செவ்வாய், 13 நவம்பர், 2012

உலகத் தரத்தில் 25,00,000 வீடுகள்

http://img.dinamalar.com/data/gallery/gallerye_210425904_584944.jpg


தமிழகத்தில் அடுத்த, 10 ஆண்டுகளில், 25 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்துக்காக, மாவட்டம்தோறும், 100 ஏக்கர் வரை, நிலம் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிலங்களை தேர்வு செய்யுமாறு, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.தமிழகத்தில், "அனைவருக்கும் வீடு' என்ற நோக்கத்துடன், வீட்டு வசதி வாரியம், 1961ம் ஆண்டு துவங்கப்பட்டது. இவ்வாரியத்தின் மூலம் இதுவரை, நான்கு லட்சம் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு, 1.25 லட்சம் குடியிருப்புகளும், குறைந்த வருவாய் பிரிவினருக்கு, 93 ஆயிரம் வீடுகளும், நடுத்தர வருவாய் பிரிவினருக்கு, 72 ஆயிரம் வீடுகளும் இதுவரை ஒதுக்கப் பட்டுள்ளன.
புதிய திட்டம் இல்லை

இருப்பினும், நகர்மயமாதல், மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக, குடியிருப்பு தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால், ஆட்சேபகரமான பகுதிகள், நகர்ப்புற பகுதிகளில் அனுமதியில்லாத குடியிருப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இதனால், நகர்ப்புற பகுதிகளில், சமமற்ற சூழல் உருவாகி வருகிறது. வீட்டு வசதி வாரியத்தால் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்படும் திட்டங்கள், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக இல்லை.புதிய திட்டங்களை செயல்படுத்த தேவையான நிலம்,
வீட்டு வசதி வாரியத்திடம் இல்லை. இதனால், கடந்த சில ஆண்டுகளாக, பெரிய அளவிலான புதிய வீட்டு வசதி திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், நியாயமான விலையில், அனைத்து வசதிகளுடன் வீடு கிடைப்பது, பெரிய சிக்கலாகஉருவாகியுள்ளது.

தொலைநோக்கு திட்டத்தில்...


இந்நிலையில், தமிழக அரசின், "விஷன் - 2023' தொலைநோக்கு திட்டத்தில், அடுத்த, 10 ஆண்டுகளில், உலகத்தரத்தில், 25 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.அதற்கு தேவையான குடிநீர் வசதி, கழிவு நீர் வடிகால், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மருத்துவ வசதி போன்ற அனைத்து வசதிகளையும் செய்ய, 75,000 கோடி ரூபாய் முதலீடு பெறப்படும் என, குறிப்பிடப் பட்டுள்ளது.தொலைநோக்கு திட்டத்தில் குறிப்பிடப்பட்ட, திட்டங்களைச் செயல்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்கும்படி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கலெக்டர்கள் கூட்டம்

இது குறித்து, வீட்டு வசதித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: "விஷன் - 2023' அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, உலகத்தரத்தில், 25 லட்சம்
புதிய வீடுகள் கட்ட, தேவையான நிலங்களை பெறுவது முக்கிய பிரச்னையாக உள்ளது.எனவே, இத்திட்டத்துக்காக மாவட்டம்தோறும், 50 முதல் 100 ஏக்கர் நிலங்களை, தேர்வு செய்து அரசுக்கு தெரிவிக்குமாறு, மாவட்ட கலெக்டர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.இவ்வாறு தேர்வு செய்யப்படும் நிலங்களை, கையகப்படுத்தும் நடவடிக்கைகளை இறுதி செய்வதற்காக, மாவட்ட கலெக்டர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் கூட்டம் விரைவில் நடக்க உள்ளது. இது தொடர்பான கடிதங்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

-
நமது செய்தியாளர், தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக