ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

மூக நீதிக்காகப் போராடி வரும் கட்சி திமுக



தருமபுரி, பிப். 27: மதம், மொழி, இனம் ஆகியவற்றை கடந்து சமூக நீதிக்காக தமிழகத்தில் போராடிவரும் ஒரே கட்சி திமுக மட்டுமே என்று தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி எஸ். ஆறுமுகம் கூறினார். பென்னாகரத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி தலைமை தேர்தல் அலுவலகத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதை திறந்து வைத்து அமைச்சர் பேசியது: நாட்டில் முன்மாதிரியாக தமிழகத்தில் ரூ.7 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்தது திமுக அரசு. ரேஷனில் ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, அனைத்து மக்களும் உலக நடப்புகளை தெரிந்துகொள்ளும் வகையில் இலவச வண்ணத் தொலைகாட்சிப் பெட்டி, கலைஞர் காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு இலவச திட்டங்களை வழங்கி தமிழக மக்களை காப்பாற்றும் இந்த அரசுக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில் பென்னாகரம் இடைத் தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்பேசியது: மக்களுக்காக எண்ணற்ற நலத் திட்டங்களை வழங்கிவரும் திமுக அரசுக்கு பென்னாகரம் இடைத் தேர்தலில் மக்கள் உறுதியாக மறுஅங்கீகாரம் வழங்குவார்கள். தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து திமுக பாடுபடுகிறது. மக்களின் அன்றாட கோரிக்கைகளையும் கவனத்துடன் பரிசீலித்து, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அளித்துவரும் திமுகவுக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்றார். உணவுத் துறை அமைச்சர் எ.வ. வேலு, முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலர் மா.தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் கே.பாலகிருஷ்ணன், எம்பி இ.ஜி.சுகவனம், மாவட்ட அவைத் தலைவர் எம்.தனக்கோடி உள்ளிட்டோர்கலந்துகொண்டனர்.
கருத்துக்கள்

ஒரு முத்திரை விழுந்து விட்டால அம் முத்திரையின் சாயலிலேயே பிறவற்றையும் நோக்குவதே மக்கள் இயல்பு். சமூக நீதிக்காக என்பது உண்மையாக இருப்பினும் தலைவரின் குடும்பச் சமூக நீதிக்காக, தலைவரின் குடும்பச் சம நீதிக்காகப் பாடுபடும் கட்சி என்றே அனைவரும் கருதுகின்றனர். எல்லாக் கட்சித் தலைவர்களுமே தம் பரம்பரையினரை ஆட்சிப் பீடத்திலும் கட்சிப் பொறுப்பிலும் ஏற்றி அழகு பார்த்தாலும் கலைஞருக்கு மட்டுமே இந்த அவப் பெயர் ஏன்? தமிழுக்காகக் குரல் கொடுக்கும் கடந்த காலப் பாதையில் இருந்து தடம் புரண்டு குடும்பத்திற்காகக் குரல் கொடுக்கும் கோமானாக மக்களைக் கருதச் செய்யும் நிலை ஏன் ஏற்பட்டது? சிந்திப்பின் விடை கிடைக்கும். விடை கிடைப்பின் தெளிவு பிறக்கும். தெளிவு பிறப்பின் தவறு திருத்தப்படும். திருத்தப்படின் உண்மைச் சமூக நீதி பிறக்கும். அவ்வாறாயின் கறை களையப்படும். மாறாகப் பழி பாவங்களுக்கு அஞ்சாமல் தூற்றுவோர் தூற்றட்டும் எனக் குடும்பச் சமூக நீதி மட்டும் காக்கப்படின் எப் பேச்சிற்கும் மதிப்பிருக்காது.

உரிய மதிப்புயர்வை விரும்பும்

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/28/2010 3:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக