சனி, 18 ஆகஸ்ட், 2012

மொழித்திறனுக்கான புதுத்திட்டம்



கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தமிழ், ஆங்கிலப் பாடங்களில் 25 மதிப்பெண்களுக்குச் செய்முறைத் தேர்வு முறையை அறிமுகப்படுத்த உயர்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.

மொழிப் பாடங்களில் மாணவ, மாணவியரின் தகவல் தொடர்புத் திறமையை வளர்க்கும் நோக்கில், முதன் முறையாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இளங்கலை, முதுகலைப் படிப்புகளில், பெருவாரியான மாணவ, மாணவியர் மொழிப் பாடங்களாகத் தமிழையும் ஆங்கிலத்தையும் படிக்கின்றனர். மற்ற பாடங்களைப் போல் மொழிப் பாடங்களுக்கும் தலா 100 மதிப்பெண்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்த 100 மதிப்பெண்களுமே எழுத்துத் தேர்வை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகின்றன. அறிவியல் பாடங்களுக்கு மட்டுமே செய்முறைத் தேர்வு அமலில் இருக்கிறது. இந்நிலையில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்கும் செய்முறைத் தேர்வு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அண்மையில் நடந்த துணைவேந்தர்கள் கூட்டத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் பழநியப்பன் ஆணையிட்டார். அதன்படி, எழுத்துத் தேர்வுக்கு 75 மதிப்பெண்கள், செய்முறைத் தேர்வுக்கு 25 மதிப்பெண்கள் எனப் பிரித்து வழங்கப்பட உள்ளது.

இது குறித்து அமைச்சர் கூறியதாவது: மாணவர்கள், மனப்பாடம் செய்து மதிப்பெண்களைப் பெறாமல் அவர்களின் தகவல்தொடர்புத் திறன், பேச்சுத்திறன் முதலானவற்றின் அடிப்படையில் செய்முறைத் தேர்வு முறை வகுக்கப்படும். மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் திறன் மிகக் குறைவாக இருக்கிறது; ஆங்கிலத்தில் எழுதவும் தெரியவில்லை. எனவே இலக்கணப் பிழையின்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுதல், பேசுதல், குழு உரையாடல், கேள்வி-பதில் போன்றவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த முறையினால் மாணவர்களின் திறன் மேம்படும்.

இவ்வாறு அவர் கூறினார். சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம் கூறும்போது, “மொழிப் பாடங்களுக்குச் செய்முறைத் தேர்வு முறை அறிமுகப்படுத்தும் திட்டத்தைப் பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டங்களுக்கான குழுவின் முன் வைத்து ஒப்புதல் பெறப்படும். அதைத் தொடர்ந்து இந்த ஆண்டே மொழிப் பாடங்களுக்குச் செய்முறைத் தேர்வுத் திட்டம் அமலுக்கு வரும் என்றார்.

செய்தியாளர், தினமலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக