வெள்ளி, 3 மே, 2013

குடிநீருக்காக அலைவதா!

குடிநீருக்காக அலைவதா!

கோடையில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டால், நீர் வியாபாரமாக மாறுவதை விவரிக்கும், விருதை காந்தி: நான், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் தொழிலாளர் சம்மேளனத்தின் செயலராக பணியாற்றுகிறேன். உலகின் மொத்த நீர் பரப்பில், 2 சதவீத நீர் மட்டுமே குடிக்க உகந்தது. கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, கடந்தாண்டு இந்தியாவில் மட்டும், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு குடிநீர் விற்பனை நடந்துள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும், 5,000 கோடி.கடந்த, 1990களில், "குடிநீரை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யக் கூடாது; பாட்டில்களின் மீது, "மினரல் வாட்டர்' என்று எழுதக் கூடாது' என்று, உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டிருந்தாலும், யாரும் பின்பற்றவில்லை. பன்னாட்டு கம்பெனிகள், இந்திய நீர்நிலைகள் மீது குறி வைத்துள்ளதால், வணிக சுரண்டல்கள் அதிகரித்து விட்டன.தென் தமிழகத்தின் குடிநீர் ஆதாரமான தாமிரபரணியில், பல பன்னாட்டு கம்பெனிகள், தண்ணீரை உறிஞ்சுகின்றன. காவிரி, பாலாறு, தென்பெண்ணை, வைகை என, அனைத்திலும், அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதால், மழை நீரானது, ஆற்று மணல் மூலம், நிலத்தடி நீராக உறிஞ்சப்படாமல், கடலில் கலந்து வீணாகிறது.சிறிதளவு சேமிக்கப்பட்ட நிலத்தடி நீரும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அலட்சியத்தால், தொழிற்சாலையின் கழிவுநீர், நிலத்தடி நீரில் கலந்து, குரோமியம் அதிகரிப்பதால், சிறுநீரக பாதிப்பு, ரத்தக் கொதிப்பு, புற்றுநோய் போன்றவை ஏற்படுகின்றன. நைட்ரேட், புளோரைடு அதிகரிப்பதால், நீரை குடிப்பவர்களின் பற்களில் கரையும், எலும்பு பலவீனமும் ஏற்படும்.
நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்கும் சட்டம் இருந்தும், பொதுச் சொத்தான தண்ணீரை, கேன்களில் அடைத்து, விற்பனை செய்வது தொடர்கிறது. மரங்களை அதிகமாக வளர்த்து, அதனால் கிடைக்கும் மழை நீரை சேகரித்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதன் மூலம், குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க முடியும். இல்லையேல், வருங்கால தலைமுறையும், குடிநீருக்கு அலையும் அவலம் தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக