தலைப்பு- பெரியார் தமிழினப்பகைவரா?-வாலாசா வல்லவன் : thalaippu_periyaar_thamizhinathin_pakaivaraa_vaalaasavallavan02

1/3

  வழக்கறிஞர் பா.குப்பன் என்பவர் தமிழரின் இனப்பகை ஈ.வெ.ரா என்கிற ஒரு நூலை எழுதியுள்ளார். அந்நூலில் வரலாற்றுப் பொய்கள் பலவற்றையும் வரலாற்றுத் திரிபுகள் பலவற்றையும் செய்துள்ளார், அவர். அண்மைக் காலமாக ம.பொ.சி-யின் அடியாராக மாறியுள்ளதால், ம.பொ.சி.யின் வரலாற்றுப் புரட்டல்களை அவரது மாணவக் கோடிகள் இன்றும் செய்து வருவதில் வியப்பொன்றுமில்லை.
  தமிழ் மக்களுக்கு உண்மை வரலாறுகள் தெரிய வேண்டும். தமிழினத்திற்கு உண்மையான எதிரிகள் யார், உண்மையான தோழர்கள் யார் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டால்தான் நாம் மேற்கொண்டிருக்கும் பயணத்தின் இறுதியில் வெற்றி கொள்ள முடியும். பா.குப்பன் தன்னுடைய நூலின் தொடக்கத்திலேயே ‘என்னுரை’யில் பக்கம் 31இல் (அவர் தமிழ் எண்ணில் பக்க எண் கொடுத்துள்ளார்).
இமய மலைக்கும் விந்திய மலைக்கும், கங்கை ஆற்றுக்கும் சிந்து ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த ஆரிய வணிகத்திலிருந்த சூத்திரப் பட்டத்தைத் தமிழர்களுக்குச் சூட்டி இழிவுபடுத்தினார் ஈ.வெ.ரா. தமிழர்களைப் பார்ப்பனர்கள்சூத்திரன்என்று அழைத்ததாகக் கூறிய ஈ.வெ.ரா. சூத்திரர், சூத்திரர்என்று திரும்பத் திரும்பச் சொல்லித் தமிழரிடம் ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கினார்” என்று கூறுகிறார். இது எவ்வளவு உலகப் பெரும் பொய் என்பது வரலாறு படித்த அனைவருக்கும் தெரியும்.
  திருவள்ளுவர் காலத்திலேயே, 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டில் ஆரியம் ஊடுருவித் தமிழர்களை இழிவுபடுத்தியது என்பதற்குத் திருவள்ளுவரே சான்று.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
 என்று திருவள்ளுவர் எழுத வேண்டிய காரணமென்ன? பிறப்பின் அடிப்படையில் உயர்வு – தாழ்வு இருந்ததால்தானே? அது மட்டுமன்றி, 1500 ஆண்டுகளுக்கு முன்பு அரசாட்சி செய்த பல்லவ அரசர்கள் மனுநீதிப்படி ஆட்சி நடத்தியுள்ளதும், 1000 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்த இராசராச சோழன் வட நாட்டு ஆரியப் பார்ப்பனர்கள் பல்லாயிரக்கணக்கானோரை வரவழைத்து அவர்களுக்குப் பல ஆயிரக்கணக்கான காணி(ஏக்கர்) நிலங்களை ‘பிரம்மதேயம்’, ‘சதுர்வேதி மங்கலம்’ என்ற பெயர்களில் தானமாகக் கொடுத்து, அவர்கள் சொல்படி (நால்வருண வழக்கப்படி) ஆட்சி நடத்தியதும் முனைவர் இராசமாணிக்கனாரின் ‘பல்லவர் வரலாறு’, சதாசிவப் பண்டாரத்தாரின் ‘பிற்காலச் சோழர் சரித்திரம்’ முதலான நூல்களில் கல்வெட்டுச் சான்றுகளோடு உள்ளன.
  மேலும், பாண்டியர் கால ஆட்சிகளிலும் பார்ப்பன நால் வருண ஆட்சியே நிலைபெற்றிருந்தது. பாண்டிய அரசன் ஒருவனுடைய பெயரே ‘முதுகுடுமிப் பெருவழுதி’ ஆகும். சோழ அரசன் ஒருவனுடைய பெயர் ‘மனுநீதிச் சோழன்’ என்றும் உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் தமிழ் அரசர்கள் அரசு ஆண்ட பொழுதிலும் வேற்று மொழி அரசர்கள் தமிழகத்தில் அரசு ஆண்ட போதிலும் ஆரியப் பார்ப்பன மேலாளுகையும்(ஆதிக்கமும்) அவர்களுடைய செல்வாக்கும் உச்ச நிலையில் இருந்ததைத் தமிழக வரலாறு நன்கு உணர்த்துகிறது. ஆனால் குப்பன் கேட்கிறார், எந்த ஆரிய மன்னன் தமிழ் நாட்டை ஆண்டான் என்று. இவருடைய வாதத்தை என்னவென்று சொல்வது! வழக்குரைஞர் பா.குப்பன் எழுதுகிறார், வடக்கே இருந்த நால்வருணத்தையும் சூத்திரப் பட்டத்தையும் பெரியார் கொண்டு வந்து தமிழர் மேல் சுமத்துகிறார் என்று. இது எவ்வளவு பச்சையான பொய்யும் வரலாற்றுத் திரிபுமாகும்!
  வழக்குரைஞர் பா.குப்பன் இந்துச் சட்டத்தைப் படித்திருப்பார் என நினைக்கிறேன். இந்துச் சட்டத்தின் முகவுரையிலேயே, எடுத்த எடுப்பிலேயே இந்துக்களை நான்கு வருணங்களாகப் பிரித்துள்ளதைத் தெளிவாக அறியலாம். பெரியார் பிறப்பதற்கு முன்பே ஆங்கிலேயர்கள் 1863ஆம் ஆண்டிலேயே இந்துச் சட்டத்தைத் தொகுத்தார்கள். அதன் பிறகு 1955இல் அதில் சில மாற்றங்களை இந்திய அரசு செய்தது. இன்றும் பார்ப்பனர்கள் பூசாரிகளாக உள்ள பெரிய கோவில்களில் பிற சாதியினர் பூசை செய்ய முடியாது. தமிழக அரசின் ‘அனைத்து சாதியினரும் அருச்சகர் ஆகும் சட்டம்’ உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
  சூத்திரப் பட்டத்தை ஒழிக்கப் போராடிய பெரியாரைப் பார்த்துத் தமிழர்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தினார் என்பது எவ்வளவு புரட்டு! குப்பனுடைய பாட்டனையும், பூட்டனையும் 10 அகவைப் பார்ப்பனச் சிறுவன் கூட ‘டே, போடா, வாடா’ என்றுதான் அழைத்தான். அவர்கள் ‘என்ன சாமி’ என்றுதான் கூறினார்கள். இந்த நிலைமையை ஒழித்தது யார்? பெரியாரில்லையா? தமிழர்களுக்குத் தன்மான உணர்ச்சியூட்டிய பெரியாரைப் பார்த்துத் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கினார் என்பது குப்பனுடைய பேதைமையைக் காட்டுகிறது.
  குப்பன் இந்த நூலில் பெரியார் மீது வைத்திருக்கும் மிகப் பெரிய குற்றச்சாட்டு எல்லைப் போராட்டத்தில் பெரியார் இரண்டகம்(துரோகம்) இழைத்து விட்டார் என்பதுதான். அந்த நூலில் இச்செய்தி பல பக்கங்களில் உள்ளது.
  அக்குற்றச்சாட்டில் ஒரு துளிக்கூட உண்மை இல்லை. ம.பொ.சி பொய்யர், வரலாற்றுப் புரட்டர். அவர் தனக்கு, ஏதுவாகவும் திராவிடர் இயக்கங்களுக்கு எதிராகவும் உண்மைக்கு மாறான பல செய்திகளை எழுதியுள்ளார். ‘புதிய தமிழகம் படைத்த வரலாறு’, ‘எனது போராட்டம்’ ஆகிய நூல்களில் அப்பொய்களை எழுதியுள்ளார். அதைப் படித்துவிட்டு ம.பொ.சி-யின் மாணவர்கள் அப்பொய்களையே திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர்.
  உண்மையில், எல்லைப் போராட்டம் நடத்தியவர்கள் அதை ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டமாக நடத்தவில்லை. ம.பொ.சி வடக்கெல்லைப் போராட்டம் நடத்தியபோது ‘தமிழரசுக் கழகம்’ என்ற பெயர் வைத்துக் கொண்டிருந்தாலும் 1953இல் காமராசர் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் வரையில் காங்கிரசுக் கட்சியில்தான் இருந்தார். காங்கிரசுக் கட்சியைவிட்டு வெளியே வந்த பிறகும் கூட அவருடைய சிந்தனைப்போக்கு இந்தியத் தேசியத்திலேயே குடி கொண்டிருந்தது. அதற்கு அவருடைய ‘எனது போராட்டம்’ நூலே சான்று.
  தெற்கெல்லைப் போராட்டம் நடத்திய மார்சல் நேசமணி ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு’ என்ற பெயரிலேயே அமைப்பை வைத்திருந்தார். “கொச்சி, திருவிதாங்கூரிலுள்ள தமிழ்ப் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பது மட்டுமே எங்கள் குறிக்கோள். மற்றபடி, காங்கிரசுக்கும் எங்களுக்கும் கொள்கை வேறுபாடு கிடையாது” என்று வெளிப்படையாக அறிக்கை விட்டவர்(நம் நாடு 1-9-1954). எல்லைப் போராட்டம் நடத்தியவர்கள், அடிப்படையில் இந்திய தேசியவாதிகளாகவே இருந்தார்கள். நேசமணி 1957இல் இந்தியத் தேசியக் காங்கிரசில் சேர்ந்தார். வடக்கெல்லைப் போராட்டத் தளபதி கே.விநாயகம் 1952 முதல் குடிமக்கள் பொதுவுடைமைக் கட்சிச் (Praja Socialist Party) சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 1957இல் இந்தியத் தேசியக் காங்கிரசில் சேர்ந்தார். இருவரும் 1957இல் காங்கிரசுக் கட்சிச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்கள். ம.பொ.சி கடைசியாகக் காங்கிரசில் சேர்ந்தார். ஆக, இவர்களில் யாரும் தமிழ் இன விடுதலைக்கான உண்மையான போராளிகள் அல்லர்.
 இனி எல்லைப் போராட்டங்களைக்குறித்துச் சற்றுப் பார்ப்போம். தலைமையமைச்சர் நேரு 1953இல் அமைத்த நீதிபதி வாஞ்சு குழு தன் பரிந்துரையில் சென்னை ஆந்திராவின் தற்காலிகத் தலைநகராக 3-5 ஆண்டுகள் இருக்க வேண்டும்.(அறிக்கை, பக்கம் 6). ஆந்திராவின் உயர்நீதிமன்றம் 5 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சென்னையில் இருக்க வேண்டும்.(அறிக்கை, பக்கம் 8). சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் ஆந்திர மாணவர்களுக்கு 36 விழுக்காடு இடங்களை 25 ஆண்டுகளுக்கு ஒதுக்கித் தர வேண்டும்.(அறிக்கை, பக்கம் 12-13). பிரிந்து போகும் ஆந்திர மாநிலம் புதிய தலைநகரை உருவாக்குவதற்குச் சென்னை மாகாண அரசு இரண்டரைக் கோடி உரூபாய் தர வேண்டும். (அறிக்கை, பக்கம் 26) என்றெல்லாம் கூறியிருந்தது. தமிழகத்தின் வடக்கெல்லையான சித்தூர், திருப்பதியையும் இக்குழுதான் ஆந்திராவிற்கு அளித்தது.
இந்தப் பரிந்துரைகளைக் கண்டித்துத் தமிழ்நாடே கொதித்து எழுந்தது.
(தொடரும்)
வாலாசா வல்லவன்
தலைப்பு-பெரியார்முழக்கம் :thalaippu_periyaarmuzhakkam