புதன், 10 அக்டோபர், 2012

கருநாடக மக்களும், தலைவர்களும் ஒற்றுமையோடு செயல்படுகிறார்கள்: கருணாநிதி

கருநாடக மக்களும், தலைவர்களும் ஒற்றுமையோடு செயல்படுகிறார்கள்: கருணாநிதி

First Published : 09 October 2012 06:06 PM IST
எந்த பிரச்னையாக இருந்தாலும் கர்நாடக மக்களும், தலைவர்களும் கட்சி உணர்வோடு ஒற்றுமையாக செயல்படுகிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் அனுப்பியுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில், தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடுவதை உடனே நிறுத்த வேண்டுமென்று மத்திய அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ள எஸ்.எம். கிருஷ்ணா பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு அது மிகப் பெரிய தவறாகும். மத்திய அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் ஒருவர் இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் காரணங்களுக்காக மாநில உணர்வோடு நடந்து கொள்வது
தவறாகும். ஒருவேளை இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதை மனதிலே கொண்டு வாக்கு வாங்கவேண்டுமென்பதற்காக கிருஷ்ணா அவர்கள் மாநில மக்களைக் கவருகின்ற வகையில் அந்தக் கடிதத்தை எழுதியிருப்பார். காவிரிப் பிரச்சினையில் கர்நாடக மக்களும், தலைவர்களும் கட்சி உணர்வுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையோடு
செயல்படுகிறார்கள். அந்த மாநில அரசும் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி அதிலே முடிவெடுத்து, அதன்படி செயல்படுகிறார்கள். அதன் விளைவாகத்தான் கர்நாடக மாநிலத் தலைவர்கள் எல்லாம் பிரதமரைச் சந்தித்துப் பேசுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிலோ தனக்கே எல்லாம் தெரியும், யாருடைய ஆலோசனையும் தயவும் தேவையில்லை என்று கருதுகின்ற அரசு நடக்கின்றது. எப்படியிருந்தாலும், காவிரிப் பிரச்சினையில் பிரதமர் தலைமையில் உள்ள காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தில் பிரதமர் அறிவித்த முடிவுக்கு மாறாக நண்பர் கிருஷ்ணா, பிரதமருக்கு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று கடிதம் எழுதியது தவறு, கண்டிக்கத்தக்கது. நல்லவேளையாக காவிரி நதிநீர் ஆணையத் தலைவரான பிரதமரும், உச்ச நீதிமன்றமும் தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் கொடுத்தே ஆக வேண்டுமென்று சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது என்று பதிலளித்துள்ளார்.
வீரபாண்டி ஆறுமுகம் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்தபோது அரசு அதிகாரி ஒருவர் நீதிமன்றத்திற்கே வந்து விசாரணை விவகாரங்களை செல்போனில் பதிவு செய்திருக்கிறாரே? என்ற கேள்விக்கு, அதைப் பற்றி நீதிமன்றம் அவரிடம் விசாரித்தபோது, தானாகவே நீதி மன்றத்திற்கு வந்ததாகவும், விசாரணையைப் பதிவு செய்ததாகவும் சொல்லியிருக்கிறார். அது நம்புவதற்கு உரியதாக இல்லை. அரசு அதிகாரி ஒருவர் தன் வேலைகளையெல்லாம் விட்டு விட்டு, நீதிமன்றத்திற்கு வந்து விசாரணை விவகாரங்களை செல்போனில் பதிவு செய்வது என்பது சாதாரணமான ஒன்றல்ல. ஆனால் எதற்காக அவர் அப்படிச் செய்தார் என்றோ, யாருடைய தூண்டுதல் பேரில் செயல்பட்டார் என்றோ வெளியிடாமல், தன்னை மன்னிக்கு மாறு நீதிபதிகள் முன்பு விழுந்து வணங்கினார் என்று மட்டும் செய்தி வந்துள்ளது. தவறு செய்து விட்டு மன்னிப்பு கேட்டால் விட்டு விடலாம் என்றால்; குற்றம் செய்கின்ற ஒவ்வொருவரும் அதே வழியைப் பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள். மேலும் இந்த வழக்கில் நீதிமன்றத்தின் விசாரணையை தவறாகப் பதிவு செய்த அரசு அதிகாரி மீது
வழக்கறிஞர்கள் சிலர் வழக்கும் தொடுத்துள்ளார்கள். எனவே நீதிமன்றம் இந்த விவகாரத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோம் என்றும் பதில் கூறியுள்ளார் கருணாநிதி.
முதல்வரின் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஆள் இல்லை என்றும், நிதி இல்லாததால் மகளிர் சுகாதாரத்திற்கு முழுக்கு என்றும் செய்தி வந்திருக்கிறதே? என்று கேள்வி எழுப்பியுள்ள கருணாநிதி, அதற்கு, ஊராட்சிகளில் 6.80 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகங்கள், பராமரிப்பின்றி வீணாகி வருகின்றன என்றும், இவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு ஒருங்கிணைந்த மகளிர் கூட்டமைப்பு களிடம் கொடுக்கப்பட்ட போதிலும், அவர்கள் இதிலே ஆர்வம் காட்டவில்லை என்றும் சொல்லப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட மகளிர் சுகாதார வளாகத் திட்டம், பராமரிக்க ஆட்கள் இல்லை என்ற ஒரே காரணத்திற்காகச் செயலிழந்து விட்டதாம். மக்கள் வரிப் பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட கட்டடங்கள் எதற்கும் பயனின்றி சிதிலமடைந்து வருகின்றன என்றும் செய்திகள் வந்துள்ளன. அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் நூலகங்கள் கட்டப்பட்டன. ஒவ்வொரு கட்டடமும் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவானது. ஒவ்வொரு நூலகத்திற்கும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டன. அவற்றைப் பராமரிக்க ஒரு லட்சம் ரூபாய் செலவில் தளவாட சாமான்கள் கொடுக்கப்பட்டன. இவ்வளவு செலவு செய்து துவக்கப்பட்ட கிராமப்புற நூலகங்கள் தற்போது அனைத்து ஊராட்சிகளிலும் மூடிக் கிடக்கின்றன என்றும், அந்த நூலக கட்டடங்கள் வரட்டி தட்டும் இடங்களாக மாறிவிட்டன என்றும் செய்தி வந்துள்ளது. ஏடுகளிலேயே இவ்வளவு
தெளிவாகச் செய்திகள் வருகின்றன. இதற்கு ஆட்சியினர் என்ன பதில் சொல்லப் போகிறார்களோ? என்று கூறியுள்ளார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக