சனி, 28 நவம்பர், 2015

பிரித்தானியத் தமிழ்ப்பேரவையின் பாராட்டிற்குரிய ஈழம்சார் செயற்பாடுகள்

பிரித்தானியத் தமிழ்ப்பேரவையின் பாராட்டிற்குரிய ஈழம்சார் செயற்பாடுகள்

முத்திரை-பிரித்தானியத்  தமிழர் பேரவை:muthirai-britaniyathamizhperavai தலைப்பு-பிரித்தானியத்  தமிழர் பேரவை : thalaippu_bnrithaniyathamizharperavai
  கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இலங்கையில் தமிழருக்கு எதிராகச் சிறிலங்கா அரசாங்கங்களால் திட்ட மிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்புக்கு எதிராகத் தமிழர் தரப்பு நீதி கேட்டுத் தாம் வாழும் நாடுகளில் போராடி வருகின்றார்கள்.
  அந்த வகையில் பிரித்தானியாவில் பிரித்தானியத் தமிழர் பேரவையினால் பெரும் மக்கள் போராட்டங்கள் தொடந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்போராட்டங்களின் ஒரு வடிவமாகப் பிரித்தானியாவில் தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளின் தத்தமது பாராளுமன்ற உறுப்பினர்களை அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகச் சந்தித்துவருகின்றார்கள்.
  இச் சந்திப்புக்களின்போது அண்மையில் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் கூட்டத் தொடரின் 30ஆவது அமர்வில் அமெரிக்காவினால் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானம்  தொடர்பாக ஈழத்தமிழர் நலனில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி வலியுறுத்தினர். இத்தீர்மானத்தை இறுதியில் இலங்கையும் சூட்சுமமாக ஆதரித்தது. இத்தீர்மானத்தை முன்னெடுத்த நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. இத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள பொது நலவாய நாடுகளின் நீதிபதிகளும், வெளிநாட்டு நீதிபதிகளும் உள்ளிணைக்கப்படுகின்ற ஐ.நா. விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள செய்திகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இதில் பன்னாட்டுப் பொறிமுறை மற்றும் பன்னாட்டுக் கண்காணிப்பு என்பதும் மிகவும் குறைவாகவே காணப்படுவதனால் இத் தீர்மானத்தை இலங்கை தனக்கு சாதகமாகப் பயன்படுத்த உள்ளது.
  ஆகவே விசாரணையின் நம்பகத் தன்மையை உருவாக்குவதற்கு நீதியான விசாரணையை மேற்கொள்வதற்குரிய உள்நாட்டு, வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள், விசாரணையாளர்களை நியமிப்பதில் பிரித்தானியா பெரும் பங்கு வகிக்க வேண்டும். விசாரணையின் போது சான்றுரைஞர்களின் பாதுகாப்பும், அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாவண்ணம் இயல்பு நிலையில் அவர்களது சான்றுரைகள் வழங்கப்படவேண்டும் என்றும் தம் கோரிக்கைகளை மக்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்வைத்தார்கள்.
  அத்துடன் வடகிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுதல்: குறிப்பாக இலங்கையின் எண்பது வீதமான இராணுவம் போருக்குப் பின்னரான காலப்பகுதியிலும் தமிழர் தாயகத்தில் தொடர்ந்து நிலை கொண்டிருப்பதால் இராணுவ நெருக்குவாரத்திற்குள் மீள் குடியேற முடியாமல் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
 தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் சிங்களக் குடியேற்றம், கட்டாயக் கருக்கலைப்பு, பாலியல் வன்முறைகள், உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டிருக்கும் நிலங்கள் இது அனைத்தையும் தடுத்து நிறுத்துவதற்கான கோரிக்கைகளைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தி வருகிறார்கள் பிரித்தானியத் தமிழர் பேரவையினர்.
 இந்த வகையில் எடுமண்டன்(Edmonton) பாராளுமன்ற உறுப்பினர் கத்தே ஒசாமர்( Kate Osamor MP) அவர்களையும், தூட்டிங்கு(Tooting) பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புசால் சாதிக்குக்கான்(Rt Hon Sadiq Khan MP)  அவர்களையும்,  ஓல்வர்ஆம்பிடன் வ/கி (Wolverhampton N/E) பாராளுமன்ற உறுப்பினர்  எம்மா இரெனால்டு(Emma Reynolds MP ) அவர்களையும், ஓல்வர் ஆம்பிடன் தெ/கி Wolverhampton S/E) பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புசால் பேட்டு மெஃபாடென் (Rt Hon Pat Mcfadden) அவர்களையும், கிழக்கு ஃகாம் (East Ham) பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புசால் இசுதீபன் திம்சு(Rt Hon Stephen Timms MP) அவர்களையும், தார்ட்டுஃபோர்டு (Dartford)  பாராளுமன்ற உறுப்பினர்  கரேத்து இயேன்சன் (Gareth Johnson MP) அவர்களையும்,  ஐல்ஃபோர்டு வடக்கு(Ilford North)  பாராளுமன்ற உறுப்பினர் வெசுசிரீட்டிங்கு(Wes Streeting MP)அவர்களையும், அபெர்தீன் வடக்கு (Aberdeen North) பாராளுமன்ற உறுப்பினர் கிருத்தி பிளாக்மேன் (Kirsty Blackman) அவர்களையும் நேரடியாகச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தார்கள். இதற்குப் பிரித்தானியத் தலைமையாளருடனும் (தலைமையமைச்சருடனும்) வெளியுறவுச் செயலகத்துடனும் பேசி இக் கோரிக்கைகளுக்கு ஏற்ற சாதகமான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்திருந்தார்கள்.
  முன்னதாக அண்மையில்  அரோ மேற்கு(Harrow West) பாராளுமன்ற உறுப்பினர் கரேத்துத்தாமசு(GarethThomasMP)அவர்களையும்,விம்பிள்தன்(Wimbledon) பாராளுமன்ற உறுப்பினர் இசுதீபன் ஆம்மண்டு (Stephen  Hammond MP)  அவர்களையும், இலீவிசம் கிழக்கு( Lewisham East) பாராளுமன்ற உறுப்பினர் எய்தி அலெக்சாண்டர்( Heidi Alexander MP)  அவர்களையும் மில்தன் கெயினசு(Milton Keynes) பாராளுமன்ற உறுப்பினர் மார்க்கு இலான்செசுடர் (Mark Lancaster MP)  அவர்களையும்  நேரடியாகச் சந்தித்து தமது கோரிக்கைகளை தெரியப்படுத்தியிருந்தனர். இதன்பொழுது மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாகத் தாம் நிலையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதிமொழி அளித்திருந்தனர்.
 தொடர்ந்தும் ஏனைய பகுதி களிலும் இச் சந்திப்புக்கள் இடம்பெறுவதால் மேலும் எம் உறவுகளின் ஒத்துழைப்புக்ளையும் பிரித்தானியத் தமிழர் பேரவையினர் வேண்டி நிற்கின்றனர்.

படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக