ஞாயிறு, 15 ஜூலை, 2012

எந்த அகவை யிலும் எவரெசுட்டு ஏறலாம்; சொல்கிறார் யப்பான் தமாய்

 
 
எந்த அகவை யிலும் எவரெசுட்டு ஏறலாம்; 
சொல்கிறார்  யப்பான் தமாய்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர்களிலேயே மிகவும் வயதான பெண் என்ற சாதனையை படைத்துள்ளார் ஜப்பானைச் சேர்ந்த தமேய் வடானபி. இவர் சிகரத்தின் உச்சியை தொட்ட போது இவரது வயது 73 ஆண்டுகளும், 180 நாட்களுமாகும்.
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவரான தமேய் சிறு வயது முதலே கடுமையான உழைப்பாளியாவார். அதிகாலை எழுந்து அப்பாவுடன் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் ஆண்களுக்கு நிகரான வேலைகளை அசராமல் பார்த்துவிட்டு, பிறகு ஆறு கிலோமீட்டர் தூரம் உள்ள பள்ளிக்கு நடந்தே போய் படித்துவிட்டு திரும்புவார். திரும்பிய பிறகு மலையென குவிந்திருக்கும் வீட்டு வேலைகளையும் செய்து முடித்துவிட்டே உறங்கப்போவார்.

இவரது இந்த உழைப்புதான் மலையேற அழைப்பு விடுத்தது எனலாம். அங்குள்ள பள்ளியொன்றில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் போது முதன் முதலாக ஒரு சிறு மலைமீது ஏறும் சந்தர்ப்பம் அமைந்தது. அப்போது அவருக்கு வயது 27. அந்த சம்பவம் தந்த சந்தோஷம் காரணமாக பிறகு ஜப்பானில் உள்ள மலைகளில் எல்லாம் சர்வ சாதாரணமாக ஏறி இறங்கிவிட்டார். மலையேறுவதே இவரது பொழுதுபோக்கு என்றானாலும், பொருளாதாரம் காரணமாக எவரெஸ்ட் ஏறுவது மட்டும் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

வேலையில் இருந்து ஒய்வு பெற்ற பிறகு ஜப்பானில் உள்ள புகழ்பெற்ற பியூஜி மலையேறும் குழுவினருக்கு வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் செயல்பட்டார். இந்த நிலையில்தான் தமேய்க்கு எவரெஸ்ட் சிகரம் போகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது அவருக்கு வயது 62.

சாகசசம் புரிய நினைப்பவர்களின் உச்சகட்ட சாதனையே எவரெஸ்ட் சிகரம் ஏறுவதுதான். இதற்காக இளமை முறுக்கோடு கிளம்பிய 284 பேர்களில் இவர்தான் வயதானவர். ஆனால் 284 பேரில் குளிர்தாங்காமல் இறந்தவர்கள், ஏற முடியாமல் நின்றவர்கள், இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாலும் இறந்துவிடுவேன் என்று அடித்து பிடித்து திரும்பியவர்கள் எல்லாம் போக எவரெஸ்ட் சிகரம் தொட்ட 82 பேர்களில் இவரும் ஒருவர்.

எவரெஸ்ட் சிகரம் தொட்ட வயதானவர் என்ற சாதனையை தனது 62 வயதில் ஏற்படுத்திய தமேய், தன் சாதனையை தானே முறியடிக்கும் வகையில் 11 ஆண்டுகள் கழித்து தற்போது கடந்த வாரம் தனது 73 வயதில் மீண்டும் எவரெஸ்ட் சிகரம் தொட்டு திரும்பியுள்ளார்.

இடையில் தனது 65 வயதில் ஒரு முறை எவரெஸ்ட் சிகரம் ஏறும்போது கடுமையான பனிப்புயலில் சிக்கி முதுகில் பலத்த காயமடைந்தார். எழுந்து நடக்கவே மாட்டார் என்று எல்லோரும் கருதியபோது, தனது மனவலிமை காரணமாக துள்ளி எழுந்தவர் கடுமையான பயிற்சி எடுத்து இந்த முறை வீழ்ச்சியின்றி எழுச்சி பெற்றுவிட்டார்.

இந்த சாதனை தனக்கு சந்தோஷம் தந்தாலும் கடந்த பதினொரு ஆண்டுகளில் எவரெஸ்ட் மிகவும் மாறிவிட்டதாக வேதனையும் படுகிறார், முன்பு பனி படர்ந்து அடர்ந்து இருந்த இடங்கள் எல்லாம், இப்போது நீர் நிலையாக நீண்டு காணப்படுகிறது. இது உலகம் வேகமாக வெப்பமயமாகி வருவதன் (குளோபல் வார்மிங்) அறிகுறியே, இதனை தடுத்து நிறுத்திட நிறைய விழிப்புணர்வு தேவை அது இளைஞர்களிடம் இன்னும் தேவை, ஏனெனில் இனி உலகம் அவர்களின் கையில்,அவர்களது உலகத்தை காப்பாற்ற அவர்கள்தான் முன்வரவேண்டும் என்கிறார்.


- முருகராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக