வியாழன், 29 அக்டோபர், 2009

செம்மொழி மாநாடு: ஆய்வரங்க பணிக் குழு தலைவராக
சிவத்தம்பி நியமனம்



சென்னை, அக். 28: கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி, ஆய்வரங்கப் பணிகளை மேற்கொள்ள ஆய்வரங்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேரறிஞர் முனைவர் கா.சிவத்தம்பியும், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. "இந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை' என இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர் சிவத்தம்பி கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகின. இந்தச் செய்திகளுக்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் கருணாநிதி, "செம்மொழி மாநாட்டில் தமிழ் பேரறிஞர்களின் வருகையைத் தடுக்க முயற்சி நடைபெறுகிறது' என்று குற்றம்சாட்டினார். ஆய்வரங்கக் குழுவில்... இந்த நிலையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி, ஆய்வரங்கப் பணிகளை மேற்கொள்ள ஆய்வரங்க அமைப்புக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதுகுறித்து, செம்மொழி மாநாட்டின் தனி அலுவலர் கா. அலாவுதீன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: ""ஆய்வரங்க அமைப்புக் குழுவின் தலைவராக பேராசிரியர் முனைவர் கா.சிவத்தம்பி நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவர்களாக முனைவர்கள் ஒளவை.நடராஜன், பொன்.கோதண்டராமன் ஆகியோரும், செயலாளராக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.ராஜேந்திரன் ஆய்வரங்க அமைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிகாரம் என்ன? ஆய்வரங்கப் பணிகளை திட்டமிடவும், செயல்படுத்தவும், துணைத் தலைவர்கள், துணைக் குழுக்களை அமைத்துக் கொள்ளவும் ஆய்வரங்க அமைப்புக் குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி, அனைத்து ஆய்வரங்கப் பணிகளையும் இந்தக் குழு மேற்கொள்ளும்'' என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

அறிஞர் சிவத்தம்பி அவர்களிடம் ஒப்புதல் பெற்று அறிவித்து இருந்தார்கள் எனில் மகிழ்ச்சி.ஏனெனில் தான் இன்னும் முடிவெடுக்கவில்லை என்ற அவரது அறிக்கைதான் செய்தித்தாள்களில் வந்திருந்தன. இச் சூழலில் அவரைத் தலைவராக நியமித்து ஒரு குழுவை அமைக்க அவர் அதை மறுக்க வீண் களங்கம்தான் ஏற்படும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/29/2009 2:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக