புதன், 14 நவம்பர், 2012

"வான்கோழி வளர்த்தால் ஆதாயம் அள்ளலாம்!'

சொல்கிறார்கள்
"வான்கோழி வளர்த்தால் ஆதாயம் அள்ளலாம்!'
வான் கோழி வளர்ப்புப் பற்றி கூறும் ராஜாமணி: வான் கோழி வளர்க்க அதிக முதலீடோ, இடவசதியோ தேவையில்லை. ஆர்வமும், உழைப்பும் இருந்தால் போதும். நெளிவு சுளிவுகள் தெரிந்தால், வான் கோழி வளர்ப்பது சுலபம். புதிதாக வான்கோழி வளர்க்க நினைப்பவர்கள், 200 முதல் 250 சதுர அடி இடத்தில், 100 குஞ்சுகளுடன் வளர்க்கத் துவங்கலாம். ஒரு மாதத்திற்குள்ளான குஞ்சுகளில், அதிக அளவில் இறப்பு இருக்கும் என்பதால், கொஞ்சம் வளர்ந்த குஞ்சுகளை வாங்கி வளர்ப்பது நல்லது.
வான் கோழிகளுக்கு, கடைகளில் விற்கும் கோழித் தீவனங்களை வாங்கிப் போட்டால், கட்டுப்படியாகாது. எனவே, பச்சை புற்களை அதிக அளவில் கொடுக்க வேண்டும். 60 சதவீதம் புற்கள், 20 சதவீதம் தவிடு, 20 சதவீதம் முட்டைக் கோழித் தீவனம் என்ற விகிதத்தில் கொடுத்தால், தீவனச் செலவை அதிக அளவில் குறைக்கலாம். மனிதர்களுக்கு கீரை உண்பது எவ்வளவு ஆரோக்கியமானதோ, அதே போல், பச்சை புற்கள், கீரைகள் வான்கோழிகளுக்கு நல்லது.வான்கோழி வளர்ப்பில் சந்தை வாய்ப்பு இல்லை என்ற தவறான எண்ணத்தால், பலரும் இந்தத் தொழிலை செய்யத் தயங்குகின்றனர். ஆனால், உண்மையில் நாளுக்கு நாள் தேவைகளும், சந்தை வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. இறைச்சி தேவைக்கு இணையாக, இதன் முட்டைக்கும் நல்ல கிராக்கி உள்ளது.

நாம் வளர்க்கும், 100 கோழிகளில், 50 தான் பெட்டை என்றாலும், இதன் மூலம், தினமும், 25 முட்டைகள் கிடைக்கும். ஒரு வான்கோழி முட்டையின் விலை, 20 ரூபாய். வான்கோழி, தினமும் முட்டை வைக்காது. 36 மணி நேரத்திற்கு ஒரு முறை தான், முட்டை வைக்கும். எனவே, 50 கோழிகள் மூலம், ஒரு நாளைக்கு, 25 முட்டைகள் கிடைத்தாலும், 500 ரூபாய் வருமானம் பார்க்கலாம். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் வரை இந்த கோழி, முட்டையிடும். அதற்கு மேல், அதை கறிக்கு விற்றுவிடலாம்.வான்கோழி வளர்ப்பதைத் துவங்கும் முன், கால்நடை பல்கலைக் கழகப் பயிற்சி மையங்களுக்குச் சென்று பயிற்சி எடுத்துக் கொண்டால், இன்னும் சிறப்பாகச் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக