வியாழன், 17 பிப்ரவரி, 2011

dinamani article about prohibition: அறியா சனமும், அரியாசனமும்!

௧௪௦௦௦ கோடி வருவாயில் நலத்திட்டச் செலவுகளுக்கே ௧௦௦௦௦ ஆயிரம் கோடி உரூபாய் சென்று விடும். மக்களிடம் பிடுங்கி அதில் ஒரு பகுதியை மக்களிடம் தருவதை விட அதனைத்தராமலேயே  இருக்கலாம். மதுவினால் பிளவு படும் குடும்பங்கள் ஏராளமாக உள்ளன. மகனை இழந்த, கணவனை இழந்த, தந்தையை  இழந்த குடும்பங்களும் மிகுதியாக உள்ளன. எனவே,
அரசு மது ஒழிப்பில்தான் கவனம் செலுத்த வேண்டும். இன்றைக்குப் பா.ம.க. மட்டுமே மது விலக்கு பற்றித்  தொடர்ந்து பேசிவருகிறது. அதனைக்கட்சி சார்பற்ற மக்கள் இயக்கமாக அக்கட்சி மாற்ற வேண்டும். குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்தை அடியோடு வேரறுப்போம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அறியா ஜனமும், அரியாசனமும்!


டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுபானங்களை விற்ற வகையில் தமிழக அரசுக்கு இவ்வாண்டு ரூ. 14,152 கோடி கிடைக்கும் என்றும், இது கடந்த ஆண்டைவிட ரூ. 3 ஆயிரம் கோடி அதிகம் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  இத் தொகை மாநில மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்தவே செலவழிக்கப்படுகிறது என அரசு தொடர்ந்து தெளிவாகக் கூறிவருகிறது. மது குறித்துப் பேசினால் மெüனத்தையே பதிலாக்குகிறது. எது நல்லது என மக்களுக்குக் காட்ட வேண்டிய அரசு, மது நல்லது எனக் கூறுவதைப்போல இருக்கிறது. இத்தகைய செயலுக்கும், மானத்தை விற்று உடலில் பட்டாடைகளும், பகட்டான நகைகளும் அணிந்துகொள்ளும் செயலுக்கும் அதிக வேறுபாடில்லை என்பதே உண்மை.  தெருவெங்கும் தமிழ் முழக்கம் வேண்டும் என்றார் பாரதி. தமிழ் மீது தீராத பற்று எனக் கூறிக் கொள்வோர் ஆட்சியிலோ தெருவெங்கும் மது முழக்கமே கேட்கிறது!  அரசின் இலவசத் திட்டங்களால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஏதேனும் ஒரு விதத்தில் பயனடைகிறது என ஆட்சியாளர்கள் அறிக்கை வெளியிட்டு அகமகிழ்ந்து கொள்கிறார்கள். அதை முழுக்க முழுக்க உண்மை எனக் கொண்டால், டாஸ்மாக் மதுக்கடைகளால் எத்தனை குடும்பங்கள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன என அறிவிக்க அவர்கள் முன்வருவார்களா?  குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் உழைப்பதால் கிடைக்கும் பொருளைச் சேர்த்து வைத்தால்தான் அக் குடும்பம் பொருளாதாரரீதியாக முன்னேற்றம் அடைந்ததாகக் கூற முடியும். மாறாக கிடைக்கும் ஊதியத்தைச் செலவழித்து ஆண் உறுப்பினர்களைக் குடிக்கவைத்து அழிவை நோக்கி அழைத்துச் செல்வதும், பெண்களை பொருளாதாரத்தில் முன்னேற்றிவிட்டோம் என பெருமைப்பட்டுக் கொள்வதும் முறைதானா என்பதை ஆட்சியாளர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.  குடும்பத்தின் ஆண் உறுப்பினரிடமிருந்து நிரந்தரமாகப் பறிக்கப்படும் பெரும் தொகையில் ஒரு சிறு பகுதியை அக் குடும்பத்தின் பெண் உறுப்பினர்களுக்குக் கடன் என்ற பெயரிலோ, நலத்திட்ட உதவி என்ற பெயரிலோ, இலவசம் என்ற பெயரிலோ வழங்குவதில் என்ன சிறப்பு? வைரங்களை வலுக்கட்டாயமாகப் பறித்துக் கொண்டு கூழாங்கற்களைக் கொடுத்து குஷிப்படுத்துவதுபோலத்தானே!  ஆண்கள் மது குடித்துவிட்டுத் தன்னினைவு இழந்து விழுந்துகிடக்க, அவர்களின் மனைவிகளை பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையச் செய்துவிட்டோம் என வீதிக்கு வீதி முழங்கிக் கொள்வதில் என்ன நன்மை கண்டது அரசு? ஒரு கண்ணைக் குருடாக்கி மறுகண்ணுக்கு மை அலங்காரமா?  தன் தந்தையோ, சகோதரனோ, கணவரோ இந்த ஆண்டாவது குடிப்பழக்கத்தை நிறுத்துவாரா என குடும்ப உறுப்பினர்கள் கவலையும் கண்ணீருமாய் இருக்க, மது விற்பனை தங்குதடையின்றி நடைபெற்று இலவசத் திட்டங்களைச் செயல்படுத்த இந்த ஆண்டும் கஜானா வழக்கத்தைவிட கூடுதலாய் நிரம்பி வழிய வேண்டும் என நினைத்து அதற்கான அத்தனை கதவுகளையும் திறந்துவைப்பதா பொறுப்பான அரசின் பணி?  அமோகமான மது விற்பனையும் உண்டு. மது குடித்துவிட்டு வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி குற்றுயிரும் குலையுயிருமாய் வீதிகளில் கிடந்தால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு ஏற்றிச் செல்ல 108 ஆம்புலன்ஸ் சேவையும் உண்டு.  தன் குடும்பத் தலைவனின் நிலைமையையும், குடும்பத்தின் நிலையையும் நினைத்துப் பார்த்து ரத்தம் கொதித்து பல்வேறு நோய்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் உள்ளானால் வீட்டுக்கே வந்து அவர்களைப் பரிசோதனை செய்ய நலமான தமிழகம் திட்டமும் உண்டு. இது, பிள்ளையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலை ஆட்டும் முயற்சியா, பிரச்னைகளை ஏற்படுத்திவிட்டு தீர்வு சொல்லும் முயற்சியா?  மது விற்ற தொகையில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம், போனஸ், பலவித படிகள் என ஆயிரக்கணக்கில் அள்ளிக் கொடுக்கும் அரசு, மது குடித்துச் சீரழியும் ஏழைகளின் குடும்பங்களுக்கு ஒரு ரூபாய் அரிசி போதும் என நினைத்திருப்பதுபோலத் தோன்றுகிறது.  தேர்தலில் தோற்றுவிட்டால் தமிழக மக்களை "சோற்றால் அடித்த பிண்டங்கள்' என வர்ணித்து வயிற்றெரிச்சலைத் தணிப்பது சிலரது குணம். இப்போது அவர்கள் ஏழைகளை "அரிசியால் அடித்த பிண்டங்கள்' என நினைத்துக் கொண்டார்கள்போலும்!  பொன்னை வைக்கும் இடத்தில் பூவை வைக்க வேண்டும் என்பார்கள். ஆட்சியாளர்களோ, கள் இருந்த இடத்தில் டாஸ்மாக் மதுவை வைத்துவிட்டு, பொதுமக்களின் காதுகளில் பலவித இலவசங்கள் என்னும் பூவை வைக்க முயல்கிறார்கள்.  ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை மது மட்டுமல்ல, இலவசங்களும் ஒருவித போதைதான். அதனால்தான் இரண்டையும் நிறுத்தாமல் இன்னும் வாரி வழங்குவேன் என்கிறார்கள்.  எதையாவது பெற்று, வாக்குகளை விற்று இன்றைய பொழுதைக் கழித்தால் போதும் என்ற மன நிலைதான் இன்றைக்கு மக்களிடமும் நிலவுவதாகத் தெரிகிறது.  எது சொன்னாலும் நம்பிக்கொண்டு, மதுவுக்கு அடிமைப்பட்ட ஆண்களும், எலும்புத்துண்டு இலவசங்களுக்கு அடிமைப்பட்ட பெண்களும் எனப் பெரும்பான்மையான அறியா ஜனங்கள் இருக்கும் வரைதான், அரியாசனங்கள் தங்கள் குடும்பச் சொத்தாகவும், ஏகபோக உரிமையாகவும் இருக்கும் என்பது ஆட்சியாளர்களின் கணக்கு. அறியா ஜனங்கள் உண்மைகளை அறிந்து, சரியான ஜனங்களாக மாறினால்தான் அரியாசனங்கள் நாட்டு மக்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்யும் சரியாசனங்களாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக