திங்கள், 10 டிசம்பர், 2012

உலக ஊழல் ஒழிப்பு நாள்

எப்படித் தடுப்பது எனக் குறிக்கப்பட்டுள்ள செய்திகள்  குழந்தைத்தனமாக உள்ள. இப்பொழுதும்  இதில் குறிப்பிட்ட நடவடிக்கைள் உள்ளன. மக்கள் ஊழலுக்குப் பழகிவிட்டனர். போட்டிப்போட்டுக் கொண்டு பணம் தந்து வேண்டியதை முடிக்கத்தான் முந்துகின்றனரே தவிர நேர்மையாய் ஒன்றை அடைய எண்ணுவதில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியும் பொழுது ஊழல் பெருமளவு குறையும். கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும்  கட்டணமின்றிக் கிடைக்க வேண்டும். பிற நாடுகளில் தவறு செய்யக் கையூட்டு பெறுகின்றனர். நம் நாட்டில் கடமையை ஆற்றக் கையூட்டு பெறுகின்றனர். ஊழலால் உயர்ந்தவ்ர்களை மக்கள் போற்றும் நிலையும் உள்ளது. ஒருவர் எவ்வளவுதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் குறுக்கு வழியில்   முன்னேறியவர் எனில் மக்கள் அவரைப் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு பாராமுகமாக இல்லாமல் ஊழல் பெருச்சாளிகளைப் போற்றவே செய்கின்றனர். இந்த அவல நிலையும் மாற வேண்டும். கீழ்நிலையில் ஊழல் நடைபெற்றால் மேல்நிலையில் உள்ளவர்களைப் பொறுப்பாக்கித் தண்டனை வழங்க வேண்டும். மேல் நிலையில் உள்ளவர்கள் தவறு செய்தால் அமைச்சர்களையும் அமைச்சர்கள் தவறு செய்தால் முதல் அமைச்சரையும் முதல் அமைச்சர் தவறு செய்தால் ஒட்டு மொத்த அமைச்சரவையையும் தண்டிக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

சமுதாயத்தை அரிக்கும் புற்றுநோய் -இன்று  உலக  ஊழல் ஒழிப்பு நாள்

இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஆபத்தாக இருக்கக்கூடிய பிரச்னைகளில் முதலிடத்தை பிடித்திருப்பது ஊழல். இது நாட்டின் பொருளாதார, சமூக, அரசியல் முன்னேற்றத்தையே பாதிக்கக் கூடியது.

ஊழல் ஒரு கடுமையான குற்றம். ஊழல் பரவாமல் தடுக்கக்கூடிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக டிச., 9ம் தேதி, சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனங்களில் ஊழல் பரவி விட்டது. அரசின் திட்டங்களில், கோடிக்கணக்கில் உயர்ந்து விட்டது.

எது ஊழல் ?

பொது சொத்தை, தனியாரின் கைகளுக்கு போக விடுவது; அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது; விதிகளை மீறுவது; கடமையை செய்ய ஆதாயம் எதிர்பார்ப்பது ஆகியவை தான் ஊழல். இது பல வழிகளில் நடக்கிறது. லஞ்சம் வாங்குவதை அதிகாரிகள், தொழிலாக செய்கின்றனர். மக்களும் அதற்கு பழகி விட்டனர். லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் இருந்தாலும், இதனால் தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவு.கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, லைசென்ஸ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெற லஞ்சம் ஒரு தடைக்கல்லாக மாறிவிட்டது. அரசு, ஒரு திட்டத்தை உருவாக்கினால் அதை செயல்படுத்துவது, அதிகாரிகளின் கைகளில் உள்ளது. அதிகாரிகளே தவறு செய்யும் போது, மக்களின் வரிப்பணம், ஊழல் என்ற பெயரில் தனிநபரின் பாக்கெட்டுக்கு செல்கிறது.
எப்படி தடுப்பது ?


ஒவ்வொரு அரசு அலுவலங்களிலும், லஞ்ச ஒழிப்பு துறையினரின் முகவரி, தொலைபேசி எண்களை தெளிவாக குறிப்பிட வேண்டும். பொது இடங்களிலும் இதனை விளம்பரப்படுத்தலாம். அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், மக்கள் தைரியமாக புகார் செய்ய வேண்டும். லஞ்சம் வாங்கி கைது செய்யப்படும் அதிகாரிகளுக்கு, கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். அதன் விவரத்தையும் பொது இடங்களில் விளம்பரப்படுத்த வேண்டும். ஊழல் செய்தவர்களின் சொத்துகளை அரசுடமையாக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக