வெள்ளி, 12 அக்டோபர், 2012

மின் தடை பற்றி கவலைப்படாமல் இருக்க...:

சொல்கிறார்கள்


 மின் தடை பற்றி கவலைப்படாமல் இருக்க...: 

தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை துணைப் பொது மேலாளர் சையத் அகமத்: பூகோள அமைப்பின் சாதகத்தால், தமிழகத்தில் சூரிய சக்தி அதிகளவில் கிடைக்கிறது. அதைக் கொண்டு, மின்சாரம் பெறலாம். மக்கள் இதற்கு தயக்கம் காட்டுவதற்குக் காரணம், அதிகப்படியான ஆரம்ப கட்ட முதலீடு தான். அதனால் தான், மத்திய அரசு அதிக பட்சம், 40 சதவீதம் வரை, மானியம் வழங்க முன் வந்துள்ளது. வீட்டு மின் சாதனங்களை, 12 மணி நேரம் பயன்படுத்த, 1 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதை சூரிய ஒளி மூலம் பெற, "சோலார்' தகடுகள் மற்றும் "பேட்டரி' அமைப்பதற்கு, இரண்டு லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும். மானியமாக, 81 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். மீதமுள்ள, 1.19 லட்சம் ரூபாயை, நாம் தான், செலவு செய்ய வேண்டும். பேட்டரி இல்லாமல், மின்சாரத்தை நேரடியாகப் பயன்படுத்தும் வகையிலான சாதனத்தை அமைக்க, 25 ஆயிரம் ரூபாய், மானியம் வழங்குகிறோம். "சோலார்' தகடுகளை, லட்சங்களில் தான் அமைக்க வேண்டும் என்பதில்லை. ஒரு மின்விசிறி, ஒரு மின் விளக்கு என, மின் தேவையை சுருக்கிக் கொண்டால், குறைந்தபட்சம், 20 ஆயிரம் ரூபாயில் கூட, சோலார் தகடுகள் அமைக்கலாம். கம்பெனிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு, அதிக பட்சமாக, 100 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதற்கான "சோலார்' தகடுகள் அமைக்க, 1.8 கோடி ரூபாய் செலவாகும். மானியத் தொகையாக அதிகபட்சம், 72 லட்சம் ரூபாய் கிடைக்கும். மானிய அறிவிப்பிற்கு முன்னதாக, தாங்களாகவே, "சோலார் பிளான்ட்'டை வீட்டில் நிறுவி இருப்பவர்கள், எங்களால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம், அதை செயல்படுத்தியிருந்தால், அவர்களுக்கும் மானியம் உண்டு. "சோலார் பிளான்ட்'டை வீடுகளில் ஏற்படுத்தித்தர, இதுவரை, 90க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு, அங்கீகாரம் வழங்கி உள்ளோம். இதில் முக்கியமான விஷயம், ஒவ்வொரு ஆண்டிலும் அக்., மாதம் மட்டுமே, ஆன்-லைன் மூலம், மானியம் பெற விண்ணப்பிக்க முடியும்.

1 கருத்து:

  1. //எங்களால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம், அதை செயல்படுத்தியிருந்தால், அவர்களுக்கும் மானியம் உண்டு.//

    அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

    //"சோலார் பிளான்ட்'டை வீடுகளில் ஏற்படுத்தித்தர, இதுவரை, 90க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு, அங்கீகாரம் வழங்கி உள்ளோம்.//

    இந்த 90 நிறுவனங்கள் எவையென எப்படித் தெரிந்து கொள்வது?

    //இதில் முக்கியமான விஷயம், ஒவ்வொரு ஆண்டிலும் அக்., மாதம் மட்டுமே, ஆன்-லைன் மூலம், மானியம் பெற விண்ணப்பிக்க முடியும்.//

    இன்னும் சற்று கூடுதல் விவரம் தேவை ஐயா.. ஆன்லைன் முகவரி போன்றவை...

    அருள்கூர்ந்து விவரங்கள் தேவை.....

    அன்புடன் இளங்குமரன்

    பதிலளிநீக்கு