திங்கள், 5 ஜூலை, 2010

மேலவையில் பிரதிநிதித்துவம்: பிராமணர் சங்கம் கோரிக்கை





அம்பாசமுத்திரம், ஜூலை 4: தமிழக மேலவையில் பிராமணர் சமுதாயத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என, தமிழ்நாடு பிராமணர் சங்க மாநிலத் தலைவர் என். நாராயணன் வேண்டுகோள் விடுத்தார்.   தமிழ்நாடு பிராமணர் சங்க மாநிலத் தலைவராக 4-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள என். நாராயணனுக்கு திருநெல்வேலி மாவட்ட சங்கம் சார்பில் கல்லிடைக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.  விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  தமிழகத்தில் பிராமணர் சமுதாயம் 5-வது பெரிய சமுதாயமாகத் திகழ்கிறது. பிராமணர் சமுதாயத்தினர் பிற சமுதாயத்தினருடன் ஒற்றுமையாக உள்ளனர். தமிழ்நாடு பிராமணர் சங்கம் 900 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.  ஆண்டுதோறும் சங்கம் சார்பில் ரூ. 1 கோடியில்  கல்வி உதவி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.   வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் பிராமணர் சமுதாயத்தின் நோக்கங்களை, திட்டங்களை ஏற்றுக் கொள்ளும் அரசியல் கட்சிகள், அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். மேலும் பிராமணர் சமுதாயத்தினருக்கு அரசியல் கட்சிகள் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.   தமிழகத்தில் மேலவை அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது முதல்வர் கருணாநிதியின் நல்ல முயற்சி. மேலவையில் பிராணமர் சமுதாயத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்றார் அவர்.இதைத் தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் ஆர். ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்லிடைக்குறிச்சி கிளைத் தலைவர் ஜி. பத்மநாபன் முன்னிலை வகித்தார். மாநிலப் பொதுச்செயலர் வி. ஜெகந்நாதன், மாநிலப் பொருளாளர் நெல்லை சீதாராமன், மாநில கொள்கைப் பரப்புச் செயலர் எஸ். சங்கரநாராயணன், மாநில துணைத் தலைவர் என். கிருஷ்ணன், மாநில இணைச் செயலர் ஆர். விஸ்வநாதன், மாநில இளைஞரணி இணைச் செயலர் கே. ஹரிகிருஷ்ணன், மாநிலச் செயலர்கள் என். ஐயப்பன், கணேசன், மாநில மகளிரணி இணைச் செயலர்கள் ரஜினி, ஜெயந்தி, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் சந்திரசேகர், கன்னியாகுமரி மாவட்டப் பொதுச்செயலர் டி.பி. குளத்துமணி, மாவட்ட துணைத் தலைவர் எஸ்.பி. ராமன், மாவட்ட மகளிரணி இணைச் செயலர்கள் பவானி, நாராயணி, மாவட்ட ஆலோசகர் வி. ரகுநாதன் உள்ளிட்ட பலர் பேசினர். முடிவில், மாநிலத் தலைவர் என். நாராயணன் ஏற்புரையாற்றினார்.   விழாவில், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற எஸ். விக்னேஷ், எஸ். கோமதி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  மாவட்ட துணைத் தலைவர் மீ. ராமகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் எம்.எஸ். ராஜு நன்றி கூறினார்.
கருத்துக்கள்


இவர்கள் மூவகைப்படுவர். தங்களை ஆரியர்களாக எண்ணிக்கொண்டு தமிழைப் பழிப்பவர்கள்; தமிழ் உயர்ந்தது. ஆனால் சமற்கிருதம் அதைவிட உயர்ந்தது எனத் தவறாகக் கருதிக்கொண்டு தமிழ்ப்பணி ஆற்றிக்கொண்டே தமிழின் முதன்மையை விரும்பாதவர்கள் மற்றொரு வகையினர். மூன்றாமவர் தமிழையே எல்லாமுமாக எண்ணுபவர்கள். இவர்கள் சிறுபான்மையர். காலங்காலமாகத் தமிழ்நாட்டில் வாழ்வதைக் கருததில்கொண்டு அனைவரும் தமிழையே தாய் இனமாக ஏற்றுக் கொண்டு சில தலைமுறையிலேனும் சமற்கிருதத்தை மறக்க வேண்டும். நலத்திட்ட உதவி என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். இராமகிருட்டிணா மடத்திலுள்ள புத்தக வங்கி கூட பிராமணர்களுக்கு மட்டும் எனச் செயல்படும் பொழுது பிராமண அமைப்புகளைப்பற்றிக் கூறவே வேண்டாம்.ஊடகங்கள் வாயிலாகத் தமிழ்க் கொலை புரிவதையும் நிறுத்த வேண்டும். வளரும் தலைமுறையினர் சாதி வேறுபாடில்லாமல் பழகுவதுபோல் மூத்த தலைமுறையினரும் பழகவும் உதவவும் வேண்டும்.தமிழின் வளர்ச்சியே தங்கள் வளர்ச்சி எனக் கருதவேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/5/2010 2:25:00 PM
BEST WISHES TO BHRAMINS ASSCIATION
By SANGUTHIRTHAN
7/5/2010 1:14:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக