திங்கள், 10 டிசம்பர், 2012

90% இந்தியர்கள் முட்டாள்கள்; எளிதில் சமயத்தின் பெயரால் ஏமாற்றலாம்.

"90 சதவித இந்தியர்கள் முட்டாள்கள்' : நீதிபதி கட்சு
புதுதில்லி: ""நாட்டின், 90 சதவீத இந்தியர்கள், முட்டாள்கள். மதத்தின் பெயரால் அவர்களை, சமூக விரோத சக்திகள் எளிதில் ஏமாற்றி விடுகின்றன,"" என, பிரஸ் கவுன்சில் தலைவர், நீதிபதி, மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த, கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்ற, நீதிபதி கட்ஜு, 66, கூறியதாவது:

நாட்டில் உள்ள மக்களில், 90 சதவீதம் பேர் முட்டாள்கள் என்று, உறுதியாக சொல்வேன்; அவர்கள் தலையில் மூளை கிடையாது; அவர்களை எளிதாக ஏமாற்றி விடலாம்.வெறும், 2,000 ரூபாய் இருந்தால் போதும், டில்லியில் பெரிய மதக்கலவரத்தை ஏற்படுத்திவிடலாம்; தவறாக சைகை காண்பிப்பதன் மூலமும், பிற மதத்தவரின் வழிபாட்டு இடங்களை, அவமரியாதை செய்வதன் மூலமும், எளிதில் மத கலவரத்தை ஏற்படுத்தி விடலாம்.

அந்தத் தகவல் தெரிந்ததும், முட்டாள் ஜனங்கள், ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வர். இந்தச் செயலுக்கு பின்னால், சில சமூக விரோத சக்திகள் இருக்கிறது என்பதை, அவர் கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

பின்தங்கி விட்டோம்:

நாட்டில், 1857ம் ஆண்டிற்கு முன், மதக் கலவரமே கிடையாது; மதத்தின் பெயரால், சண்டையிட்டுக் கொண்டதே கிடையாது. ஆனால், இப்போது நிலைமையை யோசித்து பாருங்கள். 80 சதவீத இந்துக்கள், மத உணர்வுடன் உள்ளனர்; அதுபோலவே, 80 சதவீத முஸ்லிம்களும் மத உணர்வுடன் உள்ளனர்.இதனால், நாம், 150 ஆண்டுகள் முன்னேறிச் செல்வதற்குப் பதிலாக, 150 ஆண்டுகள் பின்தங்கி விட்டோம். இதற்கு காரணம், ஆங்கிலேயர்கள் தான். அவர்கள் தான், மக்கள் மனதில் விஷத்தை பாய்ச்சி விட்டனர். சிப்பாய் கலகம் நடந்த, 1857ம் ஆண்டில், லண்டனில் இருந்த சில சக்திகள், "இந்தியர்களை இப்படியே விட்டால் சரிப்பட்டு வர மாட்டார்கள்' என கருதி, இந்தியர்களை பிரித்தாழ, மதம் என்ற வார்த்தையை பயன்படுத்தத் துவங்கின. அதன் மூலம், இந்துக்களையும், முஸ்லிம்களையும் அடித்துக் கொள்ளச் செய்தனர்.
இந்தி மொழி, இந்துக்களுக்கும், உருது மொழி, இஸ்லாமியருக்கும் என, தவறாக பிரசாரம் செய்யப்பட்டது; அதையும், உண்மை என நம்பி, ஏராளமானோர், இன்னும் மோதிக் கொள்கின்றனர்.

ஆனால், நம் முன்னோர்களில் ஏராளமானோர், உருது மொழி படித்துள்ளனர்; இங்கு, மக்களை முட்டாள் ஆக்குவது எளிது; நிறைய பேர் முட்டாள்களாக இருப்பதால், அவர்கள் பிறரை எளிதாக முட்டாள் ஆக்கிவிடுகின்றனர்.இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இனிமேலாவது உண்மையை உணர்ந்து, முட்டாள்களாக இருக்க வேண்டாம் என்பதற்காகத் தான்.இவ்வாறு, கட்ஜு பேசினார்.
வித்தியாசமானவர்:

மார்க்கண்டேய கட்ஜு, 2004ல், சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர்; அதற்கு பின், 2006ல், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். கடந்த ஆண்டு, அக்., முதல், "பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா'வின் தலைவர் பொறுப்பில் உள்ளார். தனக்கு நியாயம் என தெரிந்ததை, அப்படியே சொல்வதிலும், நியாயமானதை செய்வதிலும், கட்ஜு வித்தியாசமானவராக திகழ்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக