புதன், 5 செப்டம்பர், 2012

குப்பிகுள் சிற்பம்





குப்பிச் சிற்பி பசவராசு (பாட்டில் சிற்பி பசவராஜ்)


ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு திறமை இருக்கத்தான் செய்கிறது என்பதை நிரூபித்துக் கொண்டு இருக்கிறார் பாட்டில் பசவராஜ். எலக்ட்ரீசியனாக இருந்த பசவராஜ் எப்படி கர்நாடக மாநிலம் பெங்களூரு முழுவதும் தெரிந்த பாட்டில் கலைஞர் பசவராஜனார் என்பதை தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள். 

பெங்களூரைச் சேர்ந்த சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்த பசவராஜ், படிக்க வசதியில்லாததால் எலக்ட்ரீசியனாக மாறினார். கடந்த எட்டு வருடங்களுக்கு முன் மின்சாரம் தொடர்பான வேலை செய்ய ஒரு வீட்டிற்கு போயிருந்தார். அப்போது மின்பெட்டியின் மீது ஒரு சிறிய பாட்டிலுக்குள் கப்பல் போன்ற சிற்பம் வைக்கப்பட்டு இருந்தது. அதை எடுத்து ஆர்வத்துடன் பார்த்த போது, அந்த வீட்டின் உரிமையாளர், " இது ரொம்ப கஷ்டமான கலையாக்கும், வெளிநாட்டு நண்பர் ஒருவர் எனக்கு பரிசாக கொடுத்தது, இதோட அருமை உனக்கு தெரியாது' 'என்று சொல்லி பசவராஜ் கையில் இருந்த பாட்டில் சிற்பத்தை பறிக்காத குறையாக வாங்கிச் சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் பசவராஜ் மனதை காயப்படுத்தவே அதே போல கண்ணாடி பாட்டில் சிற்பத்தை உருவாக்கியே தீர்வது என்ற முடிவுடன் இரண்டு வாரம் கடுமையாக முயற்சி எடுத்தார். நிறைய கண்ணாடி பாட்டில்கள் நொறுங்கியது; அதைவிட நிறைய சிற்பங்கள் வீணாணது, இரவுகள் பகலானது, ஆனாலும் கடைசியில் வெற்றி கைகூடியது.



முதலில் ஒரு மரசிற்பம் உருவாக்கவேண்டும், அதை பிரித்து சின்ன, சின்ன துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும், அந்த துண்டுகளை பாட்டிலின் வாய்வழியாக கருவிகளின் உதவியுடன் உள்ளே நுழைக்க வேண்டும். பின் அப்படியே உள்ளே ஒட்டவேண்டும், மிக நுட்பமாக செய்யவேண்டிய இந்த வேலையில் அல்ல, அல்ல கலையில் பசவராஜ் நன்றாகவே கற்றுத் தேர்ந்தார்.

இவரது இந்த பாட்டில் சிற்பத்தை பார்த்து பலரும் பாரட்டவே தொடர்ந்து நிறைய பாட்டில் சிற்பங்களை படைக்க ஆரம்பித்தார். குடும்பத்திற்காக எலக்ட்ரீசியன் வேலையும், மனதிற்காக இந்த பாட்டில் சிற்பமும் படைக்கும் இவரது பாட்டில் சிற்பங்களை பார்த்து முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வரை பாராட்டியுள்ளனர். இப்போது ஓரு படி மேலே போய் மொபைல் போனை பிரித்து பாட்டிலுனுள் வைத்து திரும்ப சேர்த்து அதன் மூலம் பேசவும் செய்கிறார். அதேபோல கடிகாரத்தை பிரித்து உள்ளே வைத்து சேர்த்து ஓடவிட்டுள்ளார். இப்படி இவரது பாட்டிலுக்குள்ளான உலகத்தை செலுத்தும் முயற்சி தொடர்கிறது.

என்னுடைய பாட்டில் சிற்பங்கள் எதுவம் விற்பனைக்கில்லை, முழுவதும் என் ரசனைக்காகவே என சொல்லும் பாட்டில் பரத்வாஜ் இன்னும் நிறைய சிற்பங்கள் படைத்து பெருமையடைய வாழ்த்துவோம்.

முக்கிய குறிப்பு: பசவராஜ் செய்த பாட்டில் சிற்பங்களை காண பசவராஜ் படத்திற்கு கீழே போட்டோ கேலரி என்று எழுதப்பட்ட சிவப்பு பட்டையை கிளிக் செய்யவும்.

-முருகராசு, தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக