வியாழன், 13 டிசம்பர், 2012

நாடாளுமன்றத் தாக்குதல் : நாடு புறக்கணித்த வீர மங்கை

நாடாளுமன்றத் தாக்குதல் : நாடு புறக்கணித்த வீர மங்கை

நாடாளுமன்ற தாக்குதலின் போது உயிரை பணயம் வைத்து காவலர் ஒருவரைக் காப்பாற்றிய வீர மங்கை ராதா சௌஹான் தற்போது துப்புரவுத் தொழிலாளியாக உள்ளார்.
தங்களது தனித்தன்மையால் பாராட்டுதலுக்கும், சலுகைகளுக்கும் உரியவர்கள் புறக்கணிக்கப்படுவது வழக்கமான விஷயம்தான். அப்படி புறக்கணிக்கப்பட்டவர்தான் ராதா சௌஹான் (35),
சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு, 2001ஆம் ஆண்டு இதே டிசம்பர் 13ம் தேதி, நாடாளுமன்றத்துக்குள் தாக்குதல் நடத்தப்பட்ட போது, வாசலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார் ஹோம் கார்ட் ராதா சௌஹான். தீவிரவாதிகள் காரில் கேட்டை இடித்துக் கொண்டு நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து துப்பாக்கியால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியபோது, தனது உயிரையும் பொருட்படுத்தாமல், ஓடிச் சென்று, தீவிரவாதிகளின் தாக்குதலைக் கவனிக்காமல், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர் கமலேஷ் யாதவை  இழுத்து கீழே படுக்க வைத்தார். அதைப் பார்த்த பல வீரர்கள் உடனடியாக கீழே படுத்து தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். இந்த தாக்குதலின் போது காயமடைந்த ராதா சௌஹான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
சில நாட்களுக்குப் பிறகு பணிக்குத் திரும்பிய ராதா சௌஹானுக்கு அளிக்கப்பட்ட பதில், உங்களது பணிக்காலம் முடிவடைந்துவிட்டது. நீங்கள் வீட்டுக்குப் போகலாம் என்பதுதான்.  மேலும், தாக்குதலின் போது உயிரிழந்தவர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுவிட்டது.
அவரும் பல அதிகாரிகளையும், முதல்வர்களையும், கட்சித் தலைவர்களையும் சந்தித்து தனக்கு வேலை அளிக்க வலியுறுத்தினார். ஆனால் ஒரு பயனும் இல்லை. தற்போது அவர் தனது கணவரை இழந்து, துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்தியாவின் பல்வேறு துறைகளில், சாதனைகள் படைத்த பல முகம் தெரியாத வீரர், வீராங்கனைகளுக்கு அளிக்கப்பட்ட புறக்கணிப்பு மட்டுமே இவருக்கும் கிட்டியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக