்பர், 2009

85 சதவீத மாணவர்கள் தமிழில்தான் படிக்கின்றனர்: தங்கம் தென்னரசு



சென்னை, செப். 22: "தமிழகத்தில் உள்ள ஒன்றரை கோடி பள்ளி மாணவர்களில் 85 சதவீதம் பேர் தமிழில்தான் கற்று வருகின்றனர்' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். சென்னையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற "அலைய்ட் பப்ளிஷர்ஸ்' நிறுவனத்தின் "ஆங்கிலம்-தமிழ் மாணவர் அகராதியை' வெளியிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது: எளிமையான வகையில் பள்ளி மாணவர்கள் படித்து பயன்பெறும் வகையில் அகராதி உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழைப் படிக்காமல் மாணவர்கள் வெளியே செல்ல முடியாத என்ற நிலை தமிழகத்தில் உள்ளது. தாய்மொழிக் கல்வி பயிற்று மொழியாக கொண்டு வர வேண்டியது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான். மாநிலத்தில் மொத்தம் உள்ள ஒன்றரை கோடி மாணவர்களில் 85 சதவீதம் பேர் தமிழ் மொழியில்தான் கற்று வருகின்றனர். தமிழ் தலை நிமிர்ந்து நிற்கிறது. தள்ளாடவில்லை என்றார். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை இயக்குநர் டி.ஜி.பி. ஆர்.நடராஜ் பேசுகையில், ""வெளிமாநில அதிகாரிகள் பலர் தமிழகத்தில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மொழி தேர்வு வைக்கப்படுகிறது. அத்தேர்வுக்கு தயாராக இந்த அகராதி உதவும்'' என்றார். "அலைய்ட் பப்ளிஷர்ஸ்' நிறுவனத்தின் பதிப்பாசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன், ஆங்கிலப் பேராசிரியை காதம்பரி, "அலைய்ட் பப்ளிஷர்ஸ்' நிறுவனத்தின் தலைவர் ரவி சச்சுதேவ், இயக்குநர் அர்ஜூன் சச்சுதேவ், பொது நூலகத்துறை இயக்குநர் அறிவொளி உள்பட பலர் பங்கேற்றனர்.

கருத்துக்கள்

85% மாணாக்கர்கள் தமிழில் படிக்கும் பொழுது உயர் கல்வி வாய்ப்பில் 15% ஆங்கில வழி பயிலும் மாணாக்கர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படும் போக்கையும் மாற்ற வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/23/2009 3:14:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக