இராசீவு வழக்கில் அப்பாவியான பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்

புதுதில்லி: இராசீவு படுகொலை வழக்கில் வஞ்சகமாகக் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

முன்னாள் தலைமையமைச்சர் இராசீவு படுகொலை வழக்கில் வாணாள் தண்டனையில் துன்புற்று வருகின்றனர் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, செயக்குமார், இராபருட்டு பயசு, இரவிச்சந்திரன். இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய 2014 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த மறைந்த செயலலிதா தலைமையிலான அமைச்சரவை கூடித் தீர்மானித்தது. ஆனால் கு.பு.து.(சிபிஐ) விசாரித்த வழக்கு என்பதால் 7 தமிழர் விடுதலையில் தாங்களே இறுதி முடிவெடுப்போம் என்றது மத்திய அரசு

இதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு தம்மை இந்த வழக்கில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேசுவரராவு, பி.ஆர்.கவாய், ஏ.எசு.போபண்ணா அமர்வு இன்று (வைகாசி 04, 2053 / மே 18, 2022) தீர்ப்பு வழங்கியது.
முழுமையாக ஆராய்ந்த பிறகே தமிழக அமைச்சரவை விடுதலைக்கான தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதில், ஆளுநர் முடிவு எடுக்காமல் காலந்தாழ்த்தியது தவறு எனக் கருத்து தெரிவித்ததுடன், குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்டப்படி தவறு என்றும் தீர்ப்பில குறிப்பிட்டுள்ளனர். ஆதலின், சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாகத் தெரிவித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்வழக்கில் சிக்கியுள்ள பிற அறுவரையும் விடுதலை செய்யத் தமிழக அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரறிவாளனுக்கு இழப்பீடாக உரூ ஒரு கோடி கொடுக்க வேண்டும்.
பிறருக்கும் இவ்வாறு இழப்பீடு கொடுக்க வேண்டும்.


தீர்ப்பிற்கு எதிராக யாரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினால் அவர்களுக்குச் சட்டப்படியான தண்டனை வழங்க வேண்டும்.


அநீதி வழங்கிய ஆளுநர் முதலான அனத்து அதிகாரிகளுக்கும் காரணமானவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும்.