சனி, 15 டிசம்பர், 2012

அமெரிக்காவில் பயங்கரம்: 27 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கிச்சூட்டில் 18 குழந்தைகள் உட்பட 27 பேர் சுட்டுக்கொலை

நியூயார்க்: அமெரிக்காவின் கானிக்டிகட் பகுதியில் கிண்டர்கார்டன் பள்ளியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 குழந்தைகள்உட்பட 27 பேர் பலியானதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் சட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

கானிக்டிக்ட் பகுதியில் உள்ள சான்டி ஹூக் பள்ளியில் , 20 வயது மதிக்கத்தக்க அந்த நபர் இரண்டு துப்பாக்கிகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தினான். அவனும் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. அந்த நபர் குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவம் அந்நாட்டு நேரப்படி 9.27 என தெரிகிறது.

இதனையடுத்து மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், கவர்னர் சூழ்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், போலீசாருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த போலீசார், அங்கு உயிருடனுள்ள மாணவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் எத்தனை குழந்தைகள் காயமடைந்துள்ளனர் என்பது பற்றி தெரியவில்லை.

சம்பவ இடத்திலிருந்து மாணவர்கள் பயத்தில் கதறியபடி பலத்த பாதுகாப்புடன் வெளியேறும் காட்சிகளை அந்நாட்டு டிவிக்கள் ஒளிபரப்பின. இந்த சம்பவம் குறித்து அறிந்த பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். அதிகாரிகள் தொடர்ந்து பள்ளியை சோதனை செய்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு 223 காலிபர் ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தங்களை பள்ளியிலிருந்து வெளியேற்றும் முன்னர், ஒவ்வொரு மாணவரையும் போலீசார் தீவர சோதனை செய்ததாக மாணவர் ஒருவர் கூறினார்.

போலீசாருக்கு உதவ மீட்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். ஆயுதங்களுடன் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களும் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஒபாமா இரங்கல்: 18 குழந்தைகள் உட்பட 27 பேர் பலியான சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,இந்த துயரமான சம்பவத்திற்கு அதிபர் சார்பாகவும், எனது சார்பாகவும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறினார்.

மேலும் அவரிடம், அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் கட்டுப்படுத்தப்படுமா என கேட்டதற்கு, இது பற்றி விவாதிக்க இது சரியான நேரமல்ல என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக