கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 அக்டோபர், 2013

தியாகு உண்ணாநோன்பைக் கைவிட கருணாநிதிக்கு மன்மோகன் மடல்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_82682220131015013732.jpg
பொதுநலமாநாட்டில் பங்கேற்பா? கருணாநிதிக்கு மன்மோகன் மடல்

Photo: எத்தனையோ வாக்குறுதிகளை நம்பி வந்த நாம் இதனையும் நம்புவோம்_செந்தமிழ்பாலா
**************************************************

தமிழுணர்வாளர்,தோழர்.தியாகு அவர்கள், இந்திய தலைமையமைச்சரின் வேண்டுகோளினை ஏற்று, தம் உணாமறுப்புப் போராட்டாத்தினை முடித்துக் கொள்ள வேண்டுமென, தமிழ்கூறு நல்லுலகத்தினருடன் இணைந்து பணிவுடன் வேண்டுகின்றோம்.

தமிழீழ மண்ணை யாமிழந்த நிலையில், உம்மைப் போன்றோரின் இருப்பினடிப்படையிலேயே, மீண்டும் எம் மண்ணைப் பெறுதல் இயலக்கூடியதுதான் எனும் நம்பிக்கையிலிருக்கின்றோம்_செந்தமிழ்பாலா

சென்னை: "இலங்கையில், நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, உரிய முடிவுகளை எடுப்போம்,'' என, பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
""இலங்கையில், அடுத்த மாதம், நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது,'' என, தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலர், தியாகு,உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது, என, தி.மு.க.,வும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் டி.ஆர்.பாலு, பிரதமர் மன்மோகன்சிங்கை, நேற்று சந்தித்து பேசினார். இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், தி.மு.க.,தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருப்பதாவது: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளுவது குறித்து, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, உரிய நல்ல முடிவை எடுப்போம், தியாகுவின் உண்ணாவிரத்தை கைவிட, அவரை வற்புறுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கடிதத்தில் கூறியுள்ளார்.

சனி, 5 அக்டோபர், 2013

உண்ணாவிரதப் போராட்டத்தைத் தியாகு கைவிட வேண்டும்: கருணாநிதி

உண்ணாவிரதப் போராட்டத்தைத் தியாகு கைவிட வேண்டும்: கருணாநிதி

உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு கை விட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பது உள்பட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வள்ளுவர் கோட்டம் அருகில் தியாகு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
4-ஆம் நாளாக வெள்ளிக்கிழமை அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தியாகுவோடு அமர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இந்திய கம்யூனிஸட் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன் ஆகியோர் நேரில் சென்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தியாகு வலியுறுத்துவதைப் போல பல முறை நானும் அறிக்கை வாயிலாக வலியுறுத்தி விட்டேன்.
ஆனால் இந்திய அரசிடமிருந்து இதுவரை எந்தவிதமான நல்ல பதிலும் வரவில்லை.
இந்தியா உரிய நேரத்தில் தக்க முடிவு எடுக்கும் என்று தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் கூறுகின்றனர்.
தியாகுவின் கோரிக்கை நியாயமானது என்றாலும், தூக்கு தண்டனையிலிருந்து மீட்கப்பட்ட அவருடைய முக்கியமான உயிர் காப்பாற்றப்பட வேண்டும்.
எனவே, காலவரையற்ற உண்ணாநிலையினை அவர் உடனடியாகக் கைவிட்டு, ஜனநாயகம் அனுமதித்துள்ள மற்ற அறப்போராட்டங்களில் தியாகு ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

வியாழன், 12 செப்டம்பர், 2013

மத்திய அரசின் ஆட்சி மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும்: கருணாநிதி

மத்திய அரசின் ஆட்சி மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும்: கருணாநிதி

மத்திய அரசின் ஆட்சி மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் இரண்டாம் ஆட்சி மொழியாகத் தமிழை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் கூறியுள்ளார்.இது மகிழ்ச்சியை அளிக்கும் செய்தியாகும்.தருண் விஜய் பேசியதைத் தொலைக்காட்சியில் பார்த்தவுடன், அவருக்குப் பாராட்டுத் தெரிவிக்குமாறு திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கத்திடம் கூறினேன்.
இந்த வேளையில், மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழை ஏற்க வேண்டும் என்று திமுக நீண்ட ஆண்டுகளாக வலியுறுத்தி வருவதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.2011-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலும் இதனை வலியுறுத்தியிருந்தோம்.கச்சத்தீவு பிரச்னையில் தமிழக அரசு சுணக்கம் காட்டாமல் ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தினர் கூறியுள்ள ஆதாரங்களையும், தமிழக அரசிடம் உள்ள ஆதாரங்களையும் திரட்டி உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான மண்டபங்களில் நாத்திகர்கள் நிகழ்ச்சிகள் நடத்த வாடகைக்கு தரக்கூடாது என்று அரசு சார்பில் சுற்றிக்கை விடப்பட்டுள்ளதாகச் செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தி உண்மையானால் கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.
பா.ச. தலைவருக்கு க் கருணாநிதி பாராட்டு

சென்னை:"தமிழ் மொழியை, நாட்டின், இரண்டாவது ஆட்சி மொழியாக, அங்கீகாரம் செய்ய வேண்டும்' என, பா.ஜ., செய்தி தொடர்பாளர் தருண்விஜய் பேசியதற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பாராட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:பா.ஜ., செய்தி தொடர்பாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான தருண்விஜய், "தமிழ் மொழியை நாட்டின், இரண்டாவது ஆட்சி மொழியாக, அங்கீகாரம் செய்ய வேண்டும்' என, கூறியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. வட மாநிலங்களின் நண்பர்கள், தங்களுக்கு உரித்தான உயர் மனப்பான்மை காரணமாக, பழமை வாய்ந்த, புகழ் பெற்ற தமிழ்மொழியின் ஆழத்தை இன்னும் உணரவில்லை. வட மாநிலங்களிலுள்ள அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், தமிழ் மொழியை பரப்புவதற்காக, சிறப்புத் திட்டம் ஒன்றை, மத்திய அரசு வகுத்து செயல்படுத்த வேண்டும்.

நாட்டின் மறுமலர்ச்சிக்கும், புதிய கலாசார மாற்றத்துக்கும் உறுதுணையாக இருக்கும், தமிழ்மொழிக்குரிய மரியாதையையும், தகுதியையும் அளித்துள்ளோமா என்பதை சிந்திக்க வேண்டும், என,, தருண்விஜய் பேசியிருப்பது, தமிழ் உணர்வுள்ள அனைவருக்கும் பெருமிதம் தருகிறது. தருண்விஜய் பேசியதை, "டிவி'யில் பார்த்ததும், அவருக்கு பாராட்டு தெரிவிக்குமாறு கே.பி.ராமலிங்கத்திடம் கூறினேன். தருண்விஜயின் உணர்வுகளைப் பாராட்டி, நன்றி செலுத்துகிற அதே வேளையில், தமிழ்மொழியை, மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஏற்க வேண்டும். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

இந்திய மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் : கருணாநிதி

இந்திய அளவில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும்: கருணாநிதி

மூட நம்பிக்கையை ஒழி்க்க மத்திய, மாநில அரசுகள் உரிய சட்டம் கொண்டு வர வேண்டும் என திமுக கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மகாராஷ்டிர மாநிலத்தில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடி வந்த சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது.இச்சட்டத்தின்படி நரபலி, பில்லி, சூனியம், மாந்திரீகம் என்ற பெயரில் மோசடிகளில் ஈடுபடுவர்கள் கைதானால் ஜாமீனில் வெளிவர முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும்.மூட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் பில்லி, சூனியம், மாந்திரீகம், ஜோதிடம், ஏவல் ஆகியவை அறிவியலுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது.மூட நம்பிக்கைகளின் அடிப்படையில் தமிழகத்திலும் பல செயல்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை கொளத்தூர் ரெட்டேரியில் திலகராஜ், என்பவர் தனது வணிக நிறுவனத்தின் பெயர்ப் பலகையை வாஸ்து முறைப்படி மாற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
நரபலி கொடுக்கப்பட்ட செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற செய்திகள் நாம் 21-ஆம் நூற்றாண்டில் தான் வாழ்கிறோமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உலகத்தையே ஒரு சிறு கிராமமாக சுருக்கிவிட்டது. உள்ளங்கையில் உலகம் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. ஆனாலும் செய்வினை, நரபலி, தாயத்து, தோஷம், குடுகுடுப்பைக்காரன் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பிரசாரத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்பதை நரேந்திர தபோல்கரின் படுகொலை நமக்கு உணர்த்தியுள்ளது. பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை குறித்த பிரசாரம் இன்னும் தீவிரமாகவும், இடைவெளி இல்லாமலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மூட நம்பிக்கைகளை ஒழிக்க உரிய சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரவேண்டும். பள்ளி, கல்லூரிகளில் அறிவியல் மனப்பான்மை பற்றிய பாடத்திட்டத்தை இணைக்க வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

கருணாநிதி தமிழகத்துக்கு வஞ்சகம் இழைத்துவிட்டார் : செயலலிதா

கருணாநிதி தமிழகத்துக்கு வஞ்சகம் இழைத்துவிட்டார் : செயலலிதா

தமிழகத்திற்கு நிதிச் சுமையை தரக் கூடிய தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவிற்கு ஆதரவாக தி.மு.க. மக்களவை உறுப்பினர்களை வாக்களிக்கச் செய்து, திமுக தலைவர் கருணாநிதி தமிழகத்துக்கு  துரோகம் இழைத்து விட்டார் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னலத்திற்காக, “காவிரி நதிநீர்ப் பங்கீடு”, “கச்சத்தீவு தாரைவார்ப்பு”, “இலங்கைத் தமிழர் பிரச்சனை”, “சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு” என பல்வேறு பிரச்சனைகளில் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் துரோகம் இழைத்த தி.மு.க. தலைவர். கருணாநிதி, தமிழக மக்களின் எதிர்ப்பையும் தாண்டி, தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கக் கூடிய, தமிழகத்திற்கு நிதிச் சுமையை தரக் கூடிய தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவிற்கு ஆதரவாக தி.மு.க. மக்களவை உறுப்பினர்களை வாக்களிக்கச் செய்து துரோகம் இழைத்துள்ளதைப் பார்க்கும் போது, “எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?” என்ற பழமொழியைத் தான் நினைக்கத் தோன்றுகிறது.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவினை அறிமுகப்படுத்தி, மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கு முன்னர், இதனால் தமிழகத்திற்கு ஏற்படக் கூடிய பாதகங்களை சுட்டிக் காட்டி, இந்த மசோதாவை தி.மு.க. ஆதரிக்குமா அல்லது எதிர்க்குமா என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி தெளிவுபடுத்த வேண்டும் என்று அறிக்கை விடுத்திருந்தேன்.
அதற்கு “தற்போதுள்ள மசோதா, பல்வேறு கட்சியினரும் எடுத்துத் தெரிவித்துள்ள, முக்கியமான திருத்தங்களைத் தாங்கி வெளிவருமானால் அப்போது அதனை தி.மு.க. ஆதரிக்கும்! திருத்தங்களை ஏற்றுக் கொள்ளாமல், இதே நிலையில் தான் கொண்டு வருவோம் என்று மத்திய அரசு உறுதியாகத் தெரிவித்தால் அப்போது அந்த மசோதாவினை தி.மு.க. எதிர்க்கும்” என்று பதில் அளித்து இருந்தார் கருணாநிதி.
25.8.2013 அன்று நான் வெளியிட்ட அறிக்கையில், “என்னுடைய தொடர் வலியுறுத்தலுக்குப் பின், மாநிலங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அரிசியின் அளவு குறைக்கப்பட மாட்டாது என்ற திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.  அதே சமயத்தில், ஆண்டு ஒன்றுக்கு 21.88 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் வீதத்தில் வழங்க வகை செய்துள்ள மத்திய அரசு, மீதமுள்ள 
 14.90 லட்சம் மெட்ரிக் டன் அரிசிக்கான விலையை குறிப்பிடவில்லை’’ எனச் சுட்டிக் காட்டியதோடு, இந்த 14.90 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் என்ற வீதத்தில் வழங்கப்படுவதே நியாயம்; இருப்பினும் குறைந்தபட்சம் வறுமைக் கோட்டிற்கு மேல் என வழங்கப்பட்டு வரும் அரிசியின் விலையான கிலோ ஒன்றுக்கு   8 ரூபாய் 30 காசு என்ற வீதத்திலாவது இந்த 14.90 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தேன்.  இதைத் தவிர, இந்த மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து நான் பாரதப் பிரதமர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை அந்த அறிக்கையில் எடுத்துக் கூறி, ``தமிழக மக்களுக்கு எதிராக அமைந்துள்ள இந்த மசோதாவை கருணாநிதி ஆதரித்தால் அது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம்’’ என்றும் எடுத்துச் சொல்லியிருந்தேன்.
இதன் தொடர்ச்சியாக, 26.8.2013 அன்று கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசே 14.90 லட்சம் டன் அரிசிக்கு விலை நிர்ணயம் செய்வது என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்றுக் கொள்ளாது’’ என்றும், ``அந்த அரிசியும் கிலோ ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 8.30 ரூபாய் விலையிலேயே தொடர்ந்து வழங்கப்படும் என்பதை மத்திய அரசு தெளிவாக்க வேண்டும்’’ என்றும், ``தி.மு.க. சார்பில் கடந்த 21.8.2013 அன்றே நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி. தாமஸ் அவர்களிடம் கடிதம் மூலமாக உறுதியான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்” என்றும் குறிப்பிட்டுள்ளார். 
தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா மக்களவையில் 26.8.2013 அன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்ட திருத்தம் மசோதா நிறைவேறும் தருணத்தில் கொண்டுவரப்படும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி. தாமஸ் அறிவித்தும், கடைசி வரை இதற்கான திருத்தம் கொண்டு வரப்படவில்லை. மேலும், மற்ற திருத்தங்களும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், இந்த மசோதாவினை எதிர்த்து அதிமுக வாக்களித்தது. ஆனால், தமிழகத்திற்கு எதிரான இந்த மசோதாவிற்கு ஆதரவாக தி.மு.க.வைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களை வாக்களிக்கச் செய்து தமிழகத்திற்கு மிகப் பெரிய துரோகத்தை கருணாநிதி இழைத்திருக்கிறார்.
நான் ஏற்கெனவே பல முறை தெரிவித்துள்ளபடி, மாநிலங்களுக்குச் சட்டப்படி கொடுக்கப்பட வேண்டிய உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கவில்லையெனில் அதற்குரிய ரொக்கப் பணம் வழங்கப்படும் எனவும், ஆனால் உணவு தானியங்கள் வழங்க வேண்டிய பொறுப்பு மாநில அரசைச் சாரும் எனவும் சட்டப் பிரிவு 23-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, இந்த மசோதாவுடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை-1 இல் அரிசி கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர், குறைந்தபட்ச ஆதார விலைக்கு மிகாமல் அரிசியின் விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  மேலும், “உணவுக் கூப்பன்கள்” வழங்குவது, “பண மாற்றம் செய்வது” ஆகியவற்றை மத்திய அரசு மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறாமலேயே நடைமுறைப்படுத்தவும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், இந்த தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவின் 37-வது பிரிவில், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே தன்னிச்சையாக மாநிலங்களுக்கு அளிக்கப்படும் அரிசியின் அளவையும், விலையையும் மாற்றுவதற்குரிய அதிகாரத்தை மத்திய அரசுக்கு அளிக்க இந்தச் சட்ட முன்வடிவில் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட தமிழகத்திற்கு எதிரான மசோதாவை ஆதரித்துவிட்டு, “ஏழைகளுக்கான உணவு மசோதா தி.மு.க. ஆதரவுடன் நிறைவேறியது!” என்று தன் முதுகை தானே தட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார் கருணாநிதி. 
இந்த மசோதாவை ஆதரித்ததோடு நின்று விடாமல், தமிழகத்திற்கு எதிரான இந்த மசோதாவை ஆதரித்ததை மறைக்கும் வகையில், காங்கிரஸ் கட்சித் தலைவரை ‘மணிமேகலை’ என்று வருணித்து இருக்கிறார் கருணாநிதி. இதன் மூலம், இந்த மசோதா உணவுப் பாதுகாப்பை அளிக்கும் என்ற பொய்மை தோற்றத்தை ஏற்படுத்த முனைந்துள்ளார் கருணாநிதி.
 இலங்கைத் தமிழர் பிரச்சனை, பொருளாதாரக் கொள்கை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, கச்சத் தீவு பிரச்சனை, காவிரிப் பிரச்சனை, முல்லைப்பெரியாறு பிரச்சனை என அனைத்திலும் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவே செயல்படும் மத்திய காங்கிரஸ் கட்சிக்கு வெண் சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.
சொல்வா ரடீ! கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி!’’ என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகள் தான் நினைவிற்கு வருகின்றன. 
தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவினை தி.மு.க. ஆதரித்துள்ளதன் மூலம் இரட்டை வேடம் போடுவதில் கருணாநிதி தெளிவாக இருப்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. கருணாநிதியின் இரட்டை வேடத்திற்கு, தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு, மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள்(10)

200% உண்மை. இது என்ன இப்போ நேத்தா நடக்குது .. முள்ளிவாய்க்கால் ல தொடங்கி மகள் மாநிலங்கள் அவையில் இடம் பெரும் வரையில் ஏற்கனவே தொடங்குனதுதானே
திரு மு. கருணாநிதியின் இதுபோன்ற நடவடிக்கைகளைப் பார்க்கும்பொழுது மத்திய அரசுக்கு தி.மு.க. அளித்து வந்த ஆதரவு வாபஸ் இயற்க்கையானாதாக இல்லை என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. மேலும், முதலில் அளித்துவந்தது நிபந்தயுடன் ஆதரவு தற்போது அளித்து வருவது நிபந்தனையற்ற ஆதரவு என்பதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டுக் களவாணிகள் என்ற எண்ணம் தமிழக மக்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் என்று தமிழக மக்கள் நினைக்க மாட்டார்களா?
லூப் லைன்லே தலை வச்சிப் படுத்து "கல்லக்குடி கொண்டான்" அப்பிடின்னு பட்டம் வாங்குனாரு. இப்போ அந்த அம்மாவுக்கு "மணிமேகலை" அப்பிடின்னு பெயரைக் கொடுத்து தன குடும்பத்தை இன்னும் நல்ல வச்சிகிட்டாரு. இதுக்கு பேரு துரோகமா?
இந்த உணவு பாதுகாப்பு சட்டமே ஏற்கெனவே உள்ள பொது விநியோக முறைக்கு முற்று புள்ளி வைக்க ஐ எம் எப் ,அமேரிக்கா தரும் அழுத்தம் காரணமாக கொண்டுவரப்பட்ட சட்டம் தான்.இந்தியாவில் எல்லோரும் எல்லாவற்றிற்கும் அன்னியரை எதிர்நோக்க வைக்கும் அடிமை சாசனத்தின் முதல் அத்தியாயம் இந்த மசோதா.இதை வாய் கிழிய வழி மொழிந்த நவீன ஆபுத்திரனுக்கும்,நவீன காய சண்டிகை(மணிமேகலை அல்ல)க்கும் மக்கள் 2014 இல் தக்க பாடம் புகட்டுவார்கள்..
இந்தப் பல்லவியை இனி எத்தனை நாட்கள்தான் பாடிக் கொண்டிருப்பது? கச்சத் தீவை கலைஞர் தாரைவார்த்தது உண்மையென்றால் தமிழர்கள் இதுநாள்வரை அவரை சும்மா விட்டு வைத்திருக்க மாட்டார்கள்.அன்று, மத்திய அரசுக்கு கடுமையான எதிர்ப்பைக் கொடுக்க தவறிவிட்டார். இதுதான் உண்மை. அன்று இலங்கை தமிழர் படுகொலை செய்யப் பட்ட நிலையில் அவர் மத்திய அரசை விட்டு உடனே வெளியேறி இருந்திருக்கவேண்டும். வெளியேறி இருந்திருந்தால் காங்கிரஸ் கட்சியும் இங்கு வெளியேறியிருக்கும். தமிழக ஆட்சியும் கவிழ்ந்திருக்கும். "நாம்" கட்சித் தலைவர் சீமான் சொன்னதுபோல் இலங்கையில் ஒவ்வொருக் கணமும் தமிழர் பிணங்கள் விழுந்துக் கொண்டு இருக்கின்ற நேரத்தில் இங்கு ஆட்சியையும் ஒருக் கேடா என்று வேதனைபட்டதும் நியாயம்தான். ஆனால், ஈழ மக்களைக் காப்பாற்ற, அன்று வலுவான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக, திமுக விற்கு ஆதரவு நல்கியிருக்கலாம்.செய்யவில்லையே உச்சநீதி மன்றத்தில் கச்சத் தீவைப் பற்றி மத்திய அரசு சொன்னது தமிழர்களுக்கே ஒரு பெரும் அதிர்ச்சிதானே!தீவு இலங்கைக் கடலோரப் பகுதிக்குள் வருகின்றதாம்.தமிழர்களுக்கு அங்கு மீன் பிடிக்கின்ற உரிமையில்லையாம்.இது எப்படியிருக்கு?

புதன், 28 ஆகஸ்ட், 2013

பசியைப் போக்கும் மணிமேகலை- சோனியா : கருணாநிதி



நுணலும் தன் வாயால் கெடும் என்னும் பழமொழிக்கு மாறாகக் கலைஞரும் தன் வாயால்  கெடுவார் என்று புதுமொழி வந்துவிட்டது. அவரின் இன அழிப்பு உடந்தைகளை மறக்க எண்ணினாலும் மறக்கக்கூடாது என்பதற்காகவே இம்மாதிரி எழுதி்யும் பேசியும் வருகிறார்.

அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படாஅள்
 
என்னும் சிறப்பிற்குரிய மாதவ மணிமேகலையைப் போன்று          எத்தனையோ மணிமேகலையும்  சேர்த்த உருவமாகப் பன்னூறாயிரம் படுகொலைக்குக் காரணமானவரைப் பாராட்டுகிறார் என்றால் இவர் எத்தகைய இரங்கத்தக்க நிலையில் உள்ளார் எனப் புரிந்து கொள்ளலாம். எனவே, இவரைத் தாங்கி நிற்போர் இனியேனும்  இவரைப் புறந் தள்ள வேண்டும். வரலாற்றைத் திரிப்பது தன் குடும்பத்தாரைக் காப்பாற்றத்தான் என்பது இக்காலத்தாரால் பதியப் பெறும். வருங்காலத்தில் வரலாறு  இனக்கொலையாளிகளையும் உடந்தையாளர்களையும் பழித்தும் இழித்தும் கூறும். எனவே, இனியேனும் இத்தகைய புன்மொழிகளைப்பொன்மொழிகளாகக்கருதி உரைக்க  வேண்டா.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

பசியை ப் போக்கும் மணிமேகலையாக ச் சோனியா திகழ்கிறார்: கருணாநிதி


சென்னை : "பசியை ப் போக்கும் வகையில், உணவு ப் பாதுகாப்பு ச் சட்டத்தை நிறைவேற்றியதால், மணிமேகலையாக, காங்கிரஸ் தலைவர் சோனியா திகழ்கிறார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளை சார்பில், திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின், 115வது பிறந்த தின விழா சென்னையில் நேற்று நடந்தது. வழுவூர் ரவி வரவேற்றார். நாதஸ்வர கலைஞர் ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, நாதஸ்வர கலைஞர் கீவளுர் கணேசன், தவில் கலைஞர் இலுப்பூர் நல்லகுமார் ஆகியோருக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி பரிசு வழங்கி பேசியதாவது:உணவு பாதுகாப்பு மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நாடு சுதந்திரம் பெற்று, 60 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் சுதந்திரம் பெற்றது போன்ற உணர்வும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. உணவு உரிமை கிடைத்துள்ளது. சோனியா, தன் மனதில் தோன்றிய பெரிய காரியத்தை செய்து முடித்துள்ளார்.நாடு முழுவதும், பலர், ஒருவேளை உணவு இல்லாமல் உள்ளனர். அவர்களின் பசியை போக்க வேண்டுமானால், எத்தனையோ மணிமேகலை தேவைப்படுவர். அத்தனை மணிமேகலைகளையும் சேர்த்து ஒரு மணிமேகலையாக சோனியா, இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.

கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலையை திறந்த போது, என் கை, கால்கள் நடுங்கி, பேச முடியாத நிலைக்கு திக்குமுக்கு அடைந்தேன். அதேபோன்ற உணர்வு தான் சோனியாவுக்கும் ஏற்பட்டிருக்கும்.அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, என் நெஞ்சு பதைபதைத்தது. அவர் உடல் நலம் தேறி வரவேண்டும் என நினைத்தேன். உடல் நலம் பெற்று விட்டார். அவருக்கு எனது பாராட்டுக்கள்.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.
சோனியாவுக்கு கருணாநிதி பாராட்டு:

""உணவு பாதுகாப்பு மசோதாவை, கொண்டு வர காரணமாக இருந்த, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னை அறிவாலயத்தில், நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:நாடு சுதந்திரம் பெற்று, 66 ஆண்டுகளுக்கு பின், உணவு உரிமைக்கான சட்டம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஏழை, எளியோர் மகிழ்ச்சி பெருக்கோடு, இதை வரவேற்பர் என, நம்புகிறேன்.தி.மு.க., சார்பிலும், மற்ற கட்சிகளின் சார்பிலும், கொடுத்த முக்கியமான திருத்தங்களை ஏற்றுக் கொண்டிருப்பது திருப்தி அளிக்கிறது.இந்தச் சட்டத்திலே இன்னும் செய்ய வேண்டிய, ஒரு சில திருத்தங்கள் இருக்கின்றன. காலப்போக்கில் அவ்வப்போது ஏற்படுகின்ற அனுபவங்களின் அடிப்படையில், தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என, எதிர்பார்க்கிறேன்.இதுபோன்ற பிரச்னைகளில், வறட்டு பிடிவாதம் எதுவும் காட்டாமல், நல்லதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அனைவருக்கும் இருக்க வேண்டும். முக்கிய எதிர்க்கட்சிகள், தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து விட்டு, அதே நேரத்தில் மசோதாவை வரவேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சியாகச் செயல்படலாம்; ஆனால், எதிரிக் கட்சியாக இருப்பது நல்லது அல்ல.

இது தான் பார்லிமென்டில் நடந்த விவாதத்திலிருந்து, என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.சுமூகமான முறையில், இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியிருப்பதற்காகவும், தி.மு.க., தந்த திருத்தங்களை ஏற்றுக் கொண்டிருப்பதற்காகவும், இந்தியாவில் உள்ள ஏழை, எளிய, சாதாரண, சாமான்ய, அடித்தட்டு மக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினரின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், அதற்கு ஓட்டு அளித்தவர்களுக்கும், இந்த மசோதாவை கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த சோனியாவுக்கும், பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு, கருணாநிதி கூறினார்.

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

இந்திரா பாணியில் நடவடிக்கை: வலியுறுத்துகிறார் கருணாநிதி

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_788727.jpg


இந்திரா பாணியில் நடவடிக்கை: வலியுறுத்துகிறார் கருணாநிதி
 
சென்னை:"தமிழக மீனவர்கள் பிரச்னையில், இந்திரா காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை போல, தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே, இலங்கை அரசு வழிக்கு வரும்; தமிழக மீனவர்களும் காப்பாற்றப்படுவர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:பார்லிமென்ட்டில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், சல்மான்குர்ஷித் பேசுகையில், "மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்பிரச்னைக்கு ஒரே தீர்வு, இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் இணைந்து பேச வேண்டும். தமிழக மீனவர்கள் குழு, தமிழக அரசின் ஆதரவுடன், இலங்கை சென்று திரும்ப வேண்டும் என, விரும்புகின்றனர்.ஆனால், இதுவரை அவர்களுக்கு உரிய அனுமதியை, தமிழக அரசு தரவில்லை.இப்பிரச்னையில், உண்மையிலேயே, தமிழக அரசு சுமூகப் பேச்சுவர்த்தைக்கு, தாமதம் செய்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அந்த செய்தி உண்மையாக இருக்குமானால், இதுவரை மத்திய அரசு மீது பழிசுமத்தி, காலம் கடத்தி வந்ததை போல செய்யாமல், தற்போதாவது, தாமதத்தை தவிர்த்து, மீனவர் பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திரா பிரதமராக இருந்த போது, சிங்கள கேப்டன் ஒருவர், அடிக்கடி, தமிழக மீனவர்களை, தமிழக எல்லை பகுதிக்குள்ளேயே வந்து, தாக்கி வருவதை கேள்விப்பட்டு, கோபமடைந்த இந்திரா, அந்த கேப்டனை கைது செய்ய, இந்திய கடற்படைக்கு உத்தரவிட்டார். கடற்படை வீரர்களும் சிங்கள கேப்டனை பிடித்து வந்து, மண்டபத்தில் சிறை வைத்தனர்.பின், அந்த கேப்டனையும், சக இலங்கை வீரர்களையும் மன்னிப்பு கேட்க வைத்து, இலங்கை அரசு திரும்ப பெற்றது. இச்சம்பவத்தை இந்திய அரசும், தமிழக அரசும் நினைவிலே கொண்டு, இந்திரா காலத்தில் எடுக்கப்பட்ட நடவடக்கை போல, தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே, இலங்கை அரசு வழிக்கு வரும். இலங்கை அமைச்சர்களும் தங்கள் மனம் போன படிப் பேசுவதை நிறுத்திக் கொள்ள முன்வருவர். தமிழக மீனவர்களும் காப்பாற்றப்படுவர்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்
.
 

ஞாயிறு, 21 ஜூலை, 2013

கவிஞர் சாமி பழனியப்பன் மரணம்: கருணாநிதி இரங்கல்

கவிஞர் சாமி பழனியப்பன் மரணம்: கருணாநிதி இரங்கல்
கவிஞர் சாமி பழனியப்பன் மரணம்: கருணாநிதி இரங்கல்
சென்னை, ஜூலை. 21– தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசனின் நெருங்கிய மாணவர்களில் ஒருவரும், தமிழரசு பத்திரிகையில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற வரும், தம்பி பழனி பாரதியின் அருமைத் தந்தையுமான கவிஞர் சாமி பழனியப்பன் மறைந்த செய்தியினை அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
திராவிட இயக்க லட்சியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, பாவேந்தர் பாணியில் கவிதைகளை எழுதுவதை வழக்கமாகக் கொண்டு சாமி பழனியப்பன் எழுதிய கவிதைகள் ஏராளம்.
கழக ஆட்சிக் காலத்தில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட போதே, முதல்– அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து உதவி நிதி அளித்தது என் ஞாபகத்தில் உள்ளது. அவரது மறைவு தமிழ்க் கவிதை உலகிற்கு ஓர் இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

திங்கள், 15 ஜூலை, 2013

உயர் நீதிமன்றத்தின் மொழியாகத் தமிழ்: கருணாநிதி

உயர் நீதிமன்றத்தின் வழக்கு மொழியாகத் தமிழ்: கருணாநிதி வலியுறுத்தல்


சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கு மொழியாகத் தமிழைச் சட்டப்படி கையாளுவதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு பெற்று தர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:-
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் சவுதி அரேபியாவில் தவிக்கும் கணவரை மீட்டுத் தரக் கோரிய வழக்கில் தமிழில் வாதாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தின் அரசியல் அமைப்பு அமர்வு, உயர் நீதிமன்றத்திலும்,  உச்ச நீதிமன்றத்திலும் ஆங்கிலத்தில்தான் வாதாட வேண்டுமென்று ஆயிஷா பானு என்பவர் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.நீதிபதியின் மீது எந்தவிதமான குறையையும் நான் சொல்ல முன்வரவில்லை.
2006 டிசம்பர் 6-ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு மொழியாகத் தமிழைக் கொண்டு வரவேண்டுமென்று சட்டப்பேரவையில் நானே (கருணாநிதி) முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்தத் தீர்மான நகலை தமிழக ஆளுநரின் பரிந்துரையுடன் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமை அவர் இல்லத்தில் சந்தித்து, சட்டப்பேரவையின் தீர்மானத்தைக் கொடுத்து, வழக்கு மொழியாகத் தமிழைக் கொண்டு வருவதற்கு அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தினேன்.இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகும் உச்ச நீதிமன்றம் ஆட்சேபணை தெரிவித்த காரணத்தினால் மத்திய அரசினால் அப்போது தமிழக அரசின் தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க முடியவில்லை.
எனினும் தமிழகத்தில் அப்போது திமுக ஆட்சி நடைபெற்ற காரணத்தினால் சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரும்பாலான வழக்குகளின் விசாரணைகள் எல்லாம் தமிழிலே நடைபெற்றன.உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதாக எம்.ஒய்.இக்பால் இருந்தபோது தமிழிலேயே வாதாட அனுமதித்தார்.தற்போது உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தமிழில் வாதாட அனுமதி மறுத்ததைக் கண்டித்து, வழக்குரைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அந்தப் போராட்டம் மிகவும் நியாயமான போராட்டம் என்பதை வழக்குரைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.இந்தப் பிரச்னையில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்.
வட மாநிலங்களில் ஹிந்தி வழக்காடும் மொழியாக அனுமதிக்கப் பட்டுள்ளதுபோல, தமிழகத்தில் உள்ள உயர் நீதிமன்றத்திலும் வழக்காடும் மொழியாக தமிழைச் சட்டப்படி கையாளுவதற்கு உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

சனி, 29 ஜூன், 2013

திருநங்கைகளுக்கு 9 என்ற குறியீட்டை நீக்க வேண்டும்: கருணாநிதி

கணக்கெடுப்பு படிவத்தில் திருநங்கைகளுக்கு 9 என்ற குறியீட்டை நீக்க வேண்டும்: கருணாநிதி

பொருளாதாரக் கணக்கெடுப்பு படிவத்தில் திருநங்கைகளுக்கு 9 என்ற குறியீட்டை நீக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியா முழுவதும் ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு பணிகள்நடந்து வருகின்றன.கணக்கெடுப்பில் ஈடுபடும் ஊழியர்கள், சம்பந்தப்பட்டகுடும்பத் தலைவரின்பெயர்,தொழில்,இருப்பிடம்போன்றஎல்லா விவரங்களையும், அதற்கான விண்ணப்பத்தில் பதிவு செய்வது வழக்கம்.இந்நிலையில் அந்தப் படிவத்தில் திருநங்கையர்களுக்கு 9 என்ற குறியீட்டு எண்தற்போது வழங்கப்பட்டுள்ளதாக புகார்கள் கூறப்படுகின்றன.இந்தப் பிரச்சினை கடந்த சில ஆண்டு காலமாக திருநங்கையர்களுக்கு இருந்து வருகிறது.தி.மு. கழக ஆட்சியிலே இதே பிரச்சினை எழுப்பப்பட்டபோது, திருநங்கையர்கள் மூன்றாவது பாலினம் என்பதைக் குறிப்பிடும் வகையில் அந்தப் படிவத்தில் ஆண்/பெண் என்பதற்கு எவ்வாறு M/F (Male/Female)என்றுஅச்சிடப்பட்டிருப்பதைப் போல, திருநங்கையர்களைக் (Transgender) குறிக்கும்வகையில் T என்ற எழுத்து குறிப்பிடப்பட்டது. முதன் முதலில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் தற்போது பொருளாதார கணக்கெடுப்பு படிவத்தில் ஆண்என்பதற்கு 1 என்றும், பெண் என்பதற்கு 2 என்றும் குறிப்பிட்டு விட்டு ஆண் பெண் அல்லாத பாலின பிரிவுக்கு 9 என்ற குறியீட்டு எண் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைப்பற்றி அவர்கள் கூறும்போது, “ஏற்கனவே எங்களை அந்த 9 என்ற எண்ணைக் குறிப்பிட்டுத் தான் கிண்டல் செய்கிறார்கள், இப்போது அரசே அந்த எண்ணைக் குறிப்பிட்டிருப்பது எங்களை அவமானப்படுத்துவதாக உள்ளது” என்று கூறியிருக்கிறார்கள். பொருளாதார கணக்கெடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டபோது, இந்தப் படிவம் பற்றி மத்திய அரசில் தான் கேட்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். இந்தத் தவறை யார் செய்திருந்தாலும், மத்திய அரசு செய்திருந்தாலும்,மாநில அரசு அதைப்பற்றி கேட்காமல் இருந்தாலும், உடனடியாக இதற்கு உரியவர்கள் இதனைக் கவனித்து இந்தத் தவறினைக் களைய ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுகொள்வதாக தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

வியாழன், 27 ஜூன், 2013

சவுதியில் வாழும் தமிழர்களின் நலன் காக்க கருணாநிதி கோரிக்கை

சவுதியில் வாழும் தமிழர்களின் நலன் காக்க கருணாநிதி கோரிக்கை

சவுதியில் வாழும் தமிழர்களின் நலனைக் காக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுதி அரேபியாவில்  "நிதாகத்"  என்ற  சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது.   அந்தச் சட்டம் கடுமையாக நடைமுறைக்கு வருமேயானால்,  அந்த நாட்டில் உள்ள எல்லா நிறுவனங்களிலும்  பத்து சதவிகித இடங்களை  சவுதி அரேபியர்களைக் கொண்டு தான் நிரப்ப வேண்டுமென்ற அடிப்படையில், இப்போதே அதனை அமல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.   அவர்கள் நாட்டைச் சேர்ந்த பத்து சதவிகிதத் தினரை  பணிக்கு அமர்த்துகின்ற காரணத்தால்,  அந்த இடங்களிலே இதுவரை பணியாற்றி வந்த  வெளிநாட்டினரையெல்லாம்  திரும்ப அனுப்பும் நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு தொடங்கிவிட்டது.  இதன் காரணமாக வரும் ஜுலை மாதம் 3ஆம் தேதிக்குள், அதாவது இன்னும் ஒரு வார காலத்திற்குள்ளாக  60 ஆயிரம் இந்தியர்கள் அந்த நாட்டிலே பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் இந்தியாவுக்குத் திரும்ப அனுப்பப்பட இருக்கிறார்கள்.   60 ஆயிரம் இந்தியர்களில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தமிழர்கள்.    இதைக் காரணமாகக் கொண்டு மேலும் அங்கே பணியாற்றிக் கொண்டிருப்பவர்களையும்  வெளியேற்ற முயற்சிகள் தொடங்கிவிட்டதாகச் செய்திகள் வருகின்றன.   அதைப் போலவே  குவைத் நாட்டிலே பணிபுரியும்  ஒரு இலட்சத்து 20 ஆயிரம் தமிழர்களில் பலர் வெளியேற்றப்படும் நிலைமை உருவாகியுள்ளது.
அந்த நாடுகளில் பணியாற்றும் தமிழர்கள் பல்லாண்டு காலமாக தங்கள் குடும்பத்தோடு அங்கே குடியேறி அந்த நாடுகளோடு ஐக்கியமாகி விட்டவர்கள்.   அவர்கள் தொடர்ந்து அங்கேயே பணியாற்ற இந்திய அரசும், தமிழ் மாநில அரசும் உதவிட முன் வர வேண்டுமென்று விரும்புகிறார்கள்.   எனவே மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு,  அவர்கள் தொடர்ந்து அந்த நாடுகளில் வாழவும், அவர்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவும், தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

புதன், 29 மே, 2013

இந்தியாவில் சிங்களருக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது: கருணாநிதி

இந்தியாவில் எந்த இடத்திலும் சிங்கள இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது: கருணாநிதி கோரிக்கை

இந்தியாவில் எந்த இடத்திலும் சிங்கள ராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
இலங்கை ராணுவத்தினருக்கு சில குறிப்பிட்ட ராணுவப் பயிற்சிகள் மட்டுமே இந்தியாவில் அளிக்கப்பட்டு வருகிறது; ஆனால் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்குத் தமிழகத்தில் பயிற்சி அளிக்க மாட்டோம்” என்று நண்பர் ஏ.கே. அந்தோணி அவர்கள் தஞ்சையில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.மத்திய அரசின் சார்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட செய்திதான் இது. ஆனால், இலங்கைத் தமிழர்களைக் கொல்வதற்குக் காரணமாக இருக்கும் இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவிலே எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதுதான் தமிழகத்திலே உணர்வுள்ள தமிழர்களின் கோரிக்கை, வேண்டுகோள்.
இந்திய அரசிடம் நாம் பலமுறை அந்த வேண்டுகோளை விடுத்து விளக்கியுள்ளோம். “இந்தியாவிலே இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சி அளிக்கமாட்டோம்” என்று இந்திய அரசின் சார்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்க அவர்களால் இயலவில்லை.இலங்கையில் தமிழர் மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை' என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணியே ஒருமுறை கூறியிருக்கிறார். இந்தியாவில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்ட இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ், 'இந்தியாவில் இலங்கை ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் பயிற்சியை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எதிர்ப்பது பற்றிக் கவலையில்லை.அந்த அரசியல்வாதிகள் எழுப்பும் விவகாரங்கள் வெறுப்புணர்வால் ஏற்பட்டவை' என்று கூறினார். அப்போதே அதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் அந்தோணி, 'தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தெரிவித்த ஆட்சேபங்கள் வெறுப்புணர்வின் அடிப்படையில் எழுப்பப்பட்டவை என்று நான் கருதவில்லை.
இலங்கையில், அரசு சில நடவடிக்கைகளை எடுத்த போதிலும், இப்போதும் தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த அளவில் இல்லை. ஒருபுறம் தமிழகத்தின் உணர்வுகளையும் நாம் மதித்து நடந்துகொள்வோம். எனவே தமிழகப் பகுதிகளில் ராணுவப் பயிற்சி அளிக்காமல் தவிர்ப்போம்.அதே சமயம் மற்றப் பகுதிகளில் உள்ள ராணுவ அமைப்புகளில் இலங்கை வீரர்களுக்குப் பயிற்சி அளிப்போம்” என்று கூறினார். இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழர்களுக்கு எதிரான சிங்கள ராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது என்பது அனைத்துத் தமிழர்களின் வேண்டுகோள். இந்த உண்மையை நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் புரிந்து கொண்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டுமென்பதே மீண்டும் மீண்டும் நாம் விடுக்கின்ற கோரிக்கையாகும் என கூறியுள்ளார்.

திங்கள், 27 மே, 2013

கல்லூரிளிலும் தமிழுக்கு இடம் இல்லையா? கருணாநிதி கண்டனம்

கல்லூரித் தேர்வுகளிலும் தமிழுக்கு இடம் இல்லையா? கருணாநிதி கண்டனம்

கல்லுரி செய்முறை, தேர்வுகள் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக வந்த செய்தியை அடுத்து அரசின் இந்த முயற்சிக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
அ.தி.மு.க. அரசின் பள்ளிக் கல்வி அமைச்சர் 10-5-2013 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையின்போது “கடந்த கல்வி ஆண்டில், 320 அரசுப் பள்ளிகளில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் தலா இரண்டு ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டன. 640 பிரிவுகள் தொடங்கப்பட்டு அதில் 22,400 மாணவர்கள் படித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, வரும் கல்வி
ஆண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்படும்.
இதனால் ஆண்டுக்கு 1.5 இலட்சம் மாணவ - மாணவியர் பயன் பெறுவர்” என்று அறிவித்திருந்தார்.
தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் ஆங்கில மொழிக் கல்விக்கு நடைபாவாடை விரித்திடும் அ.தி.மு.க. அரசின் பிற்போக்கான நடவடிக்கையைக் கண்டித்து 14-5-2013 அன்று “தூங்கும் புலியை இடறுகிறார்கள்” என்ற தலைப்பில் ஓர் அறிக்கை விடுத்திருந்தேன்.
தமிழ் வழிக் கல்விக்கு முற்றிலும் எதிராக அ.தி.மு.க. அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, வரும் கல்வி ஆண்டிலிருந்து அனைத்துக் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் அசைன்மெண்ட்” மற்றும் தேர்வுகளையும் ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும்; தமிழில் எழுதக் கூடாது; என்று அ.தி.மு.க. அரசு தற்போது உத்திரவிட்டுள்ளது. இந்த உத்தரவினை அடுத்து கல்லூரிகளில்
அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் ஏடுகளில் செய்தி வெளியானது. இது,  மாணவர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு மிகவும் எதிர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஒருசிலர் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தால், வேலை வாய்ப்புக்கு அது உதவிகரமாக இருக்குமென்ற ஒரு வாதத்தை வைக்கிறார்கள். உலகின் பல்வேறு நாடுகளில் ஆங்கிலம் வழக்கு மொழியாகக் கூட இல்லை. ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான், சீனா போன்ற பல நாடுகளில் அந்த நாட்டு மொழிகள் தான் ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் விளங்குகின்றன. எனவே அ.தி.மு.க. அரசு, அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகள் என்று பேரவையில் அறிவித்து விட்டு, தற்போது தமிழ்நாட்டில், கல்லூரி தேர்வுகளில் தாய்மொழி தமிழுக்கே இடமில்லை, எல்லாமே ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டுமென்று பிடிவாதமாக உத்தரவின் மூலம் நிறைவேற்ற நினைப்பது “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்” என்பதைப் போலத்தான் இருக்கிறது. தமிழின மாணவர்களிடையே பாகுபாட்டினை ஏற்படுத்தும் அரசின் இந்த முடிவுகள் கடும் கண்டனத்திற்குரியவை.
- என்று கூறியுள்ளார்.

தமிழுக்கு இடம் இல்லையா?கருணாநிதி கண்டனம்
சென்னை:கல்லூரிதேர்வுகளிலும், தமிழுக்கு இடம் இல்லையா' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து, அவரது அறிக்கை:

தமிழ் வழிக்கல்விக்கு முற்றிலும் எதிராக, அ.தி.மு.க., அரசு மேற்கொண்டு வரும், நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, வரும் கல்வி ஆண்டிலிருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், "அசைன்மென்ட்' மற்றும்தேர்வுகளை ஆங்கிலத்தில் தான் எழுதவேண்டும்; தமிழில் எழுதக் கூடாது என, உத்தரவிட்டு உள்ளது.

இந்த உத்தரவை அடுத்து, கல்லூரிகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. ஒரு சிலர், ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தால்,வேலை வாய்ப்புக்கு அது உதவிகரமாக இருக்கும் என, ஒரு வாதத்தை வைக்கின்றனர்.உலகின் பல்வேறு நாடுகளில், ஆங்கிலம் வழக்கு மொழியாகக் கூட இல்லை. ரஷ்யா, ஜெர்மன், ஜப்பான், சீனாபோன்ற பல நாடுகளில், அந்நாட்டு மொழிகள் தான், ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும், விளங்குகின்றன.

எனவே, அ.தி.மு.க., அரசு அனைத்துப் பள்ளிகளிலும், ஆங்கில வழி வகுப்புகள் என, சபையில் அறிவித்து விட்டு, தற்போது தமிழகத்தில், கல்லூரிதேர்வுகளில், தாய்மொழி தமிழுக்கே இடமில்லை; எல்லாமே ஆங்கிலத்தில் தான் இருக்கவேண்டும் என, பிடிவாதமான உத்தரவின் மூலம், நிறைவேற்ற நினைப்பது, "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்' என்பதைப்போலத் தான் இருக்கிறது. தமிழின மாணவர்களிடையே பாகுபாட்டினை ஏற்படுத்தும், அரசின் இந்த முடிவுகள், கடும் கண்டனத்துக்கு உரியது.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

சனி, 25 மே, 2013

ஈழத் தமிழருக்கு இந்தியக் குடியுரிமை: கருணாநிதி வேண்டுகோள்

ஈழத் தமிழருக்கு இந்தியக் குடியுரிமை: மத்திய அரசுக்கு கருணாநிதி வேண்டுகோள்


தமிழகத்தில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்க வேண்டும் என்று மத்திய அரசைக் கோரியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை:

* இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தன் மகனை மீட்க உதவி கோரி, அவருடைய தாயார் குசலகுமாரி என்பவர் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்திருப்பதாகச் செய்தி ஒன்று வந்துள்ளதே?
# 2009ஆம் ஆண்டு இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்தபோது, தன் மகன் துஷ்யந்தனை (வயது 26) இந்தோனேசியாவிற்கு அவருடைய தாய் குசல குமாரி அனுப்பி வைத்திருக் கிறார்.  அங்கிருந்த அவருடைய மகன் பத்திரமாக இந்தோனேசியாவிற்கு வந்துவிட்டதாகவும், அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் கூடவந்த ஒன்பது தமிழர்களுடன் செல்லவிருப்பதாகவும் தொலைபேசியில் தெரிவித்திருக்கிறார். அதற்குப் பிறகு நான்காண்டுகளாக எந்தச் செய்தியும் மகனிடமிருந்து கிடைக்கவில்லையாம். கடந்த நான்காண்டுகளாக மகன் எங்கேயிருக்கிறான் என்று தேடி பலரிடம் உதவி கேட்டும் சோர்ந்து போயிருந்த நிலையில், தற்செயலாக இலங்கையில் வெளிவரும் “தினக்குரல்” நாளிதழில் தன் மகனின் புகைப்படத்தைப் பார்த்திருக்கிறார். அந்தப் புகைப்படம், இலங்கையிலிருந்து இந்தோனேசியா வந்துள்ள அகதிகளின் படம். அதிலே தனது மகன் துஷ்யந்தன் இருந்ததைப் பார்த்துவிட்டு, அந்தச் செய்தியைப் படித்தபோது, இந்தோனேசியா சிறையில் அந்த ஈழத் தமிழர்கள் வாழ்வதாகவும், அவர்களுக்கு கரப்பான் பூச்சிகளே உணவாகக் கொடுக்கப்படுகிறது என்றும் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்து விட்டு, எப்படியாவது சிறையிலிருந்து அவர்களை மீட்க வேண்டுமென்ற எண்ணத்தோடு அந்தத் தாய் தமிழகத்திற்கு வந்திருப்பதாகவும் செய்தி படித்தேன். அந்தத் தாயின் துயரத்தையும், இந்தோனேசியாவில் உள்ள மற்ற ஈழத் தமிழர்களின் துயரத்தையும் தீர்க்க இந்திய அரசும், தமிழக அரசும் உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும்; எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

* ஈரோடு மாவட்டத்தில், பெருந் துறையை அடுத்த கொடுமணல் என்ற ஊரில் அகழாய்வு நடத்தப்பட்டதாகவும், அந்த ஊர் 2,500 ஆண்டுகள் பழமையானது என்றும் சொல்கிறார்களே?
# சென்னிமலைக்கு மேற்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் நொய்யல் ஆற்றின் வடகரையில் உள்ளதுதான் கொடுமணல் என்ற சிறப்புமிக்க ஊர். அங்கே 50 ஏக்கர் பரப்பில் 3 9 அகழாய்வு குழிகளும், 100 ஏக்கர் பரப்பிலான ஈமக்காட்டில் ஒரு ஈமச் சின்னமும் அகழாய்வு செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம், அங்கே விலை உயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், செம்பு, இரும்பு மற்றும் உருக்கு உருக்கப்பட்டதற்கான தொழிற்கூடங் களும் கண்டு அறியப்பட்டுள்ளன. கொடுமணலில் உருவாக்கப்பட்ட அணிகலன்களைப் பெறுவதற் காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வணிகர்கள் எல்லாம் வந்துள்ளார்கள்.
கொடு மணலில் கிடைத்த மட்பாண்டம் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்ததாகும். அங்கே கிடைத்துள்ள மட்பாண்டங்கள் தமிழர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன், எழுத்தறிவு பெற்று, மிகச் சிறந்த சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்துகின்றதாம். இந்தக் கொடுமணல் அகழாய்வு களத்தைப் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க வேண்டு மென்று கோரிக்கைகள் எழுந்துள்ள சூழ்நிலையில், அந்த நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு தொல்லியல் துறை தயாராக இல்லை என்று செய்தி வந்துள்ளது. தனது பெயரை வெளியிட விரும்பாத தொல்லியல் துறை அதிகாரி ஒருவர், “தனிப்பட்ட குழுக்களோ, அரசு சார்ந்த நிறுவனங்களோ அகழாய்வு செய்யும்போது, அதில் கிடைக்கும் அரிய பொருள்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும். அப்பொருள் எங்கு  கண்டுபிடிக்கப்பட்டதோ, அந்த இடத்திற்கு அருகில் உள்ள, அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். மற்றபடி நிலத்தை கையகப்படுத்த முடியாது. அதற்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன” என்று கூறியிருக்கிறார்.
தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், “கொடுமணலில் கண்டறியப்பட்ட தாமிர தொழிற்கூடம், தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியமானது. அங்கு காணப்படும், பல்வேறு விதமான
அணிகலன்கள், அதை உறுதி செய்கின்றன. தமிழகத்தில் நடந்த அகழாய்வுகளில், கொடுமணல் அகழாய்வு, வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருமை வாய்ந்தது. எனவே தமிழக அரசு, கொடுமணல் தொல்லியல் களத்தை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும். அந்த நிலத்தைக் கையகப்படுத்தி, பாதுகாக்கப்படும் இடமாக அறிவிக்க வேண்டும்” என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சங்க இலக்கியமான பதிற்றுப் பத்தில், “கொடுமணம்பட்ட....நன்கலம்” எனக் கபிலரும், “கொடுமணம்பட்ட வினைமான்” என அரிசில் கிழாரும் பாடியுள்ளனர். தொன்மைமிக்க தமிழர்களின் வாழ்க்கை முறையிலும், நாகரிகம் மற்றும் பண்பாட்டிலும் மிகுந்த ஈடுபாடும் ஆராய்ச்சி அறிவும் கொண்ட அவரது வேண்டுகோளையேற்று கொடுமணல் அகழாய்வுக் களத்தை தொல்லியல் துறை சார்பில் ஏற்று, அதனைப் பாதுகாப்பதற்கான முயற்சியில் ஈடுபட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இல்லாத ஒன்றை இருப்ப தாகக் கூறி, அதனைப் பாதுகாப்பதற்கான முயற்சி யிலே ஈடுபடுவதைக் கைவிட்டு; கண் எதிரில் கண்டு பிடிக்கப்பட்ட கொடுமணல் அகழாய்வுக் களத்தைப் பாதுகாக்க முயற்சிப்பதுதான் முறையானது.
கோவையில் 27-6-2010 அன்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நான் ஆற்றிய நிறைவுரையில், “கி.பி. இரண்டு, மூன்றாம் நூற்றாண்டுகளில் ரோமர்கள் தமிழர்களோடு நெருங்கிய வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். பழைய ரோம் நாணயங்கள் தமிழ் நாட்டுக் கடற்கரைகளில் ஏராளமாகக் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் மற்ற இடங் களில் கிடைத்தவற்றைவிட, ரோமானிய நாணயங் கள்
இந்தக் கொங்கு நாட்டில்தான் மிகுதியாகக் கிடைத்துள்ளன” என்று குறிப்பிட்டதை மேலும் மெய்ப்பிக்கும் வகையில், பழம்பெருமைமிக்க கொங்குநாட்டின் கொடுமணல் அகழாய்வின் போது இந்த நாணயங்கள் கண்டெடுக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.

* இரண்டு லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கக் கூடிய முக்கிய மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்கப் போவதாகச் சொல்லப்படுகிறதே?
# அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி 1 கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் வாழ்ந்து வருவதாகவும், அவர்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் இந்தியர்கள் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்து மசோதா தயாரிக்கப்பட்டு, அமெரிக்க செனட் சபையின் நீதித் துறை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். தற்போது நீதித் துறை உறுப் பினர்கள் அதைப் பரிசீலித்தபோது, மசோதாவுக்கு ஆதரவாக 13 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் விழுந்திருக்கின்றன. 8 வாக்குகள் அதிகம் பெற்று மசோதா நீதித் துறைக் குழுவின்
ஒப்புதலையும் பெற்றுள்ளது. அடுத்த கட்டமாக இந்த மசோதா செனட் சபையின் ஒப்புதலுக்குச் செல்லும் 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையில் 60 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று மசோதா நிறைவேற வேண்டும். இந்தத் தகவலை நான் இங்கே குறிப்பிடு வதற்குக் காரணம், 26-9-2009 அன்று காஞ்சி புரத்தில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் கழகம் நிறைவேற்றிய 8வது தீர்மானத்தில், தமிழகத்திலே அகதிகளாக தங்கி யுள்ள 1 இலட்சத்திற்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமைச் சட்டம் மற்றும் தொடர்புடைய ஏனைய சட்டங்களின்கீழ் மறு குடியமர்த்தும் முயற்சியாக தமிழக அரசு மத்திய அரசோடு கலந்து பேசி, அவர்கள் தமிழகத் திலே நிரந்தரமாக குடியிருக்க வழிவகை செய்து தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தோம். கழகம் ஆட்சியில் இருந்தபோது தொடர் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அமெரிக்காவில் 2 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்க முடிவு செய்திருப்பதைப்போல, இந்தியாவிலும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமையினை - நிரந்தரமாகப் பாதுகாப்போடு வாழ்வதற்கான அனுமதியினை இந்திய அரசு வழங்கிட முன்வர வேண்டும் என்பது தான் நமது விருப்பமும் வேண்டு கோளும் ஆகும். இங்குள்ள ஈழத் தமிழர்களில், விரும்புவோர்க்குக் குடியுரிமை வழங்குவது, அவர்களது எதிர்காலத்திற்கு நாம் தருகின்ற உத்தரவாதமாக அமையும்.

கருத்துகள்(4)

அண்ணா !நீங்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தபோதே இதைபோன்ற சிறிய விசயங்களை நிறைவேற்ற முயற்சிகள் எடுத்திருந்தால் நிறைவேற நல்ல சந்தர்ப்பங்கள் இருந்ததே !இப்போது வெளியே வந்த பிறகு கடிதங்கள் எழுதியோ வேண்டுகோள் விடுத்தோ என்ன பயன் விளையுமென்று நினைக்கிறீர்கள் ?ஆனாலும் மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறிய பிறகு ஈழத்தமிழர்க்கு குரல் கொடுப்பது மகிழ்ச்சி
இந்தியக் குடியுரிமை என்று ஒரு விஷயம் இருப்பதும், இந்தியாவில் இலங்கை அகதிகள் இருப்பதும் கருணாநிதிக்கு இப்போது தான் தெரியவந்தது போலிருக்கிறது.
டேய் இந்த டக்க அல்டி வேலை தானே வேணாம் இங்கேறது. நீ யாரு, யேபரு பட்ட அலுநு மக்களக்கு தெரியும்.
ஏன்? இந்தியக் குடியுரிமைப் பிரச்சினையால் வடகிழக்கு மாநிலங்கள் அவதியுறுவது போதாதா?