தென் அமெரிக்கப் பெரு நாட்டின்  இலக்கிய அமைப்பு தமிழ்க் கவிஞர் முனைவர் எழில் வேந்தனைச் சிறப்பித்திருக்கிறது.

 பெரு நாட்டில் செயல்பட்டுவரும் ‘உலக எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம்’ தம் படைப்புகளின்மூலம் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்திவரும் மிகச்சிறந்த எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து தங்கத்தூவல்(PEN awards)விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறது. 2021 ஆம் ஆண்டுக்கான விருதுகள் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள் முதலான பல்வேறு துறைகளைச் சேர்ந்த முப்பதின்மருக்கு வழங்கப்பட்டுள்ளன.

அண்மையில் இந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் முனைவர் சாமுவேல் கெவரோ கலிமிடி அவர்களால் இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டு  இணையம் வழியே  இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

உலக அமைதி – சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தளங்களில் தம் படைப்புகளின் மூலம் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்திவரும்  தென்னிந்தியாவைச் சேர்ந்த மூன்று கவிஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழிலும் ஆங்கிலத்திலும் கடந்த நான்கு பதினாண்டுகளாகக் கவிதைகள் எழுதிவரும்  தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் எழில் வேந்தன் அவர்களுக்குத் தங்கத்தூவல் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய எழுத்தாளர்கள் மூவர் மதிப்புமிக்க இவ்விருதினைப் பெற்றுள்ளனர் அவர்கள் மூவரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவைச் சேர்ந்த முனைவர் பெருகு இராமகிருட்டிணா அவர்களுடன், தெலுங்கானாவைச் சேர்ந்த முனைவர் அசோக்கு சக்கரவர்த்தி  ஆகியோரும் இவ்விருதினைப் பெற்றுள்ளனர்.

நோபல் பரிசு பெற்ற இசுரேல் கவிஞர் பேராசிரியர் எருனசுட்டோர் கஃகான், யுனெசுகோ அங்கீகாரம் பெற்ற உலகக் கலை பண்பாட்டுக் கழகத்தின் பொதுச்செயலாளர் மெக்குசிகோ நாட்டுக் கவிஞர் முனைவர் இயூசினியா சோபரேனிசு போன்ற வையகத்தின் பெருமைமிகுந்த எழுத்தாளர்களுடன் சேர்ந்து இந்த மதிப்புமிக்க விருதினைப் பெறுவதை ஒரு நல்வாய்ப்பாகக் கருதுவதாகக் கவிஞர் முனைவர் எழில்வேந்தன் கூறுகிறார். இந்திய குடியரசுத் திருவிழாவையொட்டி 1995ஆம் ஆண்டில் இந்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய பன்மொழிக் கவியரங்கத்திற்குச் செம்மொழித் தமிழின் மிகச்சிறந்த கவிதையாக இவரின் ஆலமரம் கவிதை தேர்ந்தெடுக்கப்பெற்று, பதினெட்டு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. இக்கவிதை தற்போது சீனம், கிரேக்கம், அரபு, இசுபானிசு, பிரஞ்சு, சப்பானியம், உருசியம்  முதலான முப்பத் தெட்டு உலக மொழிகளில் மொழிபெயர்ப்புகளைக் கண்டு கண்டங்கள் அனைத்திலும் வாசகர்களைச் சென்றடைந்திருக்கிறது.

மகுடைப் பெருந்தொற்று பாதிப்பினால் உலகின் பல நாடுகளும் முடக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலிலிலும், இப்படிப்பட்ட கலை இலக்கிய அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டுவருவதும் நம் கவிஞர்கள் தொய்வின்றி இயங்கிவருவதும் பாராட்டல் களுக்குரியது. நம் கவிஞர்கள் பண்பாட்டுத்தூதர்களாக ஏற்கப்பெற்றிருப்பதற்கு  நல்வாழ்த்துகள்!