சனி, 13 அக்டோபர், 2012

மதுரை கோயில் அருங்காட்சியக மேம்பாட்டுக்கு நிதி: மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சர்

மதுரை கோயில் அருங்காட்சியக மேம்பாட்டுக்கு நிதி: மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சர்

First Published : 12 October 2012 10:04 PM IST
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் அருங்காட்சியக மேம்பாட்டுக்காக நிதி அளிக்கப்படும் என மத்திய நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் கலாசார மேம்பாட்டுத் துறை அமைச்சர் செல்ஜா தெரிவித்தார்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் வழிபட வெள்ளிக்கிழமை வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மீனாட்சியம்மன் திருக்கோயில் தொன்மை மிக்கது. இக்கோயில் நமது கலை, கலாசாரத்தின் பொக்கிஷமாகவும், பண்பாட்டின் உறைவிடமாகவும் உள்ளது. பல நூறு ஆண்டுகளாக நமது பாரம்பரியத்தை காக்கும் வகையில் இங்கு அரிய சிற்பங்களும், கலை வேலைப்பாடுகளுடன் கூடிய சிலைகளும் உள்ளன.
திருக்கோயில் மேம்பாட்டுக்கு சுற்றுலாத் துறையே நிதி அளிக்க முடியும். ஆனால், திருக்கோயிலில் உள்ள அருங்காட்சியக மேம்பாட்டுக்கான நிதியை மத்திய கலாசாரத் துறை மூலம் அளிக்க உள்ளோம். கோயில் அருங்காட்சியகத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் பார்ப்பதற்கு பிரமிப்பாக உள்ளது. அம் மண்டபம் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருவது பாராட்டுக்குரியது என்றார்.
முன்னதாக, மத்திய அமைச்சர் செல்ஜாவை, திருக்கோயில் நிர்வாக அலுவலரும், இணை ஆணையருமான பி.ஜெயராமன், மாவட்ட சுற்றுலா அலுவலர் தர்மராஜ் மற்றும் திருக்கோயில் பேஸ்கர் சிவானந்தம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பொற்றாமரைக் குளத்தைப் பார்வையிட்ட அவர், மீனாட்சி அம்மன், சொக்கநாதரை வழிபட்டார். பின்னர் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள அரிய சிற்பங்களையும் பார்வையிட்டார்.
அதன் பின்னர் ஆயிரங்கால் மண்டபத்திற்குச் சென்று அங்குள்ள சிலைகளைப் பார்வையிட்டதுடன், சிலைகள் பாதுகாக்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர், திருமலை நாயக்கர் மகாலுக்குச் சென்று பார்வையிட்ட அமைச்சர் அங்கிருந்து காரைக்குடி சென்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக