ஞாயிறு, 25 அக்டோபர், 2009




அன்டன் பாலசிங்கம்
இப்படிப்பட்ட சூழலில் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியிடமிருந்து பாலசிங்கத்துக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. எவ்வளவு விரைவில் சென்னை வரமுடியுமோ, அவ்வளவு விரைவில் வரும்படிச் சொன்னதும், இந்தத் தகவலை பிரபாகரனிடமும் பிரேமதாசாவிடமும் பாலசிங்கம் தெரிவித்தார். அந்தத் தொலைபேசி அழைப்பு வந்த இருநாள்கள் கழித்து, பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், யோகி உள்ளிட்டோர் விமானம் மூலம் சென்னை வந்தனர். இவர்களது வருகையும் தங்குமிடமும் ஆரம்பத்தில் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. பின்னர் இவர்கள் தங்கியிருந்த துறைமுக விருந்தினர் இல்லத்தில் ஏற்பட்ட பரபரப்பு மற்றும் முதலமைச்சர் வருகை முதலியவற்றால் வெளியுலகுக்குத் தெரியவந்தது. இவர்களின் சந்திப்பில், முதலமைச்சருடன் முரசொலி மாறனும் உடனிருந்தார். இவ்வகையாக அடுத்தடுத்து மூன்று நாள்கள் இவர்களது சந்திப்பு நிகழ்ந்தது. இந்தச் சந்திப்பில் ஈபிஆர்எல்எஃப் தெரிவித்தக் கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. பாலசிங்கமோ, புலிகள் புதிய தேர்தலைச் சந்திக்க விரும்புவதாகக் கூறியதுடன், தற்போதுள்ள வடக்கு-கிழக்கு மாகாணசபை, தவறான வழிமுறைகளால் தேர்தல் நடத்தப்பட்டு உருவானதாகும் என்றும் விளக்கினார். இவர்கள் ஆட்சி நடத்திய முறைகளால் மக்கள் வெறுப்புற்று இருக்கிறார்கள் என்றும், புதிதாகத் தேர்தல் நடந்தால், தாங்கள் மிகப்பெரிய அளவிலான வெற்றியைப் பெற முடியும் என்றும் விளக்கினார். இது குறித்து, அடேல் பாலசிங்கம் தனது நூலில், "இறுதியில் புலிகளின் நிலைப்பாட்டைக் கருணாநிதி அங்கீகரித்தார். நிர்வாகத்தில் பங்கேற்பது குறித்து வலியுறுத்துவதைத் தவிர்த்தார்' எனக் குறிப்பிட்டுள்ளார் (பக்.335). இறுதியில் பாலசிங்கம் குழுவினர், வைகோ, கி.வீரமணி மற்றும் தங்கள் ஆதரவாளர்களைச் சந்தித்தபின், கொழும்பு திரும்புவதற்கு முன்பாக பத்திரிகையாளர்களையும் சந்தித்தனர். பத்திரிகையாளர் சந்திப்பில், பிரேமதாசா-புலிகள் சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து விளக்கினார்கள். அமைதிப்படை வெளியேற்றம்-அதன் பின்னர் வரப்போகும் நிகழ்வுகள் குறித்து விளக்குகையில், அமைதிப்படையுடன் கைகோர்த்தவர்களின் ஆட்சி தானே போய்விடும் என்று நம்புவதாகவும், அந்த ஆட்சி என்பது மாபெரும் மோசடித் தேர்தல் மூலம் அமைக்கப்பட்டது என்றும், அந்த ஆட்சி என்பது தமிழீழ மக்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும் பாலசிங்கம் தெரிவித்தார்.இலங்கையில் அமைதி திரும்பிய சூழ்நிலை நிலவியது. தெற்கில் ஜே.வி.பி.யினரை பிரேமதாசா கட்டுப்படுத்தியிருந்தார். சிங்களப் படைகளுக்கும் புலிகளுக்கும் மோதல் எதுவும் நிகழாத நிலையில், அமைதிப்படையும் நாடு திரும்புவதற்குண்டான முயற்சிகளில் தீவிரம் காட்டியதால், வடக்கிலும் மோதல் இல்லை. அமைதிப்படை வெளியேறிய பிறகு அந்த நிலைகளை, புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். பேச்சுவார்த்தை என்பது தற்சமயம் இலங்கை அதிபருக்கும் புலிகளுக்குமான பேச்சுவார்த்தையாக நடந்து கொண்டிருந்தது. அதிபரின் சார்பாக அமைச்சர் ஹமீது அவ்வப்போது பாலசிங்கம் குழுவினரைச் சந்தித்து நிலைமைகளை விளக்கிக் கொண்டிருந்தார். புலிகள் அப்போது இரு கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஒன்று, ஈபிஆர்எல்எஃப் தலைமையிலான வடக்கு-கிழக்கு மாகாண கவுன்சிலைக் கலைக்கவேண்டும் என்பதாகும். அடுத்து, வரப்போகும் மாகாண கவுன்சிலில் புலிகள் பங்கேற்க வகை செய்யும் விதமாக இலங்கை அரசமைப்பின் 6-வது சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறுவது. 6-வது சட்டத் திருத்தம் என்பது, இலங்கையில் 1978-ஆம் ஆண்டில், ஜெயவர்த்தனா அரசால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சட்டத் திருத்தமாகும். அதன்மூலம் ஒற்றையாட்சி வலியுறுத்தப்பட்டதுடன், நாட்டைத் துண்டாடும் போக்கும் தடுக்கப்பட்டது. அத்துடன், பிரிவினை கோருபவர்களின் அமைப்பு தடை செய்யப்படும் என்றும் அவ்வமைப்பில் அங்கம் வகிப்போரின் அடிப்படை உரிமைகளான குடியுரிமை, வாக்களிக்கும் உரிமை மற்றும் பேச்சு, எழுத்துச் சுதந்திரம் யாவும் ரத்து செய்யப்பட்டது. மேலும் அந்த நபரின் சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் இந்தத் திருத்தம் வகை செய்தது. அது மட்டுமன்றி, இலங்கை அரசால் நடத்தப்படும் தேர்தலில் பங்குபெறுவதற்கு முன்பாக ஒற்றையாட்சி அரசுக்கு விசுவாசப் பிரமாணம் மேற்கொள்ளவேண்டும் என்ற விதியும் இதில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இவ்விதியே தற்போது விடுதலைப் புலிகளுக்கு இடைஞ்சலாக அமைந்தது. ஒற்றையாட்சி அரசுக்கு விசுவாசம் தெரிவித்து, பிரமாணம் ஏற்க விடுதலைப் புலிகள் தயாராக இல்லையென ஹமீதிடம் தெரிவித்தனர். சுயநிர்ணய உரிமைக்குப் போராடும் புலிகளுக்கு இந்த விதி அவமானகரமானதாகும் என்றும், சகல உரிமைகளையும் பறிக்கும் இந்த 6-வது சட்டத்திருத்தம் வாபஸ் பெறப்பட்டால்தான், தேர்தலில் தங்களால் பங்கேற்க முடியும் என்றும், புலிகள் தரப்பில் வாதிடப்பட்டது. தங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை, அடிப்படையான உரிமையென்றும், இதை உலகெங்கிலும் உள்ள நாடுகளில் காணமுடியும் என்றும் இப்படி வலியுறுத்துவது பிரிவினை ஆகாது என்றும், புலிகள் விளக்கினர். "ஒருவர் தனது அரசியல் எதிர்காலத்தைத் தேர்வு செய்யும் உரிமையைத் தடை செய்யும் 6-வது சட்டத்திருத்தம் ஒழிக்கப்படாவிட்டால், விடுதலைப் புலிகள் மக்களாட்சி அரசியல் நீரோட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்றும் தேர்தலில் பங்கெடுக்கமாட்டார்கள்' என்றும் பிரேமதாசாவிடம் புலிகள் தெரிவித்தனர் (ஆதாரம்: சுதந்திர வேட்கை.அடேல் பாலசிங்கம், பக்.336-337).பிரேமதாசாவைப் பொறுத்துவரையில், விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளில் வடக்கு-கிழக்கு மாகாண கவுன்சில் நிர்வாகத்தைக் கலைப்பது என்பது நடக்கக்கூடியதுதான். ஆனாலும், அதற்குத் தகுந்த காரணம் வேண்டும். ஒரு மாகாண அரசைக் காரணமின்றி கலைக்க, 13-வது திருத்தச் சட்டம் தடுக்கும். எனவே, அமைதிப்படை வெளியேற்றத்துக்குப் பிறகு அந்த நிர்வாகத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி தானாக ஏற்படுவதையே பிரேமதாசா விரும்பினார். அதனால், பிரேமதாசா அந்த விஷயத்தில் ஆர்வமற்றவராக இருந்தார். 6-வது சட்டத்திருத்தத்தை வாபஸ் பெறுவது என்பதோ அவரால் நினைத்துப் பார்க்கவும், கோரிக்கையை நிறைவேற்றவும் முடியாதவராக இருந்தார். காரணம் இந்தச் சட்டத்திருத்தம் என்பது சிங்களத் தீவிரவாதிகளைச் சமாதானப்படுத்தவென்றே ஜெயவர்த்தனாவால் உருவாக்கப்பட்டதாகும். அந்தச் சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற்றால், சிங்களப் பேரினவாதிகளால் ஏற்படப்போகும் எதிர்ப்பை சமாளிப்பது எப்படி என்பதே அவரது சிந்தனையாக இருந்தது. மேலும். பிரேமதாசா அடிப்படையில் ஒற்றையாட்சி என்பதில் நம்பிக்கை கொண்ட சிங்கள தேசியவாதியாவார். அதுமட்டுமன்றி, சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறக்கூடிய அளவுக்கு நாடாளுமன்ற அவையில் அவருக்குப் பெரும்பான்மையுமில்லை. எனவே, மற்ற கட்சிகளின் தயவை நாடுவதில் உள்ள சிரமமும் அவரை நோகவைத்தது. இக் காரணங்களால் விடுதலைப் புலிகளின் 6-வது சட்டத் திருத்தம் வாபஸ் என்ற கோரிக்கை அவருக்கு வெறுப்பூட்டியது. எப்பாடுபட்டாவது விடுதலைப் புலிகளை ஜனநாயக வழிக்குத் திருப்புவது என்ற அவரின் விருப்பம், நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பதைப்பும் அவரிடம் இருந்ததால், தனது கோபத்தை வெளிக்காட்டாதிருந்தார். ஆகவே, இந்தப் பிரச்னை பேச்சுவார்த்தைக்கு ஒரு முட்டுக்கட்டையாக இருந்ததால், மேற்கொண்டு எந்தப் பேச்சும் நிகழாதவாறு அது தடுத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக